அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். நம்மூர்க்காரங்க மூனு பேரும், வெள்ளைக்காரங்க நாலு பேரும். இந்த காம்பினேஷன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் சம்பந்தப்பட்ட அலுவலக மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை :)) அதே தான் !
‘இப்ப என்ன சொல்லிட்டேனு இவ்ளோ கோபப்படறான். திடீர்னு டென்ஷனாகிட்டான்’ என்று நினைத்திருந்தான் மூர்த்தி.
வெள்ளைக்காரர்கள் ஆளாளுக்குப் பார்த்துக் கொண்டனர்.
மூச்சு ஏற இறங்க, காற்றோடு கலந்த குரலில் “அதெல்லாம் முடியாது. அதெப்படி இந்த ப்ரோக்ராம் ஈஸியா தகர்த்திடலாம்னு சொல்றீங்க. இத டிஸைன் பண்ணதே நான் தான். யாரும் உள்ள புகுந்து உடைக்க முடியாது. முடிஞ்சா தகர்த்திக் காட்டுங்க. ஆங்…” என்று சவால் விட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.
இந்தியர்ளோடு வேலை செய்வது தான் கடினமோ ?! இதே வெள்ளைக்காரர்கள் என்றால், பேசவும் செய்வாங்க, கேட்கவும் செய்வாங்க. தாமரை இலை நீராய் இல்லாமல், நம்ம ஆளுங்க ஏன் இப்படி எல்லாத்தையும் பெர்சனலா சொன்ன மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள் !
“சாஃப்ட்வேர் என்னிக்கு ரிலீஸ் பண்றோம் !” என்றான் ராபர்ட்.
“ரிலீஸ் டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். மூர்த்தி சொல்வதும் சரி தான், எதுக்கும் இன்னொரு ரௌண்ட் டெஸ்டிங் பண்ணிடுங்க” என்றாள் கேத்தி.
“சரவணன் என்ன பெரிய ஆளா ? அவர் ப்ரோக்ராம்ல சிறு குறை இருக்குனு சொன்னா, தாங்க முடியலையே ! ஒன்னு சரி செய்கிறேன்னு சொல்லனும். இல்லேன்னா நீ சரி பண்ணிக் கொடுனு சொல்லனும். அதவிட்டுட்டு ஏன் இப்படி மீட்டிங்கில் எறிந்து விழணும். நல்ல வேளை ‘நக்கீரன்’ மாதிரி கேத்தி வந்து, தப்பு தப்பு தான்னு சொல்லி காப்பாத்தினாங்க ! ” என்று வெளியே வந்து புலம்பினான் மூர்த்தி தன் நண்பன் அனீஷிடம்.
“இன்னிக்கு நேத்து கதையா. அவன் போக்கிலேயே போவோம். பாரு, நீ கூட தான் பெர்சனலா எடுத்துக்கற … பரவால்ல விடுங்க பாஸு” என்று அனீஷ் மூர்த்தியைத் தேற்றினான்.
***
“ராபர்ட், நீங்க இப்ப தான் இன்டர்ன்ஷிப் முடிச்சிட்டு இங்க சேர்ந்திருக்கீங்க. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனா இந்தப் பசங்க எத்தனை வருஷமா இருக்காங்கனு தெரியுமா ? இவங்க அடிச்சிகறாங்களேனு, தயவு செய்து உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணலாம் என்று மட்டும் நெனைக்காதீங்க. நல்ல வேளை மீட்டிங்கில் அமைதி காத்தீர்கள்.”
“என்ன இருந்தாலும், ஒரே அலுவலகத்துக்குள்ள இப்படி இவங்க அடிச்சிக்கறது கம்பெனி வளர்ச்சியை பாதிக்கும்” என்றான் ராபர்ட்.
“இந்தியர்கள் எப்பவுமே உணர்ச்சி பூர்வமானவர்கள். அவங்க போக்கிலேயே விட்டு தான் போகணும். கம்பெனியுடைய வளர்ச்சி அவங்களுடைய வளர்ச்சி தான். இதையும் அவங்க கிட்ட சொன்னா, அதுக்கும் அடிச்சிகுவாங்களோ என்னவோ. பரவால்ல விடுங்க பாஸு…” என்று கண்கள் சுருக்கிச் சிரித்து, தன் இளைய தலைமுறையைத் தேற்றினாள் கேத்தி.