வானவில்லோ நீ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 8,639 
 

அன்புள்ள திவ்யா….

என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்?

உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம்
மல்லிகைபூக்களாக மாறும் அழகினை ரசித்திருக்கிறேன்.

அந்த காத்திருப்பின் ரம்மிய நிமிடங்களை இனி என்று பெறுவேன் கண்ணே!

காதல் மொழியை ஒரே பார்வையில் மொத்தமாய் சத்தமின்றி எனக்கு கற்றுத்தந்ததே உன் கண்கள்…. அந்தக் கண்களை இனி என்று பார்ப்பேன் கண்ணே!

பிள்ளை மனம்கொண்டவள் நீ….என்னை பிரிந்துவிட்டு மெளனமாய் இருக்க உன்னால் எப்படி முடிகிறது திவ்யா?

உன் பிரிவைக்கூட தாங்கி இருப்பேன் கண்ணே….அழாமல் நீ பிரிந்திருந்தால்…

காலத்திற்கு நம் காதல் புரியவில்லை… காதலுக்கும் நம் அருமை தெரியவில்லல. நம்மை பிரித்து வேடிக்கை பார்க்கிறது.

உன்னோடு வாழமுடியாத என்னால் உன் நினைவுகளோடு வாழ முடிகிறேதே….

பிரிந்த நாளில் நீ தந்த வார்த்தைகள் மட்டுமே இன்று என் வாழ்க்கையின் கனத்தை மடிதாங்குகின்றன.

காதலியுடன் வாழாமல் காதலுடன் வாழ்கின்ற உன் ப்ரியமானவன்.

எழுதிய கடிதத்தை மீண்டுமொரு முறை படித்துவிட்டு அதனுடன் ரோஜாப்பூவொன்றை சேர்த்து கீழ்வைத்தேன்

நீர்வழிகின்ற என் கண்களை வியப்புடன் பார்க்கும் என் மகளைக் கூட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன் கல்லறைத்தோட்டத்தைவிட்டு.

– Sunday, September 23, 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *