பிரியனின் காதல் கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 11,147 
 

ஒரே ஒரு வார்த்தை சொல் தயவுசெய்து என்று தன்னுடைய போர்வை அங்கும் இங்கும் அசைவதைக் கூட பார்க்காமல், தன்னுடைய உடைகள் கலைந்து இருப்பதையும் கவனிக்காமல், இரு கைகளை மேலே உயர்த்தி கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வசனத்தையே சொல்லிக் கொண்டு இருந்தான் பிரியன். என்ன தூக்கத்தில் புலம்பி கொண்டு இருக்கின்றாய் என்று அவனுடைய அம்மா லட்சுமி கேட்க, அவனுக்கு அப்போதுதான் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. திடீரென எழுந்து என் காலைக்கடன்களைச் செய்யத் தொடங்கினான். காலை விடிந்தது. சூரியன் தன்னுடைய வானம் என்ற போர்வையைக் கலைத்து விட்டு எழுந்தான். தமிழன் ..லஷ்மி டீ போட்டாச்சா? என்று குரல் கொடுத்துக்கொண்டே தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வந்தார்.

தமிழ் பிரியன் எழுந்துவிட்டானா? இல்லையா? என்று கேட்டார். இன்று அவனைக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்றார். அவன் இன்னும் எழுந்திருக்கவில்லை போய் எழுப்புகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் லட்சுமி அம்மாள். பிரியன் உடனே எழுந்திரு, காபி குடித்துவிட்டு போய்க் குளிச்சிட்டு சீக்கிரமாக கிளம்பு., இன்று நீ கல்லூரியில் சேரவேண்டும். அப்பா கூப்பிடுகின்றார் என்றார். சரி ..சரி …சரிம்மா இரும் எனச் சொல்லி விட்டு எழுந்தான் அவன் . காபி குடித்துவிட்டு என்னதோன்றியதோ தெரியவில்லை உடனே எழுந்து சென்று சீக்கிரமாக குளித்து விட்டு கிளம்பிவிட்டான். அம்மா நான் ரெடி. அப்பா எங்க இருக்காரு சொல்லுங்க பார்ப்போம். அம்மா அதற்கு சரி வாங்க எல்லாம் சாப்பிடலாம் என்று சொன்னார்.

அப்பா.. அப்பா.. அப்பா… ப்ளீஸ் எனக்கு சாப்பாடு வேண்டாம். என்ன சாப்பாடு வேண்டாம் என்று சொல்ற . சரி உன் இஷ்டம். அந்த பீரோவில் பணம் இருக்கிறது. எடுத்து வெச்சிக்கோ என்றவுடன் பணத்தை எடுத்துக் கொண்டான் பிரியன். கல்லூரியில் முதல் மாணவராகச் சேர்ந்தான். அன்றுதான் அவன் தன் வாழ்வில் காதல் மலர்ந்ததை உணர்ந்தான். தன்னுடன் வந்து சேர்ந்த பிரியா என்ற அந்தப் பெண்ணை பார்த்தவுடன் அவனுக்கு மனம் நிறைந்து போய்விட்டது. அவனுள் பட்டாம்பூச்சிகள் ரீங்காரம் இட்டன. தொடர்ந்து வகுப்புகள் நடந்தன. தன் நண்பர்களிடம் அதை எப்படி சொல்வது என்று தனியே புலம்பினான்.. என்னால் மறைக்க முடியவில்லை. சொல்லவும் முடியவில்லை என்று வருந்திக்கொண்டே இருந்தான். இவ்வாறாக மாதங்கள் இரண்டு சென்றன. வகுப்பில் அவளைப் பார்ப்பதற்காகவே கல்லூரிக்குச் சென்றான். என்ன பிரியா உன்ன அந்தப் பிரியன் பார்த்துக்கிட்டே இருக்கான். உன்னைக் காதலிக்கிறானோ என்று அவள் தோழி கேட்க, என்னமோ தெரியலடி அவனும் பார்க்கிறான், நானும் பார்க்கிறேன் அவ்வளவுதான் என்றாள் அவள் . அப்புறம் என்றனர். நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை சரியா. வாங்க கல்லூரி விட்டுவிட்டார்கள் வீட்டிற்குச் செல்லலாம் என்று சொல்லிக் கொண்டே தோழிகளோடு பிரியா சென்றாள்.

