மனதோடுதான் பேசுவேன்!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 8,199 
 

புதுக்கோட்டைக்குச் செல்வதற்கு வழக்கம்போல் காரைக்குடி – மானாமதுரை வரை செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். கையில் அன்றைய தினப் பத்திரிகை. படிப்பில் ஆழ்ந்திருந்தபோது, “”நான் உங்கள் பக்கத்தில் உட்காரலாமா?” என்ற குரலோடு, என் அனுமதியைப் பெறுவதற்கு முன்பே ஒருவர் என் பக்கத்தில் உட்கார்வதை உணர்ந்து பட்டென்று திரும்பினேன். என் எதிரே உள்ள இரு இருக்கைகள் காலியாக இருக்க என் பக்கத்தில் வந்து அவ்வளவு உரிமையோடு உட்காருபவர் யார்? என் பார்வையை அவர் பக்கம் திருப்பியதும் அப்படியே அசந்து போனேன் நான்.

மனதோடுதான் பேசுவேன்அதே முகம். கூரிய மூக்கு. ஒட்டிய கன்னங்கள். எப்போதுமே ஒரு வார தாடியை அந்தக் கன்னங்கள் உள்ளடக்கி இருக்கும். பக்கத்தில் வந்தாலே சிகரெட் வாசனை. அதை மறைக்க பாக்கு. கட்டும் வேஷ்டி, போடும் சட்டை, அவற்றை நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து உடுத்துவேன் என்பதைப் போல அங்கே இங்கே திட்டுத் திட்டாய் அழுக்குக் கறைகள். இந்த உருவத்தைப் பார்த்ததும் நான் ஆச்சரியப்பட்டு மட்டும் போகவில்லை. இறந்து போன மனிதர் எப்படி உயிர் பெற்று வந்து என் அருகே உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைத்த போது பயமாகவும் இருந்தது.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த மனிதர் என்னைப் பார்த்து லேசாகச் சிரிக்கவும் மனதில் இன்னும் கூடுதலாகப் பயமும் எழுந்தது. அவர் பார்வையைத் தவிர்ப்பதற்காக என் பார்வையை ஓடும் ரயிலின் வெளியே படரவிட்டேன். நாம் கடைவீதி, சினிமா என்று போகும்போது நம் எதிரே தென்படும் சிலர் நம்மைப் பார்த்து வணக்கம் சொல்வதுண்டு. சிலர் வெறுமனே புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டுப் போவார்கள். அவர்கள் போனபிறகு நமக்கே தோன்றும், “யார் அவர்? ஞாபகம் இல்லையே’ என்று. நமக்கு ஞாபகம் இல்லாமல் இருக்கும். ஆனால் நம்மை ஞாபகம் வைத்துத்தான் அந்த வணக்கத்தைச் சொல்லி, புன்னகை செய்து இருப்பாரோ? இப்போது என் அருகே வந்து உட்கார்ந்திருப்பவர் முகம் தெரியாதவர் அல்ல. மிகவும் பரிச்சயமான உறவினரும் கூட…

ஆமாம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துபோன என் தங்கை கணவரின் சாயலில் அப்படியே உரித்து வைத்தாற்போல இருப்பவர். இறந்த உடலைத் தீயில் இட்டுக் கொளுத்தி பத்தாம் நாள் பதினோராம் நாள் என்று காரியங்களையும் நடத்தி இனி வருஷ திதியன்றுதான் நினைவு கூர்ந்து சிறப்பாகக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்த இந்தச் சூழலில், இறந்து போன என் தங்கையின் கணவரின் சாயலில் ஒருவர் வந்து என் பக்கத்தில் உட்கார்கிறார் என்றால் எப்படி இருக்கும்?

படித்துக் கொண்டிருந்த பேப்பரைப் பட்டென்று மடித்து வைக்கலானேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த மனிதரைப் பார்க்க மனமின்றி. ஆனால் அவர் செய்த அடுத்த காரியம், “”இன்னையப் பேப்பர்தானே நீங்க படிச்சிட்டிங்களா? நான் கொஞ்சம் படிச்சுட்டுத் தர்றேன்” என்றார். நான் அனிச்சையாக அந்தப் பேப்பரை அவரிடம் நீட்டினேன்.

“”அடடே… கண்ணாடி இல்லியா? வர்ற அவசரத்தில் வீட்டில் வச்சுட்டு வந்துட்டேன் போல் இருக்கு. பரவாயில்லை” தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு, மிகவும் சிரமப்பட்டுக் கண்களை மிகவும் கீழ்நோக்கிப் பேப்பரைப் பார்க்கலானார்.

அடுத்து என்ன பேசப் போகிறாரோ? என்ற தவிப்பு எனக்கு. அடுத்த கணம் எனக்கு அந்தத் தைரியம் எப்படி வந்தததோ, தெரியவில்லை.

“”ஸார் உங்களைப் பார்த்தால் ஏற்கனவே பரிச்சயம் ஆன முகம் மாதிரி இருக்கு. சாருக்கு சொந்த ஊர் எதுன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றேன்.

பட்டென்று தன் பார்வையைப் பேப்பரில் இருந்து எடுத்தவர், “”எனக்கும் அப்படித்தான் இருக்கு. அதுதான் உங்க அனுமதியில்லாமலேயே உங்க பக்கத்தில் உட்கார்ந்தேன் நான். உங்க ஊர் எதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று என்னிடம் திருப்பிக் கேட்டார் அவர்.

“”எனக்கு இந்தத் திருச்சிதான். முப்பது வருஷங்களாக இருக்கேன். இப்போ மானா மதுரைக்குத் திருமண நிகழ்வுக்காகப் போய்க் கொண்டு இருக்கிறேன்”

“”அப்படியா ஆனால் எனக்கு அந்த திருச்சியில் இருந்து காரைக்குடி வரை உள்ள எல்லா இடமுமே எனக்குச் சொந்தமான இடம்தான்” என்றார். அதைக் கேட்டு எனக்குச் சிரிப்பாக வந்தது.

“”திருச்சியில் இருந்து காரைக்குடி கிட்டத்தட்ட 95 கிலோ மீட்டர் இருக்கும். அவ்வளவும் உங்களுக்குச் சொந்தமான இடமா?”

“”ஆமா ”

“”என்ன சார் இது? கொஞ்ச இடம் கிடைச்சாலே அதில் வீடு கட்டி மாடி கட்டி வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கிறாங்க. இன்னும் பெரிய பெரிய காம்ப்ளெக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறாங்க. பெரிய பெரிய பென்ஸ் காரில் பவனி வர்றாங்க. நீங்க என்னடான்னா இப்படி கிழிஞ்ச உடையோடு நாலு நாள் தாடியோடே இந்த உலகத்திலே என் ஒருத்தனைத்தான் இறைவன் ஏழையாகப் படைச்சுட்டான் என்பதைப் போல வறுமையில் வாடுற ஆளைப் போல இருக்கிறீங்க?” என்றேன்.

சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்தவர், “”இன்னைக்கு நான் பிறந்த ஊரான கீரனூரில் இறங்கி என் சக தோழர்களைப் பார்க்க வேண்டியிருக்கு” என்று அவர் மேலும் மேலும் சொல்லச் சொல்ல, உண்மையில் எனக்குப் பயமாகத்தான் இருந்தது. என்னுடைய போதாத காலம் எதிர் இருக்கையில் யாருமே இல்லை. இருந்திருந்தால் அவரையாவது நான் துணைக்கு அழைத்து இருக்கலாம். என்ன செய்வது?

அவர் ஓடும் வண்டியில் இருந்து குதித்துவிடுவார் போல் இருந்தது. ஆனால் குதிக்கவில்லை. நிதானமாகவே பேச ஆரம்பித்தார்.

“”நானும் இந்த உலகத்தையே ஆள வேண்டுமென்றுதான் இருந்தேன். பல கோடி சொத்துகளை வாங்கிப் போட்டு அதற்கு அதிபதியாக இருக்க ஆசையும் பட்டேன். திருச்சியில் இருந்த இந்தக் காரைக்குடி வரை இடைப்பட்ட பல நிலங்கள் எனக்குச் சொந்தமானவை. நன்றாக வளர்ந்த பயிரை மேய வரும் ஆடு, மாடுகளைப் போல என்னை ஒழித்துக் கட்டி சொத்தை அபகரிக்க, சொந்த அண்ணனே சூழ்ச்சி பண்ணினான். அழைத்து வந்து, இந்த ரயிலில் உட்கார்ந்து பஞ்சாயத்துப் பேசுவதைப் போல என்னைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் புரளி கிளப்பினான். அதை இந்த ஊர் நம்பியது. உறவினர் நம்பினர். ஆனால் என் ஆத்மா இன்னும் சாந்தி அடையாமல் இங்கேதான் அலைந்து கொண்டு இருக்கிறது. எனக்கு ஆண்டவன் நிர்ணயித்த வயது அறுபது. நான் அல்ப ஆயுசில் போனபோது வயது நாற்பது. இன்னும் இருபது வருஷங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த பிறகுதான் நானும் மேலே போவேன். அவ்வப்போது காற்றில் பறக்க ஆசைப்பட்டால் பறப்பேன். யார் கண்ணுக்கும் தெரியாது. ஆனால் எனக்கு அவ்வப்போது ரயிலில் பயணம் செய்யத்தான் ஆசை. நான் உயிருடன் இருந்தபோது இதே ரயிலில்தான் பயணம் செய்து, பல இடங்களைப் பார்த்து வாங்கிப் போட்டேன். ஆனால் அனுபவிக்க முடியவில்லையே. இப்பப் பாருங்க, நீங்களே என்னைப் பார்த்ததும் பார்வைக்கு நான் ஒரு பிச்சைக்காரன் போல இருக்கேன்னு சொல்லாமல் சொன்னீர்கள். உண்மையும் கூட. இந்த நிலைக்கு நான் ஆளாகக் காரணமே இந்த உலகத்தையே ஆள வேண்டும் என்ற ஆசைதானே. சரி கீரனூர் வரப் போகுது. நான் இறங்கிக்கிறேன். ஒரு சின்ன உதவி. ஒரு அஞ்சோ பத்தோ பணம் தர முடியுமா? காலை வேளையில் எதுவுமே சாப்பிடலை. ஒரு பன்னும் டீயும் சாப்பிட்டு மதியம் வரை பொழுதைப் போக்குவேன்”

இப்பவும் அனிச்சையாய் என் கை பையில் இருந்து பத்து ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டியது.

வண்டி புறப்பட ஆரம்பித்ததும் அடுத்த கணம் அடுத்த கம்பார்ட்மென்ட்டில் ஏறிக் கொள்ள மனம் பரபரக்க விருட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தேன்.

இது நடந்து இன்றைக்கு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. நடந்தது நனவா? கனவா? என்று புரியவில்லை. வந்தது இறந்துபோன ஒருவரின் ஆவியா? அல்லது எவரேனும் பைத்தியமா? இல்லை நானாகவே செய்து கொண்ட கற்பனையா?

இறந்து போன என் தங்கையின் கணவர் உருவில் அச்சு அசலாக அந்த நபர் இருந்ததுதான் என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிராகவே இருக்கிறது.

என் தங்கையின் கணவர் பிறந்த ஊரும் கீரனூர்தான்.

– சரஸ்வதி பஞ்சு (டிசம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *