கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 23,609 
 

அளவு எடுத்துச் செதுக்கப்பட்டுக் கருங்கற்களால் கட்டப்பட்ட இரு மாடிகளும் பர்மா தேக்கு மரப் படிகளால் இணைக்கப்பட்டு, மரச் சட்டங்களால் ஆன இரண்டாம் மாடியின் மேற்கூரை கறுப்பேறிய சீமை ஓடுகளால் ஆனவை. கருந்தரை வழுக்கும். கீழே தலைமையாசிரியர் அறை. கூப்பிடு தூரத்தில் அதன் எதிரே அலுவலக அறை. தலைமையின் பார்வை எப்போதும் விழுந்துகிடக்கும் பக்கத்து அறை ஸ்டாஃப் ரூம். மரப் படிக்கட்டுகளில் ஏறும் மாணவ பாரங்களின் சத்தத்தை அதிகரித்துக் காட்டவும், பிரேயருக்குப் பின் எனில் கால்களின் சத்தத்தை உறிஞ்சியெடுக்கவும் காத்திருந்த அந்த மரப் படிக்கட்டுகள் ஆசிரியர்களின் ஷூ போட்ட தாமத நடைகளை எப்போதும் ஹெட்மாஸ்டரின் காதுகளுக்குக் கடத்தவும் கற்றிருந்தது. ஜன்னல் கம்பிகளில் புதைந் திருந்து பார்க்கும் மாணவர்களின் முன் எத்தனை சத்தங்கள், அவமானங்கள், அவமதிப்புகள், மீறிய கண்ணீர்த் துளிகள் எல்லாவற்றையும் கடந்து மீண்டும் படியேறும்போது ஆசிரியர்களின் ஷூ சத்தத்தையும் உறிஞ்சிக்கொள்ளும் மாயப் படிக்கட்டுகள் அவை.

அது ஓர் அரசு மானியம் பெற்ற மேல்நிலைப் பள்ளி. ஐந்தாயிரம் மாணவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்களுமாக நிறைந்து நின்ற அவர்களுக்கு, சகல அதிகாரங்களும் வாய்க்கப்பெற்ற ஒரு மேய்ப்பன் இருந்தான். சற்றே உயரத்தைத் தூக்கிக் காட்டிய பிரவுன் கலர் ஷூவையும், நல்ல அடர்த்தியான வண்ணங்களில் வேண்டுமென்றே கழட்டிவிடப்பட்ட சட்டையின் மேல்பட்டனும், அதனுள் ஒளிரும் ஐந்தாறு பவுன் எடைகொண்ட கோதுமை செயினும், எப்போதும் எதற்காகவும் கசிந்துவிடாத புன்னகையும் கையில் ஒரு முழு நீளப் பிரம்புமாக அவர் அந்தப் பள்ளி மைதானத்தைச் சுற்றி வரும்போது, மொத்தப் பள்ளியும் அதன் ஜீவராசிகளும் மூச்சடக்கிக்கொள்ளும். மௌனத்தின் வெற்றுத் தடத்தில் அவரின் நடையின் அதிர்வு மட்டும் அதிகாரத்தை உமிழும். இடையிடையே பிடிபடும் மாணவர்கள் மீது பிரம்பு சரமாரியாகப் பிரயோகிக்கப்படும். ஜன்னல் வழியே படியும் மாணவப் பார்வைகளுக்கும், குனிந்து கவனிக்கும் ஆசிரியர்களின் பார்வைகளுக்கும், மைதானத்தின் வெற்று மண்ணில் முட்டிபோட்டு நிற்கும் மாணவர்களின் பின்பாதி மட்டுமே தெரியும். அதில் எல்லாம் எப்போதும் ஆண், பெண் பேதம் இல்லை. முக்கோண வடிவில் மடித்துவிடப்பட்டு இருக்கும் பச்சைத் தாவணி, தன் முகங்களுக்கு ஈடாக மண்ணில் படிய முழங்காலிட்டு நிற்கும் மாணவி களின் முகங்கள் அன்று மாலை வரை மீளாது.

நல்ல படிப்பு, ஒழுக்கம் இவை எல்லாம் கடுமையான அடக்குமுறையில் இருந்து கிடைக்கும் அறுவடை. ‘பையன் கண்ணை மட்டும் விட்டுட்டு தோலை உரிங்க’ என்று கசாப்புக் கடைகளின் முன் ஆட்டுக்குட்டிகளின் எஜமானர் கள் இறைந்து நின்றதற்குச் சற்றுப் பிந்தின நாட்கள் அவை. அந்த அதிகாரத்தின் எல்லை களை மட்டும் அவரே வரையறுத்துக்கொண்டார். அதைக் குறைக்கவோ, குறைந்தபட்சம் பேசவோ கூட முடியாத உயரத்துக்கு அவர் போய்க் கொண்டே இருந்த நாட்கள் அவை. நல்லொழுக்கத்துக்கும் நல்படிப்புக்கும் என ஒரு மனிதன் எத்தனை தூரம் தன்னை அர்ப்பணிக்கிறார் என ஊர் பெருமிதப்பட்டது. அந்தப் பெருமிதத்தின் முன் மற்றவர்களின் அபிப்ராயங்கள், புலம் பல்கள், அவஸ்தைகள் எல்லாமும் தூசியிலும் அற்பமானவை.

வஞ்சம்

அவர் பங்களாவை ஒட்டியே அவர் ஆளுமைக்கு உட்பட்ட இருநூறு மாணவர்களை உள்ளடக்கி ஒரு ஹாஸ்டல் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தும், பிரம்பு தன் கைகளிலேயே இருக்க, அவரே ஏற்படுத்திக்கொண்ட நீட்டல் அது. ஸ்கூல் முடிந்து அந்தப் பிரம்புடனேயே மௌனப்படுத்தப்பட்ட மைதானத்தை அவர் நடந்து கடக்கும்போது, கரையின் இந்தப் பக்கம் உற்சாகப் பீறிடலும், கரையின் அந்தப் பக்கம் மயான அமைதியும் ஒருசேர நிகழும்.

சக வகுப்பு மாணவர்களிடம் நோட்புக் வாங்க எப்போதாவது பாலு அண்ணாவோடு அந்த ஹாஸ்டலுக்கு நான் போவது உண்டு. அப்போது எல்லாம் சைக்கிளைக் கேட்டிலேயே நிறுத்திவைத்துவிட்டு, மடித்துக் கட்டிய வேட்டியைக் கீழே தளர்த்திவிட்டு, அண்ணன் பயபக்தியாக மைதானத்தை என் துணையோடு கடக்கும்.

யாருமற்ற அந்த மைதானத்தில் ஒரு பெரிய ஈஸி சேரில் வெற்று உடம்பில் லுங்கி மட்டும் கட்டி, எதிரில் போடப்பட்டு இருக்கும் மர ஸ்டூலில் கால்களைத் தூக்கிப்போட்டு லேசாகக் குறட்டைவிட்டுக்கொண்டு இருக்கும் ஹெட்மாஸ்டரை என்னைப்போல ஏழு மணிக்கு மேல் போனால் பார்த்திருக்க முடியும். தூங்கின பின்பும் கால் அழுத்திவிடும் ஸ்கூல் பியூன்களின் பவ்யம் என்னை எப்போதும் சந்தோஷப்படுத்தும். எங்களிடம் ஸ்கூலில் எரிந்துவிழும் அவர்கள், அந்தக் கால்களின் முன்னால் மண்டியிட்டு உட்கார்ந்திருப்பது ஏதோ மனதுக்கு இதமாக இருந்தது.

காலை வருகை ஸ்கூட்டரில்தான். தன் பிரம்பும், பெரிய டீச்சர் தரும் காபி ஃப்ளாஸ்க்கும், அவர் புறப்படுதலுக்கு முன்பே பியூன் கனகராஜால் கொண்டுவரப்படும். அந்தப் பிரம்பு அவர் கையில் சேர்ப்பித்தலுக்குப் பின்பே அறைக்குள் நுழைவார். பிரேயருக்கு முன் எதற்காகவோ, யாரிடமாவது எழும் அவரின் முதல் கர்ஜனை, முழு நாளுக்கும் போதுமானது. அதை அவர் அறியாதது மாதிரி தனக்குள் அலட்சியமாக வைத்திருந்தார். பல நேரம் கனகராஜிடம், சில நேரம் ஆண் ஆசிரியர்களிடம், எப்போதாவது பெண் ஆசிரியைகள் என்ற பட்டியலில் எப்போதும் மெர்சி டீச்சருக்கு மட்டும் இடம் இருந்ததில்லை. அவள் அழகும் கம்பீரமும், அவர் அதிகாரத்தை எப்போதும் அசைத்துக்கொண்டேயிருந்தது. அதற்காகவே அவர் அடிக்கடி தன் சிம்மாசனத்தைவிட்டு எழ வேண்டியிருந்தது.

ஏழாம் வகுப்பு ‘ஏ’ நிறுத்திக்கொண்ட அழகிகள் போக, மிச்சம் இருந்த மாணவிகளுடன், ‘பி’ பிரிவில் வகுப்பை நிறைத்துக்கொண்ட ஆண் மாணவர்களுக்கு மத்தியில் நாலாவது பெஞ்சில் இடது ஓரமாக உட்கார்ந்திருந்தேன்.

அமைதி… அமைதி… அந்தப் பள்ளி எப்போதும் மௌனத்தில் உறைந்திருந்தது. ஆசிரியர்களின் பேச்சே பழகிப் பழகி ரகசியம்போல மாறிவிட்டுஇருக்கும். எப்போதும் ஹெட்மாஸ்டரின் வருகைக்காக வாசல்படியிலேயே ஒரு கண்ணை நிரந்தரமாக வைத்துவிட்டு, ஒரு கண்ணால் எங்களுக்குப் பாடம் எடுப்பார்கள்.

எந்நேரமும் தான் அவமானப்படுத்தப்படலாம் எனும் ஜாக்கிரதை, நீர் சொட்டச் சொட்ட நாக்கைத் துருத்திக்கொண்டு படுத்திருக்கும் ஒரு நாயின் மூச்சிரைப்பைப் போல அவர்களுக்குள் எப்போதும் படுத்திருந்தது. பள்ளிக்கு வெளியிலும் நாங்கள் பெரும்பாலும் மௌனமாகவே பேசப் பழகியிருந்தோம். விடுமுறை தினங்களின் குதூ கலச் சமயங்களில்கூட யாருடைய கவனிப்போ எப்போதும் எங்கள் மேல் குவிக்கப்பட்டதுபோல் ஓர் உணர்வு.

ஏழாம் வகுப்பில் எப்போதும்போல ஜெயந்தி முதல் ரேங்க்கும், நான் இரண்டு, மூன்று எப்போதாவது தவறினால் நான்கு என்ற தகுதியையும் தக்கவைத்துக்கொண்டோம். கணக்கு நான் எட்டிப்பிடிக்க முடியாத தூரத்துக்குப் போய்க்கொண்டிருந்த நாட்கள் அவை. ஜெயந்தி அதன் மீதே அமர்ந்திருந்தாள். ரத்னம் சார்தான் எங்களுக்கு வகுப்பாசிரியர். நீண்ட கிருதா வளர்த்து, முடியைச் சுருள்சுருளாக வாரி, தன் வயதை மறைக்கும் பிரயத்தனத்தில் சதா வெற்றியடைந்துகொண்டிருந்த முதல் இளைஞர் அவர். அந்த வருடத்தின் ஜூலை மாதக் கடைசியில், ஓர் ஓய்வான மாலை நேர வகுப்பில் எங்கள் ஒவ்வொரு வரையும் எழுப்பி பெயர், அப்பா பெயர், தொழில், தெரு, எதில் பயணிக்கிறோம்? சைக்கிளா… நடையா? அவர் வசிக்கும் தெருவில் இருந்து அந்த மாணவன் அல்லது மாணவியின் வசிப்பிடம் எத்தனை தூரம், அழைத்துப் போக யார் வருவார்கள் என்ற விசாரிப்புகளுக்கு நல்ல விளைச்சல் இருந்தது.

அவர் பை, தூண்டில் மீன்களால் நிறைந்துகொண்டேயிருந்தது. பிடிபட்டும், பையில் போட்டும் மீண்டும் மீண்டும் நான் மட்டும் நழுவி நழுவித் தண்ணீருக்குள் விழுந்துகொண்டேஇருந்தேன். அந்த வித்தையை அப்பா எனக்குக் கற்பித்திருந்தார். என் தப்பித்தல் மற்றவர்களை உஷார்படுத்துமென சார் உள்ளூரப் பயந்தார். என் மீதான வன்மம் ஒரு சிறு உருண்டை மாதிரி உருண்டு அவர் மனதின் ஓரத்தில் போய்ப் பதுங்கிக்கொண்ட முதல் நாள் அதுதான்.