பிரியன் அவளையே பார்த்துக்கொண்டு மெதுவாக நடந்து கொண்டே வீட்டிற்கு சென்றான். வந்து தன்னுடைய அறையில் படுத்துக் கொண்டு அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். தன்னுடையக் காதலை எப்படி சொல்வது? நான் இதுவரை எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை. அப்படிப் பார்த்தாலும் இந்த மாதிரி எனக்கு எதுவும் தோன்றவில்லையே? ஆனால் பிரியாவை மட்டும் பார்த்தவுடனே என் மனம் அவளிடம் சென்று விட்டது. ஏன்? இப்படி என்று புலம்பிக்கொண்டிருந்தான். இப்படியே சென்றால் எப்படி என் காதல் அவளுக்குத் தெரியும் என்று, கற்பனை அலைகள் அவன் மனம் என்ற கரையில் மோதி உடைந்து கொண்டிருந்தன. கல்லூரிக்கு நேரமாச்சு சீக்கிரம் எழுந்திருப்பா என்று அம்மா கூற எழுந்திருந்தான். விரைவாக புறப்பட்டு அவளைப் பார்ப்பதற்காகவே நண்பர்களைக் கூட பார்க்காமல் சீக்கிரமாக புறப்பட்டுச் சென்றான். பிரியா எப்போதும் 37f பஸ்ஸில் தான் வருவாள். பேருந்து நிலையத்திற்குச் சென்று நின்றான். அவள் அங்கு வரவில்லை. அதற்குள் அவன் மனம் அவளைக் காணாமல் அல்லாடியது. பிரியாவுக்கு உடம்பு சரியில்லையோ? இல்லை நேரமாகிவிட்டதோ இல்லை இன்று கல்லூரிக்கு வரவில்லையே? என்று புலம்பிக்கொண்டே குழம்பினான்.

வரும் வழியில் ஏதாவது பிரச்சனையா? இல்லை இல்லை அப்படி இருக்காது. பிரியா வந்து விடுவார் ஏனென்றால் அவளும் என்னைக் காதலிக்கிறாள் என்னைப் பார்ப்பதற்காக வருவாள் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான். அவள் பார்க்கின்ற பார்வை மட்டும் வைத்துக் கொண்டு தன்னைக் காதலிக்கிறார் என்று நினைத்துக் கொண்டான். அவனது உடல் மட்டும் வகுப்பிலிருந்து. மனம் மட்டும் பிரியாவுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று நினைத்துக்கொண்டே இருந்தது. வகுப்பில் பாடம் நடக்கிறது. பார்வை மட்டும் வகுப்பில். எண்ணம் மட்டும் அறையின் கதவையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு சிலர் நேரம் கடந்தும் கல்லூரிக்கு வருவதுண்டு. அவர்களுள் சிலர் வந்துகொண்டே இருந்தனர். அவர்களைப் பார்க்கும் வாய்ப்பில் பிரியாவைப் பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால் அப்போதும் வரவில்லை. கல்லூரி முடிந்தது அவனால் பிரியாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அனைத்து நண்பர்களிடமும் அதிகம் பேசாத பிரியன் அன்று அனைவரிடமும் பேசினான். அவர்களிடம் பிரியா வீடு உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டுக்கொண்டே இருந்தான். நான் அவளைப் பார்ப்பேன் அவளும் என்னையும் பார்க்கிறாள். நான் அவளைக் காதலிக்கிறேன். அவளும் என்னைப் பார்க்கிறாள் காதலிக்கிறாள் என்றான். எனவே எங்கள் இருவரையும் நீங்கள்தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினான். இன்று அவள் கல்லூரிக்கு வரவில்லை எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறினான். அதற்கு நீங்கள்தான் எனக்கு பதில் சொல்ல வேண்டும். தயவு செய்து முடியாது என்று சொல்லி விடாதீர்கள் என்றான். அவளில்லாமல் என்னால் இருக்க முடியாது. மனம் தாங்கிக்கொள்ளாது என்றான். அவள் இல்லை என்றால் நான் இல்லை தயவு செய்து என்னை பிரியாவுடன் சேர்த்து விடுங்கள் என்று கண்ணீர்ப் பெருக்குடன் தன் நண்பரிடம் சொன்னான் பிரியன். என்னப்பா நீயா போய் இப்படி பேசற, எந்த பெண்ணைப் பார்த்தாலும் பேசாதவன், , வழியாதவன் நீ,,,…. நீ பிரியாவைக் காதலிக்கிறாயா? ஆச்சர்யமாய் இருக்கிறது என்றனர். சரி எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்கின்றோம். நீ கவலைப்படாதே என்று கூறிவிட்டு அனைவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

என்னப்பா இன்னைக்கு லேட் என்று அவனது அம்மா கேட்க, இன்று சிறப்பு வகுப்பு வைச்சாங்கம்ம்மா என்று சொல்லிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். சரி சரி போய்க் கை கழுவிட்டு வா சாப்பாடு போடுறேன் என்றார். அனைவரும் சாப்பாடு சாப்பிட்டு டிவி பார்த்து விட்டு தூங்கச் சென்றனர். அவனது அம்மா மற்றும் அப்பா இருவரும் சற்று நேரத்தில் தூங்கி விட்டார்கள். ஆனால் பிரியன் மட்டும் எதை எதையோ நினைத்துக் கொண்டு இருந்தான். நமக்கு இனிமேல் பயமில்லை நம்ம நண்பர்கள் அனைவரும் உதவி செய்வதாக கூறி விட்டார்களே என்று மகிழ்ந்தான். ஐய்ய்ய்யா ஜாலி என்றும் சிரித்தான். பிரியா என்னை, என் காதலை ஏற்றுக் கொள்வாளா? ஏற்றுக் கொள்ள மாட்டாளா? என்ன சொல்வார் என்று விம்மினான். நான் பார்க்கும் போதெல்லாம் அவள் வைத்த கண் எடுக்காமல் என்னைப் பார்க்கிறாளே? அப்படி பிடிக்கவில்லை என்றால் ஏன் அவள் என்னை இப்படிப் பார்க்கனும். நேரம் போவதற்காக என்னைப் பார்த்தாள். இச்ச அப்படி இருக்காது என தன்னுள் கேள்விக் கேட்டுக்கொண்டே தூங்கிப் போனான். அவளும் என்னைக் காதலிக்கிறாள் அதுதான் உண்மை என்று நினைத்துக்கொண்டே நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

தினந்தோறும் நடப்பதை எல்லாம் தன் நண்பரிடம் சொல்லுவது வழக்கம். அவன் தன்னுடைய நண்பர்களிடம் அவள் என்னைப் பார்க்கிறாள் நானும் அவளைப் பார்க்கிறேன் பிரியா என்னைக் காதலிக்கின்றாள் என்று மறுபடியும் கூறினான். அதற்கு அவர்களில் ஒருவன் அட பைத்தியமே…. பார்த்தா மட்டும் காதலிக்கிறாள் என்று அர்த்தம் இல்லை. சும்மா கூட பார்க்காமல் இல்லையா?… வேறு யாரைன்னா கூட அவள் பார்க்கலாம் இல்லையா? என்றனர். இவ்வாறு சொன்னதைக் கேட்டு எனக்குப் புரியவில்லை என்றான். நானும் அவளைப் பார்க்கிறேன் இருவருமே ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என மறுபடியும் கூறினான். சரி அவள் உன்னைக் காதலிக்கிறாளா? இல்லையா? என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம் என்றான் ஒருவன். நீ ஒரு கடிதம் எழுதி அவளிடம் கொடு. அவள் உன்னிடம் இருந்து வாங்கினால் நீ முதல் கட்டத்தில் தேர்ச்சி பெற்று விட்டாய் என்று அர்த்தம் என்றான். அவள் அதைப் பெற்றுக்கொண்டு சிரித்தால் இரண்டாம் கட்டத்தில் தேர்ச்சி பெற்று விட்டாய் என்று அர்த்தம். அவள் உனக்கு ஒரு காதல் கடிதம் கொடுத்தால் மூன்றாவது கட்டத்தில் தேர்ச்சி பெற்று விட்டாய் என்று அர்த்தம் என்றான். கடிதத்தில் உள்ளதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றனர். இதெல்லாம் எதுக்கு வேண்டாமே என்றான் பிரியன். பிரியன் நாங்கள் சொல்வதை மட்டுமே நீ செய். கடிதம் எழுதி கொண்டுபோய்க் கொடு , முதலில் அதை செய் என்று சொல்லிவிட்டு நண்பர்கள் புறப்பட்டு சென்றனர்.

வீட்டிற்குச் சென்றான். வா பிரியன் சாப்பிடலாம் என்று அழைத்தாள் அம்மா. சாப்பாடு எனக்கு வேண்டாம். நான் நண்பர்களோடு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தேன். நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றான். தூங்க முயற்சி செய்தான். தூக்கமும் கண்களை வந்தடையவில்லை. விழிகளில் ஏக்கமே உறவு கொண்டது. நண்பர்கள் சொன்னது சரியா? நாம் அப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும். சரி நான் நினைக்கிற மாதிரிதான் நடக்கப்போகிறது என்று நினைத்துக் கொண்டான். சரி கடிதம் எழுதினால் யாரிடம் கொடுத்து அனுப்புவது? நண்பரிடம் கொடுத்து அனுப்பலாம். நான் கொடுக்கப்படாது ஏதாவது சொல்லிவிட்டால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று புலம்பிக் கொண்டே இருந்தான். ஏனென்றால் என் மனம் மென்மையானது என்று பேசிக் கொண்டான். அவளின் பதிலை மனதில் நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது. அவள் அப்படிச் சொல்ல மாட்டாள் இருந்தாலும், தான் கொடுக்கப்படாது என்று நினைத்தான். சரி அதைப் பற்றி ஏன் கவலை, முதலில் கடிதம் ஒன்று எழுதுவோம் என்று தன்னுடைய ஆசையை எழுதத் தொடங்கினான். அனால் மனம் ஒப்பவில்லை. வாழ்க்கையில் முதன்முதலில் கடிதம் எழுதப் போறேன். அதனால் நான் ஒரு புது பேனா வாங்க வேண்டும் என்று நினைத்து, மறுநாள் எழுதலாம் என்று நினைத்து தூங்கிப் போனான்.

விடியற்காலை விடிந்தது. அவனது அம்மா வழக்கம்போல அவனை எழுப்ப சரி நான் கல்லூரிக்கு செல்கிறேன் என்று புறப்பட ஆயத்தமானான். கடிகாரத்தைப் பார்த்து நேரமாகிவிட்டது என்று அவசர அவசரமாக கிளம்பினான். நேற்று நினைத்தது மாதிரியே கடைக்குச் சென்று பேனா வாங்கிக் கொண்டான். கல்லூரிக்குச் சென்றான். நண்பர்கள் அனைவரும் கடிதம் எழுதி விட்டாயா? என்று கேட்டனர். எழுதலாம்னு நினைச்சேன். ஆனா புதிதாக பேனா வாங்கி தான் எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன் என்றான். பேனா வாங்கிட்டேன். இன்னைக்கு நைட்டு உட்கார்ந்து எழுதிவிடுவேன் என்று பிரியன் சொல்ல நண்பர்கள் அனைவரும் சிரித்தனர். என்னடா நீ சொல்ற கடிதம் எழுத புதிதாக பேனா வாங்கினாயா? என்று கிண்டலடித்தனர். சரி நாளைக்குப் எதிர்பார்க்கலாம் என்று கூறி நண்பர்கள் கலைந்து சென்றனர்.

எப்படி எழுதுவது என்று தெரியாமல் முதலில் ஒரு கடிதம் எழுதினான். அது நன்றாக இல்லை என்று மீண்டும் ஒரு காதல் கடிதம் எழுதினான். சில நிமிடங்களில் மனதில் உள்ளதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ அப்படியே கடிதத்தில் எழுதினான். நண்பரிடம் எடுத்துக் கொண்டு போய் காட்டினான். சூப்பர் நன்றாக எழுதிருக்கிறாய். எப்படி ’பி’ என்ற எழுத்தில் தொடங்கி 20 வரிகள்ல கவிதையா எழுதியிருக்கிற என்று ஆச்சர்யப்பட்டனர். கவிதையில் உன் காதலை மிகவும் அழகாக சொல்லியிருக்கியாய் என்றனர். அதற்குள் இன்னொருவன் அதை படித்துக் காட்டு என்று சொல்ல, அவன் ”பிரியன், பிரியமுடன், பிரியாவுக்கு, பிரியா நெஞ்சமுடன் என்ற அந்த 20 வரிகளைப் படித்து காட்டினான். பிரியன் ஒரு கவிதையை அழகாக எழுதிவிட்டான் என்று ஒருவன் சொன்னான். அப்ப இனிமேல் நாம் கடிதம் எழுத இவனை நம்பலாம் போலடா என்றனர் சிலர். எப்போது கொண்டுப்போய் பிரியாவிடம் கொடுக்கப்போற என்று கேட்டனர். சீக்கிரமாக கொடுடா நாங்களும் அவள் என்ன சொல்வாள் என்று அறிய காத்துக் கொண்டு இருக்கிறோம் என்றனர்.

நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் என்னால பிரியாவிடம் நேரா போய்க் கொடுக்க முடியாது. நீங்க யாராவது தயவுசெய்து இதைப் பிரியாவிடம் கொடுத்து விடுங்கள் என்று கெஞ்சினான். எங்களால முடியாதுப்பா என்றனர் நண்பர்கள். நாங்களா பிரியாவை லவ் பண்றோம் என்று கேட்டனர். அப்படி என்றால் என் காதலுக்கு என்னதான் வழி என்றான் பிரியன். கொஞ்ச நேரத்தில் இந்த வழியாகத்தான் பிரியா தனியாக வருவாள், அப்போது நாங்களும் உன்னுடன் வருகின்றோம். அப்போது கொடுத்து விடு என்றனர். ஆனால் அவள் வந்தபோது அவளருகில் சென்றவன் வேறேதுவோ பேசிவிட்டு வந்துவிட்டான். இப்படியாக கடிதம் கொடுக்கும் சுழல் தள்ளிப் போனது. இது நல்லா இல்லை அது நல்லா இல்லை என்று பலமுறைக் கடிதம் எழுதி கிழித்துப் போட்டதுதான் மிச்சம். சுமார் 50 கடிதம் எழுதி இருப்பான். ஆனால் ஒன்றைக் கூட அவளிடம் சேர்த்ததில்லை. தன் நண்பர்கள் கேட்டதற்கு சரிடா சீக்கிரமே கொடுக்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து தப்பிச்செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான் பிரியன்.

ஒருநாள் பிரியாவின் புத்தகத்தில் வைத்து விடுகிறேன் என்று சொல்லி தனது 51 கடிதமாவது சேரட்டும் என்று வைத்து விட்டான். பிரியா அதை எடுத்தவுடன் மகிழ்ச்சி அடைவாள் என்று அவளது நினைவலைகள் அவனுள் தோன்றி மறைந்தன. 20 நாட்கள் ஓடின. பதில் கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான். இன்னும் வரவில்லை. சரி இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு நண்பர்களின் ஆதரவுடன் காலம் கடத்தினான். சரிடா நீ இன்னொரு கடிதம் எழுதிக்கொடு என்று நண்பர்கள் கூறினர். நான் என் முயற்சிகளை விட்டேன் என்று நினைத்தீர்களா? இல்லை இல்லை நான் இதுவரை இன்னும் 20 கடிதங்கள் எழுதி வைத்துள்ளேன். சரி சரி அப்புறம் என்ன ஆச்சு. நீங்க சொன்ன மாதிரி நான் முதல் கட்டத்தில் அதாவது கடிதம் கொடுக்க வேண்டும் என்ற முதல் கட்டத்தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட்டேன் என்றான்.

பதில் கடிதம்தான் இன்னும் வரவில்லை. நான் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கடிதம் கொடுத்த விதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். அவள் என்னை விரும்பவில்லை என்றால் இத்தனை நாட்கள் ஏன்? என் கடிதத்தை வைத்திருக்க வேண்டும். பதில் பேசாமல் இருக்க வேண்டும். என்னை பிரியா காதலிக்கின்றாள். எப்பொழுது சொல்ல வேண்டுமென்று அவள் நினைக்கிறாளோ அப்போது சொல்லட்டும். அதுவரை நான் கடிதத்தோடு பேசிக் கொண்டிருக்கிறேன். பிரியாவின் பதிலுக்காய் காத்திருக்கிறான் பிரியன். காலம் ஒரு நல்ல பதில் சொல்லட்டும்……. பிரியனுக்கு வாழ்த்துகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *