சிறுகதை – ஒரு விளக்கம்

 

புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராஜாஜி. சிறுகதையின் இயல்பு, சிறுகதை வளர்ச்சி ஆகியன குறித்து ஓரளவிற்கு இங்குத் தெரிந்து கொள்வோம்.

சிறுகதையின் இயல்பு

(1) ஏதேனும் ஒரு பொருண்மையை மையமிட்டிருத்தல்

(2) ஒரு சில பாத்திரங்களைக் கொண்டிருத்தல்.

(3) ஓரிரு நிகழ்ச்சிகளில் அமைதல்.

(4) ஒரு முறை அமர்ந்து அரை மணி முதல் இரண்டு மணி நேரத்திற்குள் படிக்கத் தக்கதாய் விளங்குதல்.

(5) தொடக்கமும் முடிவும் சுவையுடன் விறுவிறுப்பாகக் குதிரைப் பந்தயம்போல் அமைதல்.

(6) வெற்றெனத் தொடுக்கும் சொல்லோ நிகழ்ச்சியோ அமையாதிருத்தல்.

(7) சுருங்கச் சொல்லலும் சுருக்கெனச் சொல்லலும் பெற்றிருத்தல்.

(8) உரையாடல் அளவோடிருத்தல்.

(9) கண்முன்னே நேரே நடப்பது போன்ற உணர்வுத் தூண்டலை ஏற்படுத்துதல்.

இவை சிறுகதையின் இயல்புகளாகும்.

சிறுகதை வளர்ச்சி
தொல்காப்பியத்தில் ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி’ என வருவது சிறுகதையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரத்தில் வரும் தேவந்தி கதை, மணிமேகலையில் இடம் பெறும் ஆபுத்திரன், ஆதிரை, காயசண்டிகை ஆகியோரின் கதைகள் ஆகிய யாவும் சிறுகதைத் தன்மையில் அடங்குவனவேயாகும். சீவகசிந்தாமணியின் இலம்பகம் (பிரிவு) ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதை எனலாம். பெரிய புராணமும் பல சிறு, சிறு கதைகளின் தொகுப்பு என்று கூறலாம்.

நாட்டுப்புறக் கதைகளும் தொன்றுதொட்டு இடம்பெற்று வருவனவாகும். குழந்தைகளை உறங்க வைக்கவும், நன்னெறிப்படுத்தவும், பொழுதுபோக்கவும் காலங்காலமாக உறுதுணையாக விளங்குவன சிறுகதைகளே எனலாம்.

தமிழில் மதன காமராசன் கதை, விக்கிரமாதித்தன் கதை போன்றன இருப்பினும், மேனாட்டார் வருகைக்குப் பின்னரே நறுக்குத் தெறித்தாற் போன்ற சிறுகதைகள் தோன்றலாயின. முன்பிருந்த கதைகள், புராணம், அரச வரலாறு பற்றியனவாகவும், பல நிகழ்ச்சிகள் கொண்ட நெடுங்கதைகளாகவும் விளங்கின; இயற்கை யிகந்த (இயற்கையைக் கடந்த) நிகழ்ச்சிகளும் அவற்றில் உண்டு. ஆனால் பிற்காலத்து எழுந்த சிறுகதைகள் சாமானியர்களையும், நடைமுறை வாழ்வையும் பற்றியனவாக அமைந்தன; வருணனையுடையனவாகவும் உரையாடல் பாங்குடையனவாகவும் விளங்கலாயின. இயற்கை யிகந்த நிகழ்ச்சிகள் இவற்றில் பொதுவாக இடம் பெறுவதில்லை.

தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை, வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை என்பதாகும். இவர் எழுதிய மங்கையர்க்கரசியின் காதல் என்னும் சிறுகதைத் தொகுதி எட்டுச் சிறுகதைகளைக் கொண்டது. தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப்படுபவர் இவர்.

மணிக்கொடி இதழ் சிறுகதைகளை வளர்த்த பெருமைக்குரியது. புதுமைப்பித்தன், சிறுகதை மன்னன் எனப் போற்றப் பெறுபவராவார். காஞ்சனை, அகல்யை, சாப விமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்றன இவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகும். பேச்சுத் தமிழ், நனவோட்ட உத்தி, நடப்பியல் ஆகியவற்றைச் சிறுகதையில் புகுத்திய பெருமை இவரையே சாரும். கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு, ஜெயகாந்தனின் ஒருபிடி சோறு, கோவி.மணிசேகரனின் காளையார் கோயில் ரதம், ஜெகசிற்பியனின் நொண்டிப் பிள்ளையார், சு.சமுத்திரத்தின் காகித உறவுகள், தி.ஜானகிராமனின் சக்தி வைத்தியம் போன்றன குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகும்.

இக்காலத்தில் சிறுகதைகள் வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் எழுதப் பெற்று வருகின்றன. இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளின் எண்ணிக்கை (ஆண்டொன்றிற்கு) ஐயாயிரம் கதைகளுக்கு மேற்பட்டவையாக அமைகின்றன. இன்றைய இதழ்களில் ஒருபக்கச் சிறுகதைகள், அரைப்பக்கச் சிறுகதைகள், கால்பக்கச் சிறுகதைகள் என இவற்றின் வடிவம் வேறுபட்டு இடம் பெறுவதையும் காணமுடிகின்றது. கதாபாத்திரம் தானே பேசுவது போலவும், பின்னோக்கு உத்தியில் அமைவதாகவும் பல கதைகள் வெளிவருகின்றன.

சிறுகதை இலக்கணம்

சிறுகதை இப்படி அமைய வேண்டும் என்று திட்டவட்டமாக வரையறுக்க இயலாது. ஏனெனில், அந்த வரையறையை மீறி ஏதாவது ஒரு சிறுகதை பிறந்து விடலாம். ஆனாலும் கூட கீழ்க்காணும் விளக்கங்கள் சிறுகதை என்றால் என்ன என்பதை ஓரளவு புரிய வைக்க உதவும்.

இலக்கணம்

சிறுகதை அளவில் சிறிதாக இருக்க வேண்டும். அது, ஒருமுறை உட்கார்ந்து படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில், நாவலின் சுருக்கம் சிறுகதை ஆகிவிடாது; நாவலின் ஓர் அத்தியாயமாகவோ அல்லது நீண்ட கதையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிளைக் கதையாகவோ இருக்க முடியாது. சிறுகதை என்ற வடிவம் தன்னளவில் முழுமை பெற்ற ஒரு தனிப் பிண்டம். எந்த உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ, அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும். கதைக்குப் பின்னேயுள்ள கதாசிரியரின் கலையாற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் சொல்ல விரும்பும் செய்தி இவ்வளவும் இலக்கண வரம்புகளை விடவும் மிகமிக முக்கியமானவை. சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எந்த இலக்கணத்தையும் மனத்தில் நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் எழுத்துகள் தாமாகவே சிறுகதை வடிவம் பெற்றுவிடுகின்றன.

மேலைநாட்டு அறிஞர்களின் விளக்கம்

மேலை மற்றும் கீழை நாடுகளில் இலக்கியத் தரமுடைய சிறுகதைகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோற்றம் பெற்றன. அமெரிக்காவில் வாஷிங்டன் இர்விங், எட்கர் ஆலன்போ, நத்தானியல் ஹாதார்ன் போன்றவர்களும், ருஷ்யாவில் துர்கனேவ், செகாவ் போன்றவர்களும், பிரான்சில் மாப்பசானும் மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர். இவர்களும் இவர்களது படைப்புகளை ஆராய்ந்த திறனாய்வாளர்களும் கீழ்க்கண்ட வரையறைகளைச் சிறுகதைக்குத் தருகின்றனர்.

சிறுகதை என்பது சிறிய கதை என்ற பொருளில் இல்லாமல், ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயரைக் குறிக்கும் தனிச்சொல் என்ற விளக்கத்தை பிராண்டர் மாத்யூ கொடுத்துள்ளார்.

சுருக்கமும் செறிவும் சிறுகதையின் முக்கியப் பண்புகள் என்று ஜேம்ஸ் கூப்பர் லாரன்ஸ் கருத்துரைத்துள்ளார்.

சிறுகதை அரைமணியிலிருந்து ஒருமணி அல்லது இரண்டு மணி அவகாசத்திற்குள், ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் ; தன்னளவில் முழுமை பெற்றிருக்க வேண்டும். அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாக இருக்க வேண்டும். கதையைப் படித்து முடிப்பதற்குள் புறத்தேயிருந்து எவ்விதக் குறுக்கீடுகளும் பாதிக்காமல், வாசகனின் புலன் முழுவதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று எட்கர் ஆலன்போ சிறுகதையைப் பற்றிய தமது மதிப்பீட்டைத் தந்துள்ளார்.

சிறுகதை என்பது எடுத்த எடுப்பிலேயே படிப்போரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி உச்சநிலை முடியும் வரை வாசகரின் முழுக்கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, இடையீடோ, சோர்வோ நேரும் முன்பாகவே சிறுகதை முற்றுப் பெறுதல் வேண்டும் என்று ஹெச்.ஜி. வெல்ஸ் கூறியுள்ளார்.

சிறுகதை குதிரைப் பந்தயம்போல, தொடக்கமும் முடிவும் சுவை மிக்கதாக இருக்க வேண்டுமென்று எல்லரி செட்ஜ்விக் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

சிறுகதைகள் எளிய கருப்பொருளைக் கருவாகக் கொள்ளுதலே சிறப்புடையது என்கிறார் சிறுகதை உலகின் தந்தை எனப் புகழப்படும் செகாவ்.

1901இல், பிராண்டர் மேத்யூ என்ற திறனாய்வாளர், சிறுகதை என்பது ஒரே ஒரு பாத்திரத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, ஒரு தனிச் சம்பவத்தைப்பற்றியோ, அல்லது ஒரு தனி உணர்ச்சி பற்றியோ எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கும் என்று விளக்கியுள்ளார்.

ஹெச்.இ.பேட்ஸ் என்பவர், எழுதும் ஆசிரியரின் எண்ணத் துணிவு சிறுகதையில் எவ்வாறு வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்கிறார்.

இந்திய அறிஞர்களின் விளக்கம்

1917ஆம் ஆண்டிலேயே சிறுகதை பற்றி விமர்சித்த ரா. வாசுதேவன் என்பவர், சிறுகதை என்பது சிறு கால அளவுக்குள் படித்து முடிக்கப்பட வேண்டியது என்றும், அதன் உருவம் சிறியதாக அமைந்திருக்கும் என்றும் கூறுகிறார்.

சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரம். சிறுகதை ஒரு தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. சிறுகதை, வாழ்க்கையின் ஒரு பகுதியை, கவலையை மறந்து விட்டுக் கவனிப்பதாக உள்ளது. சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது என்று புதுமைப்பித்தன் சிறுகதையின் போக்கை விளக்கியுள்ளார்.

மனித உணர்ச்சிகளில் ஏதாவது ஒன்றைத் தொட்டு உலுக்குவதுதான் சிறுகதை என்று விந்தன் அதன் இலக்கணம் கூறுகிறார்.

பழங்காலத்தில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் பெற்றிருந்த இடத்தைத் தற்காலத்தில் சிறுகதை என்ற இலக்கிய வகை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார் மு.வ.

சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம்; உள்ளப் போராட்டமாக இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக இருக்கும் வகையில் சிறுகதை பிறக்கும். இரண்டாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது என்கிறார் க.நா.சுப்ரமணியன்.

சிறுகதைக்குள் அடங்கும் காலத்துக்கு எல்லை இல்லை. ஒருவரது பிறப்பு முதல் இறப்பு வரையில் சிறுகதையின் காலமாய் இருக்க முடியும் அல்லது ஒருவர் வாழ்க்கையில், ஒரே நாளில், ஒரு மணியில், சில வினாடிகளில் கூடக் கதை முடிந்துவிடலாம் என்று மணிக்கொடி எழுத்தாளரான பி.எம். கண்ணன் சிறுகதையை விளக்கியுள்ளார்.

நன்றி: http://www.tamilvu.org

6 thoughts on “சிறுகதை – ஒரு விளக்கம்

  1. சிறுகதை பற்றி செறிவான விளக்கம். சிறுகதை இலக்கியம் மேன்மேலும் வளரட்டும். உங்கள் பணி தொடரட்டும்.

  2. நான் அவ்வப்பொழுது இலக்கிய eதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறேன். ஆனாலும் அதற்கான புரிதல் இன்னமும் எட்டப்படாமலே இருந்து வருகிறேன். என்னைப்போல் இருக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என்று எண்ணுகிறேன்
    ப. கோவிந்தராசு

  3. தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடிய நல்ல பல கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது. நன்றி. உங்கள் பணி தொட….வாழ்த்துக்கள்.

  4. நல்ல விளக்கம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். இன்னும் அதிக படைப்புக்களை தரவும்.

  5. அருமை கார்த்திக் , உங்கள் சேவை மனபான்மையை மெச்சுகிறேன். வாழ்த்துகள் ….

  6. அபாரமான கருத்துக்கள். கார்த்திக், அருமையான பணி செய்கிறீர்கள். பயன் கருதா பணி.மிக்க நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *