ப்ளாக் பாரஸ்ட் கேக்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 21,429 
 

ராமசாமிக்கு கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. யாராவது அவர்முன் தற்போது போய் நின்றால் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. ஒருவேளை கடித்துக்கூட வைத்துவிடலாம். அப்படி என்ன பிரச்சனை!

புதிதாக வீட்டிற்குள் நுழைந்திருக்கும் சுமி தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ராமசாமிதான் அந்த வீட்டில் சீனியர். ராமசாமிக்கு ஒரு மனைவி சித்ரா. சித்ராவுக்கு தெரியாமல் அவர் பல பேருடன் கும்மியடிப்பது வழக்கம். அவர்களுடைய ஒரே மகன் ரெங்கா. இப்போது பெங்களூரில் இருக்கிறான்.

அமெரிக்காவிலிருந்து வந்த சுமி தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துகிறாளோ என்ற எண்ணம் ராமசாமியை வாட்டி வதைக்கத் தொடங்கியது. வீட்டின் கடைக்குட்டி வர்ஷினி தான் சுமிக்கு இடம் கொடுத்து வைத்திருக்கிறாள்.

இந்த வீட்டிற்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத ‘சுமி’ திடிரென்று உள்ளே நுழைந்து (வர்ஷினியை கையில் போட்டுக்கொண்டு) அந்த வீட்டின் முக்கிய கர்த்தாவாக விளங்கிய தன்னுடன் மல்லுக்கட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.

அவருக்கு பதினொரு வயது இருக்கும்போது ஆறாம் வகுப்பு படித்த லட்சுமணனை கையில் கடித்து வைத்ததைப்போல் இப்போது சுமியை கடித்துவிடலமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார் ராமசாமி.

ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் என்றால் உயிர். அதை எந்த கூச்சமுமின்றி நக்கி நக்கித் தின்பார். கடந்த சில வருடங்களாக தான் கேக் எல்லாம். வர்ஷினி முதன்முதலில் கல்லூரி கல்சுரல்ஸில் முதல் பரிசு வாங்கியதை கொண்டாடும் விதமாக ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் வாங்கி கொடுத்தாள். அப்போதுதான் அவர் அதை முதன்முதலில் சுவைத்தார். (அவருக்கு சுமி வயது இருக்கும்போது அவர் சாப்பிட்ட ஒரே இனிப்பு வகை மைசூர்பாக்கு மட்டுமே.) இப்போது அந்த வர்ஷினியே தனக்கு வைட் பாரஸ்ட் கேக் தராமல் போவாள் என்று ராமசாமி எதிர்ப்பர்த்திருக்கவில்லை.

வர்ஷினி தன் குழந்தை சாரலின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். வரும்போது சுமியையும் அழைத்து வந்து விட்டாள். சாரலின் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படும் வரை, வைட் பாரஸ்ட் கேக் வெட்டுவார்கள் என்றே ராமசாமி நினைத்திருந்தார். ஆனால் அவர்கள் ப்ளாக் பாரஸ்ட் வாங்கி வந்துவிட்டார்கள்.

“சுமிக்கு ப்ளாக் பாரஸ்ட் தான் புடிக்கும்” வர்ஷினி சப்தமாக யாரிடமோ சொன்னது ராமசாமியின் காதில் தீயாய் விழுந்தது.

‘சுமி சுமி சுமி. இந்த வர்ஷினிகூட இப்படி மாறிட்டாளே! ஆறாவது படிக்கும் போது டியூஷன் முடிச்சு வீட்டுக்கு தனியா வர பயப்படுவான்னு அரை கிலோமீட்டர் நடந்தே போய் கூட்டிட்டு வருவேனே. எல்லாத்தையும் மறந்துட்டாளே!’ ராமாசாமி நொந்துக் கொண்டார். ஆனால் இப்படி சுணங்கி நிற்பதை விட ஏதாவது செய்து சுமியை இந்த வீட்டிலிருந்து அனுப்பிவிட்டால் மீண்டும் தான் இழந்த பழைய அங்கிகாரத்தை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். தன் எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். பார்ட்டி அரங்கிலிருந்து கோபமாக வெளியேறினார். ஆனால் அவரை யாரும் சட்டை செய்யவில்லை. இரண்டு நாட்கள் தன் அறையிலேயே காலம் கழித்தார். வேலைக்காரி வந்து உணவை வைத்துவிட்டு சென்றாள். வேறுயாரும் அவரை காண வரவில்லை. ஏன், அவர் மனைவி சித்ராகூட சுமியை ஏற்றுக்கொண்டுவிட்டாள்.

அன்று அவர்கள் அனைவரும் சேர்ந்து தீம் பார்க் சென்றபோது சுமி ஓடிச்சென்று காரின் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டது ராமசாமிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அன்றிரவு சுமிக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.

இரவு தீம் பார்க்கிலிருந்து தாமதமாக வந்த அனைவரும் களைப்பில் உறங்கிப்போயினர். சுமி ஹாலிலேயே சோபாவில் படுத்துக்கொண்டாள்.

மணி இரவு பன்னிரெண்டு. தூக்கமில்லாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்த ராமசாமி ஹாலிற்கு வந்தார். சுமி அருகே வந்தவர், ஓங்கி சுமியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டு விறுட்டென்று சோபாவின் பக்கவாட்டில் மறைந்துக்கொண்டார்.

பதறியடித்து விழித்த சுமி பயத்துடன் அக்கம்பக்கம் பார்த்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. கன்னத்தை தடவிக்கொண்டே மீண்டும் உறங்கிப்போனாள்.

ராமசாமிக்கு பெருமிதமாக இருந்தது. மறுநாளும் அதே நேரத்தில் அதேபோல் சுமியின் கன்னத்தில் அறைந்தார். பதறிய சுமி எழுந்து வர்ஷினியின் அறைநோக்கி ஓடினாள். அவள் அறை தாளிடப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.

அவளுக்கு அங்கே தனியாக இருக்க பயமாக இருந்தது. வெளியே வராந்தாவிற்கு வந்தாள். இருட்டாக இருந்தது. கதவருகே ஒளிந்துகொண்டிருந்த ராமசாமி ‘உர்’ ‘உர்’ என்று உறுமினார். அந்த சப்தம் சுமியை மேலும் பயமுறுத்தியது. இரவெல்லாம் தூங்காமல் அறையில் உலாத்தினாள். ராமசாமி நிம்மதியாக படுத்துறங்கினார். மறுநாள் காலையில் ராமசாமி நடு அறைக்கு வந்தபோது அனைவரும் பரபரப்பாக இருப்பதைக் கண்டார்.

சுமிக்கு ஜூரம். அவள் சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அழுதுக் கொண்டிருந்தாள். “அதெல்லாம் சரியாகிடும்” வர்ஷினியின் தந்தை அவளை தேற்றினார். ராமசாமிக்கு எதையோ சாதித்துவிட்ட சந்தோசம், வெளியே ஓடி வந்து ஆனந்தக் கூத்தாடினார்.

சுமிக்கு ஜூரம் அதிகமாகிக் கொண்டே போனது. டாக்டர் வந்து ஊசி போட்டு மருந்து கொடுத்துவிட்டு போனார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிடித்ததை வாங்கி தந்தால் உடல் நிலை தேறும் என்று யாரோ சொல்ல, சுமிக்கு பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக் வாங்கி வந்து அவள் முன்பு வைத்தார்கள். ஆனால் அவள் கண்களை திறக்கவில்லை. வர்ஷினி சுமி அருகேயே படுத்துக் கொண்டாள். ராமசாமி தன் அறையில் உறங்கிப் போனார்.

திடிரென்று வர்ஷினியின் அழுகுரல் கேட்டது. ராமசாமி வந்து பார்த்தபோது சுமி இறந்திருந்தாள். சில நாள் சோகமாக இருந்த வர்ஷினி திரும்பி ஊருக்கு சென்றுவிட்டாள். அன்றிரவு, இரவில் ராமசாமி தனியாக உறங்கிக் கொண்டிருக்க சுமியின் ஆவி வந்து அவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது. ராமசாமி திடுக்கிட்டு விழித்தார். வெளியே எட்டிப் பார்த்தார். சுமி சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அவள் அருகே அமர்ந்திருந்தாள்.

ராமசாமி வர்ஷினி அருகே செல்ல, அவள் ராமசாமியை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள். ராமசாமிக்கும் கண்கள் கலங்கின. தன் எண்ணம் இவ்வளவு மோசமாக போய்விட்டதை எண்ணி வருந்தினார். சுமியை பார்த்தார். அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்று, முன்பு தான் அறைந்த அவளின் கன்னத்தை தடவினார். காலையிலிருந்து கண்களை திறக்காமல் இருந்த சுமி, நிதானமாக தன் கண்களை திறந்தாள். ராமசாமி அவளை பாசமாக பார்த்தாள். வர்ஷினிக்கு சந்தோசம். “அப்பா சுமி முழிச்சிட்டா” என்று கத்தினாள். ராமசாமி சுமியின் கன்னத்தை மீண்டும் தடவ, அவள் ராமசாமியை பார்த்து ‘மியாவ்’ என்று பாசமாக கத்தினாள். ராமாசாமியும் தன் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘லொள்’ ‘லொள்’ என்று இரண்டு முறை குறைத்தார்.

– செப்டம்பர் 2017

Print Friendly, PDF & Email

1 thought on “ப்ளாக் பாரஸ்ட் கேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *