காணாமல் போன கன்றுக்குட்டி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,870 
 

பாபு அவன் தங்கை நீலா இருவருக்கும் பசு மாடு, நாய், பூனை மற்றும் பறவைகளை வளர்ப்பது என்றால் மிகவும் விருப்பம். இதுதான் இவர்களின் பொழுது போக்கு. இருப்பினும் படிப்பிலும் சூரப்புலிகள். தாங்கள் சாப்பிடும் போது தங்கள் செல்லப் பிராணிகளுக்கும் வேண்டிய உணவு, தின்பண்டங்கள் எடுத்துக் கொண்டு தோட்டத்தில் அவைகளுக்கு அளித்து விட்டு தான் சாப்பிடுவர்.

அவர்கள் அப்பா கண்ணன் ஒரு அழகான சிவப்பு நிறமுள்ள பசுவை அதன் கன்றோடு வாங்கி வந்தார். அவைகளைக் கண்டதும் குழந்தைகள் ஓடி வந்து அப்பாவைக் கட்டிக் கொண்டு பசுவை தொடலாமாவென்று கேட்டனர்.

“”அது உங்கள் செல்லப் பசு. கிட்டே போய் தடவிக் கொடுங்கள் ஒன்றும் செய்யாது!” என்றார்.

பாபுவும், நீலாவும் தன் செல்லப் பிராணியிடம் சென்று பசுவையும், கன்றுக் குட்டியையும் தழுவி தடவிக் கொடுத்தனர். அதுவும் குழந்தைகளை தன் நாக்கினால் நக்கி தன் அன்பைக் காட்டியது. மிகவும் மகிழ்ந்த குழந்தைகள் பசுவிற்கு லஷ்மி என்றும் அதன் கன்றுக் குட்டிக்கு நந்தினி என்றும் பெயரிட்டனர். பள்ளியிலிருந்து வந்ததும் அவர்களின் இருப்பிடம் மாட்டுக் கொட்டகைத்தான்.

ஒரு வருடம் ஓடியது. கன்றுக்குட்டி நந்தினியும் தன்னிஷ்டப்படி தெரு பூராவும் ஓடி விளையாடுவது எல்லாருக்கும் பார்க்க நல்ல வேடிக்கையாக இருந்தது.

ஒரு நாள்—

நந்தினி தெரு கடைசி வரை ஓடிவிட்டது. அது சமயம் அவ்வழியே வந்துக் கொண்டிருந்த லாரி அதன் பின்பக்கம் பூராவும் மாடுகளை ஏற்றி வந்தது. அதில் வந்த வியாபாரி லாரியை நிறுத்தி அங்கு ஓடி வந்த நந்தினியைப் பிடித்து லாரியில் ஏற்றிக் கொண்டு பறந்துவிட்டான். இதை யாரும் கவனிக்கவில்லை.

வெகுநேரமாகியும் நந்தினி வீடு திரும்பாததால் பாபுவும், நீலாவும், “”அப்பா! நம் நந்தினியைக் காணவில்லை. எங்கே சென்றது என்றும் தெரியவில்லை. லஷ்மியும் அம்மா என்று கதறுகிறது,” என்று கூறி ஓவென்று அழுதனர்.

கண்ணன் அவர்களை சமாதானப்படுத்தி, “”நந்தினி எங்கும் சென்றிருக்காது வருந்தாதீர்கள் கண்டுபிடித்து வருகிறேன்!” என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தார். ஒன்றும் பயனில்லை.

பாபுவும், நீலாவும் பள்ளி சென்று மாலை திரும்பும் போது கடைத்தெருவில் ஒரு லாரியை சுற்றி கூட்டமும், கூச்சலுமாகவும் இருந்தது. மாடுகளோடு உள்ள லாரியை கண்டதும் பாபுவும், நீலாவும் தங்கள் நந்தினி இந்த லாரியில் இருக்கக்கூடாதா என்று கடவுளை வேண்டினர்.

லாரியை வளைத்துப் பிடித்து போனில் இன்ஸ்பெக்டர் சட்டப்படி அனுமதி பெறாமல் மாடுகளை மாட்டு இறைச்சிக்காக அண்டை மாநிலத்துக்கு விற்பதற்காக ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. ஆகவே, வியாபாரியை கைது செய்து மாடுகளை விடுவித்து, “பிராணிகள்’ வளர்க்கும் நல சங்கத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். லாரியிலிருந்து ஒவ்வொரு மாடாக இறங்கி வரும் போது ஒரு கன்றுக் குட்டியும் குதிப்பதைக் கண்டதும் பாபுவும், நீலாவும் “நந்தினி நந்தினி’ என்று கூவினர். என்ன ஆச்சர்யம்! இவர்கள் குரலைக் கேட்டதும் நந்தினி துள்ளிக் குதித்து இவர்களிடம் ஓடி வந்தது.

அதைக் கண்ட இன்ஸ்பெக்டர், “”இதுதான் உங்கள் கன்றுக் குட்டியா? உங்கள் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். நல்லவேளை நாங்களும் லாரியைப் பிடித்துச் சோதனை செய்தோம். நீங்களும் உங்கள் செல்லப் பிராணியைக் கண்டுபிடித்து விட்டீர்கள். இல்லாவிட்டால் இதையும் இறைச்சிக் கூடத்திற்கு கடத்தியிருப்பார்கள். நீங்கள் வாயில்லாப் பிராணிகளிடம் கொண்டுள்ள அன்பைப் பாராட்டுகிறேன். உங்களுக்கு நல்ல பரிசு அளிக்குமாறு மேலதிகாரிகளுக்கு சிபாரிசு செய்யப்போகிறேன். உங்கள் கன்றுக் குட்டியை எங்கள் காவலரோடு அனுப்புகிறேன். குஷியாக வீட்டிற்கு செல்லுங்கள்!” என்று அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

நந்தினியோடு வரும் குழந்தைகளைக் கண்டதும் கண்ணன் வியப்படைந்தான். போலீஸ் காவலர் நடந்த நிகழ்ச்சியை விபரமாகக் கூறினார்.

கண்ணன் தன் குழந்தைகளைப் பாராட்டி மகிழ்ந்தார். நந்தினியும் ஒரே ஓட்டமாக ஓடி தன் தாய் லஷ்மியிடம் பால் பருக ஆரம்பித்தது. லஷ்மியும் மிக்க வாஞ்சையோடு நந்தினியை நக்கிக் கொடுத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *