“உட்காருங்க அங்கிள்; அப்பா இப்ப வந்துருவாரு!” என்று அப்பாவின் சினேகிதரை உபசரித்து உட்காரச் சொன்னான் தமிழரசன்.
அதேநேரம் மிக சமீபத்தில் அறிமுகமான தமிழரசனின் நண்பன் திவாகர் வந்தான்.
‘காரணமின்றி அடிக்கடி வீட்டிற்கு வரும் திவாகரனின் வருகையை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது..?’ முகத்தை சோகமாகவும் சீரியஸாகவும் வைத்துக் கொண்டு ” “தப்பா நினைக்காதே திவாகர்!” என்று தொடங்கி, அவன் சொன்னதைக் கேட்டதும் “சரிடா!” என்று சென்று விட்டான் அவன்.
“‘அடிக்கடி வீட்டுக்கு வராதடா..! அப்பா திட்டுவாரு’ ன்னு அந்தப் பையன்கிட்ட சொன்னியே..! ‘அப்பா’ன்னா அவ்வளவு மரியாதையா உனக்கு?” என்று கேட்டார் திண்ணையில் உட்கார்ந்திருந்த அப்பாவின் நண்பர்.
“டீன் ஏஜ்ல தங்கச்சி இருக்கறதால இவன் அடிக்கடி வீட்டுக்கு வர்றது பிடிக்கல அங்கிள்.”
“அப்பாவுக்கா?”
“எனக்குதான்… நானே நேரடியா வராதே’னு சொன்னா தேவையில்லாத வருத்தம் வரும். அதனாலே அப்பா பெயரை உபயோகப்படுத்தினேன் அங்கிள்”.
விளக்கத்தைக் கேட்டு அதிர்ந்தது; அப்பாவின் நண்பர் மட்டுமல்ல. உரையாடலை கேட்டுக்கொண்டே வந்த தமிழரசனின் தந்தை கதிரேசனும் தான்.