கண்ணனின் மெழுகுவர்த்தி வியாபாரம் படுத்து விட்டது.
வெறும் வெள்ளை மெழுவர்த்திதான் பண்ணுகிறான்.
மார்க்கெட்டில் விதவிதமான கலர்களில்தான் மெழுகுவர்த்தி அதிகம் விற்பனை ஆனது. ஆனால் அதற்கு அதிக செலவு ஆகும்.
தன் நண்பன் ராமுவிடம் புலம்பினான் கண்ணன். ராமு உடனே இருபதாயிரம் மெழுகுவர்த்திகளை ஒரு மைதானத்திற்கு கொண்டு வருமாறு சொன்னான்.
கண்ணனுக்கு ஒரே ஆச்சரியம். எனினும் அத்தனை மெழுகுவர்த்திகளையும் எடுத்துக்கொண்டு மைதானத்திற்கு விரைந்தான்.
சில நிமிடங்களிலிலேயே அத்தனையும் விற்பனை ஆனது.
ராமு சொன்னான். ‘ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு விஷயம் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
முதலில் லஞ்சம். இப்ப பாலியல் பலாத்காரம். நாளை என்னவோ!
பொது மக்கள் வெள்ளை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இனி உன் வியாபாரம் ஓகோ என்று பறக்கும்.
ஊடகத்தில் பணி புரியும் ராமுவை நன்றியுடன் பார்த்தான் கண்ணன்.
– மன்ஸ் (23-1-13)