எங்கபோய் முட்டிக்கிறது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 762 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னங்க மத்தியான சமையலுக்கு காய்கறி இல்லங்க .சந்தைக்கு போறதில்லையா? நேரம் பத்துமணியாப் போச்சு. இன்னமுமா பேப்பர் படிச்சுக் கொண்டு இருக்கிறீங்க. கெதியா வெளிக்கிட்டு போங்களன்” குசினிக்குள் அலுவலாக இருந்த லட்சுமி தன் கணவர் பாலசுந்தரதை கேட்டு வைத்தார். 

“இந்தா வெளிக்கிடுறன் லட்சுமி . நீ மற்ற வேலைகளை 

முடிக்கிறதுக்கிடையில நான் போய் மரக்கறிகள் வாங்கிக்கொண்டு வாறன்” என்றவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு 

வீட்டை விட்டு கிளம்பிட்டார். 

ஊரில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் பாலசுந்தரம். ஊரில் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்பவர். 

அவருக்கு ஊர் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு மரியாதை இருந்தது. தனது சைக்கிளில் மெதுவாக பாலசுந்தரம் அவர்கள் வந்துகொண்டு இருந்தார். 

முச்சந்தி மணிக்கூட்டு கோபுர வளைவில் ஒரே சனக்கூட்டம். பொலிஸ் வாகனம் நின்று இருந்தது. 

வாகனங்கள் முன்னால் செல்ல அனுமதிக்கப்படவில்லை.அதனால் அவர் ஊர் வைத்தியசாலை முன்பாக சைக்கிளிலிருந்து இறங்கி வீதி ஓரமாக நின்று கொண்டு அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் 

அந்தப் பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தார். 

அப்பொழுது வைத்திய சாலையிலிருந்து அம்புலன்ஸ் வண்டி புறப்பட்டு மணிக்கூட்டுக் கோபுர வளைவில் நின்றது. பாலசுந்தரத்தாருக்கு இப்போது புரிந்தது. ஏதோ விபத்து நடந்திருக்கிறது என்று. 

அதை உறுதி செய்வதுபோல் எதிர்த்திசையிலிருந்து வந்த அவர் நண்பர் பத்மநாதன் அவரிடம் பேச்சுக் கொடுத்தார். அவரும் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். 

” 

என்ன பாலா சந்தைக்கு போறீர் போல.” 

அட ஓமடாப்பா. மரக்கறி ஏதும் வாங்குவம் எண்டு வந்தனான். அங்கு என்ன நடக்குது. பத்மா” 

என்ன நடக்குதோ அந்த கூத்த என்ன சொல்லுறது. நானும் சந்தைக்கு போகலாம் என்றுதான் வந்தனான். 

வந்த இடத்தில இந்த பிரச்சினை. ஒரு பெடியன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ரோட்டைக் குறுக்கறுத்த மாட்டில் மோதி அடிபட்டு கீழே விழுந்திட்டான். தலையில் அடிபட்டு இரத்தம் கொட்டுது. 

-104- 

அதுதான் அம்புலன்ஸ்ல அக்கரைப்பற்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்போறாங்க” 

“இந்தக் காலத்துப் பெடியனுகளுக்கு எல்லாம் ஒரு அவசரம் பத்மா.ஆற அமர எதுவும் செய்ய மாட்டானுகள். அதைப்பற்றி பிறகு பேசுவோம் அதென்ன அவ்வளவு கூட்டம். அதுவும் பெடியன்கள் 

நிறைய பேர் நிக்கிறானுகள்.” 

‘அதுதானே பிரச்சினை. எனக்கும் இப்பதானே தெரிஞ்சுது” 

அதென்ன பிரச்சினைடாப்பா” 

‘ஊரில் உள்ள கொஞ்சப் பொடியனுகள், இந்தியாவில் இருக்கிற ஆரோ ஒரு நடிகனுக்கு பிறந்தநாளாம் என்று அதற்கு ரோட்டுக் கரையோரம் பந்தல்போட்டு அந்த நடிகனின் படத்தை பெரிதாக ஒரு 

தட்டியில் வைத்துகொண்டு அதற்கு தீபம் காட்டி பின் கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கிறானுகள். 

அந்த நடிகருக்கு இவர்கள் ரசிகர்களாம். அதனால் அவர் பெயரால் குளிர் பானங்களும், இனிப்புகளும் போவோர் வருவோருக்கு கொடுத்து மகிழ்ந்தவர்களாம். சிலர் இதை கண்டித்து அவர்களிடம் பேசி 

இருக்கிறாங்க. 

அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்திருக்கிறது.” 

“எங்கேயோ இருக்கும் நடிகனுக்கு இவனுகள் ஏன் இங்கு பிறந்தநாள் கொண்டாடுகிறானுகள். 

ஊரில் எவ்வளவோ நல்ல வேலைகள் செய்வதற்கு கிடக்கின்றன.” 

“அதைத்தான் அங்கு போய் வாக்குவாதம் செய்தவர்களும் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் ‘உங்கட வேலையை பார்த்துக்கொண்டு போங்க. எங்கட விசயத்தில் தலையிட வேணாம். இது எங்கட தலைமை மன்றத்தின் வேண்டுகோள். அவங்கட அனுசரணையுடன் 

தான் இங்கு எல்லாம் செய்கின்றோம்’. என்று சொல்லி, தொடர்ந்து கொண்டாடி இருக்கிறானுகள்” 

‘தலைமை மன்றமாமோ அது எங்கு இருக்கிறதாம்?” 

‘அந்த நடிகர் பெயரில் ரசிகர் மன்றமாம். அது யாழ்ப்பாணத்தில் இருக்கிறதாம். அவர்கள் கொடுத்த பணத்தில்தானாம் தாங்கள் எல்லாம் செய்கிறார்களாம்.” 

-105- 

“யாழ்ப்பாணம் போருக்குபின்னர் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்று பேப்பர்களில் செய்திகள் வருகின்றன. போர் முடிந்து பல வருசங்கள் ஆனபிறகும் இன்னும் அங்கு போதைப் பொருள் பாவனைகளும், பாலியல் குற்றங்களும், வாள்வெட்டுக்களும், களவு, கொள்ளைச் சம்பவங்கள் என்று நடந்துகொண்டு இருப்பதாக பல செய்திகள் வருகின்றன.” 

ஓம் பாலா நானும் அவற்றைப்பற்றி அறிந்தனான், இப்போது வந்திருக்கும் தலைமை நீதிபதிகூட அங்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றங்களைக் குறைக்க முயல்கின்றார். 

என்றும் செய்தி படித்தனான்” 

“பத்மா! யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் அங்கு பணப்புழக்கம் அதிகம். நான் சொல்வது தனி யாழ்ப்பாண நகர் மட்டுமல்ல, யாழ் மாவட்டம். பலர் புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் 

வாழ்கின்றார்கள். அநேக குடும்பங்களில் குறைந்தது வீட்டுக்கு ஒருவராவது வெளிநாட்டில் இருக்கிறாங்க. அதனால் நல்ல வசதி, வசதி குறைந்தவர்களும் இல்லாமல் இல்லை. இந்த வசதியுள்ள குடும்பங்களின் வாலிபப் பிள்ளைகள்தான் கண்டபடி தறிகெட்டு நடக்கிறார்கள். அதிலும் எல்லாக் குடும்பங்களிலும் அப்படி நடப்பதில்லை. விதி விலக்கும் உண்டு. 

நீர் சொல்வது உண்மைதான் பாலா. எல்லாரும் அப்படி இல்லை.தங்கள் குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவர் கஷ்டப்பட்டு வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பும் பணத்தைப் பத்திரப்படுத்தி, பல விஷயங்கள் செய்கிறார்கள் பலர். பொறுப்பாக தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சிலர் அப்படியல்ல. கண்டபடி செலவு. பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமாக பணம், அவர்கள் கேட்கும் சாமானுகள். மோட்டார் சைக்கிள் தொடக்கம் விலை உயர்ந்த கைபேசி, கணினி, மற்றும் ஆடம்பர பொருட்கள், என்று கொடுத்து அவர்களை சமூக அக்கறை அற்றவர்களாக 

மாற்றி விடுகின்றார்கள்.” 

ஆ,, அவர்கள்தான் இப்படி பொறுப்பிலாமல் நடந்து, சினிமா நடிகனுக்கு மன்றம் அமைத்து அவனின் போஸ்டருக்கு ஆராத்தியும் காட்டி அடுக்கெடுப்பவர்கள். 

தமிழ் நாடுதான் சினிமாவுக்குள் சிக்கி அரசியலிலும், வாழ்க்கை நெறியிலும் சிதறி சின்னாபின்னமாக போய்விட்டது. 

-106- 

எங்கட நாட்டுக்கு இந்த சினிமா கலாசாரம் தேவையா? அங்கு சினிமாநடிகர்கள் கோடிகோடியாக சம்பாதிக்கிறாங்க. அவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்திருப்பவர்கள், அவர்கள் படம் வெளிவரும் நாளில் 

தியேட்டர்களின் முகப்பில் வைத்திருக்கும் அவர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்யிறாங்க.” 

அங்கு குழந்தைகளுக்கு பாலே இல்லாமல் ஏழை எளியவர்கள் ஏராளம் பேர் இருக்கிறாங்க. இவனுகள் குடம் கணக்கில் பாலை கொண்டுபோய் நடிகனின் பெரிய தட்டிப் படத்தில் கொட்டுகிறான் என்று பத்திரிகை செய்தி ஒன்று படித்தேன்” 

பாலா, இந்தக் கூத்து யாழ்ப்பாணத்திலும் நடந்திருக்கு. 

நம்மட மட்டக்களப்பு கல்லடி, செங்கலடி தியேட்டர்களிலும் இப்போ அண்மையில் நடந்திருக்கு. தமிழ்நாட்டில் பொறுப்பற்ற, சினிமாவே வாழ்க்கையென்று நினைத்து வாழும் சிலர் செய்யும் இந்த முட்டாள்தனமான செயல்கள் எங்கட வடகிழக்குக்கு ஏன்? இது 

மிகவும் கண்டிக்கத்தக்கது. சினிமா பார்ப்பதில் தவறு இல்லை. அதைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். சினிமா நடிகனுக்கு பிறந்தநாள் கொண்டாடும் கேவலம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று இருந்து இப்போ திருக்கோவிலுக்கும் வந்ததிருக்கு. இதை ஊரில் உள்ள சிலர் வன்மையாக சற்று முன்னர் கண்டித்திருகிறார்கள். அதனால் வந்த பிரச்சினையும், விபத்தும்தான் நம்ம இருவரையும் சந்தைக்கும் 

போகாமல் பண்ணி தடுத்து இங்கே நிற்க வைத்திருக்கு” 

“பத்மா இந்த முறை வந்த உயர்தர பரீட்சை முடிவுகள் தெரியும்தானே. நமது பிரதேச பாடசாலைகள் உயர்தரத்தில் குறிப்பிடத்தக்க எந்த சாதனைகளையும் செய்யவில்லை. இதற்கு காரணம் பாடசாலைகளின் தலைமை,நிர்வாகம் ஆகியவற்றின் அக்கறை இல்லாத தன்மையா? ஆசிரியர்களின் போதிக்கும் தன்மையா? 

அல்லது மாணவர்களின் ஆர்வக் குறைவா? என்று தெரியல்ல. இந்தமாதிரி 

விசயங்களை பார்க்கும்போது மாணவர்களின் போக்கும், 

கவனக்குறைவாக, படிப்பில் நாட்டமற்று இப்படி சினிமா மோகம் கொண்டு திரிவதால் ஏற்பட்ட விளைவோ என்று எண்ணத் 

தோன்றுகிறது.” 

“நாங்க ஆசிரியர்களாக இருந்த காலத்துக்கும் இப்போதைய காலத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. புதிய கற்கை நெறி, புதிதான பாடங்கள், பல துறைகள், 

எந்தத் துறை வேண்டுமானாலும் மாணவர்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரம் எல்லாம் இருக்கிறது. 

-107- 

அத்தோடு நவீன முறையில் அவர்களுக்கு படிப்பதற்கும், 

தெரியாத, புரியாத விசயங்களை அறிந்துகொள்ள பாடசாலைகளில் வசதிகளும் இருக்கின்றன. மாணவர்களும், அவர்கள் பெற்றோர்களும் கவனமெடுத்தால் கண்டிப்பாக எல்லாப் பரீட்சைகளிலும் மிக சிறப்பாக சித்திபெற முடியும்.” 

‘எனக்கு கவலை என்ன தெரியுமா, ஊரில் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை எல்லாம் செய்ய வேண்டிய பொறுப்பு, அல்லது சம்பந்தப் பட்டவர்களை செய்யத் தூண்டவேண்டிய பொறுப்பு, 

செய்விக்கவேண்டிய கடப்பாடு இந்த இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. அதை அவர்கள் உணரவில்லை என்ற கவலைதான் எனக்கு. சற்றுமுன்னர் நீதானே சொன்னாய் பத்மா, மாடு ரோட்டைக் 

குறுக்கறுத்து போகும்போது அந்தப் பெடியன் அதில் கொண்டு மோதி விபத்து நடந்து விட்டதென்று. 

இந்த கட்டாகாலி மாடுகள் ஊர் முழுதும் கண்டபடி திரிகின்றன.இதை உரிய இடத்தில கொண்டு விட, பிரதேச சபையையோ,அல்லது சம்பந்தப் பட்ட யாரிடமோ சொல்லி காரியம் பார்க்க, இந்த இளைஞர்கள் முன்னுக்கு வரவேண்டும். இன்னும் நமது ஊர்க்கோவில் நிர்வாகச்சீர்கேடு, வயல், சேனைப் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம், எமது பகுதி தென்னந்தோட்டங்கள் மாற்று இனத்தர்வர்களுக்கு விற்கப்படுவது, போன்ற பல விசயங்கள் கவலை அளிப்பதாக இருக்கின்றன. இவற்றை இந்த இளைஞர்கள் தலையிட்டு 

தட்டிக் கேட்கலாம். நடவடிக்கை எடுக்கலாம். தடுத்து நிறுத்தலாம். இவர்கள் கிளர்ந்து எழுந்து வந்தால் ஊரே ஒன்று கூடி ஒத்தாசை செய்யுமே. இவைகளில் கவனமெடுக்காமல் ஒன்றுக்கும் உதவாமால் இப்படி எங்கேயோ இருக்கும் சினிமா நடிகனுக்கு முச்சந்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இருப்பது வெட்கக்கேடு இல்லையா? எனக்கு எங்கபோய் முட்டிக்கிறது என்று தோன்றுகிறது பத்மா” 

“பாலா! நீ சொல்வது அத்தனையும் உண்மை. இளைஞர்கள்தான் ஒரு கிராமத்தின் எதிர்கால தூண்கள். அவர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம். ஆனால் அவர்கள் நல்லவற்றை நினைக்க வேண்டும். சிந்திக்க வேண்டும். சமுதாயத்தை தூக்கி நிறுத்தவேண்டிய இவர்கள் தடம்மாறி செல்வது எந்த விதத்தில் நியாயம்? இன்று நடந்த விவாதத்தில், தங்கள் செயலை இவர்கள் நியாயப் படுத்தி பேசியிருக்கிறார்கள். 

-108- 

ஒன்று தெரியுமா? சின்னப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் நடிகர் பெயரால் பரிசும் கொடுத்து அவர்களையும் சினிமா என்றும், நடிகர் என்றும் ஆர்வம் காட்டி நாசமாக்க நினைக்கின்றார்கள். இதை 

அனுமதிக்க முடியாது பாலா.” 

“மற்றது, ஊரில் தன்னலம் தலைவிரித்தாடுகிறது. என்ன நடந்தால் நமக்கென்ன நாமமட்டும் நம்மட வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்போம் என்று பலர் இருக்கிறாங்க. இன்னும் சொல்லப் போனால் இரண்டு பிரிவினர் ஊருக்குள் இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. ஒரு பிரிவினர் ஏதும் செய்ய நினைத்தால் அதை மற்றவர்கள் செய்ய விடாமல் பண்ணுவது. அதையும் மீறி அது செய்துமுடிக்கப் பட்டால் காழ்ப்புணர்ச்சியில் கண்டபடி பேசுவது. 

இவைகளும் இந்த இளைஞர்கள் மத்தியில் இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. ஏதோ நம்மட காலம் இன்னும் கொஞ்சம்தான் அதற்குள் என்னென்ன நடக்க இருக்குதோ யாருக்குத் தெரியும்?” 

என்ற பாலசுந்தரம், மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து அம்புலன்ஸ் வண்டி விரைவாக அக்கரைப்பற்று நோக்கி செல்வதையும், கூட்டம் கலைவதையும், பொலிஸ் வாகனமும் வீதித் தடையை தளர்த்தி 

எல்லோரையும் பயணிக்க அனுமதிப்பதையும் கண்டுகொண்டார். 

பத்மா அங்கே பார் எல்லோரும் கலைந்து செல்கிறார்கள். அம்புலன்ஸ்சும் சென்றுவிட்டது. வீதி தடையும் எடுத்தாயிற்று. நான் சந்தைக்கு போகவேண்டும். லெட்சுமி மரக்கறிக்கு காத்துக் கொண்டு 

நிற்பா. நீரும் வாறீரா” 

“பின்ன வேற என்ன. நானும் சந்தைக்குதானே போக வந்தனான். வா, எனக்கும் நிறைய சாமான்கள் வாங்க வேண்டி இருக்கு” என்ற பத்மநாதன் தனது சைக்கிளில் முன்னுக்கு சென்றார். 

பாலசுந்தரமும் அவரை பின் தொடர்ந்து தனது சைக்கிளில் சென்றார். மணிக்கூண்டு கோபுரம் தாண்டி போகும்போது வீதி ஓரத்தில் வைத்திருந்த சினிமா நடிகனின் பெரிய படமும், அதை சுற்றி நின்றிந்த இளைஞர்கள் கூட்டமும் அவர் மனதில் பல கேள்விகளை எழுப்பியதோடு, அவரை அறியாமல் ஒரு பெருமூச்சும் வெளிப்பட்டது. 

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *