கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 45 
 
 

பாட்டைப் பாடுவதிலும் புதிய புதிய கற்பனைகளைப் பின்னி வெளியிடுவதிலும் கவிஞர்களுக்கு எந்தவிதமான மன நிறைவும் இன்பமும் எய்துகின்றனவோ அதே மனநிறைவும் இன்பமும் அவர்களுடைய உண்மையான இரசிகர்களுக்கு அவர்களைப் போற்றி உபசரிப்பதன் மூலமாக எய்துகின்றன. அதை நன்கு அறிந்து உணர்ந்திருந்தார் அரிய இரசிகராகிய திரு முதுகுன்றம் (இதற்கு இப்போது விருத்தாசலம் என்று பெயர்) சடைய வள்ளல் . ஒரு உண்மை இரசிகனுடைய திருப்தி, கவிதையையும் கற்பனையையும் வானளாவப் போற்றிப் புகழ்ந்து வாய்ச்சொல் விரிப்பதால் மட்டும் கிடைக்காது. கவிதையும் கற்பனையும் பிறந்த உள்ளம் குளிரப் பேணிப் போற்று வதனால்தான் முழுமையாகக் கிட்டும் என்பது இவருக்குத் தெரியும், சிறந்த பாவலர்கள் பலர் இவரைப் புகழ்ந்து வியந்து பாடுவதற்குக் காரணமாக இருந்த பண்பே இதுதான்.

ஒரு முறை தமிர்வாணர் என்ற புலவர் அவருடைய கொடைநலம் அறிந்து விருந்தினராக வந்து தங்கியிருந்தார். பெரும்பாலும் புலவர்களை உண்ணச் செய்வதிலிருந்து எல்லா உபசாரங்களையும் மனம் குளிரத் தம் கைகளாலேயே செய்வது சடைய வள்ளல் வழக்கம். தமிர்வாணர் விருந்தினராக இருந்த நாட்களில் வள்ளல் அவருக்கு உபசாரம் செய்தபோது ஒரு நாள் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. அந்தச் சம்பவத்தையொட்டித் தமிழ்வாணர் பாடிய பாடல் இன்றும் தனிப்பாடல் திரட்டில் இருந்தவண்ணம் நமக்கு அதை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

அன்று புலவர் தமிழ்வாணர்க்குத் தாமே உணவு பரிமாறக் கருதினார். சடைய வள்ளல் நீண்ட தலை வாழை இலையை விரித்துப் புலவரை உண்பதற்கு அமரச் செய்தார். வள்ளல் தன் வலது கை விரல்களில் இரண்டு மூன்று மோதிரங்கள் அணிந்திருந்தார். அவற்றுள் திருமகள் வடிவத்தோடு கூடிய பெரிய தங்க மோதிரமொன்று நடுவிரலை அழகு செய்தது. அந்த மோதிரத்தில் சுற்றி வைரக் கற்கள் பதிக்கப்பட்டு நடுவில் தாமரை மேல் நிற்கும் பாவனையாக இலக்குமி உருவம் ஒன்றும் செதுக்கியிருந்தது.

புலவரை இலைக்கு முன்பு அமர்த்தி இலையில் நீர் தெளித்துத் தூய்மை செய்வதற்காகக் கையில் நீருடன் வள்ளல் இலைக்கு முன் குனிந்தபோது அவசரத்தில் விரல் மாறி இட்டிருந்த அந்தப் பெரிய மோதிரம் நழுவிப் புலவர் இலையில் விழுந்து உருண்டது. செல்வத்திற்கும் இலக்குமி கடாட்சத்திற்கும் அறிகுறியாக இலக்குமி உருவத்தோடு கூடிய அந்த மோதிரத்தைக் கையிலிருந்து கழற்றாமல் அணிந்திருந்தார் புகழ் செல்வராகிய சடைய வள்ளல். எண்ணெய் நீராடும் நாளில் மட்டும் அதைக் கழற்றும் வழக்கமுடைய அவர் அன்று காலை எண்ணெய் நீராடிய பின் அவசர அவசரமாக மோதிரங்களை அணிந்து கொண்டபோது நடு விரலுக்கு அடுத்த விரலில் மாற்றி அணிந்து கொண்டு விட்டார் அந்த இலக்குமி மோதிரத்தை. அப்போது அவசரத்தில் அதைக் கவனிக்க நேரமில்லை. இப்போது பரிமாறும் தருணத்தில் இலையில் தண்ணீர் தெளிக்குங்கால் அது நழுவி விழுந்த உடன் தான் அந்தத் தவறு வள்ளலுக்குப் புரிந்த்து. மோதிரம் நழுவி விழுந்தது கூட அவருக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கவில்லை. ‘புலவர் அதை ஏதாவது அபசாரமாக எண்ணிக் கொள்வாரோ?’ என்ற பயமும், துயரமுமே அவரை அப்போது வாட்டின. வாடடின.

மன்னித்துக் கொள்ள வேண்டும்’ எனக் கெஞ்சுவது போன்ற பார்வையோடு தலை நிமிர்ந்து புலவரைப் பார்த்தார் வள்ளல். புலவர் அந்தப் பார்வைக்குப் பாடல் ஒன்றால் விடை அளித்தார்.

“பாட்டாற் சிறந்த புலவரெல்லாம் பாடும் சடையா
கொடையாளா கேட்டேன் உன்தன் புகழ் கேட்டேன்
கிளர்ந்த மனத்துடன் இங்குற்றேன் போட்டாய்
இலையிற் பொன்னுடனே பொன் ஆபரணமும்
புமையிது கேட்டேன் பசியால் அன்னத்தை
வைத்தாய் பொன்னை வழக்காமோ?”

பான் = இலக்குமி வடிவம். ஆபரணம் = அணிகலன். வேட்டேன் = விரும்பினேன். அன்னம் = சோறு, வழக்காமோ – ஏற்றதுதானோ.

என்பதே அந்தப் பாடல். ‘நான் பசியோடு அன்னத்தை எதிர்பார்த்து இலையில் அமர்ந்தேன். ஆனால் நீயோ ‘பொன்னோடு’ (இலக்குமி வடிவத்தோடு கூடிய பொன். ஆபரணமாகிய மோதிரத்தை இலையிலே போட்டு விட்டாய்! அன்னம் கேட்ட வாய்க்குப் பொன்னாபரணத்தையே அமுதமாக அளித்த பெருமையை என்னென்பது?’ என்ற கருத்துக்கள் யாவும் தமிழ்வாணர் பாடலில் தொனிக்கின்றன. இதற்கு மேலும் புலவர் தம்மை அபசாரமாக எண்ணவில்லை என்பதை அறிந்து கொள்ள வள்ளலுக்கு வேறு சான்று எதுவும் தேவையில்லையே!

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *