காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 19,248 
 

அடுக்குமாடிகள் முளைத்து இருந்த திட்டிப் பகுதியைத் ‘திவைத்தா’ என்றார்கள். அது ஓஸ்லோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது ஒரு திட்டியாக, எண்ணைக்காசு வந்தபின்பு நோர்வேயில் எழுந்த மாடிவீடுகள் அங்கு வானை முட்டுகின்றன. இலங்கையிலிருந்து பயத்தைக் காட்டி வெளிநாட்டிற்கு வந்த நாங்கள் இங்கு இருந்த வளத்தைக் கண்டு பூரித்துப் போய்விட்டோம். இந்தா நாடுதிரும்புகிறோம் என்ற கதை மலையேறிப் போய்விட்டது. இப்போது இங்கே கல்லறை தேடுபவர்களின் தொகை அதிகரித்துவிட்டது. மனித சுபாவம் அப்படித்தான். மன்னித்துக் கொள்ள வேண்டும். வேலை செய்து வரி கட்டி வாழ்வதில் தமிழர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது மட்டும் பெருமைதான். கடனட்டையைக் களவு செய்து அனைத்துத் தமிழர்கள் முகத்திலும் அடிக்கடி கரிபூசி விடுகிறார்கள் என்பதும் உண்மை. தமிழன் என்கின்ற ஒரு இனம் இருக்கிறது என்பதை உலகிற்குக் ஏற்றுமதி செய்தபெருமை மட்டும் அல்ல அதையே எங்கள் அடையாளமாய் கொண்ட பெருமை எமக்கே உரித்தானதுதான். கால ஓட்டத்தில் எங்கள் பெருமைகள், அடையாளங்கள் அஸ்திவாரம் இல்லாது கட்டப்பட்ட கோட்டைகளான அந்தரம் செல்விக்கு வருவது உண்டு.

திவைத்தா ‘சொப்பிங் சென்றர்’ அந்த திட்டிக்கு ஏறும் அடிவாரத்தை வழிமறித்துக் கொண்டு நின்றது. நிலத்திற்கு கீழ் ஓடும் ‘இரும்பு வண்டிகளின் ‘ நிலையம் அதற்கு கீழே இருந்தது. பிரதான வீதி இந்தத் திட்டியின் அடிவாரத்தின் கரையோரமாகப் நீண்டு கொண்டு இருந்தது. பிரதான வீதியை மனிதர்கள் பாதுகாப்பாய்க் கடப்பதற்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது.

பரமேஸ்வரன் என்கின்ற பரமேஸ்சும் கலைச்செல்வி என்கின்ற செல்வியும் திவைத்தா சென்றருக்குள் தமது காருடன் நுளைந்தார்கள். காரைத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு கட்டடத்திற்குள் புகுந்தார்கள். கதவு தானாகத் திறந்து வாழைப்பழத்திற்கு புகைஅடிப்பது போல வெப்பக் காற்றை அடித்து அவர்களை உள்ளே அனுப்பி வைத்தது. விடுப்பு பார்ப்பது செல்விக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவள் கண்களில் அப்படியான காட்சிகள் எப்போதும் தட்டுப் பட்டுவிடும். ‘ வெல்றில் ‘ போய்க் கொண்டு இருந்த பரமேஸின் கையைப் பிடித்து இழுத்தவள்…

‘அங்க பாருங்க அப்பா அதுகளை ‘ என்றாள். பரமேஸ் அவள் காட்டின திசையில் பார்த்தான். அங்கே ஒரு பதினேழு வயது மதிக்கத்தக்க தமிழ் பெண் ஒருத்தி நோர்வே இளைஞ்ஞனோடு இதழோடு இதழ் வைத்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தாள்.

‘இதில என்ன அதிசயம் இருக்குது? ஏன் உனக்கு அப்பிடி வேணுமே?’ பரமேஸ் குறும்பாகச் செல்வியைப் பார்த்துக் கேட்டான்.

பரமேஸை முறைத்த செல்வி, ‘உங்கட புத்திய மாத்தேலாது’

‘ஏன் உன்ரபுத்தி மாத்திரம் நல்ல புத்தியா இருந்திருந்தா காந்தியின்ர குரங்குமாதிரியெல்லே நீ வந்து இருக்கோணும்’ என்றான்.

‘ஏன்னப்பா நான் கண்ணால கண்டதைக் கதைக்கிறது கூடத் தப்பே?’

‘நீ கதைக்கிறதுக்கு அதில என்ன அப்பிடித் தப்புக் கண்டிட்டாய்?’

‘இல்ல ஒரு தமிழ் பெட்டையா இருந்து கொண்டு இப்பிடி வெட்கமில்லாமல் செய்யிறதே?’

‘அப்ப வேற இனத்திற்கு இருக்கிற உணர்ச்சி எல்லாம் எங்கட இனத்திற்கு இருக்கக் கூடாதே? தமிழ் பெட்டைக்கு மாத்திரம்தான் வெட்கம் இருக்கோணுமே? யாழ்பாணத்தில பஸ்சுக்க சிங்களப்பிள்ளையே கிஸ் பண்ணுகினம்?’

‘நீங்கள் எல்லாத்துக்கும் இடக்கா கதைப்பீங்கள் அப்பா’

‘நான் என்ன இடக்கா கதைக்கிறன்… உண்மையைத்தானே சொல்லுறன்.’

‘அதுக்கு தமிழ் பெட்டை ஒண்டு இப்பிடிச் செய்யிறதையும் நியாயப் படுத்திறதே?’

‘அவளை யாரடி தமிழ் பெட்டை யெண்டு சொன்னது?’

‘நீங்கள் என்னப்பா கதைக்கிறியள்?’

‘தமிழருக்கு பிறந்தா தமிழ் பெட்டையா இருக்கோணும் எண்டு கட்டாயமே? உந்தப் பிள்ளையளுக்குத் தாய்மொழி நொஸ்க். தெரிஞ்ச கலாச்சாரம் நோர்வே காலச்சாரம். சிந்திக்கிறது நொஸ்க்கில… தோலும் பெயரும் தமிழர் எண்டு சொன்னா அவை தமிழராகி விடுவினமே? சொந்த மொழி தமிழா இருந்து, யாழ்பாணக் கலாச்சாரத்தில கட்டுப்பாடா வளா்ந்த குஞ்சுகள் தானோடி பஸ்சுக்க கட்டிப்பிடிக்குதுகள். பிறகு நீ இங்க கட்டுப்படுத்தத் தேவையில்லை எண்ட காலச்சாரத்தில வளர்ந்ததுகளைப் பார்த்து வாயை ஆவெண்டுறா’

‘உங்களோட கதைக்கேலாது. வாங்க நாங்க வந்த அலுவலைப் பார்ப்போம்’

‘எங்களோட கதைக்கேலாதோ, இல்லாட்டி உங்கட கதையில நியாயம் இல்லையோ?’

‘வாயப் பொத்திக் கொண்டு வறியளே அப்பா’

‘எல்லாரும் இப்பிடித்தாண்டி வெருட்டப் பார்க்கிறியள்’

அன்று சனிக்கிழமை. கைகாலை நீட்டி நிமிர்ந்து கொஞ்சம் அலுப்புத்தீர படுத்துவிட்டு பரமேஸ் காலைச் சாப்பாடு சாப்பிடு வதற்கு வந்திருந்தான். செல்வி ஏதோ கவலையாக தலைக்குக் கைகொடுத்தவண்ணம் யோசனையில் இருந்தாள். பரமேஸ் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,

‘என்னடி கொப்பற்ற கப்பல் கிட்டங்கியில கவுண்டமாதிரி இருக்கிறாய்?’ என்றான்.

‘உங்களுக்கு ஒழுங்காகப் பிள்ளைய வளர்க்கத் தெரியாது, உந்த நக்கலுக்கு மாத்திரம் குறையில்லை.’

‘இப்ப அதையும் எங்கட தலையில கட்டியாச்சே?’

‘எதை?’

‘பிள்ள வளர்க்கிறதை’

‘ம் கிளிச்சியள்’

‘செரி இப்ப சொல்ல வந்ததைச் சொல்லு… இல்லாட்டி அதையும் மறக்கப் போறா’

‘கவின் வெளியால போயிட்டான்’

‘செரி அவன் நெடுக வீட்டுக்க இருக்க முடியுமே? போட்டு வரட்டும். அதுக்கு இப்ப என்ன?’

‘உங்களுக்கு பச்சை வாழைத்தாராட்டம் மூளை. எல்லாம் சொன்னாத்தான் விளங்கும்’

‘நான் என்ன ‘ஐன்ஸ்டைன்’னே சொல்லாமல் கொள்ளாமல் பிரபஞ்சம் பற்றி வழங்கிக் கொள்ள. பத்துதரம் கம்பரமாயனத்திற்கு கருத்துச் சொல்லித் தாந்தாலே பதினெராவதுதரம் அதுக்கு என்ன அர்த்தம் எண்டு தெரியாமல் நிண்டு முழிப்பன். இப்ப நீ விசயத்தைச் சொல்லு’

‘அவர் தன்ர சாரஸ்த்த (பெண்நண்பி) வீட்ட போறார். படம் எல்லாம் பார்த்திட்டு இரவுக்குத்தானாம் இங்க வருவினமாம்.’

‘ஓ’

காதல் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டுப் போகும் உரிமையும் தைகிரியமும் இவர்களுக்கு இருக்கிறது. பரமேஸ்சுக்கு தான் சிறிய வயதில் களவுகளவாய் மதிலால் சுமியை எட்டிப்பார்க்க… ஆரடா அது எட்டிப் பார்க்கிறது என சுமியின் அப்பா கத்த… பரமேஸ் பயத்தில் சைக்கிளால் விழுந்து அறிவு ,மூச்சு இல்லாமல் கிடக்க… சுமியின் அப்பாவே வாழியோடு தண்ணியை கொண்டு வந்து அவன்மேல் ஊற்றி ‘இனி இந்தப்பக்கம் வந்தியெண்டா அறுத்துப் போடுவன்’ எண்டு கலைத்தது இன்னும் நியாபகம் இருக்கிறது. அங்கே அப்போது காதல் செய்வது குற்றம். செய்தாலும் அதை வெளிக்காட்டுவது அதைவிடக் குற்றம். வெளிக்காட்டினாலும் சேர்ந்து திரிவது அதைவிட அவமானம். இப்போது யாழ்பாணத்தில்…?

இங்கு அது எல்லாம் தலைகீழாக இருக்கிறது. அப்படிச் செய்யவிட்டால் பிள்ளைக்கு ஏதாவது குறை இருக்கிறதோ என மருத்துவரிடம் அனுப்பிப் பரிசோதிக்க ஆலோசனை வழங்குகிறார்கள்.

‘என்ன இப்ப வாயடைச்சுப் போச்சே’ இவ்வளவு கவலையிலும் பரமேஸ் பதில் சொல்ல முடியாது தெண்டாடியது செல்விக்கு ஒரு வித சந்தோசத்தைக் கொடுத்தது.

‘இதில என்ன அதிசயிக்க இருக்குது’

‘ஐயோ இதுகளோட நான் என்னெண்டு சீவியம் நடத்துறது’

‘இல்ல இப்ப யாழ்பாணத்திலேயே… எங்களுக்கு எல்லாம் இந்த அதிஸ்ரம் இருக்கேல்லை எண்ட வெப்பியாராமாக்கும் உனக்கு’

‘உந்த பாட்டை நிப்பாட்டுங்க இப்ப. அவனுக்கு ஆகப் பதின்னாலு வயசுதான் ஆகுது…’

‘அப்பிடித்தான் யாழ்பாணத்திலும்…’

செல்வி மேசையில் இருந்த அப்பிளைத் துாக்கி பரமேஸை நோக்கி ஏறிந்தாள்.

– தினக்குரலில் பிரசுரிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *