மழைச் சத்தம்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 7,022 
 

நவம்பர் 2010. நீரும் நீரும் கலக்கும் காட்சியைக் காண்பது, ஓர் ஆணும், பெண்ணும் இணைவதற்கு சமமான பரவசம் தருவது. காவிரி ஆற்றங்கரையிலிருந்த அந்த 108 கால் மண்டபத்தில் நின்றபடி, ஆற்று நீரில் சடசடவென்று கண்ணாடிச் சிதறல்கள் போல் விழுந்துகொண்டிருந்த மழைத்துளிகளைக் காண அற்புதமாக இருந்தது. வேகமாக கேமராவை எடுத்தேன். ஃபிலிம் போட்டு எடுக்கும் பழைய மாடல் கேனான் கேமரா அது. கேமராவில் ஆற்றையும், எதிர்க்கரை மூங்கில் தோட்டத்தையும், தோட்டத்திற்கு நடுவே கரையோரம் ஈரத்தில் நனைந்துகொண்டிருந்த சிறு பிள்ளையார் கோயிலையும் ஃபோகஸ் செய்து க்ளிக் செய்தேன்.

அப்போது மழை வலுத்து கேமராவில் தண்ணீர் பட… கேமராவை பின்னுக்கு இழுத்து, லென்ஸை கர்ச்சீப்பால் துடைத்தபடி சுற்றிலும் பார்த்தேன். மண்டபத்தின் விளிம்புப்பகுதி தூண்கள் மீது, சுள் சுள்ளென்று மழைத்துளிகள் விழுந்து தூண்களை நனைத்துக் கொண்டிருந்தது. ஊருக்கு ஒதுக்குபுறமாக, யாருமற்ற அந்த மண்டபத்திற்குள்ளிருந்து ஒலித்த புறாக்களின் சத்தம், மழைச்சத்தத்தோடு இணைந்து ஜுகல்பந்தி இசை போல் இருந்தது. மழை இப்போது மேலும் வலுத்து, என் மேல் சாரல் துளிகள் விழுந்த கணத்தில், பல தூண்கள் தள்ளி அந்தக் காட்சியை கவனித்தேன். ஒரு தூணை ஒட்டி ஆற்றைப் பார்த்தாற் போல் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் உடம்பையும் முகத்தையும் தூண் மறைத்திருக்க… நீண்டு தரையில் படர்ந்திருந்த அவளுடைய கூந்தலும், தலை மல்லிகைப்பூவும் மட்டும் தெரிந்தது.

“வாவ்….” என்று வேகமாக தூணையும் கூந்தலையும் சேர்த்து கேமராவில் ஃபோகஸ் செய்தேன். எதிர்பாராத விதமாக அவள் திடீரென்று பின்புறம் சாய்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு என் பக்கம் திரும்பிப் பார்க்கவும் கேமரா க்ளிக்காகவும் மிகச் சரியாக இருந்தது. சில வினாடிகள் கண்களில் கேள்வியுடன் பார்த்தவள், எழுந்து என்னை நோக்கி வர முற்பட்டாள். எழுந்தபோது அந்த மெல்லிருட்டில், இளம் பெண்ணாகத் தெரிந்தவள், என் பக்கத்தில் வந்தவுடன் அவள் பெண்ணல்ல…. தேவதை என்று தோற்றம் தந்தாள். யாரென்று தெரியவில்லை. ஊருக்குப் புதிதாக இருக்கவேண்டும். என்னை முறைத்தபடி, “ஹலோ… கேர்ள்ஸ அவங்க பர்மிஷன் இல்லாம ஃபோட்டோ எடுக்கலாமா?” என்று கேட்டபோது அவள் முகத்தில் தெரிந்த கோபத்தை அழித்துவிட்டால் பேரழகியாகிவிடுவாள்.

தடுமாற்றத்துடன், “இல்லங்க… நான் அந்த தூணை எடுக்கத்தான் ட்ரை பண்ணினேன். திடீர்னு நீங்க சாஞ்சு உக்காந்துட்டீங்க…” என்றேன். “பொய் சொல்லாதீங்க. கேமராவ தாங்க. ஃபிலிம எக்ஸ்போஸ் பண்றேன்…” கையை நீட்டியவள் நீலநிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். “ப்ளீஸ், வேண்டாங்க. மழை பெய்றப்ப காவிரி அற்புதமாக இருக்கும். அதை நிறைய ஃபோட்டோ எடுத்துருக்கேன். நாளைக்கு தஞ்சாவூர் போயி, பிரிண்ட் போட்டு, உங்க ஃபோட்டோவ நெகடிவ்வோட கொண்டு வந்து தந்துடறேன். நாளைக்கு சாயங்காலம் இங்க வந்துடுங்க…” என்றபோது மழை விட ஆரம்பித்திருந்தது. “இதுக்குன்னு நான் வரணுமா?” “வேற என்னங்க பண்றது? நாளைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு வாங்க.

நீங்க ஊருக்குப் புதுசா?’’ பதில் ஒன்றும் சொல்லாமல் மண்டபத்திலிருந்து இறங்கிச் சென்றாள். யாரிவள்? மறுநாள் மாலை நான் சென்றபோதும் மழை பெய்து கொண்டிருந்தது. அவளிடம் ஃபோட்டோவைக் காண்பித்தபோது அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை அவளால் மறைக்க முடியவில்லை. ஏனெனில் அப்புகைப்படத்தில் அவள், கடவுள் மழைநீரை பூவிதழால் தொட்டு எழுதிய ஒரு மகா கவிதை போல் இருந்தாள். க்ளோஸ்அப்பில் அவள் முகத்தில் படர்ந்திருந்த மழை ஈரம்… கன்னத்து மழை ஈரத்தில் ஒட்டியிருந்த நான்கிழை தலைமுடி… கேமராவை கேள்வியுடன் பார்க்கும் அகன்ற கண்கள்… கீழுதட்டுக்குக் கீழ் அந்த மச்சம்…. எல்லாம் சேர்ந்து நான் வாழ்நாள் முழுவதும், கோடி கவிதைகள் எழுதுவதற்கு போதுமான அழகுடன் இருந்தாள்.

நான் நெகடிவ்வையும் அவளிடம் அளித்துவிட்டு திரும்பியபோது, “ஒரு நிமிஷம்…” என்றாள். நான் திரும்பிப் பார்க்க… “இன்னொரு காப்பியத் தாங்க…” என்றாள். “எந்த இன்னொரு காப்பி?” “என் ஃபோட்டோவ இன்னொரு காப்பி எடுத்திருப்பீங்களே… அதத் தாங்கன்னு சொல்றேன்!” “வேற காப்பி ஒண்ணும் எடுக்கலங்க…” “அட தெரியும் பாஸ்..! இவ்ளோ அட்டகாசமா இருக்கேன். இன்னொரு காப்பி எடுக்காம இருப்பீங்களா?” அசடு வழிய சிரித்துவிட்டு, ஜெர்கினுக்குள் கையை விட்டு, இன்னொரு காப்பியை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தேன். “ஹலோ… ஒரு நிமிஷம்…” என்று மீண்டும் அவள் அழைக்க… நின்றேன். நடந்து என்னருகில் வந்தவள், “ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க.

இன்னொரு காப்பிய நீங்களே வச்சுக்குங்க…” என்று புகைப்படத்தை நீட்டியபடி, “தினமும் இங்க வருவீங்களா?” என்றாள். “எப்ப மழை பெஞ்சாலும், உடனே இங்க வந்து ஃபோட்டோ எடுக்க ஆரம்பிச்சுடுவேன்!” “எங்க… மத்த ஃபோட்டோஸ் எல்லாம் காமிங்க…’’ அவள் கேட்டவுடன் நான் மற்ற புகைப்படங்களை காண்பித்தேன். “ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க. நீங்க ஃபோட்டோகிராஃபரா?” என்றாள். “இல்ல… சும்மா ஒரு இன்ட்ரெஸ்ட்… அவ்வளவுதான்…” “நீங்க சொன்ன மாதிரி, மழை பெய்றப்ப காவிரி ரொம்ப அழகாதான் இருக்கு. நானும் இனிமே மழை பெய்றப்ப இங்க வந்துடலாம்ன்னு பாக்குறேன்!” “நீங்க ஊருக்கு புதுசா?” “ஆமா… அப்பா ஈபில ஏஇயா இருக்காரு. இங்க டிரான்ஸ்ஃபராயிடுச்சு. போன மாசம்தான் வந்தோம்.

நீங்க இந்த ஊருதானா?’’ “பிறந்ததுலேந்து இந்த ஊருதான். காலேஜ் படிச்சு முடிச்சுட்டு, மூணு வருஷமா வெட்டி ஆபீசர். டிஎன்பிஸ்சி எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ணிக்கிட்டிருக்கேன். இங்கதான் படிக்கிறதுக்கு வருவேன். உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” அவள் தன் மூடிய உதடுகளுக்குள் தனது நுனிநாக்கை அழகாக ஒருமுறை சுழற்றிவிட்டு, “அவசியம் சொல்லணுமா?” என்றாள். “உங்க இஷ்டம்…” என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். சில வினாடிகள் கழித்து, “அர்ச்சனா…” என்ற குரல் ஒலிக்க…. நான் திரும்பிப் பார்த்தேன். ஆளைக் காணவில்லை. நான் அடுத்த அடியை எடுத்து வைக்க… ஒரு தூண் மறைவிலிருந்து கீழே குதித்தவள், புளியமரத்தடியில் மழைத்துளிகளில் நனைந்தபடி என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓடினாள். அடுத்த முறை மழை வந்தபோது கல்மண்டபத்துக்குச் சென்றேன். அர்ச்சனாவும் வந்திருந்தாள். பேசினோம்.

பிறகு வந்த நாட்கள் ஆகாயத்தைப் பார்த்தபடியேதான் கழிந்தன. லேசாக வானம் மூடினாற்போல் இருந்தால் போதும். உடனே மண்டபத்துக்குக் கிளம்பி விடுவேன். மழை வரும் நாட்களில் அவளும் தவறாமல் வந்துவிடுவாள். அர்ச்சனாவைப் பார்க்கும்போதெல்லாம் சிலிர்த்து…. பார்க்காதபோது தவித்து… கவிதை எழுதி…. கனவு கண்டு, தூக்கம் கலைந்து, விடிய விடிய புரண்டு…. வீணாக வளர்த்துவானேன். அடுத்த இரண்டு மாதத்திற்குள் நாங்கள் காதலிக்க ஆரம்பித்திருந்தோம். தினந்தோறும் பேசிச் சிரித்தோம். சிரித்துப் பேசினோம். “அர்ச்சனா… கொஞ்சம், கொஞ்சமா நான் பைத்தியமா ஆயிகிட்டிருக்கேன். ராத்திரி படுத்தவுடனே ஒரு காதுல நீ பேசுற சத்தமும், மறு காதுல நீ சிரிக்கிற சத்தமும் கேட்டுகிட்டேயிருக்கு.

ஒரு கண்ணுல சிணுங்குற. இன்னொரு கண்ணுல வெக்கப்படுற. உன்னப் பாத்த பத்தாவது செகண்டுல கண்ணு, உடம்பெல்லாம் சூடாகி, இந்த மழைலயும் அனலா கொதிக்குது. நீ வேணும்ன்னா தொட்டுப் பாரேன்…” என் ஈரக்கையை தனது நெய்ல்பாலிஷ் விரலால் அழுத்தமாகத் தொட்ட அர்ச்சனா வேண்டுமென்றே, “ஆ… பயங்கரமா கொதிக்குது! இவ்வளவு ஹீட்டாவ இருப்ப… ஆ… சுடுது… சுடுது…!” என்றாள் தனது ஆள்காட்டி விரலை உதறிக்கொண்டே குறும்புச் சிரிப்புடன். நான், “அய்யோ… பாத்துத் தொடக்கூடாது…” என்று வேகமாக ஆள்காட்டி விரலைப் பிடித்து என் உதடுகளுக்குள் நுழைத்து ஈரமாக்கினேன். “இன்னும் சுடுதா?” என்றபடி நான் அவள் முகத்தைப் பார்க்க… அவள் கிறக்கத்துடன், “ம்…” என்றாள். தொடர்ந்து நான் என் நாக்கு நுனியால் அவள் விரலை நெருட…. “என்னைக் கொல்றடா…” என்றாள் அர்ச்சனா முனகலாக.

மண்டபத்தின் ஓரமாக உட்கார்ந்திருந்தோம். கொலுசணிந்த அவள் கால்களில் மழைத்துளிகள் படபடவென்று விழுந்துகொண்டிருக்க… அர்ச்சனா, “ஏய்… கல்யாணமாயி நான் பிரசவத்துலயோ, ஆக்ஸிடென்ட்லயோ செத்துப் போயிட்டன்னு வச்சுக்க… இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா?” என்றாள் என் கைவிரல்களில் சொடக்கெடுத்தபடி. “பின்ன? ஆக்சுவலா நீ என் டேஸ்ட்டுக்கு இல்ல. இவ்ளோ பெரிய கண்ண இருட்டுல பாத்தா பயமா இருக்கு. அதனால சின்னக் கண்ணு, சின்ன உதடு, சின்ன சிரிப்போட ஒரு சின்னப் பொண்ணக் கல்யாணம் பண்ணிப்பேன்!” “அடப்பாவி…” முறைத்த அர்ச்சனா, “நீ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணுனனு வச்சுக்க. உன் ஃபர்ஸ்ட் நைட்டப்ப பேயா வந்து, உன் பொண்டாட்டி மேல குடியேறி, உன்னை அப்படியே…” என்றவள் எழுந்து என் தலைமுடியைப் பிடித்து உலுக்கி, “டேய்… நான் அர்ச்சனா வந்துருக்கன்டா.

அதுக்குள்ள உனக்கு இன்னொரு பொண்டாட்டி கேக்குதா?” என்று அலற… நான் எழுந்து ஓட… அர்ச்சனா அருகிலிருந்த தென்னம்மட்டையை எடுத்துக்கொண்டு துரத்தினாள். நான் அவள் கைவிரல் நகத்தைக் கடித்தபடி, “கல்யாணமானா நமக்கு ஃபர்ஸ்ட் நைட்ல்லாம் கிடையாது. ஃபர்ஸ்ட் டே!” என்றேன். “ஃபர்ஸ்ட் டேன்னா?” நான் கடித்துப் பிய்த்த அவள் நகத்துண்டைத் துப்பிவிட்டு, “காலைலயே தாலி கட்டிட்டு, ராத்திரி வரைல்லாம் காத்திருக்க முடியாது. தாலியக் கட்டுறோம். சோத்தப் போட்டு சொந்தக்காரனுங்கள எல்லாம் துரத்தி விடுறோம். கல்யாண மண்டப கதவச் சாத்துறோம்…” என்று நான் கூற… அர்ச்சனா சத்தமாகச் சிரித்தாள். சிரித்தேன்… சிரித்தோம். அந்தச் சிரிப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

அவள் வீட்டிற்கு எங்கள் காதல் விஷயம் தெரிந்து… எனது வேலையின்மையைக் காரணம் காட்டி அவள் குடும்பத்தினர் எங்கள் காதலை எதிர்த்ததும், அவள் அப்பா கோயம்புத்தூருக்கு மாற்றிக்கொண்டு சென்றதும், வீட்டின் நெருக்கடியால் அர்ச்சனா ஒரு தில்லி மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டதும், பின்னர் நான் திருமணம் செய்துகொண்டதும் அந்த மண்டபத்துக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் என்பதால் நான் விரிவாகச் சொல்லவில்லை. நவம்பர் 2017. கடைத்தெருவில் மழைத்தூறலில் நனைந்தபடி அர்ச்சனாவின் தோழி ஜோதியைப் பார்த்தபோது, “அர்ச்சனா தம்பிக்கு வர்ற 12ம் தேதி கல்யாணம். பொண்ணு தஞ்சாவூருதான். பொண்ணு வீட்டுல கல்யாணத்தை தஞ்சாவூர்லதான் நடத்துறாங்க.

அர்ச்சனாவும் வர்றா. மூணு நாள் இங்க நம்மூருல, எங்க வீட்டுலதான் இருப்பா…” என்று சொன்னவுடனேயே நான் ஆகாயத்தைப் பார்த்தேன். சரியாக கார்த்திகை மாதம் வருகிறாள். தஞ்சை மாவட்டத்தில் கார்த்திகை மாதம், நல்ல மழைக்காலம். எப்படியும் அவள் இருக்கும் 3 நாட்களுக்குள் ஒரு மழையாவது பெய்துவிடும். இங்கு இருந்துகொண்டு மழை பெய்யும்போது மண்டபத்துக்கு வராமல் அவளால் இருக்கமுடியாது. எதிர்பார்த்தபடியே திருமணத்திற்கு முதல் நாள் மழை பெய்தது.

மண்டபத்திற்குச் சென்று காவிரியை ஆக்ரோஷத்துடன் அணைத்துக்கொண்டிருந்த மழைத்துளிகளைப் பார்த்தபடி மண்டபத்தின் வாசலிலேயே அமர்ந்திருந்தேன். மழை மிதமான வேகத்தில் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. நாளைதான் கல்யாணம். மழை பெய்கிறது. அதனால் நிச்சயம் அர்ச்சனா வருவாள். குடும்பத்தோடு வந்தால் கூட பரவாயில்லை. தூரத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தால்கூட போதும் என்றிருந்தது. சற்று யோசித்தால் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இன்னும் பழசையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு அவள் வருவாளா என்ன?


ஒரு மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்தும் அர்ச்சனா வரவில்லை. இனி காத்திருப்பது வீண் என்று நான் மண்டபத்திலிருந்து இறங்கியபோது, மண் சாலையில், பிங்க் நிற சேலையில், கறுப்புக் குடையுடன் ஓர் உருவம் வருவது தெரிந்தது. குடை பாதி முகத்தை மறைத்திருந்தது. அந்த உருவம் மண்டபத்தை நோக்கித் திரும்ப… என் மனம் தத்தளிக்க ஆரம்பித்தது. அவளாகத்தான் இருக்கவேண்டும். மெல்ல அந்த உருவம் நெருங்க… குடை லேசாக உயர… அர்ச்சனாதான். அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். முதலில் சற்றுத் தயங்கிய அவள் கால்கள், இப்போது வேகமாக என்னை நோக்கி நகர்ந்தன. அவள் நெருங்க நெருங்க… என் இதயத்தின் துடிப்பு அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

மழையில் நனைந்தபடி அர்ச்சனாவை நோக்கி நடந்தேன். அர்ச்சனா என் அருகில் நெருங்கியவுடன் நின்றாள். குடையை மீறி அவள் முகத்தில் சுள் சுள்ளென்று சாரல் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. அவ்வளவு நெருக்கத்தில் அவளை இத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்ததும், சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ எனது கால்கள் வெடவெடவென்று நடுங்கின. என்னைப் பார்க்கப் பார்க்க அர்ச்சனாவின் கண்கள் கலங்கி, ஒரு சொட்டு நீர் வழிந்து அவள் கன்னத்து மழைநீரோடு கலந்தது. நான் ஒரு வார்த்தை கூட பேசத் தோன்றாமல் அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். காலச்சிற்பி அவள் உடலைச் செதுக்கி, சின்னஞ்சிறு மாற்றங்கள் செய்திருந்தான்.

முன்பை விட சற்றே பூசினாற்போல் உடம்பு. கண்களின் கீழ் லேசாக கருவளையங்கள். நெற்றி வகிட்டுக் குங்குமம் மழைநீர் பட்டு லேசாகக் கலைந்திருந்தது. சில வினாடிகள் நீடித்த மௌனத்திற்குப் பிறகு, “அர்ச்சனா… எப்படி இருக்க?” என்ற என் குரல் தளுதளுத்தது. “ம்… நீ?” என்றவளின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வழிய… அவள் ஆற்றுப் பக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டாள். மழை நன்கு வலுக்க… நாங்கள் நடந்து யாருமற்ற மண்டபத்தில் ஏறிக்கொண்டோம். காவிரியில் விழுந்து சிதறிக் கொண்டிருந்த மழைத்துளிகளை இருவரும் பார்த்துக்கொண்டே நின்றோம். திரும்பி அர்ச்சனாவைப் பார்த்தேன். என்னுள் ஒரு பெரிய அலையடிப்பது போல் இருந்தது.

‘என்னுடன் இருக்கும்போதெல்லாம் என் கைவிரல்களில் நீ சொடக்கெடுத்தபடி பேசிய நிமிடங்கள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதா அர்ச்சனா? நீ என் கண் பொத்தி விளையாடிய கைவிரல் சூடு, இன்னும் குளிராமல் இருப்பதை நீ அறிவாயா அர்ச்சனா?’ “என்ன… ஒண்ணும் பேசமாட்டேங்கிற…” என்று மௌனத்தைக் கலைத்தாள். “நீ வரமாட்டன்னு நினைச்சேன்…” “ஆக்சுவலா உன்னைப் பாக்கக்கூடாதுனுதான் நினைச்சுகிட்டு வந்தேன். ஆனா, இங்க வந்து கார்ல மண்டபத்தைத் தாண்டி போறப்பவே தவிச்சுப் போயிட்டேன். சரி… இந்த மூணு நாளைக்குள்ள மழை பெஞ்சா வருவோம். இல்லன்னா விட்டுடுவோம்ன்னு இருந்தேன். ஆனாலும் கண்ணு வானத்தைப் பாத்து ஏங்கிகிட்டேயிருந்துச்சு..!” “உன் ஹஸ்பெண்ட் வந்துருக்காரா?” என்றபடி நான் ஒரு தூணோரத்தில் அமர… அர்ச்சனா என் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

“இல்ல… அவருக்கு பாரிஸ்ல ஒரு கான்ஃபரன்ஸ். பசங்கள மட்டும் அழைச்சுட்டு வந்தேன். தெரியும்ல… எனக்கு ரெண்டு பையனுங்க…” “ம்… ஜோதி சொன்னா. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு…” என்ற நான் சில வினாடிகள் இடைவெளிவிட்டு, “அப்புறம் அர்ச்சனா… லைஃபெல்லாம் எப்படிப் போகுது?” என்றேன். “ம்… போவுது. உன்னைப் பார்க்கப் பார்க்க கில்ட்டியா இருக்கு. காதலிக்கிறப்ப என்னென்னவோ பேசினேன். எங்க வீட்டுல எதிர்த்தவுடனே உன்னை அம்போன்னு விட்டுட்டு, வேற ஒருத்தரக் கல்யாணம் பண்ணிகிட்டேன். என் மேல இன்னும் உனக்கு வெறுப்பிருக்கா அருண்?” சில வினாடிகள் அவளை உற்றுப் பார்த்த நான், “அர்ச்சனா… நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கலன்னாலும், அந்தக் காதல்ல எந்த பொய்யும் கிடையாது. அதனால உன் மேல வெறுப்புல்லாம் ஒண்ணுமில்ல.

கொஞ்சம் வருத்தம்தான். இந்தியா மாதிரியான சாதி, மத, அந்தஸ்து வித்தியாசம் பாக்கிற தேசத்துல, காதல்ங்கிறது பெரும்பாலான பேருக்கு இங்க வெறும் கனவுதான். ஆனா, உனக்கு கல்யாணமாயி சரியா நாலு மாசத்துல எனக்கு கவர்மென்ட் வேலை கிடைச்சிடுச்சு. அப்பதான் நீ ஒரு ஆறு மாசம் காத்திருந்தாக் கூட நம்ம ஒண்ணு சேந்திருக்கலாமேன்னு தோணுச்சு. சரி விடு. என்ன பேசினாலும் நடந்தத எல்லாம் மாத்திட முடியுமா என்ன?” “என்னை எப்பவாவது நினைச்சுப்பியா?” “ம்… மிக்ஸி ஓடற சத்தம், வாஷிங் மெஷின் ஓடற சத்தத்துக்கு நடுவுல ஹிந்துஸ்தானி ம்யூசிக் கேட்கிற மாதிரி, அப்பப்ப உன்னை நினைச்சுப்பேன்.

நீ?” “ம். டிவில ‘செவன் ஜி ரெயின்போ காலனி’ பாட்டு போட்டா உயிர் போயிட்டு, உயிர் வந்துடும். ‘நினைத்து நினைத்துப் பார்த்தால்…’ல ஒரு லைன் வரும் பாரு… அதைக் கேட்டன்னா, வீட்டுல யாருமில்லன்னா கண்ணு கலங்கிடும்…” “என்ன லைன்?” என்ற நான், “‘தோளில் சாய்ந்து கதைகள் பேச… நமது விதியில் இல்லை…’ சரியா?” என்றேன். “எப்படி கரெக்டாச் சொல்ற? உனக்கும் கண்ணு கலங்குமா?” “கலங்காது. அந்த லைன கேக்குறப்ப உன்ன நினைச்சுக்குவேன்…” “அதானே பாத்தேன். இத்தனை வருஷம் கழிச்சு என்னைப் பாக்குற… கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வந்துச்சா? நான் என்னல்லாம் நினைச்சுகிட்டு வந்தேன் தெரியுமா? என்னைப் பாத்தவுடனே நீ ஓன்னு கதறிக் கதறி அழுவ.

நானும் உன்னைக் கட்டிப்பிடிச்சுகிட்டு அழலாம்னு வந்தேன். நீ என்னன்னா என்னைப் பாத்தவுடனே, டாக்டர் பேஷண்ட்கிட்ட கேக்குற மாதிரி…” என்றவள் சட்டென்று குரலை மாற்றி நான் பேசியதுபோல், “அர்ச்சனா… எப்படி இருக்க?” என்று உற்சாகமாக நடித்துக் காட்டினாள். தொடர்ந்து அர்ச்சனா எங்கள் இப்போதைய நிலை மறந்து, அந்த காதல் காலத்தில் இருப்பது போல் என் இடது கை மோதிர விரலைப் பிடித்து சொடக்கெடுக்க முயற்சித்தபடி, “அட… அழக் கூட வேணாம். ரொமாண்டிக்கா ஒரு லுக்காச்சும் விடலாம்ல்ல? என்னடா… சொடக்கே வரமாட்டேங்குது…” என்றபடி என் முகத்தைப் பார்த்தாள். ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அவளுக்கு, தான் பழைய அர்ச்சனா இல்லை என்பது ஞாபகத்துக்கு வர…. “ஸாரி… நான் பழைய நினைப்புல…. பழக்க தோஷத்துல…” என்று கையைப் பின்னிக்கிழுக்க… நான் அவள் கைவிரல் நகங்களைப் பார்த்தேன். அப்படியே பிடித்திழுத்து, அந்த நகங்களைக் கடித்துக்கொண்டே அவளிடம் பேசவேண்டும் என்ற ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். சில வினாடிகள் மழையில் நனையும் எதிர்க்கரையைப் பார்த்துக்கொண்டிருந்தவள், “இப்ப மூங்கில் தோட்டம்ல்லாம் இல்லையா?” என்றாள். “ம்ஹும். மூங்கில் தோட்டம் இஞ்சினியரிங் காலேஜ் ஆயிடுச்சு. காவிரிக் கரை குறுகிடுச்சு. வருஷத்துல ஆறு மாசம் தண்ணி ஓடினாலே பெருசு. அரசமரத்தடி படித்துறைய இடிச்சுட்டாங்க.

பிள்ளையார் கோயில் படித்துறைல இப்ப பிள்ளையார் கிடையாது. உன்னோட சேர்ந்து எல்லாம் போச்சு. ம்…” என்று பெருமூச்சுவிட்ட நான், “ஒண்ணு மட்டும் இருக்கு…” என்று ஜெர்கினுக்குள் கையை விட்டு அந்த ஃபோட்டோவை எடுத்தேன். “ஏய்…. என்னை மண்டபத்துல ஃபர்ஸ்ட் டைம் எடுத்த போட்டோவா?” என்ற அர்ச்சனாவின் கண்களில் அப்படி ஒரு வெளிச்சம். வேகமாக நெருங்கி ஃபோட்டோவைப் பார்த்தாள். அவளருகில் நெருங்கி அமர்ந்தபடி நானும் போட்டோவைப் பார்த்தேன். திரும்ப என்னிடம் கொடுத்தவள், “எப்படி உன் ஒய்ஃப் கண்ணுல படாம வச்சிருக்க?” என்றாள். “ஆபீஸ்ல வச்சுருக்கேன்…” “ஏய்… நான் உன் ஒய்ஃப பாத்ததில்ல.

அவங்க போட்டோ இருக்கா?” “மொபைல்ல இருக்கு….” என்ற நான் மொபைல் கேலரியில் இருந்த என் மனைவியின் படத்தைக் காண்பித்தேன். “ஏய்…. செம அழகா இருக்காங்கப்பா… என்னை விட அழகில்ல?” என்று கேட்க… நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. தொடர்ந்து அவள், “உனக்கு உன் ஒய்ஃப பிடிக்குமா?” என்றாள். “ம்… ரொம்பப் பிடிக்கும். கல்யாணமாயி ஆறு வருஷங்களாகுது. இன்னும் அவளப் பத்தி காதல் கவிதைல்லாம் எழுதுவேன்…” என்றவுடன் அவள் முகம் லேசாக மாறியது. “என்னை ரொம்பப் பிடிக்குமா? அவங்கள ரொம்பப் பிடிக்குமா?” என்றாள். லேசாகச் சிரித்த நான், “எனக்கு…. ஜெயமோகனையும் பிடிக்கும்.

சாருநிவேதிதாவையும் பிடிக்கும்…” என்று கூற அவள் குழந்தை போல் அப்பாவித்தனமாகக் கண்களை வைத்துக்கொண்டு, “யாரு அவங்கல்லாம்?” என்று அழகாகக் கேட்டபோது, எனக்கு ஜெயமோகனையும், சாருநிவேதிதாவையும் விட அர்ச்சனாவை அவ்வளவு பிடித்துப்போயிற்று. “ம்… இந்தி எதிர்ப்பு போராட்டத்துல கலந்துகிட்டவங்க…” என்றேன் விளையாட்டாக. “இந்தி எதிர்ப்பு போராட்டம்ன்னா?” என்று அவள் தொடர்ந்து கேட்க… நான் சத்தமாகச் சிரித்தேன். “ஏன் சிரிக்குற?” “என் அழகிய மக்குப் பெண்ணே… நீ அப்படியே என் ஒய்ஃப் மாதிரியே இருக்க…” என்றேன். “இல்ல… உன் ஒய்ஃப்தான் என்னை மாதிரியே இருக்காங்க…” என்றவள் நான் சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென்று அழ ஆரம்பித்தாள்.

“ஏய்… என்னாச்சு?” அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் தொடர்ந்து அழுதாள். “என்ன இது… கண்ணத் துடைச்சிக்கோ…” “கர்ச்சீப் வச்சிருக்கியா?” என்று என் கர்ச்சீப்பைக் கேட்டு வாங்கி அவள் தன் கண்களைத் துடைத்துக்கொண்டபோது ஏனோ தெரியவில்லை சந்தோஷமாக இருந்தது. “ஏன்டா… நான் அழுவுறதப் பாக்குறப்ப கூட உனக்கு அழுகை வரலையா?” என்றாள் குழந்தை போல். சிரித்தேன். “வவ்வவ்வே…” என்று பழிப்புக் காட்டிய அர்ச்சனா, “கல்நெஞ்ச இரும்பு மனசுடா… உன்னைப் பாத்தது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா கல்யாணமாயி, ரெண்டு குழந்தைங்க பெத்துட்டு, இப்படி பாக்குறத நினைச்சா… மனசுக்குள்ள ஒரு குற்ற உணர்வு. உனக்கு?” “எனக்கும் கில்ட்டியாதான் இருக்கு…” பெருமூச்சுவிட்ட அர்ச்சனா தன் கையிலிருந்த வாட்ச்சைப் பார்த்தாள்.

“கிளம்புறேன். ஒன்னவர்ல வர்றேனு சொல்லிட்டு வந்துருக்கேன்…” என்றபடி எழ முயற்சிக்க, “ஒரு நிமிஷம்…” என்றேன். அவள் ‘என்ன?’ என்பது போல் என்னைப் பார்த்தாள். “தப்பா நினைக்கலன்னா, என் விரல்ல ஒரு சொடக்கெடுத்துட்டுப் போறியா?” என்று கேட்டதும் அவள் கண்களில் வெளிச்சம். என் முகத்தைப் பார்த்தபடி, எனது இடதுகை ஆட்காட்டி விரலில் சொடக்கெடுக்க முயற்சித்தாள். சொடக்கு வரவில்லை. அடுத்த விரல்… அடுத்த விரல்… சொடக்கு வரவேயில்லை. “என்னடா…” என்று சிணுங்கிய அர்ச்சனாவின் முகத்தில் ஏமாற்றம். “ரெண்டு பேரு கையும் மழைல ஈரமா இருக்குல்ல… அதான் வரமாட்டேங்குது.

நான் உன்கிட்ட பேசுறப்பல்லாம் ஒண்ணு பண்ணுவேனே… ஞாபகமிருக்கா?” “ம்….” என்று வெட்கப்பட்ட அர்ச்சனா தன் கைவிரல்களை நீட்டியபடி, “தில்லிலருந்து கிளம்பறப்ப நகத்த வெட்டணும்னு நினைச்சேன். ஆனா, உன்னப் பாத்தாலும் பாப்போம்னு கட் பண்ணல….” என்று கூறியபோது நான் அவள் கையைப் பிடித்து வேகமாக இழுக்க…. அவள் அப்படியே என் மடியில் சாய்ந்தாள். அவளை நிமிர்த்தி என் முழங்காலில் சாய்த்துக்கொண்டு அவள் கைவிரல் நகத்தைக் கடித்துத் துப்பினேன். நகத்துண்டு அவள் கன்னத்தில் விழ….. நான் அந்த நகத்துண்டை எடுப்பதற்காக அவள் கன்னத்தில் கைவைத்தபோது, அவள் தன் அழகிய அகன்ற கண்களால் உற்றுப் பார்த்தாள்.

அவள் நெற்றி வகிட்டிலிருந்த குங்குமம் மழை ஈரத்தில் பிசுபிசுவென்று இருந்தது. அதை நான் எனது விரலால் மூக்கு வழியாக இழுத்து… அவளின் கன்னத்துக்கு கொண்டு வந்து சுண்டு விரலால் சிவப்பாகக் கோலமிட்டேன். சில வினாடிகள் என்னைத் தாபத்துடன் பார்த்த அர்ச்சனா சட்டென்று எழுந்துகொண்டாள். “டைமாவுது. கிளம்புறேன். போறதுக்குள்ள ஒரு முறை சொடக்கு எடுத்துடுறேன்…” என்று என் கைவிரலில் சொடக்கு போட முயற்சித்தாள். சொடக்கு வரவில்லை. இருவரும் கைவிரல்களை நன்கு துடைத்துக் கொண்டோம். இப்போது அர்ச்சனா மீண்டும் முயற்சிக்க… சொடக்கு விழவேயில்லை. அர்ச்சனாவின் முகம் அழுவது போல் மாறியது. “ஏய்… லூசு… ஈரத்துல வரமாட்டேங்குது. அவ்வளவுதான். நீ கிளம்பு…” என்று எழுந்தேன்.

ஓரடி நடந்தவள் “கடைசியா ஒரு தடவ ட்ரை பண்ணலாம்…” என்று என் இடது கை நடுவிரலைப் பிடித்து, “புன்னைநல்லூர் மாரியம்மா தாயே… சொடக்கு விழணும்…” என்றபடி வலுவாக இழுத்தாள். டக்கென்று சொடக்கு சத்தம் கேட்க… அர்ச்சனாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். “கிளம்புறேன்…” என்று மண்டபத்திலிருந்து இறங்கிய அர்ச்சனா ஒரு வினாடி திரும்பிப் பார்த்தாள். பிறகு குடையை விரித்துக்கொண்டு வேகமாக பெய்துகொண்டிருந்த மழைக்கு நடுவே நடந்து சென்றாள். மழை இன்னும் அதிகமாகி, இப்போது மழைச்சத்தம் சீரான லயத்துடன் காதை நிரப்பியது. அவள் நடந்து புளியமரங்களைத் தாண்டி திரும்புவது வரை பார்த்துக்கொண்டே நின்றேன். அவள் பார்க்க ஆசைப்பட்ட கண்ணீர், இப்போது என் கண்களில் நிற்காமல் வழிந்துகொண்டேயிருந்தது.

– மே 2018

Print Friendly, PDF & Email

1 thought on “மழைச் சத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *