ஒரு மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 4,984 
 

கையில் ஒரு நல்ல நாவல் – முழு நிசப்தம். ஆனாலும் வாசிக்கின்ற எண்ணம் துளிர் விடவேயில்லை. சகஜம் போல் அதுக்கு தீர்வு பார்க் தான்.

5 நிமிஷங்கள் – ஒரு டீ ஷெர்ட் – ஒரு ஜீன்ஸ் – குடை (மழை சேர்த்தாலும் என்கிற ஐயம்) – சப்பாத்து – புஸ்தகம் – புறப்பட்டாச்சு.

பார்க்கினுள் எவருமில்லை. ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது…’ என்று பாடத் தோன்றியது. ஒவ்வோரு மரங்களின் சஞ்சலங்களும் மாதரின் வதனத்தைக் கூட நாணச் செய்யும். வண்ண வண்ணப் பூக்களின் நெளிவுகள் பெண்டிரின் நெளிவுகளை பொழிவிழக்கச் செய்ய வல்லன.

இருப்பதற்கு நல்ல பென்ச் தேடுகையில் கண்ணில் ஒன்று அகப்பட்டது.

அமானுஷ்யமாக ஒன்று. அமானுஷ்யமா? அதிர்ஷ்டமா?

மஞ்சள் சாயம் பூசிய வான் – மத்தியில் மரம் – பின்னே…. அது இருந்தது.

(இந்த மரம் முக்கியம். பின்னர் கதையில் முக்கிய புள்ளியாகும்.)

நெருங்கினேன்.

நெருங்க நெருங்க நிறம் தெளிவானது – மங்கிய கபிலம். ஆனால் பேய் ‘வைட் இல்லாட்டி பிளாக். அதெண்ண கபிலம்?’ என்று மனதில் ஒரு கேள்வி. ‘ஏன் அருகுகிறேன்?’ இன்னுமொன்று.

இன்னும் நெருங்கினேன் – இன்னும் தெளிவு!

கூர்மையான பாகங்கள்! – பேய்க்கு நிகமுண்டோ?

இந்நேரம் வாயில் ‘காக்க காக்க…’ வாயில் தன்பாட்டிலேயே நுழைந்தது. சரி, பிறகேன் நெருங்குகிறேன்?

விடையறியேன் – மனித கேள்வி ஞானமாக இருக்கலாம்.

முழுத்தெளிவு! அஃது ஓர் விமானம்!

தன் புலம்பல், “அட, கரள் பிடிச்ச ப்ளேனுக்கு தான் இவ்வளவு நடுக்கமா? கொஞ்ச நேரம் போயிருந்தா அநியாயமா ஜீன்ஸ் ஈரமாயிருக்கும்”

இங்ஙனம் பயம் ஓடிவிட்டது. எனக்குள் இருந்த ஜேம்ஸ் பான்டை வெளிக் கொணர்ந்தேன். அது இருவர் இருக்கத்தக்க விமானம், அமேரிக்கா இலட்சணை பொறித்திருந்தது. ஆனால் வருஷம் நம்பும் எல்லையை தாண்டியிருந்தது – 1912 என்று பூச்சிடப்பட்டிருந்தது. மொத்தமாக கரள் பிடிக்கவில்லை. கதவு இருந்தது.

இருந்தால் திறக்கனுமில்லையா? திறந்தேன்.

அட! உள்ளே கிஃப்ட் பொக்ஸ்! அதுவும் புதிய உரை – பிங்க் கலர் உரை! அதன்மீது நீல ரிப்பன். விமானத்தினுள்ளே இருந்த சதா பாகங்களிலும் தூசி ஆனால் பரிசுப் பெட்டி தூய்மை – செந்தமிழில் வெரி க்ளீன்.

எடுத்து பிய்ப்போம் – ‘இல்லை. நில்லு! எத்தன படம் பாத்திருக்காய்? இதுக்குள்ள என்ன வேண்டாலும் ஒளிஞ்சிருக்கலாம். மயக்க ஸ்ப்ரே? முடியும். வெடிகுண்டு? முடியும். திறக்காதே’ மனதின் கதறல் தடுத்தது.

திரும்பவும் ஏறிவிட்டது அச்சம்! ஜேம்ஸ் பாண்ட்டுக்கே ரோல்ஸ் ரோயிஸ் டிக்கியில் டெட் பாடி இருந்தபோது பயம் வந்தது போல் என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால் அதில்,

சபம் – இதில் பெட்டி,அதுவும் அழகான வர்ணவுரை போட்ட பரிசுப் பெட்டி!

சரி எதற்கு வம்பு? என்றவாறே ‘காக்க காக்க’ பாடிக்கொண்டு பின்னே கழுத்தை திருப்பாது ஒவ்வோர் அடியாக பின்னெடுத்து வைத்தேன். பின்னின்ற மரமில்லையா? அதை பிடிக்க கையை நீட்டினான். நீளம் பற்றவில்லை. இன்னும் சில அடிகள் பின்வைத்தேன். இன்னும் பற்றவில்லை. கடைசியில் நான் முற்றாக வெளிவந்தும் நீளம் எட்டவில்லை.

கழுத்தை திருப்பினேன் – மரத்தை காணவில்லை!

“ஆஆஆ… அம்மா! மரத்த காணல. எப்பா இது 100% பேய்தான். அம்மா!”

அப்படியே நிலத்தில் குந்திவிட்டேன். பார்க்கை விட்டு வெளியேற வழி தெரியும் ஆனால் போகிற வழியில் ஏதாவது நிற்குமோ என்று ஐயம். அதனால் அவ்விடத்திலேயே குந்தியிருந்து புலம்புதல் தவிர எனக்கு வேறேதும் புத்திக்கெட்டவில்லை.

5 நிமிஷம் தேய்ந்த டேப் மாதிரி அதே கதறலை ரிப்பீட் செய்தேன். பிறகு கேள்விப்புத்தி விடவில்லை. ‘ஐஞ்சு,நாலரை,நாலு,மூனரை…,மூண்டு…,இரண்டரை, ரெண்…டு, ஒன்னு புள்ளி ஒம்போது, ஒன்னு புள்ளி எட்டு… முட்டை’ என்றவாறு எண்ணி ஒரேயடியாக கண்ணை மூடிக்கொண்டு சின்ன பையன் மாதிரி பாழைடைந்த ப்ளேனுக்குள்ளே பாய்ந்து அந்த பெட்டியை ஒரே அடியாக திறந்து விட்டேன்.

ஆச்சரியம்! புஸ்தகம் இருந்தது! அதுவும் நான் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வாங்கிய இந்திராவின் அதே புத்தகம் ஆனால் இங்கே அது மட்டுமில்லை. அதன் கீழ் இன்னும் இரண்டு புத்தகங்கள், ஒரே எழுத்தாளர். இந்திரா. அந்த இரண்டுமே நான் வாங்க நினைத்தவையே – ஆனால் சரியாக எப்படி இந்த மூன்றும் இந்தப் பெட்டியினுள் வந்தது?!

மூன்றையும் வெளியே எடுக்கையில் பெட்டி விழுந்தது. அதன் கீழே ஏதோ வெல்வெட் சிவப்பு நிற துணி ஏதோ செவ்வக வடிவ பொருளை போர்த்தி இருந்தது. புத்தகமாக இருக்க முடியாது – பரப்பு அதிகம்.

‘இதுதான் வெடிகுண்டோ?’ என்றது அகம்.

மூடியிருந்தால் திறக்க வேண்டும் தானே? திறந்தேன்.

அட! மலை பெயின்ட்டிங்! அழகாக இருந்தது. மூன்று வர்ணங்களின் ஜாலத்தில் தான் அழகும் தனிமனித சுவையும் தங்கியுள்ளது. கண்ணுக்கே தெரியாத துகள் துள்ளி விளையாடினால் ஒரு நிறம். துவராது சோர்ந்திருந்தால் ஒரு நிறம் என அதன் துள்ளாட்டம் நிறத்தை தர, நிறம் வாழ்க்கைக்கு அழகூட்டுது என புரிந்தேன். ஆனால் எதற்கு நான் இப்போது தத்துவவியலாளர் ஆனேன்? ரம்மியமான மலைதான் காரணமோ? இருக்கலாம்.

ஆனால் சம்பந்தமே கிடையாதே?

வெற்றிய பார்க் – மரம் – பாழைடைந்த ப்ளேன் – பிடித்த புஸ்தகம் – மலை ஓவியம். என்ன தொடர்பு?

அறியேன்.

ஆனால் இந்த ஓவியத்திலுள்ள மலையை எங்கோ பார்த்த நினைவுண்டு. சஞ்சல சிந்தனை வேண்டாமென்று திரும்பி வெளியேற முனைந்தேன். புஸ்தகம், ஓவியம் இரண்டோடும்.

மீண்டும் கதவு வாசலில் இருந்தது மரம்!

“காக்க காக்க கனகவேல் காக்க…” என்று இந்த முறை சிறுநீருக்கு முற்றாக தயாரானேன்.

எங்கோ இருந்து அசரீரி, “ எழும்புங்கோ! நித்திரை காணும். எலும்புங்கோ இரவு எட்டு மணி ஆய்ட்டு!”

திடுக்கிட்டு எழுந்தேன். யாவும் கனாவா? என்னடா இது கனா கூட இவ்வளவு கொடூரமா? மனைவி தன்பாட்டில் புலம்பிக் கொண்டு போனாள்.

என் கட்டிலில், மடியில் இருந்த 3 புதிய புத்தகங்களையும் கவனமாக எடுத்து ஷெல்ஃபில் வைத்தேன். ஏன் கவனமாக? அது நான் வாங்கிய இந்திராவின் புதிய தொடை புத்தகங்கள். அவரின் பெயரை பெருமையோடு சுமக்கும் மூன்று புத்தகங்கள் – கவனம் வேண்டுமில்லையா?

அடுத்தது லைட் பில் பிணக்கு. பல மணியாக இயற்கையையும் மலைகளையும் செவுற்றிற்கு காட்டிய டீ.வியை ஓஃப் பண்ணினேன். முகம் கழுவினேன். முகம் கழுவியதும் பாதி கனா காணா கனாவாக நினைவில் மறைந்தது.

ஜன்னலை திறந்து காற்று வாங்கினேன்.

ஒரு மரம். இம்முறையும் அதன் பின் ஏதோ இருந்தது. ஜன்னலை சாற்றினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *