ராஜேஷின் கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 14,197 
 

மோகன் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஒரு வாரம் ஆகிறது. எட்டு வருடங்களுக்கு முன், பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு மிகப்பெரிய அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

பொறியியல் படிப்பு முடித்து விட்டு அமெரிக்கா சென்றவன், வருடத்திற்கு ஒரு முறை, மதுரையில் வசிக்கும் தன் பெற்றோரைப் பார்க்க வருவான். எப்போது வந்தாலும், இந்தியாவில் இரண்டு வாரங்கள் இருந்துவிட்டு அமெரிக்கா திரும்பிவிடுவான். இந்த முறை ஒரு மாதம் இருந்துவிட்டு போகலாம் என்று எண்ணியிருந்தான்.

மதுரையில், தன் வீட்டில், மோகன் தினமும் காலை 9 மணிக்கு எழுவான். பத்து மணிக்கு சாப்பிட்டு, பிறகு கொஞ்ச நேரம் தன் தந்தை, தாயுடன் அரசியல் விவாதம் நடத்துவான். மதியம் 2 மணிக்கு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு 5 மணி வரை தூக்கம். மகன் வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருப்பதால் அவனுக்கு பிடித்தவற்றை சமைத்துப் போடுவார் மோகனின் தாய் கீதா. தினமும் ராஜோபசாரம் தான் அவனுக்கு.

மாலை எழுந்து, இரவு சாப்பாடு, டிஃபன் செய்வதில் தன் தாய்க்கு உதவுவான். இரவு 9 மணிக்கு இரவு சாப்பாடு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தால் அவன் தூங்கப்போக இரவு 11 மணி ஆகிவிடும். இந்த அட்டவணையை தினமும் பின்பற்றி வந்தான்.

அன்று வியாழக்கிழமை, மணி மாலை 6 மணி. மோகனும், அவன் அம்மாவும் சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். “சொல்ல மறந்துட்டேன் மோகன். ரெண்டு, மூணு வாரம் முன்னாடி உன் ஃப்ரெண்ட் விஜய் வந்திருந்தான்பா. மாசம் ஒரு தடவ வந்துடுவான், நீ எப்பொ வர்றன்னு கேட்டான். அநேகமா உன்ன பாக்க வருவான்னு நெனக்கிறேன்” என்றார் மோகனின் தாய்.

அதற்கு மோகன், “அப்படியாமா? அவன் இங்க வர்ற விஷயத்த எல்லாம் எனக்கு இ-மெயில்ல அனுப்புவான். இந்த தடவ என்ன விஷயமா வந்தான்? தெரியுமா அம்மா உனக்கு?” என்று கேட்டான். “உங்க ஃப்ரெண்ட் ராஜேஷுக்கு கல்யாணமாம். அத சொல்லத்தான் வந்தான்னு நெனக்கிறேன்பா” என்றார் மோகனின் தாய்.

இவர்கள் இங்கு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. கதவைத் திறந்து உள்ளே வந்த விஜய்யை மோகனின் தந்தை வரவேற்று கூடத்தில் உட்கார வைத்து, “மோகன், இங்க பாருடா. விஜய் வந்திருக்கான்” என்று மோகனைக் கூப்பிட்டார்.

மோகன் கூடத்திற்கு வந்து, “வாடா விஜய், பாத்து எவ்ளோ நாளாச்சு? எப்படி இருக்க? அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா?” என்றான். அதற்கு விஜய், “எல்லாரும் நல்லாயிருக்கோம்டா. நீ எப்படி இருக்க?” என்றான். நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு இருக்க வேண்டாம் என்று நினைத்து, “நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று சமையலறைக்குப் போனார் மோகனின் தந்தை.

மோகன், விஜய், ராஜேஷ் மூவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு மோகனும், விஜய்யும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். ராஜேஷ் திருச்சியில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.

இரு நெருங்கிய நண்பர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்தால் என்னவெல்லாம், எப்படியெல்லாம் பேசுவார்களோ, அதையெல்லாம், அப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர் மோகனும், விஜயும். சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.
“டைம் போனதே தெரியலடா. நான் கிளம்பறேன், ராஜேஷ் கல்யாணத்துக்கு தங்க மோதிரம் வாங்கித்தரலாம்னு நம்ம ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. நான் அத வாங்கணும்” என்றான் விஜய். அதற்கு மோகன், “சரிடா, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் இங்க தான் இருப்பேன். அப்புறமா வா, எங்கயாவது வெளிய போகலாம்” என்றான்.

அதற்கு விஜய், “நாளைக்கு நீ சும்மாதானே இருக்க? நாளைக்கு ராஜேஷோட ரிசெப்ஷன் இருக்கு. நீயும் வாடா. உனக்கும் இன்விடேஷன் அனுப்பியிருக்கானாம் அவன். இன்விடேஷன் கிடைச்சதா?” என்றான்.

“பாத்தமாதிரி ஞாபகம், சரியா ஞாபகம் இல்லடா” என்றான் மோகன். “சரிடா, நாளைக்கு சாயங்காலம் 6 மணிக்கு ரங்காலயா கல்யாண மண்டபத்துக்கு வந்துடுடா” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான் விஜய்.

அடுத்த நாள் மாலை 6:30 மணி. ரங்காலயா கல்யாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான் மோகன். மதுரையிலேயே மிகப்பெரிய கல்யாண மண்டபம் தான் இந்த ரங்காலயா கல்யாண மண்டபம். குறைந்தபட்சம் 3000 பேர் உட்காரக்கூடிய அளவுக்கு பெரிய ஹால் இருந்தது.

உள்ளே வந்த மோகனைப் பார்த்து கையசைத்தான் ஹாலில் கடைசி
வரிசையில் உட்கார்ந்திருந்த விஜய். அவன் அருகில் உட்கார்ந்தான் மோகன். “ஏன்டா கடைசில இருக்கோம்? முன்னாடி போய் உக்காரலாம் இல்ல?” என்றான் மோகன். அதற்கு விஜய், “முன்னாடி எங்கயுமே இடம் இல்லடா. அதான் நம்ம காலேஜ்ல இருந்த மாதிரி கடைசி வரிசைல இடம் பிடிச்சுட்டேன்” என்றான்.

“இங்க இருந்து மேடையில நடக்கறது ஒண்ணுமே தெரியலடா. ராஜேஷப் பாத்து ரொம்ப நாளாச்சு. அவன பாக்கலாம்னு பாத்தா இப்படி இருக்கு. இங்க செவுத்துல இருக்கற டி.வியிலயும் சரியா தெரியாமாட்டேங்குது” என்றான் மோகன். அதற்கு விஜய், “விடுடா. அவனுக்கு கிஃப்ட் கொடுக்கும்போது மேடை ஏறுவோம்ல அப்பொ பாக்கலாம்” என்றான்.

7:30 மணிக்குள் மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மோகனிடம் விஜய், “நீ எப்போடா கல்யாணம் பண்ணிக்கப்போற? உன் அம்மாவும், அப்பாவும் உங்கிட்ட இதப்பத்தி பேச சொன்னாங்க. கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டியாமே?” என்று கேட்டான். அதற்கு மோகன், “தெரியலடா. கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் இப்போதைக்கு இல்ல” என்றான்.

அத்றகு விஜய், “சரி விடு. எது எப்போ நடக்கணும்னு இருக்கோ அது அப்போ தான் நடக்கும். வா, நாம மேடை ஏறி ராஜேஷுக்கு கிஃப்ட் கொடுத்துட்டு வரலாம்” என்றான். இருவரும் மேடையை நோக்கிச் சென்றனர்.

“என்னடா இது? மேடை படிக்கட்டுல இருந்தாவது ராஜேஷ பாக்கலாம்னு பாத்தா எல்லாரும் கிஃப்ட் கொடுக்கறேன்னு முழுசா மறைச்சிட்டாங்களே” என்றான் மோகன். அதற்கு விஜய், “இங்க வந்து பாருடா. சரியா தெரியும் உனக்கு” என்றான்.

மணமக்களைப் பார்த்தான் மோகன். அதிர்ச்சியில் மனமுடைந்து போனான். மணமகன் ராஜேஷின் வலது பக்கத்தில் இருந்தது மணமகள் திவ்யா. மோகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. மிகவும் சிரமப்பட்டு அதைக் கட்டுப்படுத்தி மேடையை விட்டு கீழே இறங்கினான் மோகன். அவன் தோளில் கை வைத்துக்கொண்டு விஜய்யும் கீழே இறங்கினான். இருவரும் மண்டபத்தின் வாசலுக்குச் சென்று, மண்டபத்துக்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் நின்றனர்.

மோகனும் திவ்யாவும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஒருவரையொருவர் உண்மையாகவும், தீவிரமாகவும் காதலித்து வந்தனர்.
ஆனால், கல்லூரி இறுதியாண்டில், அந்த வயதுக்கே உரிய பக்குவமின்மையால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோகனை விட்டு பிரிந்து சென்றாள் திவ்யா. இருந்தாலும், மோகனால் திவ்யாவை மறக்க முடியவில்லை. என்றாவது ஒரு நாள் திரும்பி வருவாள் என்று சில நொடிகளுக்கு முன்பு வரை நினைத்திருந்தான். அந்த எண்ணம் இப்போது சுக்குநூறானது.

விஜய்யின் தோளில் சாய்ந்து அழத்தொடங்கினான் மோகன். “நீ எதுக்குடா அழற? திவ்யா அங்க சிரிச்சுட்டு இருக்கா. நீ மட்டும் எதுக்கு அழணும்” என்றான் விஜய். அதற்கு மோகன், “திவ்யாதான் கல்யாணப்பொண்ணுன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தும் ஏன்டா எங்கிட்ட சொல்லலை? நான் கல்யாணத்துக்கே வந்திருக்க மாட்டேன்” என்று அழுதபடியே சொன்னான்.

“நீ திவ்யாவ இன்னும் மறக்கலைன்னு எனக்குத் தெரியும். நீ யாரை நெனச்சு கல்யாணம் பண்ணிக்காம காத்துக்கிட்டு இருக்கியோ, அவளுக்கு இப்போ கல்யாணம். அதை நீ தெரிஞ்சுக்க வேணாமா? அதனால தான் உங்கிட்ட சொல்லலை” என்றான் விஜய்.

“நான் வீட்டுக்குப் போறேன்டா. நான் மண்டபத்துக்குள்ள வரலை. நீ போய்ட்டு வா” என்றான் மோகன். அதற்கு விஜய், “நானும் வர்றேன். வெளிய ஏதாவது ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு போகலாம் வா” என்றான்.

ஹோட்டலில் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 11 ஆகியிருந்தது. மோகனின் கண்கள் வரண்டு போயிருந்தன, முகத்தில் ஒரு தெளிவு வந்திருந்தது. “நான் உன்ன உங்க வீட்டுல டிராப் பண்ணிட்டு போறேன். வண்டியில உக்காரு” என்று விஜய் சொல்ல, மோகனும் வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

மோகன் வீட்டு வாசலில் அவனை இறக்கிவிட்டு, விஜய், “சொன்னதெல்லாம் யோசிச்சு பாருடா. உனக்கே புரியும். நான் நாளைக்கு வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். வீட்டின் உள்ளே நுழைந்த மோகனைப் பார்த்து அவன் தாய், “என்னப்பா ரிசெப்ஷன் நல்லா நடந்ததா? ராஜேஷுக்கு வாழ்த்துக்கள் சொன்னியா?” என்றார். அதற்கு மோகன், “எல்லாம் நல்லா நடந்ததுமா” என்றான்.

“விஜய் உங்கிட்ட வேற ஏதாவது சொன்னானா மோகன்?” என்று கேட்டார் மோகனின் தந்தை. அதற்கு மோகன், “சொன்னான். நான் யோசிச்சுட்டு நாளைக்கு சொல்றேன்பா” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *