கோவை திருச்சி ரோட்டில் வேகமாக வந்த ரமேஷ் கூட்டத்தைப் பார்த்து பிரேக் போட்டு, காரை நிறுத்தினான்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடவா சாலை மறியல்? காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
ரமேஷுக்கு மேற்கொண்டு அந்த சாலை வழியாகப் போவது சாத்தியமில்லை என்பது புரிந்தது. பேச்சுவார்த்தை எப்போழுது முடிந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் எப்பொழுது கலைவார்கள் என்று யாருக்குத் தெரியும்?
எதற்கும் யாரிடமாவது விபரம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்த ரமேஷ், எதிரில் நடந்து வந்த ஒரு இளைஞனை நிறுத்தி விபரம் கேட்டான்.
“ அநுதப் பக்கம் மின்சாரம் வாரிய அலுவலகம் இருக்கு!…அதற்கு முன்பு ஜனங்க மறியல் செய்யறாங்க! அந்தப் பக்கம் நீங்க காரில் போக முடியாது சார்!….”
“ அப்படியா!….தடையில்லா மின்சாரம் வேண்டுமென்றா மறியல் செய்யறாங்க?..”
.“ சார்!…இப்ப ஜனங்க அதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லே!”
“ பின்ன எதுக்கப்பா இந்த சமயத்திலே மறியல் செய்யறாங்க?….”
“ மின்தடை எட்டு மணி நேரம் இருந்தாக் கூட பரவாயில்லே!… தடை செய்யும் நேரத்தை முன்னதாக அறிவிக்கச் சொல்லறாங்க!….அப்பத்தான் குறு தொழில் செய்யறவங்க தங்களிடம் வேலை செய்யற தொழிலாளிகளுக்கு வேலை நேரத்தைச் சொல்ல வசதியா இருக்கும் என்று சொல்லறாங்க!”
பாவம்! ஜனங்க கூட ரொம்ப மாறிட்டாங்க! சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் கோரிக்கைகளைக் கூட மாற்றிக் கொள்கிறாங்க! வேறு வழி?
– மே16-22, 2014