சாலமிகுத்துப் பெயின்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 14,948 
 

தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தாள், ராமதிலகம். மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இது ஒரு பேரவஸ்தை எனத் தோன்றும் எல்லோருக்கும். உறக்கம் வராது தொண்டைக்குள் குறுகுறுவென்று இருமல் வந்து கொண்டே இருக்கும், அதிலும் தலைக்கு ஒரு சொம்பு ஊத்திட்டா போச்சு, அன்னைக்கு பூரா நெஞ்சு கனத்துப் போயி எளப்பு எடுக்க ஆரம்பிச்சுடும். கொஞ்ச நாளாவே சுடு தண்ணீ தான் குடிக்கிறது, பச்சத்தண்ணீ பல்லுல படாமத் தான் இருக்கு, ஆனாலும் விடமாட்டிங்கு இந்த சளியும், எளப்பு சனியனும். இவ கூட வேல பாக்குறவளுக எல்லாம், குளுந்த தண்ணீ குடிக்குறப்போ, பாக்க பாக்க இவளுக்கும் குடிக்க ஆசையா இருக்கும், ஆனாலும் முடியாது. வெய்யக்காலம்னாக்கூட அவளுக்கு சுடுதண்ணீ தான். தாகம் தீந்தாமாதிரியே இருக்காது. அதுவும் விக்கல் வந்துட்டா தாங்க முடியாது, சூடு பண்ணிவச்ச தண்ணியவும் தாராளமாக் குடிக்க முடியாது. தீந்து போயிட்டா, டார்மெட்ரிக்கு போகணும், அந்த எழவுக்கு இங்கனயே இருந்துட்டு, மூச்சப்பிடிச்சு நிப்பாட்டிடறது தான் வசதி. தூக்கம் வரல, காத்தும் இல்லாம எல்லாம், நின்னு சிலையாப்போனது போல இருக்கு மரமெல்லாம். எந்துரிச்சு உலாத்தவும் முடியாது, வார்டனக்கா ஏன் வந்த எதுக்கு வந்தன்னு உசுர வாங்கிடும்.

சுமதி எந்திரிச்சு பாத்தா! என்ன புள்ள தூங்கலையா? இருமலா இருக்கு சுமதி என்ன பண்றதுன்னு தெரியலை, படுத்தா இன்னும் கஷ்டமா இருக்கு! என்றாள். வாசுகி ஒரு இருமல் மருந்து வச்சிருக்கா, அத எடுத்துக் குடி! காலைல சொல்லிக்கிடலாம்! வேணாம்த்தா, அவ காலைல எந்திரிச்சு பேய்மாரி கத்துவா… என்றாள்.

முதலுதவி பெட்டி வச்சிருப்பாங்க கம்பெனில, அதுல ஒண்ணும் இருக்காது, துடைச்சு வச்சா மாதிரி. ஏதாவது இருந்தாலும், மருந்து மாத்திரை இருக்காது… டெட்டால், பஞ்சு, சல்லடைத்துணியும், ஒரு ஆயின்மெண்டும் இருக்கும், அம்புட்டுதான். உடம்புக்கு சொகமில்லாதப்போ, நர்ஸக்காவத் தான் பாக்கணும், ஆனா அதுவும், காலைல தான் வரும், ராத்திரி டார்மெட்ரில தங்கியிருக்கிறவுகளுக்காக ஒரு நைட் டூட்டி நர்ஸ் போடணும்னு சொல்லி இதோட ஒரு வருஷம் ஆகிப்போச்சு, இன்னும் எதுவும் நடக்கக் காணோம். இங்க டைம் ஆபீஸ்ல இருக்கிற ராஜேஷு அண்ணன்கிட்ட சொல்லி மேனேஜர்கிட்ட ஒரு லெட்டரும் கொடுத்தாச்சு, ஒண்ணும் நடக்கிற மாதிரி தெரியலை. கம்பெனியும் முன்ன மாதிரி இல்லை, முன்னெல்லாம், நிறைய ஆர்டர் இருக்கும், நிறைய நேரம் வேலை பார்க்க, நிறைய ஓ.டி. காசும் தாராளமா கிடைக்கும், இப்போ ஆர்டர் குறைஞ்சு போயி, தனியாக் கிடைக்கிற காசு எதுவும் கிடைக்கிறதில்லை. சம்பளமே தள்ளி தள்ளிப் போகுது இப்பெல்லாம்.

கரூர்ல, எல்லா கம்பெனியவும் கடைண்டு தான் சொல்லுவாங்க, அது என்ன கணக்கோ, இவளும் புதுசா உசிலம்பட்டில இருந்து வந்தப்போ, கடை, கடைன்னு சொல்லக்கண்டு, ஏதோ பெரிய துணிக்கடையாட்டம் இருக்கும்னு தான் நினைச்சா, ஆனா வந்து பாத்தப்போதான் தெரிஞ்சது, இது எத்தாம்பெரிய கம்பெனியிண்டு. இந்த கடைல இரண்டாயிரத்துக்கு மேல ஆளுக்க வேலை செய்யிறாங்க, இதுல பொம்பிளய்ங்க தான் ஜாஸ்தி, கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேல இருக்கும், இதுல பாதிக்கு மேல வெளியூர்ல இருந்து வாரவுக தான். இவளப்போல உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, சின்னாளம்பட்டி, பேரையூரு, பெரியகுளம், கோட்டயம், இடுக்கி பக்கத்தில இருந்து தான் கொள்ளப்பேரு, இவ ஊர்க்காரிக மட்டுமே அம்பது பேருக்கும் மேல இருக்கும்.

இவ உசிலம்பட்டில இதுக்கு முன்னாடி பிஸ்கட் கம்பெனில தான் வேலை பாத்தா, அங்க பேக்கிங் டிபார்ட்மெண்டில் தான் இவளுக்கு வேலை. பாக்டரிக்குள்ள நுழைஞ்சாலே ஜம்முன்னு வாசமடிக்கும், மணக்க மணக்க வேலை செய்யலாம், போனவுடனே, டிரஸ்ஸ மாத்திடணும், அவுக கொடுக்குற டிரஸ் தான் போடணும், தலைக்கு குல்லா, கையில கிளவுஸ்ஸு, மூஞ்சில முகமுடி எல்லாம். கண்ணாடில பாத்தா யாரோ மாதிரி இருக்கும். ஆனா இங்க மாதிரி அங்க நிறைய சம்பளம் கிடையாது, இங்கு டார்மெட்ரி எல்லாத்துக்கும் வசதி, சாப்பாடு போக வீட்டுக்கு ஐந்நூறு ரூவா அனுப்பமுடியும்.

கூடப்படிச்சவள்ல ரெண்டு பேரு, கரூர்ல இந்த கம்பெனி பத்தி சொன்னவுடனே, அப்பா, ஆத்தா, நமக்கு நல்ல காலம் புறந்துடுச்சு ஆத்தா, நீ போயி சம்பாதிச்சுதான் தாயி… உந்தம்பி, தங்கச்சிய படிக்கவைக்கணும்னு சொல்லியதும், அவளுக்கு ஒரு கிரீடம் ஏறியது போல இருந்தது. அம்மாவுக்கு திலகத்தை அனுப்பவே பிடிக்கலை, இவளுக்கு சிநேகிதக்காரிகளோட போறோம்னு ஆசை வந்து, அம்மாவ நச்சரிச்சு, ஒரு வழியா சமாளிச்சு இங்க வந்துட்டா. இவ சம்பாதிச்சா வீட்டுக்கு உதவியா இருக்கும், அப்பாவால இப்போ எந்த பிரயோசனமும் இல்லை.

அப்பாவுக்கு வேலையில்லை இப்போ, கிடைக்கிற வேலையவும் ஒழுங்கா பாக்குறது இல்லை. முன்னாடி தேனில சாயப்பட்டறைல தான் வேலைப் பாத்தாரு, அவருக்கு உடம்புக்கு முடியாம, டிபி வந்து ஒல்லியாப் போயிட்டாரு, அவருக்கு ஒடம்புல தெம்பே இல்லாமப் போச்சு, தொசுக்கு தொசுக்குன்னு எங்க போனாலும் ஒக்காந்துருவாரு… இதுல அப்பாவுக்கு குடிப்பழக்கமும் இருக்கு, அம்மா காட்டு வேலைக்கு கூப்பிட்டாலும் போக மாட்டாரு. இந்த வேலைக்குப் போனா மூணு வருஷத்துல கை மேல முப்பத்தைஞ்சாயிரம் கொடுப்பாங்கன்னும், மாசாமாசம், தொள்ளாயிரம் ரூவா சம்பளமுன்னும் சொன்னவுடனே, திலகத்தை மூட்டை கட்டி அனுப்புறதிலேயே குறியா இருந்தாரு அவ அப்பா. போட்டும்டி, அவ கல்யாண செலவுக்கு ஆகும், ஒரு வேளை கஞ்சி குடிக்கலாம் உருப்படியா என்று அப்பா அவளை விருமாண்டி மாமாகூட அனுப்பி வைச்சிட்டாரு. வந்த புதுசுல சாப்பாடு பிடிக்காம, தம்பி, தங்கச்சி, அம்மாவ விட்டு வந்தது கஷ்டமா இருந்ததால, அழுகையா வரும், அப்புறம் பழகிப் போச்சு, இராமதிலகத்துக்கு.

இங்க ஒரு ரூம்ல பத்து பிள்ளைக,எல்லாருக்கும் பாயி தலைகாணி ஒரு பேனு. காத்து நல்லாத்தான் வரும், ஜன்னல் ரெண்டையும் திறந்து வச்சா, மத்தவளுக பூச்சி வருதுன்னு பயப்படுவாளுக. மூணு வேளை சாப்பாடுக்கு, நானூத்தி சொச்சம் பிடிச்சது போக ஓ.டி. பார்த்த காசு எல்லாம் சேர்த்து எழுநூறு ரூவா வரும், அதில் இவ இருநூறு ரூவா எடுத்துக்கிட்டு, மீதிய மணியார்டர் அனுப்பிடுவா. பிள்ளைகளுக்கு தேவையான சோப், சீப்பு, பவுடர், பொட்டு, எண்ணெய்ன்னு தேவையான எல்லாப்பொருளையும் வார்டனக்கா வாங்கி வந்துரும், அதுக்கு ஒரு கமிஷன் வச்சு இங்க இருக்கிற எல்லாப்பிள்ளைகளுக்கும் வித்திரும், இதுல ஆபீஸ்ல இருக்கிற ஒரு ஆளுக்கும் கூட்டு. கேரளால இருக்கிற பிள்ளைக கேர்பிரீயும் வாங்குவாளுக, ஆனா நம்ம ஊரு பிள்ளைக வெறுக் கட்பீஸத் தான் வச்சுக்கிடுறதே. வாரத்துல ஒரு நாளு படம், மாசத்துல ஒரு நாளு டவுனுக்குன்னு ஒரு அட்டவண இருக்கு, அதுபடி தான் எல்லாம். துணி தொவைக்கிறது தான் பெரிய வேலையே, காயப்போட எடம் இருக்காது பாதி நேரம், அதுவும் ஓடி எல்லாம் இருந்துட்டு எப்படா வந்து படுப்போம்னு இருக்கும், ரவைக்கு கொள்ள நாளு சாப்பிடுறதே இல்லை. மிஞ்சிப்போன சாப்பாட எல்லாம், மய்க்கா நாளு காண்டின்கார பொம்பள தண்ணி ஊத்தி வச்சு, மத்யான சாப்பாட்டு தயிர்சாதமா ஆக்கிடும். கறி சாப்பாடு போடுற அன்னைக்கு மாத்திரம் சாப்பாடு மிஞ்சாது.

ராமதிலகம் வேலை பாக்குற கம்பெனி தான் இந்த ஊரிலேயே பெரிசு, இது கரூருக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல இருக்கு. தலகாணி உற, திரைத்துணியெல்லாம் தச்சு, வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யிற கம்பெனி. முதலாளி சிந்திக்காரருன்னு சொல்வாங்க, அது எங்கேயோ வடக்க இருக்கு போல. இங்கன வேலைக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகிப்போச்சு, தீபாவளிக்கு மாத்திரம் தான் ஊருக்கு போகமுடியும். பொங்கல் இல்லேன்னா தீவாளி, இவளுக்கு தீவாளிக்கு போவது தான் சரின்னு பட்டுது, இவ ஊர்க்காரிக கூட தீவாளிக்கு தான் போவாளுக. சில பிள்ளைக பங்குனிப் பொங்கலுக்கும், தைப்பொங்க்லுக்கும் ஊருக்கு போறது தான் வாடிக்கை. பொங்கலன்னிக்கு, புதுசா உடுத்தத் தேவையில்லை, பட்டாசு கிடையாது, பலகாரம் கிடையாது, பொங்கல் மட்டும் தான். வீட்ல மாடு கண்ணு இருந்தா அதுக்காகவாவது பொங்கலுக்கு போகத்தோனும், இவ வீட்ல எதுவும் இல்லாததால தீவாளி தான் பெரிய பண்டியலு இவளுக்கு.

போன தடவை தீவாளிக்கு போனப்ப, ராமதிலகத்தின் அம்மாவிற்கு பிள்ளைய பாக்க பாக்க அழுகயா வந்துடுச்சு, தோலு வெளுத்தமாதிரி சோகைபிடிச்சாப்ல இருக்கு, உடம்பும் வத்துனாப்புல இருக்கேன்னு கவலை வந்துடுச்சி… இந்த மனுஷன் எம்பிள்ளைய இப்படி வதைக்கிறானேன்னு புலம்பி தீத்துடுச்சி… ராமதிலகம், அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா, கொஞ்சம் கலராயிருக்கேன், உடம்ப குறைச்சிருக்கேன், இங்க இருக்கிறப்ப திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குறன்னு நீ தானே சொல்வ! அதான் இப்ப வேலைப்பாக்குறதால வத்துனாப்புல தெரியுது… அதுவும் இத்தனை நாளு நீ என்ன பாக்கல… அதான் என்று சமாளித்தாள் ராமதிலகம். ஆனா வாஸ்தவமாப் பாத்தா இந்த இருமல் சளியெல்லாம் இங்கன வந்து தான் வந்துச்சு, அது பெறகால தான் ஒடம்பு வத்துனது எல்லாம், இதச்சொன்னா அம்மா இன்னும் அழுவுமென்று சொல்லாமல் விட்டுவிட்டாள்.

தீவாளிக்கு கம்பெனிக்காரங்க கொடுத்த ஸ்வீட் பாக்கெட்டும், அப்புறம் டார்மெட்ரிக்குள்ளயே போட்ட சீட்டுல வந்த பணத்துல பட்டாசு பொட்டலமும் வாங்கியதை தம்பி தங்கைகளுக்கு கொடுத்ததும் சந்தோஷப்பட்டார்கள். போனஸ் கொடுத்த காசுல அம்மாவுக்கு சேலையும், அப்பாவுக்கு வேட்டி சட்டையும், இவளுக்கு ஒரு பாவாடை தாவணியும் வாங்கிக் கொண்டாள், பாண்டிக்கு பிடிச்ச கலரு. தம்பி தங்கச்சிக்கு அம்மா ஏற்கனவே வாங்கி வச்சிருந்தது இவளுக்கு வசதியாப் போயிட்டது, கொஞ்சம் காச அம்மாட்ட கொடுத்ததும், ரொம்பவும் சந்தோஷப்பட்டாள் அம்மா, ராமதிலகத்துக்கு பெரிய மனுசி ஆயிட்டது போல தோன்றியது அப்போது தான்.

பாண்டி கட்டிங்குல கட்டரா வேலை பாக்குறான், உயரமா, உயரமா இருப்பான். பாக்குறத்துக்கு கொஞ்சம் கடலோரக்கவிதைகள் ராஜா மாதிரி…லேசா வளஞ்ச முதுகு, கழுத்துல ஒரு கயிறு, அதுல திருச்செந்தூர் முருகன் டாலர் போட்டிருப்பான். முன்னால மட்டும் சுருள் முடி பாக்கவே அழகா இருக்கும். இவ கட்டிங்கிலருந்து கட் பீஸெல்லாம் எடுத்துட்டுப் போயி, லைனுக்கு கொடுக்குற பீடிங் ஹெல்பர் வேலை பாக்குறதால, பீஸ் எடுக்க போகும்போது அவன பார்ப்பா. அப்போ, லே போட்டு அடுக்கி வச்சிருக்கிற துணியில கட்டிங் மெஷினகொண்டு, மேல வச்சிருக்கிற பேட்டர்னுக்கு தகுந்த மாதிரி வளைச்சு வளைச்சு வெட்டும்போது, பாக்கவே அழகா இருக்கும். வெய்யக்காலத்துல சட்டைய கழட்டிட்டு, வெறும் முண்டா பணியனோடு இருக்கும் பாண்டி, இவளை குனிஞ்ச மாதிரி சைடா பாக்குறது, இவளுக்கு ஒரு மாதிரி குறுகுறுன்னு இருக்கும்.

என்ன அண்ணே! என்னயவே முறைச்சு பார்க்குறீங்க! என்று கட் பீஸு பண்டில (bundle) லேசா உரசிட்டு கடந்து போவா… ஏ புள்ள! அண்ணே கிண்ணேன்ன அம்புட்டுத்தான்… பேரச்சொல்லிக் கூப்பிடு இல்லாட்டி, போங்க வாங்கன்னு கூப்பிடு… எனக்கு இருக்கிற தங்காச்சிங்க போதும் என்று இவளை நாக்கு துருத்தி விரட்டுவான். இவளுக்கு சிரிப்பா வரும், ஒருமுறை அவனை கடந்து போகும் போது பாண்டி மச்சான், என்று கிசுகிசுப்பாய் சொல்ல, பாண்டிக்கு கொள்ள சந்தோசம். அவள் கடக்கும்போது பாவாடையோடு இடது புறங்கைய தொடையில உரச, படக்கென்று விலகினாள்.

எல்லாரும் இருக்கும்போதும் அவளுக்கு, பாண்டியை சீண்டத் தோன்றும், கட்டிங் ஹெல்பரா இருக்கிற பாப்பாத்தி அக்காவுக்கும், ஸ்டிக்கர் அடிக்கிற அம்பிலிக்கும், இவங்களோட சாவகாசம் தெரிந்த பிறகு, இவள் வரும்போதெல்லாம் கிண்டல் பண்ணுவார்கள். மற்றவர்களிடம் பாண்டியைப் பற்றி பேசுகையில் பாச்சா… என்று குறிப்பிடுவாள். யாராவது கேட்டா, அது ஒல்லியா பாச்சா மாதிரி இருக்குல்ல அதனால தான் என்று சமாளிப்பாள். ஆனா அவளுக்கும் பாண்டிக்கும் மட்டும் தான் தெரியும், பாச்சான்னா… பாண்டி மச்சானின் சுருக்கம் என்பது.

ராத்திரி மூச்சூடும் தூங்காம விடியக்காலம்பற அவளுக்கு தூக்கம் அசத்து, உறங்கிப் போனாள், சுமதி வந்து உசுப்ப எழுந்தவள், ஏழு மணி ஆனது தெரிந்தவுடன், அவசர அவசரமாய் கிளம்ப ஆயத்தமானாள். இப்போ போனா, பாத்ரூமெல்லாம் கூட்டம் இருக்கும், இன்னிக்கு ஒருநா குளிக்காம போயிடலாம், சாயங்காலம் வந்தவுடனே குளிச்சிக்கலாம், உடம்புக்கும் கொஞ்ச குதுகுதுன்னு வந்ததால, முகத்தை மட்டும் கழுவிட்டு, சுமதியிடம் இருந்து கொஞ்சம் பாண்ட்ஸ் பவுடர் வாங்கி தடவிட்டு, சாப்பாடு தட்டெடுத்துட்டு, காண்டீனுக்கு விரைந்தாள். அம்பிலியும், ஷாலுவும் முன்னால் நின்று கொண்டிருந்தார்கள், அவர்களை பார்த்து சிரித்து விட்டு, லேட்டாயிடுச்சுல்ல.. என்றாள். எதுக்கு, பாச்சாவ பாக்கவா என்றாள் அம்பிலி கண் சிமிட்டியபடி, ஆருடி அது பாச்சா என்ற ஷாலுவின் கேள்விக்கு சொல்லவா, சொல்லவா என்று மிரட்டினாள் அம்பிலி. என்ன சொல்லப்போற… ஒண்ணுமில்ல, இவ சும்மா… பகடி பண்ணுறா என்றாள் ராமதிலகம், ஆனாலும் மனசுக்குள் சொல்ல வேண்டும் என்று ஆசையா இருந்தது. எல்லோருக்கும், இவள் பாண்டியோட ஆளு என்ற பேச்சு, ஜாடைமாடையா கேட்டா நல்லாயிருக்கும் தான்னு தோன்றியது. குறிப்பா இவ ரூம்ல இருக்கிற வாசுகிக்கு தெரியணும், பெரிய பந்தாவிட்டுட்டு இருப்பா எப்பப் பாத்தாலும், அவ மூஞ்சியும், மொகரையும். எவளாவது அவகிட்ட வருவானா என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

வரிசை நகர தன்முறை வந்ததும், தட்டை நீட்ட, ரவா கிச்சடியும், தேங்காசட்னியும் விழுந்தது. ஒரு கரண்டிக்கு மேல இதத் திங்க முடியாது, நாக்கெல்லாம் வறச்சியா இருக்கும் மத்யானம் சாப்பாடு முடிக்கிறவரை, என்று நிறுத்தினாள். சாப்டுட்டு கம்பெனிக்குள்ள நுழையவும் மணி அடிக்கவும் சரியா இருந்தது. நேத்துக் கொடுத்த பீஸுகளின் கணக்கை பீடிங் சிலிப் பார்த்து எழுதிவிட்டு, பண்டில் இல்லாத லைனுக்கு பீஸு கொடுக்க கிளம்பியவளை நிறுத்தி, இன்னையில இருந்து நீ டிரிம்மிங் மட்டும் பாரு, பீடிங்குக்கு வேற ஆளப்போட்டாச்சு, டிரிம்மிங்குல ஆள் குறைவா இருக்காம் என்று அவளுடைய லைன் சூப்பர்வைசர் சொல்ல, இவளுக்கு மனசுக்கு கஷ்டமா இருந்தது, டிரிம்மிங்,செக்கிங்கும் பேக்கிங்கும் வேற ஒரு ஷெட்டுல இருக்கு, அதனால் பாச்சாவ அடிக்கடி பார்க்கமுடியாது என்பதை நினைக்கும்போதே அவளுக்கு அழுகை வர மாதிரி இருந்தது. வேற ஒன்னும் செய்யமுடியாதா, வேற யாராவது அனுப்புங்கண்ணே என்று இவள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அவளோட சூப்பர்வைசர்.

இரவு ஏழு மணிக்கு டார்மெட்ரிக்கு திரும்பியவள், சுமதியிடம் சொல்லி சொல்லி அழுதாள். பகவதி அம்மனையும், பாண்டி சாமியையும் தீவிரமாக வேண்டினாள். மூணு ரோடு முனுசாமிக்கு கெடா வெட்டுவதாகவும் வேண்டியவள் சாப்பிடாமல் உறங்கிப் போனாள், எட்டு மணியிருக்கும் போது பேக் பண்ண ஆள் கம்மியாயிருக்கு, அதனால டார்மெட்ரில இருக்கிற பிள்ளைகள எல்லாம் வேலைக்கு கூப்பிடுறாரு, மேனேஜரு என்று தகவல், வர எல்லா பிள்ளைகளுக்கும் எரிச்சலுடன், கோபமும் வந்தது எல்லோருக்கும்.

இதே பொழப்பா போச்சு, இவனுங்களுக்கு, எப்பப் பார்த்தாலும் வந்து படுக்குறதுக்குள்ள திரும்பக்கூப்பிடுறது! மனுஷங்களா இல்லா மாடுங்களா நம்மெல்லாம், ஒரு நாளைக்கு இருவது மணி நேரமா, அதுவும் ஒரு நாளு கிழமை கிடையாது, ஓய்வு ஒழிச்சல் கிடையாது என்ன நாறப்பொழப்பு இது… பேசாம ஊருப்பக்கம் போயி காட்டு வேலப்பார்க்கலாம், வீட்டு மனுஷங்களோடவாவது இருக்கலாம், என்று புலம்பித் தள்ளினாள், டார்மெட்ரில இருக்கும் மரகதமணியக்கா. மரகதமணியக்கா ரொம்ப பக்தியான ஆளு, வேலையில்லாத நேரமெல்லாம், பூசையும், கோயிலுமாத்தான் இருக்கும். மரகதமணியக்காவுக்கு குழந்தையெல்லாம் கிடையாது, புருஷனும் வேற கல்யாணம் பண்னிக்கிட்டானாம், டார்மெட்ரில தான் இருக்கும் எப்போதும், லீவுக்கு மட்டும், நத்தத்தில இருக்க அவங்க அம்மா வீட்டுக்குப் போயிடும். எல்லார் மேலயும் ரொம்ப பிரியமா, கரிசனையா இருக்கும் மரகதமணியக்கா. ஏழுமணிக்கு டார்மெட்ரிக்கு திரும்ப வந்ததே நூறு பேருதான், அத்தனைபேரையும் வரச்சொன்னா என்ன அர்த்தம்னே தெரியலை.

எல்லோரும் இரவு சாப்பாடை முடித்துக் கொண்டு எட்டரை மணிக்கே திரும்பவும் கம்பெனி நோக்கி போக ஆரம்பித்தார்கள். டார்மெட்ரியும், கம்பெனியும் ஒரே காம்பவுண்டில் இருந்தாலும், ஒரு பத்து நிமிஷம் நடக்க வேண்டும். வேலை மும்முரமாக நடக்க ஆரம்பித்தது, கம்பெனி முழுதும் விளக்குகள் எரிய பகல் போல இருந்தது. பன்னிரெண்டு மணி இருக்கும் போது புரடக்‌ஷன் புளோரில் இருந்து ஏதோ சத்தம் வந்தது. மரகதமணியக்காவுக்கு சாமி வந்துவிட்டது… அக்கா குதித்துக் கொண்டே வெளியே வர, வேடிக்கை பார்க்க எல்லோரும் வெளியே வர ஆரம்பித்தார்கள்… வேலை நின்று போனது முழுதுமாக… மரகதமணியக்காவைத் தொடர்ந்து இன்னும் சில பேருக்கு சாமி வர… என்ன வேண்டும் என்று ஒவ்வொரு சூப்பர்வைசரும், புரடக்‌ஷன் மேனேஜரும் கேட்க, போன பங்குனிக்கு கெடா வெட்டுனயா… ரத்தபலி வேணும்டா என்று கேட்க… கம்பெனிக்கு வெளியே திருவிழா ஆனது. குடம்குடமாய் தண்ணீர், திருநீறு, மஞ்சள் குங்குமம், அல்லோல கல்லோலமானது. இப்போது நூறு பேருக்குமேல் சாமியாட ஆரம்பிக்க… கட்டுப்படுத்த முடியாமல், சூப்பர்வைசர்களும், மேனேஜரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போது ராமதிலகமும் ஆடத்தொடங்கியிருந்தாள்.

— ராகவன் (http://koodalkoothan.blogspot.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *