ஒரு ஆக்ரோஷமான மோதல்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 10,675 
 

சீதா பாட்டிக்கு ரத்தம் கொதித்தது.

அப்புசாமியோ அவள் எதிரே அமைதியாக நின்று கை கட்டிக்கொண்டு, “தப்பென்ன?” என்றார்.

“ஆர் யூ நாட் அஷேம்ட் – முன்பின் தெரியாதவர்கள் வீட்டில் போய்ச் சப்பாத்தி சாப்பிட?”

“அந்தக் கிழவியைத்தான் எனக்குத் தெரியாதே தவிர, அவள் பேரனை எனக்குத் தெரியுமே. அவன்தான் கையைப் பிடித்து இழுக்காத குறையாக டிபன் சாப்பிட்டுப் போகணும் சார் என்று கட்டாயப்படுத்தினான். சாப்பிட்டேன்.”

“வாட் பிஸினஸ் உங்களுக்கு, அந்த வீட்டுப் படி ஏற?”

“பூ! பூ பிஸினஸ்தான். அன்றைக்கு மார்க்கெட்டுக்கு விரட்டினாயல்லவா? என்னால் நடக்க முடியவில்லை. பசிக் களைப்பு என்றால் விடுவாயா? கோடி வீட்டுக்குப் போனேன் ‘இந்தாடா துரை! எனக்கு ஒரு உதவி செய்யணுமே?’ என்று கேட்டேன். சைக்கிளில் போய் வாங்கி வந்து கொடுத்தான். அவன் வருகிற வரையில் உட்கார்ந்திருந்தேனா…அங்கே உன்மாதிரி ஒரு கிழவி…கீதா என்று பேர்…”

“சீ! வாயைக் கழுவுங்கள் டெட்டால் போட்டு. என் மாதிரியா அவள்?”

“சரி. உன் மாதிரி இல்லை. உன்னைவிட உயரம், உன்னைவிடக் கொஞ்சம் நிறம். உன்னைவிட ஒல்லி என்று வைத்துக் கொள்ளேன்.”

“ஸ்டாப்பிட்! ஸ்டாப்பிட்! ஐ கான்ட் பேர் இட்!” என்று சீதாப்பாட்டி வீரிட்டாள்.

அப்புசாமி விடவில்லை. கீதாப்பாட்டியின் சப்பாத்தியை விவரமாக வர்ணித்தார். வானளாவப் புகழ்ந்தார். அதன் முறுக்கேறிய பொன்னிறத் தகதகப்பு, நடுநடுவே வெற்றி வாகை சூடிய வீரர்களுக்குள்ள வீரத் தழும்புகள் போல் நன்றாக வெந்த அடையாளங்கள், நாசியைச் சுண்டி இழுக்கும் நறுமணம்-இவற்றைப்பற்றி நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு அளந்ததோடு நிற்கவில்லை அப்புசாமி. “நீயும் சப்பாத்தி என்று போடுகிறாயே!” என்று இகழ்ச்சியாக வேறு பேசிவிட்டார்.

அப்புசாமி யாரைப் புகழ்ந்திருந்தாலும் சீதாப்பாட்டியால் சகித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் அந்தப் பட்டிக்காட்டுக் கண்ட்ரி புரூட்டான கீதாவை…சீதாப்பாட்டியால் பொறுக்க முடியவில்லை.

எப்படிப் பொறுக்க முடியும்? போனவாரம் நிகழ்ந்த அந்தச் சம்பவம் சீதாப்பாட்டியின் நினைவில் அவ்வளவு பசுமையாக – அல்லது கருமையாக – தங்கியிருந்தபோது…

பாட்டிகள் கழகத்துக்குப் புறப்பட்ட சீதாப்பாட்டி தெருக்கோடியை அடைந்தபோது, எதிரே விதவையான ஓர் அம்மாள் கையில் குடத்துடனும் ஈரப் புட¨வையுடனும் எதிர்பட்டாள்.

அவளைச் சீதாப்பாட்டி அதுநாள்வரை பார்த்ததில்லை. அப்புறம்தான் சட்டென்று ஞாபகம் வந்தது. சில நாட்களுக்கு முன்னதாக அந்தத் தெருவுக்குப் புதிதாக ஒரு கிழவி குடிவந்த விஷயம் லேசுபாசாக அவள் காதில் விழுந்ததிருந்தது. புதிதாகத் தெருவுக்குக் குடிவந்த கிழவியைச் சந்திக்க வேண்டுமென்றோ, அவள் யார் எவர் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றோ சீதாப்பாட்டி எண்ணவில்லை. அது அவசியம் என்றும் அவளுக்குத் தோன்றவில்லை.

ஹாண்ட் பாக்குடன், கையில் லேடீஸ் வாட்ச்சுடன், நெற்றியில் ·பிளாரசென்ட் குங்குமத்துடன் விரைந்து சென்றுகொண்டிருந்த சீதாப்பாட்டி, எதிரே குடத்துடன் வந்த புதிய பாட்டிக்குச் சற்று ஒதுங்கி வழிவிட்டாள்.

சோதனையாக, தெருவில் வைக்கோற் போர் வண்டி நிறுத்தப்பட்டு தெருவின் அகலத்தை அடைத்துக் கொண்டிருந்தது.

‘தளக், சளக்’ என்று நீர் தளும்பிக் கொண்டிருந்த குடத்துடன் எதிரே வந்த பாட்டி அம்மாள், சீதாப்பாட்டி ஒதுங்கி வினயத்துடன் விட்ட வழியில் செல்லவில்லை. “கொஞ்சம் அப்படியே பின்னுக்குப் போ. குடத்துடன் ஆள் வந்து கொண்டிருக்கிறது தெரியவில்லை?” என்று கேட்டாள். 

சீதாப்பாட்டிக்கு ஷாக் அடித்த மாதிரி இருந்தது. போனால் போகிறதென்று ஒதுங்கி வழிவிட்டால் அதிகாரமா?

தன் எரிச்சலை உடனே மறந்து சீதாப்பாட்டி, தனது டிப்ளமாடிக் புன்னகையுடன், “ஐம் சாரி…யு கான் கம் நெள…” என்று சொல்லியவாறு பின்னால் நகர்ந்து கொண்டாள்.

“என்ன சொன்னே? உரக்கச் சொல்லு,” என்று குடத்துடன் சீதாப்பாட்டியை நெருங்கி வந்தாள் புதுக் கிழவி.

அவள் ஒல்லியாக விடுவிடுவென்று வளர்ந்திருந்தாள். அவளது கன்னங்கள் ஒட்டியிருந்தன. முகத்தில், கண்களில், பேச்சில் ஒரே கடுகடுப்பு.

முன்பின் அறிமுகமில்லாதவள், ஒரு ‘சி’ வகுப்புப் பட்டிக்காட்டைச் சேர்ந்த கிழவி மாதிரி பேசியது சீதாப்பாட்டிக்கு ஆத்திரமூட்டியது. ‘வா’ ‘போ’ ‘நீ’ என்று இவள் பாட்டுக்குப் பேசுகிறாளே என்று எரிச்சலாயிருந்தது.

“நியூ கமரோ?” என்று சீதாப்பாட்டி, தன்னிடம் நெருங்கிய கிழவியைப் பார்த்தாள்.

புதுக் கிழவியும் சீதாப்பாட்டியைத் தலையிலிருந்து கால் வரை கொஞ்சம் கொஞ்மாகப் பரிசோதித்தாள்.

கடைசியில் சீதாப்பாட்டியை ‘என்ன சேதி?’ என்று கேட்க ஒருத்தி வந்து சேர்ந்தாள். அவள் பெயர், கீதாப்பாட்டி. முதல் சந்திப்பிலேயே…

“என்ன? நீங்கள் என்னை ‘ஹிப்னடைஸ்’ பண்ணி விடுவீர்கள் போலிருக்கிறதே?” என்றாள் சீதாப்பாட்டி, லேசாகச் சிரித்து.

“நான் ஏண்டி உன்னை ‘நைஸ்’ பண்றேன்? எனக்கென்ன தலையெழுத்து? நீ யாரோ, எவளோ. ஏது, இந்த ஊர், மகாப் பொல்லாத ஊராயிருக்கும் போலிருக்கிறதே! நான் பாட்டுக்குத் தேமே என்று நீர் எடுத்துக் கொண்டு வருகிறேன். வழியைக் கட்டாதேடி என்றால், நைஸ் பண்ணுகிறேனாமா நைஸ்?” படபடவென்று பொரிந்து கொட்டினாள் புதுக் கிழவி, குடத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு.

ஓகோ! இது, ‘வந்தது சண்டை, இறக்கடி கூடையை டைப் போலிருக்கிறது!’ என்று சீதாப்பாட்டி மனத்துக்குள் நினைத்துக்கொண்டு, “ஸாரி பாட்டி, ஐ டின்ட் டாக் எனி திங் ராங்! நீங்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? ப்ளட் ப்ரெஷர் பேஷண்ட்டோ? ட்ரீட்மெட்ண்டுக்காக வந்திருக்கிறீர்களோ?” என்றாள். 
 
“அடி! உன் நாக்கிலே கட்டைப் புல்லைக் கொளுத்திப்போட! என்னென்னவோ இங்கிலீஷ்லே என்னைத் திட்டுகிறாயா? தொண்டுக் கிழவியாட்டம் இருந்துகொண்டு, கையிலே என்னடி ஜம்பப் பை, சிறிசுகள் மாதிரி? பட்டணத்திலே சினிமாப் பெண்கள்தான் சிங்காரித்துக் கொண்டு பையும் கையுமாய்ச் சுற்றுவார்கள்னு கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் பேப்பர் படிக்கிறவள்தான் தெரிஞ்சுக்கோ. அவ்வளவு நாகரிகமில்லாதவள்னு நினைத்துக் கொண்டு ஓட்டாதேடி வாயை!”

சீதாப்பாட்டிக்குச் சுரீரென்று கோபம் வந்துவிட்டது. “ஸ்டுப்பிட்! கண்ட்ரி! வழியை விடு!” என்று சொல்லி விட்டு விர்ரென்று போய்விட்டாள்.

அப்பேர்ப்பட்ட பண்பாடற்ற போக்கிரியின் வீட்டில் அப்புசாமி சாப்பிட்டு வந்திருக்கிறார்! ‘ஆஹா’ சப்பாத்தி என்றால் அதுவல்லவோ சப்பாத்தி!’ என்று கூத்தாடுகிறார்!

சீதாப்பாட்டி யோசனை செய்தாள். அப்புசாமியைக் கோபித்துப் பயனில்லை. விஷயம், சப்பாத்தியில் இருக்கிறது. தான் போடும் சப்பாத்தியின் தரத்தை உயர்த்தி விட்டால், எல்லாம் சரியாகப் போயிவிடும், என்று பட்டது சீதாப்பாட்டிக்கு.

பா. மு. கழக செயற்குழுவின் அதி அவசரக் கூட்டம் சீதாப்பாட்டியின் இல்லத்தில் இரவு சுமார் பத்தரை மணி அளவில் திடுமென்று கூடியது.

சீதாப்பாட்டி உணர்ச்சி வசப்பட்டுப் போசினாள். “ஆனரபிள் மெம்பர்ஸ் அ·ப் தி பா. மு. க.! இந்தக் கூட்டம் ப்யூர்லி எனக்காகக் கூடிய பர்ஸனல் கூட்டம் என்று கருதி உங்கள் அனைவரையும் வெல்கம் செய்கிறேன். நமது கழகம் வேரியஸ் துறைகளில் முன்னேறிக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு ஆஸ்பெக்ட்டில் லேக்கிங்காக இருக்கிறது என்று எண்ணுகிறேன். அது என்ன என்று உங்களக்கே தெரியும். ஆர்ட் அ·ப் குக்கிங்! சமையல் கலை! சமையல் கலையை நாம் டச் செய்திருக்கிறோமே தவிர, நாம் அந்த ஆர்ட்டின் ஹார்ட்டைப் பிடித்ததில்லை. எவ்வித ரிஸர்ச்சுகளும் நடத்தியதில்லை. ஆகவே, ஒவ்வொரு மெம்பரும், தான் எந்த டிஷ், அல்லது எந்தப் பலகார வகையில் எக்ஸ்பர்ட்டோ, அந்தப் பலகார முறையை இங்கே வாரா வாரம் விவரிக்க வேண்டியது. முதலில் சப்பாத்தியை எடுத்துக் கொள்வோம். ‘ஹெள டு மேக் பெட்டர் சப்பாத்தீஸ்’ என்பது பற்றி அடுத்த சனிக்கிழமை யாராவது பேசட்டம். பாருக்கு நன்றாகச் சப்பாத்திபோட வரும்?”

‘எனக்கு வராது, உனக்கு வராது,’ என்று ஒவ்வொருவராகப் பின்வாங்க ஆரம்பித்தார்கள்.

சீதாப்பாட்டிக்கு உற்சாகம் குன்றிற்று. கடைசியாக, காமு என்ற ஓர் உறுப்பினர், “மெம்பராக இருக்க வேண்டும் என்று கட்டாயமா, என்ன? எங்கள் மாமியாருக்கு நாத்தனார் ஒருவர் புதிதாக வந்திருக்கிறார். அவர் சப்பாத்தியில் எக்ஸ்பர்ட். அவரைக் கூப்பிட்டுப் பேசச் சொன்னால் போயிற்று,” என்று யோசனை சொன்னதும், “குட் ஐடியா!” என்று யாவரும் ஆமோதித்தனர்.

பா. மு. கழக சிறப்புக் கூட்டம் திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் சீதாப்பாட்டியோ, தலைவர் ஆசனத்தில் இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள். அவளது துக்கத்துக்குக் காரணம், அவளுக்கு நாலடி தள்ளி நிறுத்தப்பட்ருந்த கரும்பலகையில், வண்ணச் சுண்ணாம்புக் கட்டியால் அழகாக எழுதப்பட்டிருந்தது.

பா. மு. கழகச் சிறப்புக் கூட்டம்

பொருள் : அருமையான சப்பாத்தி

பேச்சாளர் : மாது ஸ்ரீ கீதா.

செயற்குழுக் கூட்டத்தில் காமுப்பாட்டியால் தரப்பட்ட யோசனைக்கு ‘ஓ. கே.’ சொன்னபோது. காமுப்பாட்டியின் மாமியாருக்கு நாத்தனாரும், தனது வைரியான கீதாப்பாட்டியும் ஒருத்தியே என்று சீதாப்பாட்டிக்குத் தெரியுமா என்ன? இப்போது நிலைமை மிஞ்சிப் போய்விட்டது. நடப்பது நடக்கட்டும் என்று அவள் செயலற்று உட்கார்ந்து விட்டாள்.

மேடைக்கு வந்த பேச்சாளி தன்னை யாரும் வரவேற்கும் வரை காத்திருக்கவில்லை. “யாருடியம்மா என்னை இங்கே பேச வரவேண்டும்ணு தொந்தரவு செய்தது? இப்படி நின்று பேசட்டுமா? அந்தக் கரெண்ட்டைத் தூக்கி ஒருபுறம் போடுங்க. அப்புறம்தான் பேசுவேன்… அடடே! அடி சீதா! நீ எங்கேடி இங்கே வந்து மொட்டு மொட்டென்று உட்கார்ந்திருக்கிறே, நாற்காலியில் காலைப் போட்டுக்கொண்டு! நீ என்னத்தைப் பத்திப் பேசப் போறே? உப்புமா பற்றியா? உனக்கு என்ன இழவு தெரியும்?”

“உஸ்ஸ்!” என்று சீதாப்பாட்டி மேஜையைத் தட்டினாள்.

கீதாப்பாட்டியும் உடனே மேஜையை இரண்டுதரம் பலமாகத் தட்டி, “உனக்குத்தான் தட்டிப்பேசத் தெரியும் என்று நினைத்துக் கொள்ளாதே. ஹை கோர்ட் இல்லே, பார்லிமெண்ட இல்லே, அதுக்கும் பெரிய ஸ்மால்காஸ் கோர்ட்லே கூடப் பேசுவேண்டி?” என்றாள்.

கூறியிருந்த பா. மு. கழக அங்கத்தினர்கள் கசமுசத்தனர். கீதாப்பாட்டியின் அநாகரிகத்தை அங்கத்தினர்களே ஆட்சேபித்ததில் சீதாப்பாட்டிக்கு வெகுதிருப்தி.

எழுந்து, “ஸைலன்ஸ்! ப்ளீஸ்! இப்போது நமது மதிப்புக்குரிய பேச்சாளர் திருமதி கீதாப்பாட்டி…” என்று அறிமுகப்படுத்துவதற்குள், ” நீ பெரிய குமாரி! உன் வாயாலே என்னைப் பாட்டி என்று சொல்லாதேடி. இப்படி நிற்கிறேனே தவிர, உன்னைவிடப் பத்து வயசு இளசா இருப்பேன்,” என்று கீதாப்பாட்டி இடைமறித்துச் சொல்லிவிட்டு, “என்னை இவள் வந்து பேசக் கூப்பிட வரவில்லை. அதனாலே, நான் இவள் சொல்லாமலே பேசறேன். இந்தக் கரெண்ட்டை மட்டும் யாராவது ஒதுப்புறமாய் தள்ளி வையுங்கள். வாயில் கியில் நெருப்புப் பற்ற வைத்துவிட்ப் போகிறது. எனக்கு இந்த நாகரீக இழவெல்லாம் பிடிக்காது,” என்று மைக்கை அப்புறப்படுத்த மீண்டும் வற்புறுத்தவும், சீதாப்பாட்டி, “ரிமூவ். இட்,” என்றாள், காரியதரிசியிடம்.

அதற்கு வியாக்யாதா இரண்டு அர்த்தம் செய்கிறார். ‘இட்’ என்றதை மைக் என்றும் கொள்ளலாம். பேச்சாளர் என்று கொள்ளலாம்.

கீதாப்பாட்டி சீதாப்பாட்டியை ஒருமுறை முறைத்து, “ஒரு நாற்காலி போடச் சொல்லேண்டி எனக்கும்?” என்றாள்.

“எஸ்…நானே போடுகிறேன்,” என்று சீதாப்பாட்டி தானே நாற்காலி எடுத்துப் போட்டாள்.

இதற்குள் கூட்டத்தில், “வி டோன்ட் வான்ட் திஸ் அரகண்ட ஸ்பீக்கர்! ஸ்பீச் வேண்டாம். போ…” என்ற சிலர் குரல் எழுப்பினர்.

கீதாப்பாட்டி எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் ஆரம்பித்து விட்டாள் பேச்சை:

“ஏண்டி, பரக்காவெட்டிகளா! கூப்பிடறதைக் கூப்பிட்டுவிட்டு, எல்லோருமாப் பனங்காட்டு நரி மாதிரி ஊளையாடி போடுகிறீர்கள்? நீங்கள் சப்பாத்தி பண்ணித் தின்னா என்ன, நாசமாய்ப் போனா எனக்கென்ன? என்னவோ பட்டணத்துப் பவிஷ¤களுக்கு ஒரு இழவும் தெரியாதே, சொல்லித்தா வந்து என்று கெஞ்சினாளே ஒரு கிழவி என்று, இங்கே நாலு வார்த்தை உங்களிடம் பேசலாம்ணு வந்தா என்னவோ கூச்சல் போடறீர்களோ?”

“நீங்கள் பேசுங்கள்….பரவாயில்லை,” என்று எழுந்து கூறிய சீதாப்பாட்டி, கூட்டத்தை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டாள். கப்சிப் என்று கூட்டம் அடங்கியது.

“ஏன், இவள் சொன்னாத்தான் இனிக்கிறதா?” என்று கீதாப்பாட்டி காட்டமாகக் கேட்டுவிட்டு, “வந்ததுக்கு சொல்லிவிட்டு நான் போறேன். கேட்டா கேளுங்கள் விட்டா விடுங்கள். சப்பாத்திங்கறதுக்கு விஷய மெல்லாம் கோதுமைலே இருக்கு. சப்பாத்தி வாசனையாக இல்லை, வாசனையாக இல்லைனா எப்படி இருக்கும். பட்டணத்துப் பொணங்களுக்குச் சம்பாக் கோதுமை நன்றாகக் கிடைக்குமே! யாருக்கும் அக்கறை இருந்தாத்தானே? வரட்டி தட்டுகிற மாதிரி சப்பாத்தியைத் தட்டி வீட்டுக்காரனுக்குப் போடுகிறீர்கள். அது மகாப் பாவம். நரகத்திலே போய் வயிற்றுவலிப் படுவீர்கள். சப்பாத்தி நன்றாக இருக்கணும்னு….” என்று ஆரம்பித்துக் கிடுகிடுவென்று அரை மணி நேரம் பொழிந்து தள்ளிவிட்டாள்.

படபடவென்று கைதட்டு கட்டிடத்தைப் பிய்த்து வாங்கியது. கீதாப்பாட்டியின் மேலிருந்த வெறுப்பெல்லாம் அவளது சமையல் அறிவைக் கண்டதும் கழகத்தினருக்கு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

“பிய்த்துக் கட்டிவிட்டாளே, கிழவி.”

“ரொம்ப விஷயம் தெரிந்தவள் போலிருக்கிறது.”

“தெளஸண்ட் அண்ட் எயிட் வெரைடீஸ் தெரியும் என்கிறாளே…”

“ரெகுலர் லெக்சர்ஸ் வைத்துக்கொள்ள வேண்டியதுதான்…”

“நாட்டுப்புறமானாலும் இவளிடம் நாம் நிறையக் கற்றுக்கொள்ள விஷயம் வைத்திருக்கிறாள்.”

சீதாப்பாட்டியின் காதில் காரியதரிசினி ஒருபுறமும், பொருளாளினி ஒருபுறமும் என்னவோ ஓதினர்.

சீதாப்பாட்டி பொறுப்பு மிகுந்த கவலையுடன், “இவ்வளவு ஹேஸ்ட்டியா முடிவெடுக்க வேண்டாமே? நியூகமர். நாலையும் யோசிக்க வேண்டும்” என்றாள்.

காரியதரிசி, “மெஜாரிடி மெம்பர்ஸ் இதே மாதிரிதான் அபிப்பிராயப்படுகிறார்கள். அந்த அம்மாளுக்கும் நமது சங்கத்தில் அங்கத்தினளாகச் சேரணும் என்று ஆசை இருக்கும் போலத்தான் இருக்கிறது. நீங்களே வந்து ஒரு வார்த்தை கேட்டீர்களானால் சேர்ந்து விடுவார்கள். அதை எதிர்பார்க்கிறாள் போலிருக்கிறது.”

சீதாப்பாட்டி பெருமூச்செறிந்தாள். “சரி. மெஜாரிடி அப்படி டிஸைட் செய்தால் எனக்கு நோ அப்ஜக்ஷன்!”

புதுமுகம் கீதாப்பாட்டி கழகத்தில் புது அங்கத்தினராகச் சேர்க்கப் பட்டாள்.

அன்றிரவு, “சீதே! ஏன் என்னவோ மாதிரி இருக்கிறே?” என்று அப்புசாமி மிகக் கனிவுடன் கேட்டார்.

“மைன்ட் யுவர் பிஸினஸ்!” என்று சீதாப்பாட்டி சள்ளென்று எரிந்து விழுந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *