அசலும் நகலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 2,734 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஒரு அழகிய சிறிய குடும்பம். அம்மா, அப்பா, யூலி மூவருந்தான். ஆசையாக அந்தச் சின்னமகள் யூலையில் பிறந்ததால் அவளை யூலி என்று செல்லமாக அழைத்தனர். யூலியின் தந்தை ஒரு கம்பியூட்டர் எஞ்சினியர். யூலி பிறந்து எட்டு மாதங்களாக இருந்தபோ:து அப்பா சிங்கப்பூருக்குப் போய்விட்டார். நல்ல சம்பளம் சிங்கப்பூர்ச் சந்தையில் புதிதாக அறிமுகமாகும் சிறந்த பொருட்களால் யூலியின் வீடு நிரம்பி வழிந்தது.

யூலியோடு விளையாட அழகிய நாய்க்குட்டியும் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டது. அது ஜனவரியில் வந்து சேர்ந்ததால் அதனை ஜானு என்று அழைத்தனர்.

விதம் விதமாகச் சமையல் செய்து பார்ப்பதும், செல்ல மகளையும் ஜானுவையும் கவனிப்பதும் வீட்டை அழகு பார்ப்பதும் தாயாரின் வேலை. மகளோடும் மனைவியோடும் தினமும் ரெலிபோன் கதைப்பதில் மாதச்செலவு இலங்கைப் பணத்தில் இருபத்தையாயிரம் அப்பாவிற்குச் செலவாகிறது.

யூலியும் ஜானுவும் சோபா செட்டில் இருந்தபடி ரீ.வி. பார்ப்பதும் விளையாடுவதும் வழக்கம். ஜானுவுக்கு அம்மா பல்தீட்டி விடுவார். மகள் யூலிக்குச் செய்யும் அத்தனை பணிவிடைகளையும் நாய் ஜானுவுக்கும் செய்யப்படும்.

ஜானு யூலியை விட விரைவாக முதிர்ச்சி அடைந்து விட்டது. அதற்கு இணையன் இங்கு இல்லை. மீண்டும் அப்பாவிடம் அனுப்பி வைக்க அம்மா முயற்சிகள் மேற்கொண்டாள். இப்பொழுது மகள் யூலியோடு விளையாட ஜானு இல்லை. யூலி ஜானுவைக் கேட்டு அடம்பிடித்தாள்.

‘இல்லடா கண்ணு சிங்கப்பூர்ல அப்பா ஜானுவைப் பாரமெடுத்து அம்மாவாக ஆக்குவார். அப்புறம் வடிவான குட்டிகளோடு ஜானு வருவாள்” என்று யூலியிடம் கூறினாள் அம்மா.

ஜானு சிங்கப்பூருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. ஆக வேண்டியவற்றையெல்லாம். அப்பா வைத்தார்.

மாதங்கள் கடந்தன குட்டிகள் பிறந்தன. சிங்கப்பூரில் சாஸ் நோய் பரவும் அபாயம் பற்றி பத்திரிகைகள் தொடர்ந்து எழுதின. இதனை அடிப்படையாக வைத்து மிருகங்கள் நாட்டுக்கு நாடு இடமாற்றம் செய்வது தற்காலிகமாகத் தடுக்கப்பட்டது.

ஜானு இல்லாமல் இங்கு யூலிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவளும் அம்மாவும் வைத்தியசாலையில் இருக்கும் செய்தி கேட்டு அப்பா பதறிப்போனார்.

றோபோக்கள் செய்வதில் யூலியின் அப்பா வல்லவர். அசலில் தனதுமகள் யூலியைப் போன்று ஒரு றோபோவை அவர் வடிவமைத்து யூலியின் குரலைப் பதிவுசெய்து மகளுக்கு அவர் அனுப்பி வைத்தார்.

பிள்ளைக்கு ஒரு குறையும் வரக்கூடாது என யூலியின் தாய் இறைவனை வேண்டியதோடு விரதமிருந்தாள்.

சிறிய குட்டிகளுடன் ஜானுவை அனுப்பி வைக்கச் சிங்கப்பூர் அரசு தடை விதித்து இருந்தது. அதற்கான அறிவுறுத்தல் இஷதத்தை யூலியும் கண்ட பின்னர்தான் காய்ச்சல் குறைந்தது. வீட்டிற்கு வந்தது சேர்ந்தபோது யூலியை இன்னொரு யூலி வரவேற்றது. அசல் எது நகல் எது என்று யாருக்கும் புரியவில்லை . மூவரும் கலகல எனச் சிரித்தனர்.

ஆனால் அசல் யூலிக்கு மனதில் ஏதோ ஒரு கீறல். கொஞ் சமாவது என்னைவிட அழகு குறைவாக அப்பா இந்த நகலைச் செய்திருக்கக்கூடாதா? என அவள் மனதில் ஒரு சிறுசலனம்.

இப்போது அம்மாவுக்கு அசலுக்கும் நகலுக்கும் ஒரே விதமான உடை தயாரிக்கும் வேலை தொடங்கிவிட்டது. இதுவும் யூலிக்குப்பிடிக்கவில்லை.

தனது புகைப்படம் கூட அழகாக இருக்கவேண்டும். என நம்பும் ஒருவன் தன்னைப் போல் இன்னொருவன் இருப்பதை விரும்புவது கடினமானதென மக்கள் கூறுகின்றனர்.

ஜானுவுக்கும் குட்டிகளுக்குமான விசா கிடைத்துவிட்டது. ஜானு வரும் செய்தி யூலிக்கு இப்போது இனிப்பாக இல்லை. ஆனால் ஜானுவின் குட்டிகளை அணைக்க அவள் துடித்தாள். ஜானுவுக்காக ஏங்கியவள் இப்போது அதை ஏன் வெறுக்கிறாள். தான் காய்ச்சலாக இருந்தபோது சற்று இளைத்திருந்தாள். ஆனால் அந்த றோபோ தன்னைப்போலவே நல்ல குரலும் அழகும் உடையதாக இருக்கிறது. மூச்சு இரைக்காமல் பாடுகிறது. என யூலி நிைைனத்துப் பொறாமைப்பட்டாள். அவள் நினைத்தது போலவே ஜானு தன்னைவிட றோபோவை அதிகம் விரும்பி விட்டால் பாவம் யூலி தொய்ந்து போவாள்.

யூலி ஜானுவை வெறுத்தும் குட்டிகளைக் கனிவாகவும் பார்த்தாள். ஒரே நேரத்தில் இருபார்வை பெண்களுக்குப் பிறப்பிலேயே வந்து விடுகிறதோ என றோபோ யூலி நினைத்தது. யூலி நினைத்தபடியே நடந்தது. ஜானு றோபோவுக்கும். யூலி குட்டிகளுக்கும் என்று ஆகிவிட்டது.

– உயர்திணைக்கும் அஃறிணைக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்தது. யூலி நீண்ட நாட்களாக யோசித்து யோசித்து ஒரு முடிவை எடுத்து விட்டாள். றோபோவை அழித்து விடுவதுதான். அவளின் திட்டம். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி….. – அப்பாவை மிஞ்சிய பிள்ளையாக அவள் வருவாளோ? அப்பாவின் அளப்பரிய மூளை இன்னும் அவளுக்கு வாய்க்கவில்லை. ஆனாலும் அவள் பிஞ்சிலே பழுத்தவழும் அல்ல. காலத்துக்காக காத்திருந்தாள் மிக மெதுவாக ஜானுவை றோபோ மீது ஏவி விட்டாள். “மந்திரத்தை முணுமுணுத் தேட்டை வரிசையாக அடுக்கியதன் மேல்….” ஜானு நகல் யூலியுடன் சேர்ந்து விளையாடும் நேரத்தை மெல்ல மெல்ல குறைத்து வந்தது.

நகல் யூலி நிலைமைகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்திருந்தது. எதிர்வு கூறும் சக்தியுடையதாக இந்த றோபோவின் மூளை படைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய பாதுகாப்பினை எப்போதும் உறுதி செய்து கொண்டே கருமமாற்றும் பண்புடைய றோபோவாக அது இருந்தது.

எடுத்ததற்கெல்லாம் முகத்திலே துப்பிவிடுவதும் அதனை வழித்தெறிந்தபடி அடுத்தவர் விழித்துக்கொண்டு நிற்பதும் தமிழ் சினிமாப் படங்களில் நாம் அடிக்கடி பார்க்கும் காட்சிகளில் ஒன்றாகிவிட்டது.

இதனை நினைத்த யூலியின் அப்பாவின் சிந்தனையில் அடிப்படையில் பல தத்துவங்களை தனது படைப்பில் புகுத்தியிருந்தார்.

மனித மனங்களில் எழுகின்ற சிந்தனையின் எல்லைக்கு வரையறை இல்லை. மனித மூளையின் உண்மையான இயல்பு நிலைக்கும் அதன் நரம்புக் தொழிற்பாட்டிற்கும் இடையே உள்ள இடைத்தொடர்பு. அதனுடைய சுரப்புக்கள், தாக்கங்கள் என்பன இன்னும் விஞ்ஞானிகளுக்கு ஒரு கேள்விக் குறியாக உள்ளது.

றோபோ யூலி மிகவும் விசித்திரமாகத் தொழிற்படுகிறது. தன்னைச்சூழ உள்ளவர்களின் தொடர்புகளை ஒரு சந்தோசமானதாக ஆக்குவதற்கான ஆராய்ச்சினையும் அது செய்தது. அந்த றோபோ தனக்குள்ளேயே ஒரு திட்டத்தினைத் தயாரித்து யூலியை அது தனது பக்கம் கவர்ந்து கொள்ள முயற்சி செய்தது. அது ஒரு நாள் தனது இயக்கத்தை முழுமையாக நிறுத்திவிட்டது.

மனிதன் தனது இயக்கத்தை நிறுத்தினால் நிலத்திற்கு இரையாகிவிடுவான் ஆனால் றோபோவை மீண்டும் இயக்கமுடியும். இப்போது ஜானுவும் யூலியும் மிண்டும் நல்ல நண்பர்களாக வாய்ப்பு உண்டாகியது என யூலி நினைத்தாலும் குட்டிகளை அது பராமரிப்பதிலும் கவனமெடுத்து வந்ததை யூலி அவதானித்தே வந்தாள்.

றோபோவின் இயங்கு விதிகளை பற்றி அம்மாவோடு அப்பா உரையாடியே வந்திருந்தார். றோபோ இயங்காத நிலையில் வீட்டின் கலகலப்பு குறைந்துவிட்டது. விட்டுப் பிடிப்போம் என அந்தப் போலி யூலி மௌனிதிருந்தது.

யூலி ஜானுவுக்கும் குட்டிகளுக்கும் கீயூ டெக்ஸ் அடித்துக் கொண்டிருந்தாள். கீயூடெக்ஸ் மனம் அறையெல்லாம் பரவியிருந்தது. தனக்கும் அடித்து அழகு பார்க்கமாட்டாளா என றோபோ ஏங்கியது. ஆனாலும் தன் மானம், வரட்டுக்கௌவரம்…. மனித முளையில் சாயல் வந்துவிட்டாலே மறுபுறும் கேட்பானேன் இம்…என்று இருந்துவிட்டது. அது.

அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாம், ஆனால் காலமும் எல்லாவற்றையும் கரைக்குமாமே, ஜானுவும் குட்டிகளும் இப்போது விளையாடக் தொடங்கி விட்டன. குட்டிகளில் தூசு விழுந்தாலும் தட்டி விடும் அளவு பண்புள்ள தாயாகிவிட்டது அது.

யூலி பாடசாலை செல்ல ஆரம்பித்து விட்டாள். பாடசாலை நண்பிகளின் நாட்டம் மாறியது வீட்டிலுள்ள உன்னதமான பொருட்களை காட்சிப்படுத்தும் நாள் வந்தது. யூலி தனது றோபோவை அங்கு அறிமுகப்படுத்தியதும் பாடசாலை முழுவதும் ஆச்சரியம் அடைந்தது. தான் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த நாள் முதல் பாடசாலைக்கு வந்த நாள் வரை அந்த றோபோ பதிவு செய்து வைத்திருந்த யாவற்றையும் கதை கதையாகச் சொன்னது.

றோபோவின் கதைகள் இலங்கையின் முழுப்பத்திரிகைகளும் முதற்பக்கத்தில் கொட்டை எழுத்தில் பிரசுரிக்கப்பட்டது. றோபோவுடன் யூலி புகழின் உச்சியில் பறந்தாள் யூலியின் அப்பா நாட்டுத் தலைவரின் தேசிய விருதைப் பெறுவதற்காக சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் ஏறுகின்றார்.

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *