மறு பதிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 300 
 
 

(1962ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

மாடுமனை போனா லென்ன 
மக்கள் சுற்றம் போனா லென்ன 
கோடி செம்பொன் போனா லென்ன-கிளியே 
குறுநகை போதுமடி
 

என்ற கண்ணி இசை வடிவாய்க் காற்றில் மிதந்துவந்து அந்தப் பெரிய மாளிகையின் தோட்டத்தையே வேதி வித்தையால் சொர்க்க மாக்கிக்கொண் டிருந்தது. அந்த நகரின் செல்வர்க ளெல்லாம் வாழுகிற ஒரு பகுதியில் அமைந்திருந்த அந்தப் பெரிய மாளிகை – அரங்க விலாஸ்-ஒரு மூன்றடுக்கு மாடி வீடு. மாலை நேரத்தில் வீட்டு முதலாளி, சுந்தரசாமி நாயுடு தோட்டத்தில் ஒரு பக்கமாக அமைந்துள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்தார். எங்கேயோ தம் சிந்தையைச் செலுத்தி ஆழ நினைந்து தோய்ந்திருந்தவரை இந்த அருமை யான இசைப் பாடல் எழுந்திருக்கச் செய்து விட்டது. விருவிரென்று மாளிகைக்குள் வந்தார். வந்தவுடன், “ஏ, சரோ! இங்கே வா. உன் பாட்டும் நீயும்…..” என்று இரைந்தார். இந்த முழக்கத்தின் உச்ச ஸ்தாயியைக் கேட்டவுடன் பாட்டு தானாகவே நின்றுவிட்டது. அப்பாவின் குரலையும் அந்தக் குரலில் இருந்த கோபக் கொதிப்பையும் உணர்ந்த சரோஜினி மாடி யிலிருந்து இறங்கி வந்தாள். 

அவள் வந்தபோது சுந்தரசாமி நாயுடு சோபாவில் சாய்ந்தவண்ணம் தலையைக் கைக்குச் சுமையாக ஏற்று, எடை போட்டுக் கொண்டிருந்தார். சிந்தனையின் பாரத்தைத் தலையின் எடையால் மதிப்பிட்டு அறிந்தா சமாளிக்க முடியும்! முடியாதுதான். இருந் தாலும் மனிதன் எப்போதுமே அப்படித்தானே செய்கிறான்! மூளையில் கிடந்து அலமரும் எண்ணச் சுமையைத் தாங்க முடியாதபோது வெறும் தலையைப் போட்டு உலுக்கிக்கொள்வது தானே அவன் வழக்கம்! சுந்தரசாமி நாயுடு அந்த வகையைச் சேர்ந்தவர்தாம். 

அப்பாவின் குரல் கேட்டே நடுங்கிப்போன சரோஜினி, அவருடைய நிலையைப் பார்த்ததும் பேசக்கூட முடியாமல் ஒரு ஓரமாக ஒடுங்கி நின்றாள். 

பாட்டை நிறுத்தியதோடு அவருடைய சிந்தனை வேறு வேலை செய்யத் தொடங்கி விட்டது. என்றோ, எப்பொழுதோ நடந்த நிகழ்ச்சிகளின் விவரங்களை யெல்லாம் எடுத் தெடுத்து அவர் மனத்திரையில் வீசி எறிந்து விளையாடிக்கொண் டிருந்தது, அவருடைய சிந்தனை. மாரியம்மைக்கு விளையாட்டு ; நமக்குப் புண்ணும் பொடியுமாக அல்லவா இருக்கிறது ! அப்படித்தான் சிந்தனையின் எக்காளம் நாயுடு வைத் தொளைபோட்டுப் பதம் பார்த்தது. 

கொஞ்ச நேரம் நின்றுபார்த்த சரோஜினி, “அப்பா ! என்னைக் கூப்பிட்டீர்களே, ஏன் ?” என்று கேட்டாள். அணுக் குண்டை எடுத்துத் தன் தலைமேலே போடப் போகிறார் என்று எதிர்பார்த்துப் பேசுவதைப் போல் இருந்தது, அவள் பேச்சு. சரோஜினியின் கேள்விதான் எந்த உலகத்திலேயோ இருந்த நாயுடுவை அரங்க விலாஸ் மாளிகைக்குக் கொண்டுவந்தது. தலைநிமிர்ந்து தம் மகளைப் பார்த்தார்: அ…. என்ன சரோ ! ?…….. ஓகோ, சரிதான்…. ஒன்றுமில்லை. நீ போம்மா” என்று அமைதியாகப் பேசினார். 

பழைய இடிக் குரலுக்கும் இந்தச் சாதுப் பேச்சுக்கும் ஒரு வகையான பிணைப்பையும் காணமுடியாமல் சரோஜினியின் இளம் உள்ளம் ‘விழித்தது’. ‘தலை தப்பியது தம்பி ரான் புண்ணியம்’ என்று சொல்வதுபோல இருந்தது, அவள் மெல்லெனப் பூனையாய் அங்கிருந்து தன் அறையை நோக்கிப் போன போக்கு. அப்பா வுக்கு முதலில் வந்த கோபத்துக்கும் பின்னால் திடீர் அமைதிக்கும் தொடர்பு தெரியவில்லை. ஆனால், அவர் முகத்தைக் கண்டு நாயுடுவின் சிந்தனைக் ‘குழம்பு’ கொதித்துக் குதி கொம்மாளம் போடுகிறது என்பதைத் தெரிந்து கொண்டது, அவளுடைய பெண் மனம். 

கோயிலுக்குப் போயிருந்த தன் அம்மா அரங்கநாயகியம்மாளை எதிர்பார்த்தாள், இந்தச் சேதியைச் சொல்வதற்கு. “ அப்பா ஏன் இப்படி ஆய்விட்டார்! அண்ணன் போக்கு இவருக்குப் பிடிக்கவில்லை யென்றால், ‘கிடக்கிறது கழுதை என்று ஒரு முழுக்குப் போடுவதை விட்டு இந்தப் பாடு இவருக்கு எதற்கு? இதற்காக மூளையையா குழப்பிக் கொள்வார்கள் !” என்றெல்லாம் தன் அன்னைக்குச் சொல்லவேண்டியன என்னென்ன என்று திட்டமிடத் தொடங்கினாள். பாட்டுத்தான் பாடமுடியவில்லை, ‘சத்தமில்லாமல் இருக்க வேண்டுமென்றால் மனம் சும்மா இருக்குமா? அது திட்டமிடு படலம் படித்தது. 

‘அரங்க விலாஸ்’ மாளிகையின் பெயரைத் திடீரென்று மாற்றிவிட்டார் சுந்தரசாமி நாயுடு காரு. இப்போது அந்த மாளிகையின் பெயர் சீதா விலாஸ்’. இந்தப் பெயர் மாற்றம்பற்றி அவரிடம் யாரும் பேசவில்லை. நினைத்தார்; மாற்றிவிட்டார். ஏன் மாற்ற நினைத்தார்? அது தான் தெரியாது. அரங்கநாயகி என்பது மனைவி யின் பெயர். சீதையம்மாள் என்பது அவரு டைய அன்னையாரின் பெயர். மாளிகை கட்டி இப்போது பதினைந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. கட்டிய காலத்தி லிருந்து வழங்கிய பெயரைத் திடீரென்று இப்போது ஏன் மாற்ற வேண்டும்? அரங்கிநாயகிமட்டும் கடைசியில் துணிந்து கேட்டுவிட்டாள் : அந்தக் காலத் திலே என் பெயரை வையுங்கள் என்று ஏதா வது நான் சொன்னேனா! நீங்களாக வைத்தீர் கள். இத்தனை வருஷம் கழித்துப் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? உங்கள் அம்மா இருந்து பார்த்தால் நன்றாகத்தான் இருக்கும். அதற்கும் வழியில்லை. அந்தப் புண்ணியவதி போய்ச் சேர்ந்து, போன இடமும் புல் முளைச்சுப் போச்சே!……அதென்னமோ, உங்கள் போக்கு எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை! ஒவ்வொரு காரியமும் இப்படித்தான் இருக்கிறது! அன்றைக்கு நம்ம சரோ பாடின பாட்டைக் கேட்டு எரிந்துவிழுந்தீர்களாம்….” 

அரங்கிநாயகி அம்மாளுக்குச் சுருக்கமாய்ப் பேசுவதென்றால் என்னவென்று தெரியாது. அந்த அம்மாவின் பரம்பரையிலே அத்தி பூத்த மாதிரியாகப் பத்தாவதுவரை இங்கிலீஸ் பள்ளிக்கூடத்திலே படித்தவள். ‘பாப்பாரப் பொண்ணு மாதிரிப் பாட்டு வேறே தெரியும் ‘ என்று அவளைப் பற்றிப் பெருமைப்பட்ட பாட்டி மாரும் உண்டு………. இத்தியாதி பெருமைகளோடுகூட நாயுடுகாரு வலிய வந்து சிக்கியவர் என்றால், சுருக்கமாக எப்படிப் பேசுவாள்! 

நாயுடுவுக்குப் பொறுமை இல்லை. உட்கார்ந் திருந்தவர் எழுந்து, கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். கண் தரையை அளவிட்டுக்கொண் டிருந்தது. மனைவிக்குப் பதில் சொல்லுகிற அளவுக்கு அவருடைய செவிப் புலன் வேலை செய்யவில்லை. என்னவோ சத்தம் காதிலே விழுந்தது. அந்தச் சத்தங்களைப் பொருளுள்ள சொற்களாக ‘மொழி. பெயர்க்க’ அவர் சிந்தை அவரை விடவில்லை. சரோஜினி…….. பாட்டு…… என்று ஏதோ இரண்டு சொற்களைமட்டும் எப்படியோ அவர் மனம் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டது. இந்தச் சொற்கள் சிந்தனைக்கு அகப்பட்டவுடன், நாயுடுவை வேறு ஒரு இடத்துக்குத் திருப்பி விட்டது……. எல்லாம் மனத்துக்குள் நடக்கிற அமர்க்களம்தான். நாயுடுவின் உடல் சீதா விலாஸ் என்ற அரங்க விலாசத்திலே இருந்தது. உள்ளம் உயிரோடு கைகோத்து வேறு எங்கோ…… எந்தக் காலத்திலேயோ திரிந்தது…

ஒரு காலத்திலே நாயுடுகாருவுக்கு, ‘மாடு மனை போனா லென்ன…. ……’ என்ற பாட்டைக் கேட்டால் போதும், ஒரே தலைக்கிறக்கம்தான்.- குளிப்பறைக்குள் நுழைந்ததிலிருந்து எண்ணெய் தடவித் தலை சீவி, சைக்கிளை எடுத்து அதன் மீது அமர்வதற்காக வலக்காலை எடுத்து அனாயாசமாக வீசுகிறவரையிலும் அந்த ஒரு கண்ணியை அவருடைய வாய் பாடிக் கொண்டேயிருக்கும். மற்றவர்களின் உள்ளங் களுக்கு அவர் வாய்ப் பாட்டு எப்படி இருந் திருக்குமோ, தெரியாது. ஆனால், அவருடைய உள்ளம் அப்படியே சொக்கிப்போகும், அவர் பாடுகிற அந்த வாய்ப்பாட்டின் இசையிலே! 

அப்போது……. சிந்தனை காலச் சுடுகாடு களைக் கடந்து நாயுடுவை நிறுத்தி வைத்திருக்கிற ஒரு பழைய காலத்து நினைவு மேடையிலே நடக் கிறது ஒரு நாடகம். 

என்றோ நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கால ‘தேவன் புதைத்துவைத்திருக்கிறான். நிகழ்ச்சி யின் சட்டகம்தான் புதைக்கப்பட்டது. அந் தச் சடலத்தின் உயிர், நிகழ்ச்சித் தொடரால் காலதேவனை ஏமாற்றி இன்னும் சுந்தரசாமி யின் வாழ்க்கையிலே பல நிகழ்ச்சிச் சடலங் களைப் பதம் பார்த்துவருகிறது. அந்த உயி -ரைத் தேடிப் பிடிக்கக் காலதேவன் முயலும் போதெல்லாம் கூடு விட்டுக் கூடு பாய்கிறது அந்த உயிர். கால அகட்டினுள் சிக்குவது வெறும் உடல்தான். இது ஒரு பக்கத்தே நிகழ்ந்துகொண் டிருக்கும் நிரந்தர நாடகம். 

உயிருக்கு ஒரு துணை உண்டு. சிந்தனை யைத் தன் துணையாக வைத்து நடக்கிறது உயிர். சிந்தனை ஒரு விளையாட்டுப் பிள்ளை. காலதேவன் புதைத்துவைத்துள்ள சடலங்களை அகழ்ந்தெ டுத்து உயிருக்குக் காட்டி நையாண்டி செய்வது அதனுடைய வழக்கம். உயிரைப் பிடிக்க முடியாமல் ஏமாறும் காலத்தை நையாண்டி செய்வதோடு நில்லாமல் சடலங்களின் ஏறுமாறான தன்மைகளைச் சுட்டிக் காட்டி, எடுத்து அலசி உயிரையும் ஆட்டிப் படைப்பது தான் பாழாய்போன சிந்தனையின் வேலை. நல்ல துணை! உயிரைப் பார்த்து இரக்கப்பட வேண்டியதுதானே! 

சிந்தனையின் சிக்கலிலே அகப்பட்டுக் கொண்ட நாயுடுகாருவின் உயிர் ஒரு புதை குழியின் பக்கத்திலே நிற்கிறது. புதைகுழி மீது ஒரு பழைய நாடகம் உருவெளி காட்டுகிறது. 

சீதையம்மாள் கண்ணீர் வடித்துப் பேசு கிறாள். வாலிபத் துடிப்பை யெல்லாம் தசை நார்களிலே நிறுத்திவைத்துக் கல்லென நிற் கிறான் இளைஞன் சுந்தரசாமி. புழுப்போலத் துடிக்கும் விரல்கள்-பொருந்தி நிற்கமுடியாமல் பிரிந்து அரற்றும் உதடுகள்—பரிதாபகரமான சொற்கள் இவை சீதையம்மாளின் உரு வெளி ; ஒலியலைகள். 

காலங்கடந்த அந்த நிகழ்ச்சியை நடந் ததைப்போலவே சித்தரிக்கப் பார்க்கிறது முது மைப் பருவத்தை எட்டி பிடிக்கப்போகும் நாயுடுகாருவின் உயிர். உள்ளமும் துணை செய்கிறது. ஆனால், பயனில்லை. சில சொற் களே உருவம் பெற்று வருகின்றன! ” அடே, பெற்ற கும்பி கொதிக்குதடா! நான் பெற்ற மகனடா! ஆசைக்கொரு பிள்ளை நீதானப்பா ! இப்பவோ, இன்னும் சிறிது கழித்தோ என்று இருக்கிற என்னை ஏனடா வதைக்கிறாய்! நான் செத்துச் சுண்ணாம்பாய்ப் போன பிறகு என்ன வேணுமானாலும் செய்துகொள்ளடா…”

இன்னொரு புதைகுழி: 

“உங்கள் அப்பாவைக் குழியிலே வைத்த குலத்திலே நுழைய உனக்கு எப்படி’டா மனம் வந்தது?….” 

மற்றுமொரு உருவெளி: 

சீதையம்மாள் வீட்டை விட்டு வெளியேறு கிறாள். கையில் ஒரே ஒரு துணிப் பை. இளம் பிள்ளை சுந்தரசாமி கதறுகிறான். பயன் இல்லை. அம்மா போய்விட்டாள். 

நாயுடுகாருவின் உயிருக்கு இந்தக் காட்சி களை யெல்லாம் கண்டு பொறுக்க முடியவில்லை. போதாக் குறைக்கு அவர் சிந்தனை குரல் காட்டி நையாண்டி செய்கிறது : “ அன்றைக்கு ‘அவள்’ இருந்தால் போதுமென்று ‘மாடு மனை’ பாடி னாயே, அப்பனே ! இப்போது ஏன் அழு கிறாய்?’_பழைய நினைவுகளை எழுப்பிவிட்டது மல்லாமல் இப்படி இடித்துக் காட்டவும் செய்தால் யாருக்குத்தான் கோபம் வராது! நாயுடு காருவின் உயிர் தன் நண்பன் சிந்தனையை விட்டது ஒரு அறை! அதிர்ச்சி! 

நினைவு தப்பி-மூச்சற்றுக் கீழே விழுந்து விட்டார் நாயுடுகாரு. 

4 

சுந்தரசாமி நாயுடு எல்லா வளமும் நிறையப் பெற்றவர். சுந்தர் மில்ஸ் அவருக்குச் சொந்தம். கொள்ளை கொள்ளையாகப் பணம் திரண்டது. ஒரே பையன்—வேணு கோபால சாமி_சீமையில் படிக்கிறான். ஒரே பெண் சரோஜினி; பி. ஏ. படிக்கிறாள். 

சில மாதங்களாக நாயுடுகாருவின் மனம் என்று மில்லாதபடி குழம்பத் தொடங்கி விட்டது. அவருடைய ஓயாத உழைப்புக்கு முன் வந்து நிற்கமுடியாமல் புதைந்து கிடந்த பழைய நினைவுக ளெல்லாம் தலைவிரித்துப் பேய்க் கூத்து ஆடத் தொடங்கிவிட்டன. வேணுகோபாலசாமிக்கு எத்தனையோ கடிதங் கள் எழுதியும் ஒரு பயனுமில்லாமல் போயிற்று. கடைசியிலே, “வெள்ளைக்காரி என்றால் உங்க ளுக்கு ஆகாமல் இருக்கலாம். எனக்கு அவள் தான் வேண்டும். எத்தனை முறை நான் சொல் லியும் நீங்கள் கேட்கத் தயாராக இல்லை. இனி மேல் நான் சொல்லக்கூடியது இவ்வளவுதான் : உங்கள் பிச்சைக் காசு எனக்குத் தேவை யில்லை. இவள் இச்சையே எனக்குப் பெரிது. நாங்கள் காதலர்கள்…… என்று இந்த வகையாக ஒரு கடிதத்தை எழுதிவிட்டான். 

சுந்தரசாமி நாயுடுவுக்குத் தம் பைய னிடத்திலே அளவுகடந்த பற்றுதல் உண்டு. அளவிறந்த விருப்பம் இருப்பதே எப்போதும் ஆபத்துத்தான் என்ற மனவியல் உண்மை அவருக்குத் தெரியாது. வேணுகோபாலிடம் தாம் கொண்டிருந்த எல்லையில்லாத பற்றுதல் காரணமாக அவனுடைய வாழ்க்கையின் எல் லாத் துறைகளுக்கும் அவரே திட்டமிட்டு வைத் திருந்தார். வாலிப மிடுக்கிலே இருந்த அந்தப் பையன் சீமைச் 

சீமைச் சூழ்நிலையும் தக்க தூண்டு கோலாக அமைந்திருந்தபடியால் தகப்பனார் மனக்கோட்டைகளை யெல்லாம் ஒரே எற்றாக எற்றித் தவிடுபொடியாக்கிவிட்டான். 

ஆசைக் கோட்டை தகர்ந்த பிறகு நாயுடு காருவுக்கு ஊக்கம் குறைந்துவிட்டது. ஆலைக் குப் போவதும் வருவதுமாக இடைவிடாமல் உழைத்து என்ன பயன் என்று சலிப்புத் தட்டிவிட்டது. வீட்டைவிட்டு வெளியேறுவதே கிடையாது. இரும்பு சும்மா கிடந்தால் துருப் பிடிக்காமலா இருக்கும் ! வேலை யில்லாத மனத் திரையிலே சிந்தனை தன் திருவிளையாடல்களைப் பயங்கரமான படங்களாகத் தீட்டித் தீட்டி நாயு டுவை நையாண்டி செய்தது. 

தம்முடைய வாலிபப் பருவத்திலே சீதை யம்மாளின் பேச்சைத் தட்டிவிட்டு ஒருத்தியின் மையலிலே சிக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்தது அவர் சிந்தனை. அதோடு நிற்காமல், “உன்னுடைய மறு பதிப்புத்தான் உன் மகனும்” என்று அந்தப் பழைய படத்துக்கு உரைவிளக்கமும் கொடுத்தது அவர் அறிவு. 

அந்த ‘அவள்’ முகத்தையே நினைவுத் திரையிலே எழுதிக் கற்பனை உலகிலே உலாவி வந்த அந்தப் பழைய நாட்கள் மனத்திரையிலே அலை பாய்ச்சி அவரை அலைக்கழித்தன. 

5 

நாயுடுகாருவுக்குத் தூங்க முடியவில்லை. கருங்கும் மென்ற காரிருள் உலகத்தையே விழுங்கிப் பாரித்து நிற்கிறது. இருட்டின் அகட்டினுள்ளே விழித்துக் கிடக்கிறார் நாயுடு காரு. எங்கேயோ இருந்து ஒரு ஆந்தை அலறு கிறது. 

ஐயோ, ஒற்றை ஆந்தை குரல் கொடுக் கிறதே !” என்று துணுக்கமுறுகிறது அவ ருடைய வைதிக மனம். குழம்பிய பல நிகழ்ச்சிச் சாயைகள் இருட்டிலேயே கோடு கிழித்தது போல அவர் விழி முன்னே உலவி உலவி அலைக்கழிக்கின்றன…….. 

என்றோ வந்த ஒரு தந்தி நினைவில் எழு கிறது. இராமேசுவரம் ஆஸ்பத்திரியி லிருந்து அது வந்தது. “தாயார் மரணப் படுக்கையில் இருக்கிறார். பார்க்க விரும்புகிறார்” என்பது அதன் வாசகம். 

தந்தி வந்தபோது அவர் ஊரில் இல்லை. இரண்டு மூன்று நாள் கழித்துத்தான் போனார். அம்மாவைப் பார்க்க முடியவில்லை. சீதை யம்மாள் விட்டுப்போன ஒரு தகரப் போணியும், கந்தலான ஒரு அழுக்குப் பையுந்தான் அவரிடம் ஆஸ்பத்திரிக்காரர்கள் கொடுத்தார்கள். பைக் குள்ளே ஒருவனின் புகைப்படம் இருந்தது. அவருடைய படந்தான் அது. சாகுந் தறு வாயில்தான் சுந்தரசாமியின் விலாசத்தைக் கொடுத்தாளாம் சீதையம்மாள். அந்தத் தாய் உள்ளத்தின் கடைசி ஆசையைக்கூட நிறை வேற்ற முடியாத பாதகத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டு நாயுடுகாரு திரும்பி வந்தார். வந்து பழையபடி ஆலைக் கதிர்களின் சுழற்சி யிலேயே தம்முடைய உள்ளத்தையும் உழைப் பையும் செலுத்தி, இயந்திரத்தோடு இயந்திரமாக மாறிவிட்டார் நாயுடுகாரு. 

இப்போதுதான் இயந்திரத்தின் வன்பிடி அவரை விட்டுவிட்டதே! மனித உறவுகளையும் உள்ளத்து உணர்ச்சிகளையும் ஒடுங்கச் செய்து விடும் இயந்திர வாழ்க்கையை விட்டு, மனிதம் என்ற பெருஞ் சாலையில் நுழைந்தவுடன் உணர்ச்சிப் புயலைச் சமாளிக்க முடியாமல் திணறினார் சுந்தரசாமி நாயுடுகாரு. 

இந்தத் திணறலுக்குப் பலர் பல பல பெயர்களைக் கொடுத்தார்கள். பெயர் சூட்டு விழாவில் முடிவுரை கூறும் ‘டாக்டர்’கள் “இது இரத்த அழுத்தம்” என்று தீர்ப்புச் சொன்னார்கள். “அடிக்கடி மயக்கம் வரும். மனக் கவலையைக் குறைப்பதுதான் இதற்கு ஒரே மருந்து” என்று தங்கள் கையையும் கழுவிக்கொண்டார்கள். இப்படி மற்றவர்க ளெல்லாம் கைவிட்ட பிறகு சிந்தனையின் கொம்மாளத்தைக் கேட்கவா வேண்டும்! 

மாளிகையின் பெயரை மாற்றினார். சீதை யம்மாளின் படம் பெரிதாக்கப்பட்டது. அவள் பெயரால் அறநிலையம் ஏற்படுத்தினார்…. என்ன செய்தாலும் அந்தப் பழைய நினைவுகள் … உருவெளிகள்…சிந்தனையின் சதிச் செயல்கள் … இவை யெல்லாம் அவர் மனத் தைக் கவலைக் கடலிலே மேலும் மேலும் ஆழ அமிழ்த்தி வேடிக்கை பார்த்தன. கீழ் வானம் வெளுத்துவிட்டது. 

வானம் வெளுத்துவிட்டது. யாரோ ஒரு பிச்சைக்காரி உள்ளே நுழைந்து வருகிறாள். கையில் ஒரு தகரப் போணி. அவள் பின்னால் ஒரு சிறு குழந்தை வருகிறது. தூக்கம் பிடிக் காமல் நாயுடுகாரு வெளி வராந்தாவிலே வந்து உட்கார்ந்திருக்கிறார். அவருடைய வெறித்த பார்வையும் பரட்டைத் தலையும் பார்த்த அந்தப் பிச்சைக்காரியின் குழந்தை என்ன எண் ணிற்றோ, தெரியவில்லை. “அம்மா!” என்று அலறிக்கொண்டு போய்த் தன் அன்னையைச் சேர்ந்து கட்டிக்கொண்டது. 

நாயுடுகாரு நாற்காலியி லிருந்து மயங்கி விழுந்துவிட்டார். அதைப் பார்த்த தோட்டக்காரன் அலறிக்கொண்டு ஓடி வந்தான். 

சிந்தனையின் கண்ணிலே மண்ணை வாரிப் போட்டுவிட்டு, உயிர் காலதேவனை நண்பனாக ஏற்றுக்கொண்டு விட்டது. இனி, சிந்தனையின் தொல்லை நாயுடுவுக்குக் கிடையாது. கால தேவன் வெற்றி பெற்றுவிட்டான். 


ஏமாந்த சிந்தனை சீமைக்குப் பறந்தது- வேணுகோபாலசாமி தன் காதலிக்கு ‘மாடுமனை போனாலென்ன’ என்ற பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தான்… 

தந்தி வந்தது.

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *