கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,737 
 

எனது நண்பன் வில்லியம்ஸ் அசகாய சூரன். இப்போது நாங்களிருவரும் தினசரி எஸ். எம். எஸ் / சாட் / மெயில் எப்போதாவ்து போன் என்ற தூரத்த்தில் இருந்தாலும் சின்ன வயசில் ஒன்றாகவே இருந்தோம். என்னைவிட நாலு வயசு பெரியவன்.

கையெழுத்துப் பத்திரிக்கை; பின்னர் அதைப் பிரிண்டில் கொண்டு வந்தது என்ற எனது கல்லூரி வயசு சாதனைகளின் பின்னால் மறைவாக நிற்கும் ஆறடி ஆசாமி. இந்தக் கதை அவனைப் பற்றி அல்ல

“டேய் ஒரு கிரிக்கெட் டோர்ணமெண்ட் நடத்தி சீப் கெஸ்டா கவாஸ்கரை வரவழைத்தால் எப்படி இருக்கும்” நான் எப்போதுமே இப்படித்தான் வில்லியம்ஸை உசுப்பேத்துவேன். அந்த 17-18 வயசில் எதை செய்யணும் எது வேண்டாம் என்ற ஆராய்சியெல்லாம் கிடையாது. நண்பன் சீரியசாக எடுத்துக் கொண்டு களம் இறங்கிவிட்டான்.

கவாஸ்கர் சீப் கெஸ்ட் என்பது தவிர ஒரு நிஜ கிரிக்கெட் பந்தயத்தின் எல்லா லட்சணங்களையும் தனி ஆளாய் கொண்டு வந்தான்.

சைட் ஸ்கிரின் அளவுக்கு இருந்த ஸ்கோர் போர்ட் எனது வியப்புகளில் சாஸ்வதமாய் இருக்கிறது. டோர்ணமெண்டின் விதிமுறைகள் எல்லாம் அவனே எழுதினான்.

எனக்கு JURY – MAN OF THE MATCH AWARD என்ற கவர்ச்சியான நீதிபதி பதவி தந்தான்

புதுக்கோட்டை ராஜாஸ் காலேஜ் மைதானம். என் வாழ்நாள் முழுவதற்குமான லார்ட்ஸ் மைதானம்.

75 யார்ட் பௌண்டிரி, சின்னதாய் படபடக்கும் பவுண்டிரி கொடிகள் சின்ன மேட்சுகளுக்கு கூட யுனிபார்மில் வரும் அம்பயர்கள், அந்த நாட்களிலேயே ராட்ச்ஸ ஸைசில் சைட் ஸ்கிரின், பிரிடடிஷ் பாரம்பரிய பெவிலியன், அதன் முகப்பில் ஒரு புராதான் கடிகாரம் வசீகரமான புல் தரைக்கு நடுநாயகமாய் கிரிக்கெட் பிட்ச்…

எத்தனையோ டெஸ்ட், ஒரு நாள் பந்த்யங்களை வெவ்வேறு கிரவுண்டுகளில் பார்த்திருந்தாலும் எனது நினவுகளில் விஸ்வரூபமாய் நிற்பது அந்த மைதானமே.

டோர்ணமென்டின் எல்லா மாட்சுகளும் சகஜாமாய் போய்விட்டன. பைனல் மாட்ச். எனது வழுவாத நீதி பரிபாலனத்திற்கு ஒரு சோதனையாய் வந்தது

MAN OF THE MATCH AWARD க்கான விதிகளின் ஷரத்துகளில் இவ்வளவு சூட்சுமம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால் அந்த நீதிபதி பதவியை ஏற்றே இருக்கமாட்டேன். இத்தனை ரன் அடித்தால் இத்தனை பாயிண்ட், இத்தனை விக்கெட்டுக்கு இத்தனை பாயிண்ட், காட்ச் பிடித்தால் எவ்வளவு, ரன் அவுட் ஆக்கினால் எவ்வளவு என்ற உபத்திரமில்லாத ஷரத்துக்கள் தானிருந்தது. இரண்டு பேர் சமமாய் பாய்ண்ட் எடுத்தால் அந்த கோப்பையை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற சிக்கலான விஷயத்துக்கு அதில் தீர்வு இல்லை.

சமமாய் பாயிண்ட் எடுத்துள்ள திருப்பதியும், சிவராமனும் எனக்கு முன்பு.

திருப்பதி எனது ஸ்கூல் மேட். சிவராமன் எனது அப்போதைய புரொபசரின் மகன். தர்ம் சங்கடம்

மாட்ச் விதிகள் எனக்கு கை கொடுக்காது என தெரிந்தபின் சொந்த லாப நஷ்டக் கணக்குகளை ஆராய்ந்தேன்.

சிவராமன் – இந்த MAN OF THE MATCH AWARD கிடைக்கவில்லை என்றால் அவன் அப்பாவிடம் போய் சொல்லுவானா? மாட்டான். அப்படியே சொன்னாலும் என் அப்பாவும் புரொபசர் தானே.. சமாளித்து விடலாம்

திருப்பதி- எனது ஸ்கூல் காலத்தோழன்.. இன்று காலையில் கூட அவன் மாமா வாங்கி வந்த ராத்மென்ஸ் சிகரெட் பிடிக்கக் கொடுத்தான். எல்லாவற்றையும்விட முக்கியம் அவன் பெயர்… எனது குல தெய்வம்..

நான் தீர்மானித்துவிட்டேன்

ஒரு CAUGHT AND BOWLED விக்கெட்டுக்கு தனக்கு இரண்டு பாயிண்ட் தர வேண்டும் என்ற சிவராமனின் நியாயமான வாதத்தை புறக்கணித்தேன். ஜூரியின் முடிவு விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று ஒரு ஷரத்து விதிகளின் கடைசியில் இருந்து எனக்கு ரொம்ப சௌகர்யமாய்ப் போய்விட்ட்து. இப்படியல்லவோ ஒரு வீட்டோ பவர் இருக்க வேண்டும்

இருபது வருஷம் கழித்து ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் ..நேற்று திருப்பதி சிவராமன் ரெண்டு பேரையும் பார்த்தேன்.

ஒரு விருந்துக்காக ஹோட்டலுக்கு போயிருந்தேன். அங்கே ராட்சஸ திரையில் ஷார்ஜாவில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச். அதில் விருது வழங்கும் விழா.

MAN OF THE MATCH AWARD ஐ ஒரு வெள்ளைக்கார பிளேயருக்கு வழங்கியது ஒரு பெரிய கம்பெனி அதிகாரியாய் சிவராமன். இவன் எனது நண்பன் என்று ஆபிஸ்காரர்களிடம் பெருமையடித்துக் கொண்டேன்.

வெளியில் வரும் போது கார் பார்க்கிங்கில் திருப்பதியைப் பார்த்தேன். அட்டெண்டராய். விசில் ஊதிக் கொண்டு போகும் வரும் கார்களின் போக்குவரத்தை கவனித்துக் கொண்டு..

”திருப்பதி ”…

உடனே திரும்பினான்.. என்னைப் பார்த்ததும் ரொம்ப பரவசமானான். இத்தனை வருஷ இடைவெளியை கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு ,”நான் புறப்படறேன்”. என்றேன். பாக்கெட்டுக்குள் கைவிட்டு எடுத்து நீட்டினான். ஒரு பாக்கெட் ராத்மென்ஸ் சிகரெட்.

– 16 ஏப்ரல் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *