சார் ஒரு ஆள் இப்பத்தான் இருபது கோடரி செய்து வாங்கிட்டுப் போறான். வழக்கம் போல அவன் அசந்த நேரம் அவனை செல்போன்ல படம் எடுத்து வச்சிருக்கிறேன். என் பையன்கிட்டே குடுத்து எம்எம்எஸ்.சுல அவன் போட்டோவை அனுப்புறேன். ஆளை அமுக்கி விசாரிங்க’ என்றார் அந்தக் கொல்லுப்பட்டறை ஓனர் சிவலிங்கம்.
அவர் மகன் சங்கர் தந்தையைக் கேட்டான். ‘ஏம்பா நமக்குத் தொழில் தர்ற ஆளை போலீஸ்ல மாட்டி விடுகிறீங்களே உங்களுக்கே இது நல்லா இருக்குதாப்பா? கேட்ட மகனுக்கு பதில் கூறினார் சிவலிங்கம்.
‘சங்கர் ஒரு கோடரி அடிச்சிட்டுப் போறவங்க வெறகு வெட்டிப் பொழைக்கிறவங்க. இப்படி பத்து, இருபது கோடரி அடிக்கிறவங்கள்ல நிறைய பேர் கூலிக்கு ஆளை வச்சு காட்டு மரங்களை வெட்டிக் கடத்துறவங்காளாத்தான் இருக்கறாங்க.
தன் சுயநலத்துக்காக இயற்கையை அழிக்கிறவங்களை பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலை. அதனாலதான் இந்த மாதிரி ஆட்களை போலிஸூக்குக் காட்டிக் குடுக்கறேன். இது தப்பா?’’ என்று கேட்ட தந்தையை பெருமை பொங்கப் பார்த்த சங்கர் கூறினான். ‘’இது தேசத் தொண்டுப்பா’’ என்று.
– தூத்துக்குடி வி.சகிதா முருகன் (23-1-13)