ஒரு ஊரில் கண்ணன் என்பவர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ராதா. அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் அருளன்.
இருவரும் ஒரு நாள் சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக புறப்பட்டார்கள்.
அப்போது அருளன் தானும் அவர்களுடன் சந்தைக்கு வருவதாகக் கூறி அடம்பிடித்தான்.
அவனுடைய அம்மா ராதா, அவனை சமாதானப்படுத்த நினைத்தாள்.
அவள் அவனிடம், “மகனே, உன்னால் அவ்வளவு தூரம் நடந்து வரமுடியாது. நீ வீட்டிலேயே இரு. நான் வந்ததும் உனக்குப் பிடித்த அப்பம் சுட்டுத் தருகிறேன்’ என்றாள்.
இதைக் கேட்டதும் அருளனுக்குச் சிரிப்பாக வந்தது. சந்தோஷமும் ஏற்பட்டது.
அம்மாவின் பேச்சைத் தட்டாமல் சரியென்று தலையசைத்துவிட்டு வீட்டுக்குள் இருந்து கொள்ள சம்மதித்தான்.
கண்ணனும் ராதாவும் சந்தைக்குச் சென்றனர். தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினர்.
அவர்கள் வீடு வந்து சேர்ந்தபோது அருளன் தூங்கிப் போயிருந்தான்.
ராதா தன்னுடைய மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, கண்ணன் தனது மனைவி ராதாவின் அருகில் வந்தான். மெல்ல அவளிடம்,
“அருளனுக்கு அப்பம் சுடவில்லையா? அவனுக்காக அப்பம் சுட்டு, அவனை எழுப்பி சாப்பிடச் சொல்லு’ என்றான்.
அதற்கு ராதா, “நான் விளையாட்டுக்காக அப்படிக் கூறினேன். அப்பதான் அவன் அடம் பிடிக்காமல் வீட்டிலேயே இருப்பான் என்பதற்காக அப்பம் சுட்டுத் தருவதாகச் சொன்னேன். இப்பொழுதுதான் அவன் தூங்கி விட்டானே’ என்று பதில் கூறினாள்.
அதற்கு கண்ணன், “நம் மகன் சின்னப் பையன். அவனுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது! பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோமோ அதையே அவனும் செய்வான். நீ அவனுக்குப் பொய் பேசக் கற்றுக் கொடுக்கிறாய். பிற்காலத்தில் அவன் நல்ல பெயர் எடுப்பானா?’ என்று கேட்டான்.
“என்னை மன்னியுங்கள்! நான் இப்போதே அடுப்பங்கரைக்குச் சென்று அப்பம் சுடுகிறேன்’ என்று கூறிவிட்டு சமைக்கச் சென்றாள்.
நிறைய அப்பங்களைச் சுட்டுக் கொண்டு வந்து, அருளனை எழுப்பி அவனுக்குக் கொடுத்து தாங்களும் மகிழ்வுடன் உண்டனர்.
-ம.மனோஜ் கிரண் (ஜனவரி 2012),
6-ம் வகுப்பு,
பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், திருச்சி.