அதன் பிறகு வகுப்பறை என்னை நெட்டித் தள்ளிக்கொண்டேயிருந்தது. தொடர் அவமானங்களால் நான் காயப்பட்டேன். என் சதையைக் காக்கைகள் கொத்தித் தின்றுகொண்டேயிருந்தன. சகல மேன்மையும், கம்பீரமும், கௌரவமும் வாய்க்கப்பெற்ற என் அப்பாவின் பொருட்டு, வலி பொறுக்கக் கற்றுக்கொண்டேன். சப்பராங்கால் போட்டு உட்கார்ந்து இரவு நேரங்களில் சொல்லிக்கொடுக்கும் அப்பாவின் வாஞ்சை மிகு தோழமையின் முன் என் அற்ப வலியை எடுத்துவைக்க விரும்பினதில்லை. அப்பாவின் நேர்மையும், வாழ்வை அவர் எதிர்கொண்ட திறனும் என்னுள் ஒட்டியிருந்தது. குதூகலமற்ற, புன்னகை தீய்க்கப்பட்ட என் முகத்தை எனக்கு மட்டுமே தெரிகிற மாதிரி நான் மறைத்துக்கொண்டேன். சர்வ வல்லமை பொருந்திய அப்பாவாலேயே அதைக் கண்டடைய முடியவில்லை.

அது ஒரு மே மாதம் என்பதும் சுட்டெரிக்கும் வெயிலினூடே திடீரெனத் திரண்ட கருமேகங்களும், அடித்த பேய்க் காற்றும், ஊற்றிய மழையும், முறிந்த பெரு வேப்பமரமும், நசுங்கிய சேகர் அண்ண னின் சைக்கிளும் எல்லாமும் ஞாபகம் இருக்கிறது. களேபரங்கள் முடிந்த அந்த மாலை நாங்கள் ஆறேழு பேர் சாரோ னில் இருந்து சைக்கிளுக்கு இருவராகப் பிரிந்து ஸ்கூலுக்கு ரிசல்ட் பார்க்கப் போனோம். நெற்றியிலும் மார்பிலும் சிலுவைக் குறிகளைக் காற்றில் இருந்து எடுத்தெடுத்து அணிந்து கொண்டோம். நான் அன்று ராஜாவின் சைக்கிளுக்குப் பின் அமர்ந்திருந்தேன். என் கண்கள் மூடியிருந்தன. என்னுள் மட்டும் கவிந்த இருட்டு பயமுறுத்தியது.

நான் ஜெபித்துக்கொண்டே போனேன். உள்ளிருந்து சில வார்த்தைகள் என் அஜாக்கிரதையால் கசிந்து, ராஜாவைத் திரும்பவைத்தது. ஸ்கூலில் நிறையக் கும்பல் இருந்தது. அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளோடு குவிந்திருந்தார்கள். ஒவ்வொரு வகுப்பு அறையும் ரிசல்ட் கூடங்களாகத் தற்காலிகமாக மாறியிருந்தன. ஒவ்வொருவரும் நீண்டு நின்ற ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு பார்வையை மட்டும் உள்ளனுப்ப வேண்டும்.

சாய்த்து வைக்கப்பட்டிருந்த நோட்டீஸ் போர்டில், VII ‘ஏ’ , VII ‘பி’ என்று ஆரம்பித்து VII ‘ஹெச்’ வரை தேர்வான பெயர்கள் டைப் செய்யப்பட்டிருந்தன. சிவப்பு மையினால் பிரிவுகள் அடிக்கோடு இடப்பட்டிருந்தன. நான் ஆர்வத்தின் நுனியில் இருந்தேன். மற்ற முகங்களில் தீர்க்கம் இருந்தது. மற்றவர்களைத் தள்ளிவிட்டுவிட்டு நான் VII ‘பி’ -யின் தேர்வுப் பட்டியலைப் பார்த்தேன். ‘பி’-யில் ஆரம்பிக் கும் என் பெயர் முதல் ஆறேழு பெயர்களில் இல்லை. நான் திடுக்கிட்டேன். கை நடுங்க ஆரம்பித்ததையும், நெற்றியில் வியர்வை துளிர்ப்பதையும் உணர முடிந்தது. தேர்வான கடைசிப் பெயர் வரை நான்காவது முறையாகப் படித்தேன். இல்லை, என் பெயரில்லை. எப்போதும் மூன்று அல்லது நான்கு ரேங்க்குக்குள் வரும் நானில்லை அதில்.

ரேங்க் பட்டியலில் இட முடியாத பல பெயர்களும் அதில் இருந்தன. எனக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. அருகிலேயே தவறினவர்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருந்தன. நிராசையோடு அதைப் பார்த்தேன். அதில் என் பெயர் இருந்துவிடக் கூடாதென உள்ளூரப் பிரார்த்தித்தேன். சப்பராங்கால் போட்டு கிராமர் சொல்லிக்கொடுத்த அப்பாவின் குரல் கேட்டது. அவர் முன் எப்படிப் போய் நிற்பது? அவருடைய ஒரு பார்வையின் ஊடுருவலில் நான் துளைக்கப்படுவதை உணர்ந்தேன். நம்பிக்கையுடனும் நம்பிக்கையற்றும் பட்டியலைப் பார்த்தேன். தவறினவர்கள் பட்டியலில் முதலில் என் பெயர் இருந்தது. என் பெயர் மட்டும் அழுத்தி டைப் செய்யப்பட்டதுபோல் இருந்தது. வன்மத்தின் விஷத் துளி என் பெயர் மீது படிந்திருந்தது.

துளிர்க்கும் கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி யாரையும் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். ஸ்கூல் கேட்டில் நின்று திரும்பினேன். ராஜா சைக்கிளில் உட்கார்ந்து தரையில் கால் ஊன்றி என் வருகைக்காகக் காத்திருந்தான். நான் அவமானமுற்றிருந்தேன். ராஜாவின் முகத்தில் வெற்றியின் தீட்டல் இருந்தது. என் முகம் கருமை அடைந்திருந்தது. ஒரு நீண்ட நடையின் முடிவு, என் வீட்டின் ஈஸி சேரில் வெற்றுடம்போடு படுத்து எதையோ படித்துக்கொண்டிருந்த அப்பா முன் நின்றது.

அப்பா என்னை ஏறெடுத்தார். அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் அவர் மேல் சரிந்தேன். அவர் தன் தடித்த விரல்களால் என் முதுகில் ஸ்பரிசித்து என்னைத் தேற்றினார். யாரும் ஒரு வார்த்தை பேசாமல் என் தோல்வியை, அல்லது பழிவாங்கலை அவருக்கு சரீரம் வழி கடத்தியும், பெற்றும் உணர்ந்த கணம் அது. வஞ்சிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கான கண்ணீர் அவர் இடது கண்ணில் இருந்து ஒரு சொட்டு சொட்டியது. என் அழுகை கேவலாக மாறியபோது அவர் மிகுந்த வாஞ்சையோடு, ‘அழாதய்யா… அப்பா இருக்கேண்டா’ என்ற ஒற்றை வரியில் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளியிட்டார்.

அதன் பிறகும் நான்தான் அழுதுகொண்டிருந்தேன். அன்றிரவையும், அடுத்த நாள் காலையையும் சகஜமாக்க நானும் அப்பாவும் மாறி மாறி முயற்சித்தோம். தோல்வி சுற்றிச் சுற்றி வந்து ஒரு பாம்பு மாதிரி எங்கள் கால்களைச் சுற்றியது.

வழக்கம்போல ஷேவ் செய்து, கை வைத்த வெள்ளை பனியன் போட்டு, யாருக்கும் வாய்க்காத அழகோடு வேட்டி கட்டி, ஒரு முழுக்கை வெள்ளைச் சட்டையைக் கஞ்சி மொடமொடப்போடு போட்டுக்கொண்டு எடுத்துவைக்கப்பட்டிருந்த காலை டிபனைப் பார்வையால் நிராகரித்து, என்னை சைக்கிள் கேரியரில் உட்காரவைத்து பள்ளியை அடைந்தார்.

அப்பாவும் நானும் ஹெட்மாஸ்டர் அறை முன் நின்றிருந்தோம். ஆறேழு பேர் எங்களுக்கு முன்பே அங்கு இருந்தார்கள். புதிய சேர்க்கை, டி.சி. வாங்குதல் போன்றவை அவர்களிடம் இருந்ததை உணர முடிந்தது.

‘தனக்கோட்டி வாத்தியார்’ என கனகராஜ் வழக்கமான தன் பெருங்குரலில் கூப்பிட்டார். ஒரு சுழல் நாற்காலியில் அவர் இருந்தார். சகல அதிகாரங்களும் வாய்த்த அவர் தலைக்கு மேல் அவர் பெயருக்குப் பக்கத்தில், ஹெட்மாஸ்டர் – கரஸ்பாண்டென்ட் என்று எழுதப்பட்ட பித்தளை போர்டு இருந்தது. அதிகார நெடி அந்தக் கருங்கல் சுவர்களில் இருந்து கசிந்துகொண்டிருந்தது. ஹெட்மாஸ்டர் தன் கைகளால் எதிரில் இடப்பட்டிருந்த ஒரு மர நாற்காலியை அப்பாவுக்குக் காட்டினார்.

நீடித்த அமைதியைத் தொடரவிடாமல் அப்பா தன் உரத்த குரலில் ஒரு சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விவரித்தார். எதையும் கேட்டுப் பழகியிராத அவர் இடைமறித்து, ‘அவன் ஃபெயில் ஆயிட்டான் அதானே’ என்ற அலட்சியத்தை மறித்து, ‘ஃபெயிலாக்கப்பட்டான்!’ என அப்பா திருத்தினார்.

‘அதை எப்படி உறுதியாச் சொல்றீங்க?’

‘நானும் வாத்தியார்தான் சார்.’

வஞ்சம்2

”எலிமென்ட்டரி ஸ்கூல் வேற, ஹயர் செகண்டரி ஸ்கூல் வேற’- அலட்சியம் தோய்த்துவார்த்தைகள் வெளிவந்தன.

‘தெரியும். என் பையனப்பத்தி என்னைவிட வேறு யாருக்குத் தெரிஞ்சிடப்போவுது.’

‘அப்ப வீட்லயே வெச்சி நீங்களே சொல்லிக்கொடுக்க வேண்டியதுதானே.’

‘காலாண்டுலேயும் அரையாண்டுலேயும் மூணாவது ரேங்க் வாங்கற பையன், முழு ஆண்டுல எப்படி சார் ஃபெயிலாக முடியும்? அவன் ஆன்சர் ஷீட்டைப் பார்க்கலாமா?’

‘அதை உங்ககிட்ட காட்டணும்னு ரூல் இல்லை’- எள்ளலும் அலட்சிய மும் உதாசீனமுமாக அவரிடம் இருந்து வார்த்தைகள் வந்தன.

”கேவலம், மாசம் அம்பது ரூபா டியூஷன் காசுக்காக ஒரு படிக்கிற பையனை இப்படிப் பண்ணிட்டீங்களேடா’ என்று அப்பா முடிக்கும் முன், தான் ஒருமையில் அழைக்கப்படுவதைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தில், ”கெட்அவுட் ஃப்ரம் திஸ் கேம்பஸ்!” என அந்த அறையே அதிர்வது மாதிரி கத்தினார்.

வெளியில் இருந்தவர்கள் கதவைத் தள்ளி உள்ளே பார்த்தார்கள். கனகராஜ் உள்நுழைந்து எங்களைச் சமீபித்து அவருக்கு அரண் மாதிரி நின்றுகொண்டான்.

எதற்கோ ஆவேசம் வந்தவர்போல் அப்பா தன் இரு கைகளாலும் தன் சட்டையைப் பிய்த் தார். இரண்டு பட்டன்கள் தெறித்து ஹெட்மாஸ்டரின் மேசை மீது விழுந்தது.

‘பாருய்யா… பாரு’ என்று தன் தோள்பட்டையைக் காண்பித்தார். குண்டு பாய்ந்து தைக்கப்பட்ட பெரும் தழும்பு தெரிந்தது.

‘வெள்ளைக்காரனை அனுப்ப வாங்குன குண்டடி. எல்லாம் மாறிடுச்சினு நெனச்சோமே, உன்னை மாதிரி ஆளுங்க இப்படி சின்னஞ்சிறு பசங்களைப் பழிவாங்கவா இத்தனை ரணப்பட்டோம்.’

அப்பாவின் வார்த்தைகளின் கனம் தாங்காமலோ, அது தேவையற்றது என்றோ, அவர் தன் சுழல் நாற்காலியில் இருந்து எழுந்து வெளியேறத் தயாரானார்.

அதிலும் அப்பாவே முந்திக்கொண்டார். என் கையைப் பிடித்திழுத்துக்கொண்டு, பட்டன்கள் அறுந்து கிழிந்த சட்டையோடு சைக்கிளை எடுத்தார்.

நான் முன் ஹேண்ட்பாரில் ஏறப்போனேன்.

‘பின்னால கேரியர்ல உட்கார்ந்துக்கோய்யா…’

நான் அமைதியாக ஏறி உட்கார்ந்துகொண்டேன்.

‘அப்பாவைக் கெட்டியாப் புடிச்சுக்கோ!’

கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.

இன்னும் பிடி தளரவேயில்லை!

– ஏப்ரல் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *