விசேஷங்களில் உறவினர்கள் ஒன்று கூடிவிட்டால் உற்சாகத்திற்குக் குறைவேது?! அந்த விசேஷத்திலும் அப்படித்தான் அபிசேக்கும், கற்பகமும் அருகருகே அமர்ந்தார்கள்.
வாலிபர்கள் கூடினால் பேசும் சப்ஜெக்ட் வேறு! வயதானவர்கள் கூடினால் பேசும் சப்ஜெக்ட் வேறு. வயதானவர்கள் பேச்சில் பெருமை வெளிப்படும். இளைஞர்கள் பேச்சில், எதார்த்த உண்மையும், இயலாமை வெளிப்பாடும் புலப்படும்.
கற்பகம்தான் ஆரம்பித்தார், ‘அய்யோ…! அய்யோ! என்பேத்தி படு சூட்டிப்பு..! லீவு விட்டு வீட்டுக்கு வந்தாள்னா,. ‘நான் கத்துத்தறேன்! படின்னு சொன்னா, ‘போ! உனக்கொண்ணுமே தெரியாதுன்னும்.! உண்மைதான். இன்றைய கணக்கும் சையின்ஸும் நமக்குத் தெரியாதுதான். தாத்தா தமிழ் சொல்லித்தரேன்! படீன்னா கூடப் படிக்க மாட்டேங்குதுன்னா பாருங்களேன்!’ என்றார். பெருமை பேசி வாய் வார்த்தை ஊடே ‘இருநூற்று நாற்பத்தைந்து’ எழுத்தா நமக்குத் தெரியாது?!’ என்றார். வாய் தவறியதா? இல்லை தெரிந்தது வெளிப்பட்டதா தெரியவில்லை!.
‘இன்னொன்னு என்னாச்சு கற்பகம்?!’ என்றார் அபிசேக்.
விழித்துக் கொண்டவர், ‘நான் இருநூற்று நாற்பத்தேழு! என்றுதான் சொன்னேன். உங்க காதில் நாற்பத்தைந்து என்று கேட்டிருந்தால் நானா அதற்குப் பொறுப்பு??!!’ என்றார் அதிர்ச்சியில்.
‘ஏன் கேள்வி எல்லாம் அந்த இன்னொனு எங்கேங்கறதுதான்?’ என்றார் அபிசேக்..
‘நான் இருநூற்று நாற்பத்தேழுன்னுதான் சொன்னேன்! உங்க காதில் அது நாற்பத்தைந்து என்று விழுந்தால் நான் பொறுப்பல்ல!’ என்றார்.
‘அந்த இருநூற்று நாற்பத்தேழாவது ‘ஆயுத எழுத்து…!’ அது நமக்கு ஒத்துவராதுன்னு விட்டுட்டேன்!’ என்றார் கற்பகம் ஹாஸ்யமாக!.
‘விட்டுட்டீங்களா? இல்லை விழுங்கீட்டீங்களா?’
திருமாலின் கைச் சக்கரத்தை விழுங்கிவிட்டு பெருமாளை கதிகலங்க வைத்த கற்பக விநாயகராக காட்சி தந்தார் கற்பகம்.
இப்போது புரிந்தது அவர் பேத்தி ஏன் அவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள மறுத்தாள் என்பது.