கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 48,005 
 

‘இதுக்கோசரமா ம்மே இருட்லே தனியா வந்து ரயில் ரோட் மேல குந்திக்கினு அய்வுறே… ‘சீ! அவங்கெடக்கறான் ஜாட்டான்’னு நென்சிக்கினு எந்திரிம்மே…”

ஐந்தாறு பிரிவு தண்டவாளங்கள் நிறைந்த அந்த அகலமான ரயில்வே லைன் மீது, இருட்டில் கப்பிக் கல் குவியலின் மீது அமர்ந்து அழுதுகொண்டிருந்த அவள், இந்தக் குரலையும் இதற்குரியவனையும் எதிர்பாராதவளாய், இவனைக் கண்டு திகைத்தவள் போன்றும், அஞ்சியவள் போன்றும் பதைத்தெழுந்து நின்றாள்.

அப்போது கனைப்புக் குரலை முழக்கியவாறு சடசடத்து ஓடிவந்த மின்சார ரயிலின் வெளிச்சத்தில், அடிபட்டு உதடுகள் வீங்கிய அவளது முகமும், அழுது கலங்கிய பெரிய கண்களும் அவனுக்குப் பிரகாசமாய்த் தெரிந்தன. அவன் தனது கோலத்தைப் பார்க்கின்ற கூச்சத்தாலும், முகத்தை மூடிக்கொண்டாள் அவள். ரயில் போன பிறகும் முகத்தை மூடியிருந்த கரங்களை எடுக்காமல், இன்னும் அழுந்தப் புதைத்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதாள். அழுகையினூடே அவள் புலம்பினாள்…

”நீ போ! நீ இன்னத்துக்கு வந்தே? நானு இப்படியே போறேன். இல்லாகாட்டி ரயில்லே தலையைக் குடுத்து சாவறேன். உனுக்குப் பண்ண துரோகத்துக்கு எனக்கு இதுவும் ஒணும், இன்னமும் ஒணும்” என்று அழுது புலம்பியபொழுது, அவள் தனக்கிழைத்த துரோகத்தை எண்ணியோ, அதை உணர்ந்து அவள் கதறுவதைக் கண்ட சோகத்தாலோ அவனும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். குமுறிவரும் அழுகையை அடக்கிக் கொள்வதற்காக வானத்தை நோக்கித் தலை நிமிர்ந்து பெருமூச்சுவிட்டான்.

”இப்படியெல்லாம் வரும்னு எனக்குத் தெரியும். ஆமாம்மே! எனக்குத் தெரியும். ம்… இன்னா செய்யலாம்! போனது போவட்டும். அதுக்கோசரம் நீ ஒண்ணும் ரயில்லே தலையெ வுட வேணாம். எங்கே போவணும்னு பிரியப்படறியோ அந்த எடத்தைச் சொல்லு, உன்னை இஸ்தாந்த தோசத்துக்கு, ரெண்டு வருசம் உன்னோட வாய்ந்ததுக்கு பர்த்தியா, அங்கேயே இட்டுக்கினு போயிடறேன். உனுக்கு பட்டணம் ஆவாதும்மே! இந்தப் பொயப்பு ஓணாம்மே. இங்கேயே இருந்தா இன்னம் பாயாப் பூடுவே! ஆமாம்மே… நீ ஊருக்கே பூடும்மே!”

இப்போது அவனுக்கு எதிர்ப்புறத்தி லிருந்து கனைப்புக் குரலை முழக்கிய வாறு சடசடத்து ஓடிவரும் மின்சார ரயிலின் கண் கூச வைக்கும் வெளிச்சத் தில் அவள் அவன் முகத்தைத் தீர்க்க மாகப் பார்த்தாள். தன்னைக் கண்டு அருவருத்து அவன் முகம் சுளிப்பது போல் அவள் அவனது முகத்தோற்றத்தை, வெளிச்சத்தைக் கண்டு கூசும் அவன் விழிகளைக் கற்பனை செய்துகொண் டாள். அவன் தன்னை அருவருத்து ஒதுக்கவும், வெறுத்து விலக்கவும் நியாயம் இருக்கிறது என்ற உணர்வில் தலை குனிந்து நின்றாள். ஆனால், ‘தனக்கு ஆறுதல் கூறவும், தன் விஷயத்தில் இன்னும் சிரத்தை காட்டித் தனது நிராதரவான நிலையில் துணையாய் வந்து நிற்கவும் என்ன நியாயம் இருக்கிறது அவனுக்கு? தனக்குத்தான் அதை ஏற்றுக் கொள்ள என்ன நியாயம் இருக்கிறது?’ என்று யோசித்தவாறு, மண்தரையில் வலதுகாலின் முன் பாதத்தைத் தேய்த்தவாறு நின்றிருந்தாள்.

கணவன் மனைவி என்ற நியாயத்தின் பாற்பட்டோ, வஞ்சிக்கப்பட்டவனும் வஞ்சித்தவளும் என்ற முறையிலோ அல்லாமல், வெறும் மனித நியாயத்தினால் உந்தப்பட்டு, அவள் நிலையை மனித இதயத்தால் மட்டுமே உணர்ந்து அங்கு வந்து நின்றிருக்கும் அவன் அவளிடம் சொன்னான்…

”நீ நெசத்துக்குதான் சொல்றியோ, சும்மனாச்சியும்தான் சொல்றியோ… ரயில்லே தலைய வுட்டுக்குவேன்னு செத்த மின்னே நீ தலைய விரிச்சுப் போட்டுக்கினு அயுதுக்கினே ஓடியாந்தியே, அத்தப் பாத்தப்ப எனுக்கு ‘பக்’குனு வயித்திலே என்னமோ ஆயுடுச்சிம்மே! உம் பின்னாலேயே நா ஓடியாந்தா கும்பலு வந்துடும்னு வண்டிய மெறிச்சிக்கினு கெங்குரெட்டி ரோடு வளியா ஓடியாறேன். நல்லவேளை, கேட்டு சாத்தலே. அப்பக்கூட இன்னா, கேட்டாண்ட வரும்போது ‘லெப்டு’காத்தான் பாத்துக்கிறேன். பாத்தா, நீ ஒம்பாட்டுக்கு ரயில் ரோட்டு மேல போயிக்கினே கீறே! சேத்துப்பட்டு டேசனாண்டயாவது புடிச்சிடமாட்டமானு வேகமா ரெண்டு மெறி மெறிச்சனா, இது ஒரு தெண்டக் கருமாந்தர வண்டி. பூந்தமல்லி ஐ ரோட்டாண்ட வரும்போது ‘மடார்’னு செயின் கயண்டிக்கிச்சு. அத்த ஒரு இஸ்ப்பு இஸ்த்து மாட்டிக்கினு வந்தா, நேரு பார்க்கண்ட வரும்போதே இங்கே நீ நின்னுக்கினு இருக்கிறதப் பாத்தனா… அப்படியே வண்டியப் போட்டுட்டு ஓடியாறேன். ‘இவன் எதுக்கோசரம் வரான்’னு நீ நெனப்பேன்னு எனக்குத் தெரியும். நீ இன்னா நெனச்சா இன்னாம்மே எனுக்கு? உன்னய தாலிகட்டி இஸ்த்தாந்தவன் நானு. உனுக்கு இன்னா நடந்தாலும் அதுக்குக் கார ணம் நாந்தான்னு எனுக்குப் படுது. அதாம்மே நாயம்!

‘அது இன்னாடா நாயம்? நீ இஸ்தாந்தே, சரி! நாந்தான் உன்னை உட்டுட்டு இன் னொருத்தங்கூடப் பூட் டேனே, அப்புறம் இன்னாடா உனக்கு ரைட்டு?’ன்னு நீ நெனப்பே. ஊர்ல உள்ளவனுங்களும் அதாம்மே கேக்கறானுவ. அவனுகளுக்கு இன்னாம்மே தெரியும் என்னப் பத்தி. உனக்காவது தெரியும். தெரியலேன்னாலும் இப்ப சொல்றேன்… கேளும்மே! நீ எவங்கூடப் போனாத்தான் இன்னாம்மே, இப்ப இங்கே வந்து உன்ன இஸ்த்துக்கினு போயி இன்னொரு தடவை வாயணும்னா ஓடியாறேன்? அப்படி நென்ச்சிக்கினு ‘போ… போ’னு வெரட்டாதே! நீ என்னோட வாய்ந்தாலும் வாயாட்டியும் உங் கயுத்தில தொங்கற தாலி நாங் கட்னதுதானே? அது உங் கய்த்திலே இருக்கிற வரைக்கும் எனக்கு ரைட்டு இருக்கும்மே! அநியாயமா எங்கனாச்சும் உய்ந்து, எங்கண்ணு மின்னாடி நீ சாவறதப் பாத்துக்கினு இருந்தா, நாளைக்கி எவனும் வந்து என்னை ஒண்ணியும் கேக்கப் போற தில்ல. ஆனா, எம் மனசு கேக்குமேம்மே! ‘அவதான் பட்டிக்காட்டுப்பொண்ணு…அறிவு கெட்டுப் போனா! அந்தப் பாவத் துக்கு நல்லா கஸ்ட்டமும் பட்டா.அதுக்கெல்லாம் நீதாண்டா காரணம்? அநியாயமா இப்ப பூட்டாளே! எல்லாம் உன்னாலதானே’ன்னு நாளைக்கு எம் மனசே என்னக் கேக்காதாம்மே..? அப்ப இன்னா பதில் சொல்லுவேன்? அதுக் கோசரம்தாம்மே ஓடியாந்தேன்.

இந்த ரெண்டரை வருசத்திலே இப்ப ஆறு மாசமாதானேம்மா நீ எங்கூட இல்ல! ரெண்டு வருசம் வாய்ந்தமே, ஒரு சண்டை போட்டு இருப்பனா, சாடி போட்டு இருப்பனாம்மே? நீதான் ஒரு நாளு சோத்துக்குப் பணம் தரலேன்னு கூவியிருப்பியா? அங்கே போயிக் குடிச்சியே, இங்கே போயி சுத்துனியேனு எங்கிட்டே வந்து கேட்டிருப்பியாம்மே? சந்தோசமாத்தானே வாய்ந்தோம்… பிரியமாத்தானே இருந்தோம்..? எந்தப் பாவி கண்ணு பட்டுச்சோ… திடீர்னு என்னென்னமோ ஆயிடுச்சி! சரித்தான், இப்போ பேசி இன்னா பண்றது? நடந்தது நடந்து போச்சு..! கயுத்திலே கட்ன ஒரு கய்த்த வெச்சுக்கினு, பிரிய மில்லாத ரெண்டு பேரும் கயுத்திலே சுருக்கிக்கினு சாவறதா? என்னமோ புடிக்கலே, அவ பூட்டா! நாமளும் இன்னொருத்தியப் பாத்துக்குவோம் அப்டீன்னு கூட நான் யோசிச்சேன். ஆனா இன்னா, எனக்கு உன்னியுந் தெரியும்; நீ போனியே அவம் பின்னாலே அந்த சோமாறியேயும் தெரியும். உனக்கு இன்னாம்மே தெரியும் ஒலகம்? ம், நீ கொயந்தம்மே! பட்ணம் பளபளப்பா இருக்குது உங்கண்ணுக்கு! நீ அத்தப்பாத்து பல்லக் காட்டிக் கினு நின்னுக்கினே. நீ என்னை ஒண்ணும் ஏமாத்தலேம்மே! உன்னியேவே ஏமாத்திக்கினே. ஆமாம்மே!”

அவன் இடையிடையே பேச்சை நிறுத்திப் பெருமூச்செறிந் தும், சூள் கொட்டியும், ‘ம்… ம்…’ என்று உணர்ச்சி மேலிட்டு உள்ளூ றக் குமுறிக் கூறிய அந்த வார்த்தை கள் அவள் நெஞ்சைக் குத்திக் குழைத்து, உடம்பை நாணிச் சிலிர்க்க வைத்து, அவளது ஆத்மாவை அவன் பாதங்களில் வீழ்ந்து பணிய வைத்தது.

”ஐயோ… நா இன்னத்துக்கு இன்னம் உசிர வெச்சிக்கினு இருக்கணும்?” என்று, தனக்குக் கிடைக்கவொண்ணாததைப் பெற்றிழந்த பேரிழப்பை எண்ணிக் குமுறியவாறே தலையில் கை வைத்துக் தரையில் உட்கார்ந் தாள். அவளைப் பார்க்கும்போது, இந்த ஆறு மாதமாக அவளுக்காகப் பட்ட வேதனைகளைப் போலவே, இப்பொழுது சற்று அதிகமாக அவன் மனம் வேதனையுற்றது. அழுகையையும் உணர்ச்சி மேலீட் டையும் அடக்கி அடக்கி, நெஞ்செல்லாம் புண்ணாகிப்போனது போன்ற உணர்வு தொண்டைக் குழி வரை வந்து நொந்தது.

அவன் கரகரத்த குரலில் பேசி னான்… ”நானு உனுக்குத் தாலி கட்ன புருசன்றத மறந்துட்டுத் தாம்மே பேசறேன். இந்த ஒறவு இப்பத்தானம்மே? ரெண்டு வருச மாத்தானம்மே? அதுக்கு மின்னே உன்னை தெம்மாங் கொயந்தே லேர்ந்து எனக்குத் தெரியும்மே! ‘மாமெ, மாமெ’னு கூப்புட்டுக்கினு கம்பங்கொல்லைலேயும், மல்லாக் கொட்ட காட்லயும் ஓடியாரு வியே… அப்ப இன்னாம்மே ஒறவு நமக்கு? நானு பட்ணத்லேர்ந்து வந்தன்னா, நீயும் உன் தங்காச்சியும் ஓடியாந்து காசி வாங்கிக்கினு, கத சொல்லணும்னு ரோதனை பண்ணுவீங்களே, அப்ப நானு உங்கிட்டே காட்டின பிரியமெல் லாம் இன்னா ஒறவுலம்மே? உன்னக் கண்ணாலங் கட்டிக் கினும்னு நானு நெனச்சது கூட இல்லேம்மே அப்போ! ஏதோ கூடப் பொறந்தது இல்லாத கொறையிலே வெச்ச பாசந்தா னம்மே! பட்ணத்திலே கெடக்கிற கய்திங்களப் பார்க்குறப்போ, ‘சீசீ! இந்த மாதிரி நமக்கு வேணாம்.நம்ப பக்கத்திலே நல்ல மாதிரி ஒரு பொண்ணப் பாத்துக் கட்டிக் கினம்னு நானு எண்ணம் வெச்சிருந்து மெய்தான்! ஆனா, அய்யனாரப்பன் மேல ஆணையாச் சொல்றேன், ஊர்ல வந்து மித்த வங்க சொல்ற மின்னாடி நானு உன்ன நெனைக்கவே இல்லம்மே! அப்புறம் யோசிச்சேன். ‘நம்ப கிட்டே ரொம்பப் பிரியமா இருக் குமே அந்தப் பொண்ணு… கட்டிக் கினாத்தான் இன்னா? அத்தங் காட்டியும் நல்ல பொண்ணு எங்கே கெடைக்கும்’னு யோசிச்சு, உன் னக் கட்டிக்கினேன். கட்டிக்கினு வாய இஸ்டம் இல்லேன்னா போ! அதுக்கு மின்னாடி இருந்த பிரியம் எங்கேம்மே பூடும்? ஒண்ணா வாய்ந்தப்போ காட்ன ஆசையெல்லாம் பொய்யா வாம்மே பூடும்? அந்த மாதிரி ஒறவுலேதாம்மே இப்ப இங்க வந்து நிக்கிறேன்.

போனதுதான் போனியே, ஒரு ஒயுங்கானவனாப் பாத்துப் போனியா? சரி, எங்கனாச்சும் நல்லா இருக்கட்டும்னு நானு நிம்மதியா இருப்பேன். அவன் சரியான எச்சப்பொறுக்கி! நல்லா வாயறவங்கள இஸ்த்துகினு வந்து ரெண்டு மாசம் மூனு மாசம் வெச்சிருந்து அப்புறம் தெருவுல வுடறதே அவனுக்குத் தொயிலு! தன் வவுத்துக்குத் தன் கைய நம்பாத சோமாறி! எனக்கு உன்னி யப் பாத்து அய்வுறதா சிரிக்கிறதானு தெரியலம்மே!

அதுக்கோசரந்தாம்மே நானும் ஆறு மாசமா ஒரே கொயப்பத்திலே இருக்கேன். இன்னா கொயப்பம்னு கேளு? நீ அறிவு கெட்டுப் போயி மின்னே பின்னே யோசிக்காம அந்தச் சோமாறி கூட பூட்டே! எனக்கு நல்லாத் தெரியுது, நாளைக்கி நீ தெருவுலே நிக்கப் போறேன்னு. உன்ன வெச்சுக்கினு நானு வாயப் போறதில்லேன்னாலும், உன்னப் பத்தி ஒரு முடிவு தெரியாம இன்னொருத்தியைக் கொண்ணாந்து வெச்சிக்கினு நானு எப்படிம்மே வாய்றது? அப்படி வாய்ந்தா இப்ப இங்கே வருவனாம்மே? வரலேன்னா நீ ரயில்லே வுயுந்து சாவறேனு வெச்சிக்கோ, அந்தப் பாவம் யாருக்கும்மே? அந்த சோமாறிக்கா, இல்ல, அவனைத் தெரிஞ்சிருந்தும் உன்னை இங்கே கொண்ணாந்து அவங் கையிலே உட்டுட்ட எனக்கா? நல்லா யோசிச்சுப் பாரும்மே!”

அவன் பேசப் பேச, அவனது வார்த்தைகள் அவளது மன இருளில் எத்தனையோ முறை ஒளி மழை சொரிந்து, தன்னைத்தான் உணரத் தன்மை தந்து கொண்டிருந்தது.

சில விநாடிகள், அமைதியாய் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துப் புகைத்தவாறே, தூரத்தில் பூந்தமல்லி ஐரோடில் நிற்கும் தனது சைக்கிள் ரிக்ஷாவையே வெறித்துப் பார்த்திருந்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் பேசினான் அவன்…

”இந்த ஆறு மாசமா நா ஒண்ணும் சம்பாதிக்கலம்மே! இன்னாத்த சம்பாதிக்கிறது? இன்னாத்துக்கு சம்பாதிக்கிறது? வண்டிய ரிப்பேருக்கு உடணும். மூணு மாசத்துக்கு மிந்தியே… பசி தாங்க லேன்னா ஒரு சவாரி. சவாரி போறதுக்கு மனசு இல்லேன்னா பட்டினி! இப்பிடியாம்மே நா இருந்தேன் இதுக்கு மிந்தி? இந்த மாதிரிக் கியிஞ்ச சட்ட போட்டுக் கினு இருப்பனாம்மே?” என்று அவன் நிமிர்ந்தபோது, ஒரு விநாடி அவன் மீது வீசிய தூரத்து ரயிலின் வெளிச்சத்தில் அவள் அவனை நன்றாகப் பார்த்தாள்.

பரட்டைத் தலையும், முகமெல்லாம் கட்டை பாய்ச்சி நின்ற தாடியும், வியர்வையில் ஊறிக் கிழிந்த சட்டையும், கிழிசலினூடே தெரிந்த எலும்பெடுத்த மார்பும்…

அவள் ஒரு குமுறலையே தனது பதிலாகச் சொல்லித் தலையை பிடித்து சற்றுக் குரலை உயர்த்தி அழுதாள்.

”இதுக்கோசரம் இன்னும் கொஞ்சம் அயுவாதம்மே! போனது போச்சு! நெதம் ராவும் பகலும் அந்தப் பொறுக்கி குடிச்சிட்டு வந்து ஒன்ன மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிறப்போ, ‘அடப்பாவி! உன் தலை எயுத்தா’னு எத்தினி நாளு நா அய்திருக்கேன் தெரியுமா? எவ்வளவு சீரா வாய்ந்தா… இப்படி மவ சீரழியறா ளேனு ஒரு அப்பங்கார மாதிரி, ஒரு அண்ணங்கார மாதிரி, ஆரோ ஒரு பரதேசி மாதிரி ஒனக்காக அய்து இருக்கேன்!

அந்த மாதிரிதான் இப்பவும் வந்திருக்கேன். உனுக்குத் தாலி கட்னவங்கிற மொறையில வரலே. உன் நல்ல காலம், இவ்வளவு சீக்கிரமே உன்ன அவன் ஒதைச்சி வெரட்டிப்பிட்டான். உன்ன ஊர்ல கொண்டு போயி உட்டுடறேன். நம்ப சாதி வயக்கப்படி பஞ்சாயத் துக் கூடி பேசி ரத்துப் பண்ணிட்டு வந்துடறேன். அப்புறம் உம் பாடு. நானும் வேற யாரையாவது பாத்துக்கினு நிம்மதியா வாய்ந்து டுவேன். ரெண்டு பேரும் வாய்நாள வீணாக்கிக்க வேணாம். இன்னா சொல்றே? சொல்றது இன்னா… எந்திரி, போவலாம்! பத்தரை மணிக்கு இருக்கு ரயிலு. அதான் நல்லது. உன்ன எனுக்கு நல்லாத் தெரியும். உம் மனசுக்கு நீ இன் னிக்கி இல்லேன்னா இன்னொரு நாளு வந்து இந்த ரயில்ல தலைய வுட்டுக்குவே. ஆமாம்… உனக்கு ஒலகம் தெரியாதும்மே! நீ கொயந்தம்மே. அதனாலதான் எனக்கு ஒம் மேலே கோவமே வரலே!”

”வேணாம், நான் ஊருக்குப் போகமாட்டேன். உன் கையா லேயே என்னை ரயில் முன்னே புடிச்சுத் தள்ளிடு. சத்தியமா, சந்தோசமா சாவேன். ஆமா, உன் கையால” என்று அவன் எதிரே எழுந்து நின்று, கதறி அழுதவாறு கைகூப்பிக் கெஞ்சினாள் அவள்.

”இன்னாம்மே சுத்தப் பைத்தி யமா இருக்கே! உன்ன ரயில்ல தள்றதுக்கா ஒங்க ஆத்தாளும் அப்பனும் உன்னிய எனுக்குக் கட்டி வெச்சாங்க?” என்று அவளைக் கண்டிப்பது போல் சற்றுக் குரலை உயர்த்திக் கத்தினான் அவன்.

”ம்… பொறப்படு, பொறப்படு! போவலாம்” என்று, கப்பிக்கல் குவியலின் மீதிருந்த அவன், இன்னும் இங்கேயே நின்றிருந்தால் அவளது தற்கொலை எண்ணமே வலுக்கும் என்ற உணர்வில், கீழே இறங்கினான்.

அவன் தன்னருகே வந்தவுடன் எழுந்து நின்ற அவள், அவன் முகத்தைத் தாங்கொணாத் துயரத்தோடும் ஏக்கத்தோடும் பார்த்தாள். அந்தப் பார்வையில் விளைந்த சோகம் கண்ணீராய்ப் பெருகிப் பார்வையை மறைத்தது. அவளால் தனது தவிப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. திடீரென அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டு ‘ஓ’வென்று கதறினாள்.

”என்னக் கொண்டு போயி நீ ஊர்ல விட்டாலும், இங்கேயே ரயிலு முன்னால தள்ளினாலும் ஒண்ணுதான். நானு பாயாப் பூட்டவள்” என்று அழுது புலம்பினாள்.

”இன்னாம்மே, இப்ப இன்னா நீ மட்டும் பெஸலா பாயா பூட்டே? மனுசாள்னா தப்பே பண்றதில்லியா, அப்படியும் இது தப்பே இல்லியே! புடிக்காத ஒருத்தனோட வாய முடியலேனு ஒருத்தி பூட்டா, அது தப்பா? போன எடமும் சரியில் லேன்றதுதான் நீ செஞ்ச தப்பு! சர்தான், ஊருக்கே போயி உனுக்குப் புடிச்சவனாப் பாத்துக் கட்டிக்கறது…”

”ஐயோ! என்னக் கொல்லாதி யேன். நானு உன்னப் புடிக்காம ஒண்ணும் ஓடிப் போவலே. ஏன் ஓடிப்போனேன்னு எனக்கே புரியலே. அல்பத்தனமா இன்னா இன்னாத்துக்கோ ஆசைப்பட் டேன். நீ இன்னா ரிக்ஸாக்காரன்தானே… என்னிக்கும் இதே கதிதான் உனுக்குன்னு யார் யாரோ சொன்னதக் கேட்டு… நீ சொன்னது மாதிரி பளபளப்புக்கு ஆசப்பட்டுப் பல்லைக் காட்டிப் பாயாப் பூட்டேன். பாவி… நான் பாவி…”

அப்போது சிக்னல் இல்லாத தால் மெதுவாக வந்து நின்ற மின்சார ரயிலின் வெளிச்சத்தில் இருவருமே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் முழுமையாகக் கண்டனர்.

அவன் கண்கள் சிறுத்து, முகமெல்லாம் அழுகையில் சுருங்கித் துடிக்க, வறண்ட உதடுகள் அசைய, கேட்டான்…

”அப்படியா..? நெசம்மாவா..? என்னப் புடிக்காம, என்னோட வாய இஸ்டமில்லாம நீ என்ன வுட்டுப் போவலியா? நெசம்மா சொல்லும்மே! இன்னம் உனுக்கு எம்மேல பிரியம்தானா? என்னோட வாய இஸ்டம்தானா?” என்று ஒவ்வொரு கேள்வியையும் குரலைத் தாழ்த்தித் தாழ்த்தி, கடைசியில் ரகசியமாக அவள் முகத்தருகே குனிந்து ‘இஸ்டந்தானா?’ என்றவாறு அவளது தோளை இறுகப் பற்றினாள்.

அந்தக் கேள்விக்கும் அந்த ஸ்பரிசத்துக்குமே காத்திருந்தவள் போன்று மெய்சிலிர்த்து இதயங் கனிந்து, ஆர்வமும் ஆவேசமும் கொண்டு அவன் மீது சாய்ந்து அவனைத் தழுவிக்கொண்டு அவள் அழுதபோது, காத்திருந்த ரயிலுக்கு சிக்னல் கிடைத்து நகர்ந்தது.

”மாமா… என்ன மன்னிப்பியா? நான் உனுக்குத் துரோகம் பண்ணிட்டுப் பாயாப் பூட்டவளில்லியா?”

”அட சீ, கய்தே! பெரிசா கண்டுப்பிட்டே! மனசு தங்கமா இருந்தாப் போதும்மே! நானு கூடத்தான் எவ்வளவோ பாயாப் போனவன், உன்னக் கட்டிக்கிறதுக்கு மிந்தி…”

”மாமா! ம்…”

”அட கய்தே! அய்வாதம்மே!”

”அப்பிடிக் கூப்புடு மாமா! நீ கய்தேன்னு மின்ன மாதிரி கூப்பிட்டப்புறம்தான் எனக்கு மின்ன மாதிரி நெனப்பும் ஆசையும் வருது. நடுப்புற நடந்ததெல்லாம் மறந்தே போவுது!”

”அட கய்தே! இதுக்குத்தான் கய்தே சொன்னேன், நீ கொய்ந்தே இன்னு!”

அவளை அவன் காதல் மொழி பேசிக் கொஞ்சுகிறான்.

அந்த பாஷை தரம் குறைந்திருக்கிறதா?

ஆமாம். பாஷை மட்டுமே மட்டமாக இருக்கிறது.

தரம் என்பது, பேசுகின்ற பாஷையை மட்டும் வைத்துக் கணிக்கப்படுவதா என்ன?

– 16-6-1963

Print Friendly, PDF & Email

4 thoughts on “தரக்குறைவு

  1. அருமையான கதை. சிறுகதை மன்னன் ஜெயகாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *