கி.பி.3000 ம் வருடத்தின் ஒரு சில நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 49,443 
 

குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் அரை நிரவாணமாய் படுத்துறங்கிய கதிர் சட்டென சத்தம் கேட்டு கண் விழித்தவன், எதிரில் நாகரிகமாய் உடையணிந்து ஒருவன் நின்று கொண்டிருப்பதை கண்டவுடன் சட்டென எழுந்து தன் அரை குறை ஆடைகளை சரியாக அணிந்து கொண்டு, “ஏய் ஹூ ஆர் யூ ? இங்கே எப்படி உள்ளே வந்தே? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம அடுத்தவன் அறையிலே வந்து அரை குறையா படுத்திருக்கறவனை வேடிக்கை பார்த்திட்டு? மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசினான்.

வணக்கம் என் பெயர் “பெருந்தகையன்” நான் என்கிற என்னுடைய பணி இன்று காலை 4.30 மணியிலிருந்து தங்களுக்கு சேவை புரிவதற்காக அனுப்பி உள்ளார்கள்.என்று தூய தமிழில் சொன்னது.

நீ எப்படி என் பூட்டியிருக்கும் என் அறைக்குள் வந்தாய்? மன்னிக்கவும் தங்கள் அறை எண்ணின் பூட்டுக்களை எங்களால் திறக்க பயிற்சி கொடுத்துள்ளார்கள்.

அப்படியானால் எங்கள் குளியறைக்கும், கழிப்பறைக்கும் கூட உள்ளே வருவீர்களா?

மன்னிக்கவும் அவை இரண்டும் சென்சார் செய்யப்பட்டுள்ளன,தாங்கள் அவசரம் கருதி எங்களை அழைத்தால் அந்த சென்சாரை எடுத்து விட்டு நாங்கள் உள்ளே வருவோம்.

உங்களை நம்பி எப்படி சென்சார்? சொன்னவன், நீ இயந்திரம்தானே, மனிதன் என்றால்தான் நம்ப முடியாது.இருந்தாலும்,ஒரு ஆண் பிள்ளைதான் கிடைத்ததா பணி விடை செய்ய முணு முணுத்தவன், நீ எந்த மாடல் “ நான் ரோபோட் 3000 வகையை சேர்ந்தவன்.

நல்லது நீ போய் எனக்கு சுடு தண்ணீர் ஹீட்டரை போட்டு ஐந்து நிமிடம் கழித்து கூப்பிடு.

நல்லது “பெருந்தகையன்” சொல்லிவிட்டு திரும்பி சென்றது. இவன் ஆயாசமாய் மீண்டும் படுக்கையில் படுத்து உருண்டான். அறையில் கம்யூட்டர் கிண் கிணித்த்து.

சலிப்புடன் கம்பூட்டரின் முன்னால் போய் நின்றான்,அவன் பிம்பம் ஈர்க்கப்பட்டு கம்யூட்டர் சலன்ம் பெற்று ஒரு இளம் பெண் முன்னால் வந்தாள்.

ஹாய் கதிர் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எனக்கு ஒரு உதவியாளை அரசாங்கம் அனுப்பி இருக்கிறது. நான் தயாராகி விட்டேன், நீ எப்பொழுது வெளியே வருவாய்?

ஆணா, பெண்ணா? சந்தேகத்துடன் கேட்டான்.

ஆணா இருந்தா என்ன? பெண்ணா இருந்தா என்ன? உனக்கு ஏன் சந்தேகம்? மிஷிந்தானடா?

சரி அதை விடு எப்ப வெளியே வருவே? எனக்கு பத்து நிமிசம் தான் நேரம் கொடுத்திருக்கு, அதுக்குள்ள நீ வந்தியின்னா பாக்கலாம்.

சரி முயற்சி பண்றேன், சொல்லிவிட்டு கம்யூட்டரை விட்டு விலகியவன், சுடு தண்ணீர் தயாராகி விட்டது, என்று “பெருந்தகையன்” சொன்னவுடன், காத்திரு என்று சொல்லிவிட்டு குளியறையில் நுழைந்தான்.

எல்லாம் முடிந்து வெளியே வரும்போது அவன் மனைவி வாசலில் நின்று கொண்டு இவன் படியில் இறங்குவதை கண்டு கைகளை ஆட்டினாள், அதற்குள் மின் காந்த வண்டி ஒன்று சத்தமில்லாமல் வந்து நின்று கதவை திறக்க அவள் உள்ளே நுழைக்கப்பட்டாள்.

இவன் சலிப்புடன் கட்டின பொண்டாட்டி கூட நின்று பேசறதுக்கு கூட இந்த அரசாங்கம் நேரம் ஒதுக்கித்தான் தருது, என்ன கொடுமை இது, காய்ந்த ரொட்டி இரண்டை வாயில் போட்டு மென்று கொண்டே வாசலில் வந்து நின்றான், மின் காந்த வண்டி வந்து நின்று கதவு திறக்கப்பட அதில் நுழைக்கப்பட்டான்.

அலுவலகத்தில் நுழைந்தவர்களை நாகரிகமாக உடையணிந்த இயந்திரம் ஒன்று நீங்கள் வலது புறம் நேர் வழி, நீங்கள் இடது நேர் வழி, “கதிர் 123” நீங்கள் வலது புறம் சென்று இடது புறம் திரும்புங்கள், ஆறாவது நாற்காலி உங்களுடையது. தூய தமிழில் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருந்தது.

பக்கத்தில் வந்தவரிடம், இந்த கம்பெனிக்கு வழி சொல்ற இயந்திரம் கூட ஆண் பிள்ளைதான் போட்டிருக்காங்க, ஏன் பெண்களே கிடைக்கவில்லையா? மன்னிக்கவும் நானும் இயந்திரம்தான் என்று அது சொல்ல பயந்து வாயை மூடிக்கொண்டான்.

நாற்காலியில் உட்கார்ந்தவனுக்கு அருகில் இருந்த கம்யூட்டர் அழைப்பு வர இவன் அதன் முன்னால் நினறான். இவன் உருவ சலனம் அதன் திரையால் கவரப்பட்டு இரண்டு நிமிடங்களில் ஒரு உருவம் தோன்றி “கதிர் 123” உனக்கு அலுவல் விசயமாய் திண்டுக்கல் போக சொல்லியிருக்கிறது.

அங்கு போய் என்ன செய்ய வேண்டும்.?

அங்கு விளைந்திருக்கும் தானியங்களை சேர்த்து மின் காந்த வண்டியில் ஏற்றி விட வேண்டும்.

இதை இயந்திரங்களே செய்யாதா?

சொன்ன வேலைகளுக்கு எதிர் கேள்வி கேட்பதை இந்த கம்பெனி விரும்புவதில்லை.

சரி எப்பொழுது கிளம்ப வேண்டும்?

அலுவலக வாசலுக்கு வந்து நிற்கவும், ஒரு மின் காந்த வண்டி வந்து நிற்கும், அதில் ஏறி இரயில் நிலையத்தில் இறங்கவும், அங்கு பாதை எண் மூன்றில் வரும் தண்டவாள வாகனத்தில், உமது அடையாள அட்டையை காண்பித்து ஏறிக்கொள்ளவும், மாலை மூன்று மணி அளவில் அங்கு நிற்கும். நீ வெளியே வந்தவுடன்,அங்கு வரும் மின் காந்த வண்டி உன்னை ஏற்றிக்கொண்டு போய் விடும் இடத்தில், தங்கிக்கொள்ளவும். நாளை முழு நாள் விவசாய பண்ணைகளை சுற்றி பார்க்கவும். அங்கு உனக்கு என்ன வேலை என்று சொல்லப்படும். திரையில், இவனுக்கு பணி சொன்ன உருவம் மறைந்து விட்டது.

சலிப்புடன் வெளியே வந்து நின்ற கதிர் 123,அங்கு வந்த மின் காந்த வண்டியில் நுழைக்கப்பட்டான்.அதன் பின் அவன் பயணம் அவனது எண்ணங்களையும் மீறி திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தது.

திண்டுக்கல் என்னும் இடத்திலிருந்து அவனது தங்கும் இடத்துக்கு செல்லும் வழியில் வெளி உலகம் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. ஆனால் காந்த வண்டியில் வெளியில் பார்க்கும் அனுமதி கிடையாது என்பதால் இவன் பல்லை கடித்து உட்கார்ந்திருந்தான்.

தங்கும் அறையில் உள்ளே நுழைந்தவன், உடையை கூட மாற்றாமல் வெளியே வந்து பார்த்து, அப்படியே ஆன்ந்தத்தில் மூழ்கி விட்டான், பச்சை பசேல் என்று வயல்கள்.

எல்லா வயல்களிலும், பெண்கள் குனிந்து களை பறித்து கொண்டிருந்த காட்சி கண் கொள்ளா காட்சியாய் இருந்தது. வயல் வெளிகளை தாண்டி அவன் கண்ணில் பட்ட குளம், “ஆஹா இத்தனை வருட நகர வாழ்க்கையில் இது வரை அவன் பார்க்காத அற்புத காட்சி” குளத்தை சுற்றி மரங்களும், மரங்களில் உட்கார்ந்திருந்த கலர் கலராய் பறவைகள், அது எழுப்பிய சத்தங்கள், இவனுக்கு புதுமையாய் இருந்தன.

சட்டென ஒரு சத்தம் இவன் கவனத்தை இழுக்க திரும்பி பார்த்தான், ஒரு பெண் எருமை ஒன்றை கயிற்றை பிடித்து இழுத்து வந்து கொண்டிருந்தாள், அந்த பெண்ணின் அழகு இவனை மூர்ச்சை அடைய செய்த்த்து. இவ்வளவு அழகான பெண்களா? அதுவும் ஒரு எருமை மாட்டை ஓட்டிக்கொண்டு நடந்து செல்கிறாள்? அவனுக்கு ஏற்பட்ட வியப்புக்கு அளவே இல்லை.

சுற்றி பார்க்க அனுமதி கொடுத்திருப்பது ஞாபகம் வர மெதுவாக நடக்க ஆரம்பித்தான், ஒவ்வொரு இடமும் அவனுக்கு புதிதாகவும், புதுமையாகவும் இருந்தது, ஆனால் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும், அவனை மனிதனாகவே பொருட்படுத்தாமல், அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வழியில் தென்பட்ட ஒரு சில நாய்கள் மட்டும் இவனை வந்து முகர்ந்து பார்த்து வாலாட்டி சென்றன.

அவனுக்கு கால்கள் வலிக்கும் வரை நடந்து கொண்டே இருந்தான். அவன் சென்ற இடமெல்லாம் பசேல் என்ற வயல் வெளிகளும், சுற்றி நின்ற நீர் நிலைகளும்,அதில் துள்ளி விளையாடும் மீன்களும், இவன் தன் நிலை மறந்து நடந்து கொண்டிருந்தான்.

இவன் திரும்ப அறைக்குள் நுழையும்போது ஒரு பணியாள் நின்று கொண்டிருந்தான்.

உங்கள் நிறுவனத்துக்கு சேர வேண்டிய பொருட்கள் சேமிக்கப்பட்டு உள்:ளன. நீங்கள் ஒரு முறை வந்து பார்த்து ஒரு கையொப்பமிட்டு விட்டால் நாளை காலை அவைகள் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். இயந்திரமாய் சொல்லி விட்டு, முன்னால் நடக்க, இவன் “இவனை” கூட மிசினாத்தான் வச்சிருக்கானுங்க, முணுமுணூத்துக்கொண்டே நடந்தான்.

அவன் சட்டென திரும்பி சார் நீங்க மனுசனா என்று ஆச்சர்யத்துடன் கேட்க இவனுக்கு ஆச்சர்யம் “அப்பா நீ மனுசனா” திருப்பி கேட்டான். ஆமா சார், ரொம்ப சந்தோசமா இருக்கு

சார் உங்களை பார்க்க, வாங்க உங்களுக்கு சேர வேண்டிய சாமாங்களை காட்டறேன்.

அது கிடக்க்ட்டும்ப்பா கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாமில்லை, சார் நடந்து கிட்டே பேசுங்க, எனக்கு கொடுத்த ஆர்டர் பிரகாரம் நான் உங்களோட நேரா நின்னு பேசிகிட்டிருந்தா எனக்கு வர வேண்டிய சம்பளம் ஒரு சதவிகிதம் “கட்” ஆயிடும், அதுனால வேலை செய்யற மாதிரியே பேசுங்க.

அவனுக்கு சப்பென்று ஆகி விட்டது, ஒரு மனுசனை பார்த்தா பேச கூட முடியல?

சரி அவன் கிட்ட பேசிகிட்டே நடப்போம், முடிவு செய்தவன், தனக்கு தோன்றியதை எல்லாம் பேசிக்கொண்டே நடந்தான்.அவனும் தலையாட்டிக்கொண்டே, சேமிப்புக்கிடங்குக்கு நடந்தனர்.

இவன் சென்று பார்த்து அங்குள்ள கம்யூட்டர் திரையில் தன்னுடைய ரேகையை வைத்து ஒரு கையெழுத்தும் போட்டான். அது இந்நேரம் தன் அலுவலகம் சென்றிருக்கும்.

பேசிக்கொண்டே வந்தவர்கள் ஒரு கட்டத்தில், அப்பா இங்க எல்லாரும் அழகா இருக்காங்க, நான் கூட இங்கிருக்கற பொண்ணு கிடைச்சா பேசாம கல்யாணம் பண்ணிகிட்டு இந்த கிராம வாழ்க்கையில செட்டிலாயிடுவேன்.

கூட வந்தவன் தன் கட்டுப்பாட்டை மீறி சிரித்துவிட்டான், அது மட்டுமல்ல, விழுந்து விழுந்து சிரித்தான், சார் என்ன சொன்னீங்க, இங்க இருக்கற பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிகிட்டு செட்டிலாயிடுவேன்னா? ரொம்ப கஷ்டம் சார். ஏன்னா இதுல ஒரு பொண்ணு கூட மனிச பொம்பளை கிடையாது, எல்லாமே மிசின்தான்.

என்னப்பா சொல்றே? ஆமா சார், கிராமத்துல இருந்த எல்லா மனுசங்களும் நகரத்துக்கு குடி பெயர்ந்து,எல்லா பேருக்கு பின்னால நம்பரும் வச்சு, கூடவே மிசினை படைச்சு அது கூட வாழ ஆரம்பிச்சுட்டாங்க, அப்ப கிராமத்தை யார் பார்க்கறது? உடனே இங்க இருக்கற எல்லா கிராமத்துலயும், என்னைய மாதிரி பத்திருபது மனுச குடும்பங்களை மட்டும் வச்சுகிட்டு மிச்ச பொம்பளை, ஆமபளைய மிசின்ல உருவாக்கி விவசாய வேலைகளை கவனிக்க வச்சுட்டாங்க. அவங்க மனுசங்களை விட உற்பத்தியையும் பெருக்கறாங்க, இயற்கையையும் வளர்த்துறாங்க. வேடிக்கையாயில்லை !, பாருங்க இத்தனை அழகை மனுசனால கூட படைக்க முடியாது, ஆனா இவங்க எப்படி படைச்சிருக்காங்கன்னு பாருங்க.

மறு நாள் இவனுக்கென்று திட்டமிட்டு கொடுத்தபடி இவன் வேலைகளை முடித்து வீடு வந்த சேர்ந்த பின்னாலும், இவன் மனம் அந்த ஊரை விட்டு விலக மறுத்தது. என்றாலும் மனிதன் எப்பொழுது மனிதனாக வாழப்போகிறோம் என்ற மன வேதனையும் கூடவே வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *