ஹவுஸ் ஹஸ்பெண்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 6,893 
 

மூன்று வருடங்களாகக் காதலித்து அவளை திருமணம் செய்து கொண்டேன். தற்போது எங்களுக்கு ஒரு மகள். வாழ்க்கை நல்ல புரிதலுடன் சென்று கொண்டிருக்கிறது.

அன்று என் மனைவியின் தங்கை திருமணத்திற்கு சென்று இருந்தோம். மனைவி தன்னை திருமண கொண்டாட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள்.

என் செல்ல மகள் என்னுடனே ஒட்டிக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அவள் எப்போதும் என்கூடவே இருப்பாள். அவளுக்குத் தேவையான அனைத்தையும் நானே செய்வேன். நாங்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது , என் மகளின் டயாபர் ஈரமாகி விட்டது. அதை நான் மாற்றுவதற்காக அவளை பாத்ரூம் கூட்டிச் சென்றுபோது, என் மாமியார் என்னைத் தடுத்தார். பிறகு தனியாக என்னிடம், “தாங்கள் இந்த வீட்டின் மருமகன், கூடியிருக்கும் சொந்தக்காரர்கள் தவறாக நினைப்பார்கள்.. மாலதியைக் கூப்பிடுகிறேன். அவள் டயாபர் மாற்றி விடட்டும்..” என்று சொன்னதுடன், என் மனைவிக்கு குரல் கொடுத்தார்.

“இதுவும் என்னுடைய வேலைதான். நான் எப்போதும் செய்வதுதான்” என்று நான் சொல்வதற்குள் அவர் என் மனைவியை அழைத்துவிட்டார். நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். நான் வீட்டில் எல்லா வேலைகளையும் பார்ப்பது ஒன்றும் புதிதல்லவே? நான் ஹவுஸ் ஹஸ்பெண்ட். என்பது எனது மாமியாருக்குத் தெரியும். பிறகு ஏன் அவர் இப்படிச் சொல்கிறார்? என்பதுதான் எங்களுக்கு வியப்பாக இருந்தது.

வீட்டில் உறவினர்கள் இருப்பதால் மாமியாருக்கு இது அவமானமாக இருந்திருக்கலாம். பலரின் முகத்தில் எள்ளல் சிரிப்பு இருந்ததை கவனித்தேன். இது எனக்கு புதிதல்ல. என் திருமணத்திற்கு முன்பே என்னைக் கிண்டல் செய்தவர்கள் ஏராளம்.

நான் ஹவுஸ் ஹஸ்பெண்ட் என்பது உண்மையாக இருந்தாலும், யாரும் அதைப்பற்றி பேசக்கூடாது என்பதுதான் என் மாமனார் மாமியாரின் கவலை.

ஒரு விஷயம் நமக்கு அவமானம் தருவதாக இருந்தால் அதையே மீண்டும் மீண்டும் பேசி, நம்மைக் கேலி செய்வதுதான் நம் மக்களின் பழக்கம் என்பதை நான் நன்றாகவே அறிவேன்.

ஆனால் ஒரு விஷயத்தில் நான் தெளிவாகவே இருந்தேன். நான் முடிவு செய்தது தவறான விஷயமே அல்ல என்னுடைய நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக் கொள்ளமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஒரே சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து மணந்து கொண்டேன். யாருக்கு நல்ல வேலை முதலில் கிடைக்கிறதோ, அவர்கள் வேலைக்கு போகலாம் என்றும், மற்றவர் வீட்டைக் கவனித்துக் கொள்வது என்றும், நாங்கள் காதலித்த காலத்திலேயே முடிவு செய்துவிட்டோம்.

என் மனைவிக்கு கிடைத்த வேலை அவளுக்கு பிடித்தமானதாகவும், முன்னேற்றம் கொடுக்கும் வேலையாகவும் இருந்தது. நல்ல சம்பளமும் கிடைத்தது.

எனவே எங்கள் முடிவுப்படியே அவள் வேலையைத் தொடர்ந்தாள். நான் வீட்டைப் பார்த்துக் கொண்டேன். வீட்டு வேலைக்காக நான் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை, எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன்.

வீட்டை சுத்தம் செய்வது; பெருக்கித் துடைப்பது; சமைப்பது; பாத்திரங்கள் கழுவி வைப்பது; துணி துவைப்பது; வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது; குழந்தையைப் பார்த்துக் கொள்வது என சகல வேலைகளையும் நானே செய்கிறேன்.

ஒருவேளை நாங்கள் வீட்டு வேலைக்கு யாரையாவது வைத்துக்கொள்ள நினைத்தாலுமகூட, வேலைக்கு வருவதற்கு வேலையாட்கள் தயங்குவார்களோ என்னவோ?

என் வீட்டில் நான் கடைக்குட்டி. இரண்டு அண்ணன்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நான் எப்போதும் உதவி செய்வேன். நான் சிறுவனாக இருந்தபோதே என்னை ‘பொம்பளச்சட்டி’ என்று எனது நண்பர்கள் கேலி செய்வார்கள். ஆனால் நான் அதுபற்றிக் கவலைப் படவில்லை. அம்மா ஒரு வேலையை செய்யும்போது அதை நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எந்த வேலையாக இருந்தால் என்ன என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் இன்று டெல்லியில் இருக்கும் படித்த நல்ல வே லைக்குப் போகும் என் நண்பர்களக்கூட என்னுடைய ‘வேலைத் தெரிவு’ குறித்து புரிந்து கொள்கின்றனர். ஆனால் நான் என் சொந்த ஊரான மதுரைக்கு போகும்போது அங்கு கேலிப் பேச்சுக்களை சந்திக்கிறேன்.

அரசியல் அல்லது பொது விஷயங்கள் பற்றி அவர்கள் பேசும்போது அப்போது நான் பேசினால் என்னைத் தடுத்து “உனக்கு இதெல்லாம் புரியாது. இதெல்லாம் வீட்டு வேலை மாதிரி சுலபமானது இல்லை..” என்று கூறி என்னை மட்டம் தட்டுவதாக நினைத்து மகிழ்ச்சியடைவார்கள்.

ஒருமுறை என் நண்பர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது, நான் எனது கருத்தை சொல்லத் தொடங்கினேன், “அதெல்லாம் உனக்கு எதுக்கு? நீ போய் டீ போடு..” என்று சிரித்து ஏளனம் செய்தனர். நான் சிரித்துக்கொண்டே, “டீ மட்டும் போதுமா? சூடா பக்கோடாவும் போடட்டுமா ?” என்று எதிர் கேள்வி கேட்டேன்.

நான் எதிர்கொள்ளும் கேள்விகள், கேலிகள், நையாண்டி நக்கல்கள் அனைத்தையும் இயல்பாக எதிர் கொள்கிறேன். ஏனெனில் நான் செய்வது என்ன? அது சரியா தவறா? என்ற ஆழமான புரிதல் எனக்கு இருக்கிறது. நான் இயல்பாக இருந்தாலும், சில சமயம் எனக்குத் தெரிந்தவர்கள் என்னை சீண்டி வெறுப்பேற்றுவதற்காக போன் செய்து, “இன்றைக்கு சமையலில் என்ன ஸ்பெஷல்? சாப்பிட வரட்டுமா?” என்று கேட்பார்கள்.

வீட்டு வேலைகளுக்கு யாரும் பெரிய மதிப்பு கொடுக்காததாலும், வீட்டு வேலை என்றால் பெண்களுடையது, ஆண் என்றால் வெளியில் சென்று பணம் சம்பாதித்துக் கொண்டுவருவது என்ற நமது சமூகத்தின் எண்ணமும்தான் இதற்கு காரணம் என்பது எனக்குத் தெரியும்.

நான் சோம்பேறியாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு, ஜாலியாக இருக்கிறேன் என்று நண்பர்கள் விமரசிப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல; வீட்டு வேலைகள் மட்டுமல்ல, ஒரு ஆண் வெளியில் சென்று செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் நான் செய்கிறேன்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு மகள் பிறந்தாள். ஒரு குழந்தையை பராமரிப்பது என்பது முழு நேர வேலை. அதற்கு பொறுப்பும், பொறுமையும் அதிகம் தேவை.

வீட்டைப் பார்த்துக் கொள்வது; குழந்தையை குளிக்க வைப்பது; உணவு ஊட்டுவது; வெளியில் அழைத்துச் செல்வது என குழந்தையைப் பற்றிய எண்ணங்களே எனக்கு சுற்றி வருகிறது. குழந்தையை பூங்காவிற்கு அழைத்துச் செல்லும்போது முதலில் அங்கிருந்த தாய்மார்கள் என்னைப் பார்த்து கிண்டலாக சிரித்தார்கள். மகளை மட்டும் கொஞ்சுவார்கள்.

ஆனால் சில நாட்களில் அவர்கள் பேசும் தொனியே மாறிவிட்டது. பண்புடன் பழக ஆரம்பித்தார்கள்.. மனைவி வேலைக்குப் போகிறாள், நான்தான் குடும்பத்தை நிர்வகிக்கிறேன் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம். நான் வேற்று உலகத்து மனிதன் என்பதைப்போல் பார்ப்பார்கள். அவர்களின் பேசும் பொருளாய் நான் மாறி இருப்பேன் என்பதும் எனக்குத் தெரியும்.

வீட்டு வேலைகளை ஆண்கள் செய்வதை தரக்குறைவாக நினைப்பதும், பெண்களை மட்டமாக நினைப்பதும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான் என்று புரிந்தது. தன் கணவன் வீட்டு வேலைகள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் பெண்கள்கூட, ஒரு அளவுக்கு மேல் அதை விரும்புவதில்லை என்பதையும் நான் நிதர்சனமாக உணர்ந்தேன்.

மதிப்பேயில்லாத வேலையை நான் செய்வது போலவும், எனக்கு திறமையில்லை என்றும், அதனால்தான் வீட்டு வேலை செய்கிறேன் என்றும், சமூகத்தினரின் பொதுப்பார்வை என்னை சுட்டிக் காட்டுகிறது. ‘பொறுப்பில்லாதவன்’ வன்று எனக்கு முத்திரை குத்துகின்றனர்.

திருமணமாகி நாங்கள் தனிக்குடித்தனம் இருந்தபோது, வீட்டுக்கு பெற்றோர் வந்தனர். வீட்டு வேலைகளை நான் செய்வதைப் பார்த்த அம்மாவுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதை நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், ஜாடைமாடையாக உணர்த்தினார். ஆனால் அம்மாவுக்கு நான் வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது அது அவருக்கு தவறாக தெரியவில்லையே?

“ஏன் வேலைக்குப் போகவில்லை? வெளியில் போய் வேலை தேடினால்தானே கிடைக்கும்? வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஒன்றுக்கும் உதவாத வேலைகளை பார்த்தால் யார் உன்னை மதிப்பார்கள்?” இப்படி பல கேள்விகள்.. என் தாயின் சங்கடத்தை புரிந்துகொண்டு என் மனைவியும் அப்போது வீட்டில் என்னுடன் சேர்ந்து வேலை செய்வாள். ஆனால் அவளால் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. ஒரு பெண் வேலைக்குச் சென்றால், வீட்டு வேலையும் பார்க்கவேண்டும் என்பது ஏன் கட்டாயப் படுத்தப்படுகிறது?

ஒருபெண் வேலைக்கு செல்லத் தயாரானால் இரட்டை வேலை பார்க்க வேண்டியது அத்தியாவசியமா? ஓர் ஆணிடம் யாரும் அப்படி எதிர் பார்ப்பதில்லையே? எனவே வேலையே செய்ய வேண்டாம் என்று மனைவியை தடுத்துவிட்டேன். ஆனால் என் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை என்றாலும், அந்த விஷயத்தில் அவர் என்றுமே வாய் பேசாத மெளனிதான். அவர் ஏதாவது சொன்னால் அதற்கு நான் பொறுமையாக, அவர் ஏற்றுக்கொள்ளும் பதிலை சொல்லிவிடுவேன் என்று அவருக்குத் தெரியும்.

இப்போது மகள் பள்ளிக்கு செல்கிறாள். வீட்டுப் பாடமாக பேமிலி டிரீ வரையச்சொல்லி இருந்தார்கள். நான் வெளிவேலையாக சென்றிருந்தேன். என் மனைவி மகளுக்கு உதவி செய்தாள். அதில் ‘குடும்பத் தலைவன்’ என்ற இடத்தில் என்னுடைய பெயரை நிரப்பியிருந்தார்கள்.

வீட்டிற்கு வந்த நான் இதைப்பார்த்து, இது தவறு என்று சொன்னேன். வீட்டுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கும் ஒருவர்தான் குடும்பத் தலைவர், எனவே என் மனைவி மாலதியின் பெயர்தான் அந்த இடத்தில் இடம்பெற வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் அதற்கு மாலதி ஒத்துக் கொள்ளவில்லை.

“ஹெட் ஆப் த பேமிலி என்பவர் ஆண் அல்லது பெண் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். குடும்பத்திற்காக எல்லா வேலையும் செய்பவர்தான் குடும்பத் தலைவர். ஒரேயொரு வேலையை செய்பவர் அல்ல..” என்று கூறி என் பெயரை மாற்ற மறுத்துவிட்டாள்.

மாற்றங்கள் எனும்போது தொழில் நுட்பமாக இருந்தாலும் சரி, கல்வி, வேலை, இடம் மாறுதல் போன்ற பல்வேறு விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் நமது இந்திய சமூகம், வீட்டுவேலை என்னும்போது மட்டும் சற்றே பின்தங்கி இருக்கிறது. இதிலும் மாற்றம் வரும். ஆனால் சற்று காலம் எடுக்கும்.

இன்று கூட்டுக் குடித்தனங்கள் அரிதாகிவிட்ட நிலையில், தனியாக வசிக்கும் தம்பதிகள் இருவரும் வேலைக்குச் சென்றால், குடும்ப பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என இருவரும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. மன அழுத்தம், மனச்சோர்வு என்று பல அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

அப்போது யாராவது ஒருவர் வேலை பார்க்கலாம், மற்றவர் வீட்டைப் பராமரிக்கலாம் என்று முடிவு செய்வதற்கான மாற்றங்கள் பெருகிவிட்டன. ஆனால் மாற்றம் நிகழந்தே தீரும். மாற்றம் ஒன்றே மாறாதது.

நான் எடுத்து வைத்திருக்கும் அடி, மாறிவரும் காலத்தில் ஆண்கள் எடுக்க வேண்டிய முதல் அடி..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *