“எனக்கு ஒரு பிரச்னை’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
வந்தவன் ஒரு இளம் தொழிலதிபன்.
“என்ன பிரச்னை, என்னாச்சு?’ என்று வினவினார் குரு.
“என்னிடம் வேலை பார்க்க நல்ல வேலையாட்கள் கிடைப்பதில்லை. வேலைக்கு வருபவர்களும் நீடித்து இருப்பதில்லை. ஏதாவது பிரச்னையில் வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள்’ என்றான் வந்தவன்.
குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லத் துவங்கினார்.
“பழங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. அங்கே ஒரு மேனேஜர் வேலை செய்து கொண்டிருந்தார். கெட்டிகாரர். பழங்கள் ஏற்றுமதிக்கு ஒரு பெரிய ஆர்டர் கம்பெனிக்கு கிடைத்திருந்தது. அதை ஏற்றுமதி செய்யும் பொறுப்பு மேனேஜரிடம் வந்தது. வழக்கமாக வாங்கும் இடத்துக்குப் பதில் வேறொரு இடத்தில் வாங்கினால் நிறுவனத்துக்கு அதிக லாபம்
கிடைக்கும் என்று தெரிய, அந்த இடத்திலிருந்து பழங்களை வாங்கினார் அந்த மேனேஜர். ஆனால் அது நல்லவிதமாக முடியவில்லை. அவர் வாங்கி அனுப்பிய பழங்கள் எல்லாம் போய்ச் சேருவதற்கு முன்பே அழுகிவிட்டன. இதில் கம்பெனிக்கு இரண்டு லட்ச ரூபாய் நஷ்டம்.
தன்னால் கம்பெனிக்கு நஷ்டம் என்றதும் வருத்தப்பட்ட மேனேஜர், முதலாளியிடம் சென்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நீட்டினார்.
“என்னால் கம்பெனிக்கு நஷ்டம். நான் வேலையை விட்டு விலகுகிறேன்’ என்றார்.
அந்தக் கடிதத்தை வாங்கிய முதலாளி, அதைக் கிழித்துப் போட்டார்.
“தவறுகள் எல்லோருக்கும் சகஜம்தான். இனி இப்படியாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று மேனேஜரை அனுப்பி வைத்தார்.
இந்தக் காட்சியை முதலாளி அறையில் அமர்ந்திருந்த அவரது நண்பர் பார்த்தார். ஆச்சரியப்பட்டார்.
“இவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறான். வீட்டுக்கு அனுப்பாமல் வேலையில் வைத்திருக்கிறாயே’ என்று கேட்டார்.
அதற்கு முதலாளி, “தண்டனை கொடுத்த வீட்டுக்கு அனுப்பினால் கம்பெனிக்குத்தான் நஷ்டம். அவன் இங்கே பெற்ற அனுபவத்தை வைத்து வேறு வேலைக்குப் போய்விடுவான். தவறை மன்னித்து தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால் அவனும் நமக்கு விசுவாசமாக வேலை செய்வான்’ என்றார் முதலாளி.
இந்தக் கதையை குரு சொன்னதும் தான் செய்யும் தவறு வந்தவனுக்கு புரிந்தது.
அப்போது அவனுக்க குரு சொன்ன வின் மொழி:
தண்டித்தலைவிட தட்டிக் கொடுப்பதில் பலன் அதிகம்!
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)