காதல் போயின்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 9,628 
 

மாறி ஆடும் பெருமாள் பிள்ளைக்குக் கோபம் என்பது வரவே வராது அவரை நன்கு அறிந்தவர்கள் இப்படிச் சொல்வது வழக்கம்.

“ஐயா, உம்முடைய பெயர் மாரியாடும் பெருமாள் என்றே எழுதப்பட வேண்டும். அதாவது, மாரியம்மன் வந்து ஆடுகிற பெரிய ஆள்! அதை விட்டுப் போட்டு, நீர் மாறியாடும் என்று எழுதுவதன் வயணம் என்ன? ஆட வேண்டிய பூடத்தை விட்டு விட்டு இடம் மாறி ஆடிய பெருமாளா? அல்லது ஒரு காலில் நின்று ஆடிக் களைத்து அப்புறம் கால் மாறி ஆடும் பெருமான் என்று அர்த்தமா?” என்று பிள்ளை அவர்களின் நண்பர் சுப்பையா முதலியார் வேடிக்கையாகவும் வினையாகவும் பேசுகிறபோது கூட அவர் கோபம் கொள்வது கிடையாது. “உங்களுக்கு வேலை என்ன?” என்று சிரித்து மழுப்பி விடுவார்.

அவ்வளவு தங்கமான மனிதரைக் கூட, பேயாக மாறி உக்கிரமாக ஆட வைக்கும் மந்திரம் போல் ஒரு சொல்” இருக்கத்தான் செய்தது. பிள்ளை அவர்களின் முன்னிலையில் “காதல் போயின் சாதல்” என்று சொன்னால் போதும், அவர் நிஜமான மாரியம்மன் கொண்டாடியாகவே மாறி விடுவார்.

“காதல் போயின் சாதலாம்! வெங்காயம் போனால் பெருங்காயம்! போங்கடா முட்டாள் பயல்களா! காதலித்து வாழ்வது என்று கிளம்புகிற இரண்டு பேர் வாழ முடியவில்லை யாம். அப்புறம் இரண்டு பேர் சேர்ந்து சாவது மட்டும் எப்படி நிச்சயமான வெற்றிச் செயலாக முடியுமோ தெரியவில்லை. வாழ்வது நம் கையில் இல்லை என்றால், சாவது மட்டும் நம் இஷ்டம்போல சித்தியாகக் கூடிய விஷயமாகவா இருக்கிறது!” என்ற ரீதியில் கனல் கக்கத் தொடங்குவார் அவர்.

இதற்குக் காரணம் மாறியாடும் பெருமாளை, ஏமாறிவிடும் சிறு பிள்ளையாக மாற்றிய காதலி எவளாவது இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறவர்கள் உண்மையை விட்டு விலகியே செல்கிறார்கள். அவருடைய மூத்த புதல்வன் மகிழ்வண்ண நாதன் தான் பிள்ளையைச் சீறி ஆடச் செய்யும் மகுடிநாதமாக வந்து வாய்த்தான்.

அவன் அவ்வாறு செயல் புரிவான் என்று பிள்ளை அவர்கள் கனவில் கூட எண்ணியதில்லை. “கல்லுளிமங்கன்” எனப் பலராலும் குறிப்பிடப்பட்ட இரண்டாவது புத்திர பாக்கியமான மகரநெடுங் குழைக்காதன் ஏறுமாறாக ஏதாவது செய்திருந்தால் அவர் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்.

மா.ஆ பெருமாள் பிள்ளைக்குத் தமிழ் மொழிமீது அபாரமான காதல் என்று சொல்வதற்கில்லை. அவர் தமது புதல்வர்களுக்கு அழகிய – இனிய – நீளப் பெயர்களைச் சூட்டிய காரணம், திருத் தலங்களில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் திருநாமங்கள் அவை என்பதனால் தான். மூன்றாவது மகன் பிறந்தால், அவனுக்குத் திருப்பாற்கடல் நம்பி எனப் பெயரிட வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். அவருடைய மனைவி ஆண்டாள் அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்று ஏமாற்றி விட்டாள். ஆயினும் “சூடிக் கொடுத்த நாச்சியார்” என்ற நீளப் பெயரிட்டு, பிள்ளை தமது ஏமாற்றத்தை ஒருவாறு மறைத்துக் கொண்டார்.

இவ்விதம் வாழ்க்கையில் குறுக்கிட்ட சிறு சிறு ஏமாற்றங் களையெல்லாம் சகித்துச் சமாளிக்கக் கற்றுக் கொண்ட பிள்ளை அவர்களின் மனமே முறிந்து போகும்படி அல்லவா அவருடைய செல்வ மகன் செயல் புரிந்து விட்டான்!

சீதை என்கிற பெண்ணை அவன் காதலித்தான்.

“பிள்ளையாண்டான் செய்த பெரும்பிழை அதுதான். அவன் குழல்வாய் மொழி என்றோ குறுங்குழல் கோதை என்றோ அல்லது அப்படிப்பட்ட நீண்ட பெயர் எதுவோ உள்ள பெண்ணைத் தேடிப் பிடித்துக் காதலித்திருக்கக் கூடாது? போயும் போயும் சீதை என்கிற “ஸிம்பிளான ஒரு பெயர் கொண்ட பெண்ணைக் காதலித்தானே! இது போன்ற சின்ன பெயரெல்லாம் நம்ம அண்ணாச்சிக்குப் பிடிக்காதே. அது பையனுக்குத் தெரியலியே! என்று சுப்பையா முதலியார் அடிக்கடி சொல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விட்டான் அவன்.

சுப்பையா முதலியார் இழவு வீட்டுக் கூட்டத்தில் கூட ஹாஸ்யமாகப் பேசும் பண்பு பெற்றவர். அவர் சுபாவத்துக்கு ஏற்ப, பேச்சிலே சுவை கூட்டிப் பேசினாரே தவிர, அதுதான் உண்மையான காரணம் என்று சொல்ல முடியாது.

மகிழ்வண்ணநாதன் சீதை என்ற பெண்ணைக் காதலித்து, அவளையே கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தது மா.ஆ. பெருமாள் பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் பெண்ணின் பெயர் சீதை என்று இருந்தது அதற்குக் காரணமல்ல; அந்தச் சீதை அவருடைய ஏழைத் தங்கை லட்சுமி அம்மாளின் மகளாக இருந்ததுதான் அவரது வெறுப்புக்குக் காரணமாகும்.

நிலைமை முற்றி நெருக்கடியாக மாறுகிறவரை பிள்ளை அவர்களுக்குப் பையனின் காதல் விவகாரம் தெரியவே தெரியாது. எல்லாம் முற்றிவிட்ட பிறகு சீறி விழுவது தவிர அவர் வேறு எதுவும் செய்ய முடியாத பராபரமாகி விட நேர்ந்தது. சீறினார், சிடுசிடுத்தார். “மட சாம்பிராணி காதலிக்கத்தான் காதலித்தானே – பெரிய இடத்துப் பெண்ணாக, பணக்காரன் மகளாகப் பார்த்துக் காதலிக்கப்படாது? பெரிய பண்ணை சீனிவாசம் பிள்ளை மகள் இல்லையா? கொளும்புப் பிள்ளைவாள் பேத்தி, மெத்தை வீட்டு ராமானுஜம் பிள்ளையின் மகள் – பெண்களா இல்லாமல் போனார்கள்? இவன் விடியா மூஞ்சி லட்சுமியின் மகள் சீதை மேலே எனக்குக் காதல் என்று முரண்டு பண்ணுகிறானே” என்று முணமுணத்தார்.

ஆரம்ப கட்டத்திலேயே விஷயம் அவருக்குத் தெரிய வந்திருக்குமானால், “டே பையா காதல் கீதல் என்பதெல்லாம் சரிதான். அது கல்யாணம் பண்ணுவதற்கு முந்தித் தான் வர வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் கிடையாது. கல்யாணம் ஆன பிறகு, கல்யாணம் செய்து கொள்கிற பெண் மீதும் காதல் ஏற்படலாம். நீகாதலியை மனைவியாக மாற்ற ஆசைப்படாமல், உனக்கு வாய்த்த மனைவியைக் காதலித்து உருப்படு. சந்தோஷமாக இரு!” என்று போதித்திருப்பார். வெறும் போதனையுடன் நின்று விடாமல், பணமும் நகையும் சொத்தும் சுகமுமாக வரக் கூடிய ஒரு பெண்ணையும் அவனுக்குக் கட்டி வைத்து மகிழ்வடைந்திருப்பார்.

ஆனால், அவர் வீட்டில் நடந்ததே அவருக்குத் தெரியாமல் போயிற்றே! அவருடைய தங்கை லட்சுமி அம்மாள் விதவையாகி, போக்கிடமின்றி, அண்ணனே கதி என்று நம்பி வந்து பிள்ளை அவர்களுடைய வீட்டிலேயே தங்கி விட்டாள். சமையல் வேலை முதல் சகல அலுவல்களையும் செய்து தான் அவள் வயிறு வளர்த்து வந்தாள். அவள் சூழ்ச்சி செய்து வீட்டிலே அதிகாரம் பெற்று ஆக்கினைகள் பண்ணுவதற்காகவே தன் மகளை மகிழ்வண்ணநாதனுக்குக் கல்யாணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறாள் என்றே பெரிய பிள்ளை கருதினார். ஆனால் அவருடைய மகனின் பிடிவாதத்துக்கு லட்சுமி அம்மாள் தூண்டுலுமல்ல; துணையுமல்ல.

“சீதை இல்லாமல் என் வாழ்க்கை வாழ்க்கையாக இராது. எனது வாழ்வில் ஒளி புகுத்தக் கூடியவள்.அவள் தான்” என்று அவன் உறுதியாக அறிவித்தபோது முதன்முதலாக அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தவள் அவள் தான். “விஷயம் இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்துவிடும் என்று எனக்குத் தெரியாமல் போச்சுதே” என்று அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

அந்த உண்மை – சீதை தனது துணைவியாக வந்தால்தான் வாழ்க்கை இனிமை மிகுந்த மலர்ச் சோலையாக அமையும் என்கிற ஞானம் – மகிழ்வண்ணநாதனுக்குப் பிடிபடுவதற்கே வெகு காலம் ஆயிற்றே! மற்றவர்களுக்கு அது முதலிலேயே விளங்காமல் போனது அதிசயமில்லைதான்.

மகிழ்வண்ணநாதனுக்கு அத்தை மகள் சீதையிடம் சின்னஞ் சிறு பிராயம் முதலே அன்பும் ஆசையும் இருந்ததாகச் சொல்ல முடியாது. சீதை சூரியன் குஞ்சாகப் பிறக்கவுமில்லை; சந்திரன் குஞ்சாக வளரவுமில்லை. ”மூதேவி! மூஞ்சியைப் பாரு! பனங்காய் மோரை!” என்றெல்லாம் அவனே பலமுறை பழித்திருக்கிறான். அத்தை மகள் என்ற உரிமையோடும், ஒருவித இளக்காரத்தோடும். அலட்சியமாக மதித்துக் கேலி பேசி அவளை அழ அழ வைத்திருக்கிறான். அந்தப் பெண்ணும் ஏச்சுக்கு ஏச்சும், பேச்சுக்குப் பேச்சும், சில சமயம் அடியும் கிள்ளும் கொடுப்பதற்குத் தயங்கியது இல்லை. அப்போது அவளிடம் அவனுக்கு ஆசையுமில்லை; நேசமும் இல்லை.

பாவாடையை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டிக் கொண்டு, திண்ணைக்கும் மண்ணுக்கும் தாவியவாறே, குரங்கே குரங்கே குற்றாலத்துக் குரங்கே! கொம்பை விட்டு இறங்கேன்” என்று கத்திக் கொண்டு, தோழிகளோடு குதியாட்டம் போட்ட போதெல்லாம், அவன் பார்வையில் அவளும் ஒரு குரங்காகத் தான் தோன்றினாள். கண்ணாம் பூச்சியும், ஒடிப் பிடித்தலும் ஆடிக் களித்த அத்தை மகள் அவன் கண்களுக்குக் கொடி யாகவோ மயிலாகவோ காட்சி அளித்ததில்லைதான்.

பச்சைப் பசிய வயலில் தலையெடுத்துக் காற்றிலே தவழ்ந்தாடும் “மூப்பன் கதிர்” மாதிரி, பருவம் அடைய வேண்டிய பிராயத்தில் சீதையும் தள தள வென்று வளமும் வனப்பும் பெற்றுத் திகழ்ந்தாள். பதின்மூன்று – பதினான்கு வயசுப் பாவாடை தாவணிப் பருவத்துக் குட்டி, வாலிபனாக வளர்ந்து கொண்டிருந்த மகிழ்வண்ணநாதனின் கண்களைக் கவர்ந்தாள். ஆயினும் கருத்திலே நிலையான இடம் பெற்றாளில்லை.

ஒரு சமயம் அவளுடைய சிநேகிதி ஒருத்தி சீதையைச் சீண்டுவதற்காக “அத்தான் பொத்தக்கடா, அழகுள்ள பூசனிக்காய்!” என்று வாயாடினாள். சீதை சீறினாள். “எங்க அத்தான் அப்படி ஒண்ணும் வண்டி கொள்ளாதபடி தண்டியும் சதையுமாக இல்லை. அவர் பொத்தக்கடாவுமில்லை; பூசனிக்காயுமில்லை” என்று வெடுவெடுத்தாள்.

“அப்போ உன் அத்தான் அழகு என்று நீயே மகிழ்ந்து போகிறே; இல்லையாடி சீதை?” என ஒரு வம்புக்காரி கிண்டல் பண்ணினாள்
.
அவ்வேளையில் அவன் தற்செயலாக அங்கு வந்து விடவும், தோழிகள் கை கொட்டிச் சிரித்தார்கள். சீதையின் முகம் செக்கச் சிவந்து, தணிந்து சிரிப்பு சிரித்தது. “சீதை கூட அழகாகத் தானிருக்கிறாள்” என்றது அவன் மனம்.

வேறொரு மாலை வேளையில், பொன் வெயில் சூழ்நிலைக்கு மினுமினுப்பு பூசிக் கொண்டிருந்தபோது, சீதை ஒரு தாம்பாளம் நிறைய அந்திமந்தாரைப் பூக்களைக் கொய்து திரும்பி வந்தாள். ஒரு இடத்தில் வெயில் தனது இனிய ஒளியை அவள் மீது பாய்ச்ச வசதி ஏற்பட்டது. மின்னும் தாம்பாளம் நிறையப் பளிச்சிடும் வண்ணப் பூக்கள் ஏந்தி வந்த பாவையும் அழுத்தமான நிறமுடைய பட்டுப் பாவாடையும் தாவணியுமே கட்டியிருந்தாள். அப்பொழுது அவளே அந்தியிலே பூதிதொளி ரும் புஷ்பக்கொடி போல்தான் விளங்கினாள் அவன் நோக்கிலே மகிழ்வு பூத்த அவள் முகம் வனப்பு மிகுந்த பூச்செண்டாகக் காட்சி தந்தது. எனினும் சீதையிடம் அவனுக்கு அளவிலா ஆசை ஏற்பட்டு விடவில்லை.

காதல், காதல் என்கிறார்களே அந்த அற்புதம் ஒருவனுக்கு ஒருத்தி பேரில் ஏன் திடீரென்று ஏற்பட்டு அவன் உள்ளத்தை யும், உணர்ச்சியையும் பாடாய்ப் படுத்துகிறது என்பதற்கு உரிய விளக்கத்தை எவரும் கண்டு பிடிக்கவில்லை. மகிழ்வண்ண நாதனுக்கு மட்டும் அது எப்படிப் புரியும்? ஆனால், சீதையின் தோற்றம் எப்பொழுது அவனைக் கவர்ச்சிக்கும் காந்தமாக மாறியது என்பதை அவன் நன்கு அறிவான்.
அவ்வூர்க் கோயிலில் வசந்த உற்சவத்தைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடாகி-யிருந்தது. புதிதாகப் பொறுப்பு ஏற்றிருந்த தருமகர்த்தா ஒரு “மேன் ஆப் ஐடியாஸ்!” பழைய திருவிழாவில் புதுமை புகுத்த ஆசைப்பட்டு அவர் நயமான வேலைகள் சில செய்திருந்தார். செய்குன்றுகள், செயற்கை அருவிகள், பூஞ்சோலை மின்விளக்குகள், உயர்ந்த ஒரு பீடத்தில் தவமிருக்கும் சிவபிரான் என்றெல்லாம் கலையாக அமைக்கப்பட்டன. சிவனின் தலையிலிருந்து செயற்கை நீரூற்று தண்ணிரை விசிறித் தெறித்தது. அதுதான் கங்கையாம்!

இந்த அற்புதத்தைக் கண்டு களிக்க ஊரே திரண்டு சென்றது. பக்கத்து ஊர்களிலிருந்தும் படை படையாக ஜனங்கள் வந்தார்கள். மகிழ்வண்ணநாதனும், தனது நண்பன் ஒருவனுடன் வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தான்.

“மான்களும் மயில்களும்”, வானவில் வர்ணஜாலம் காட்டும் மேனியரும் “பொம்மெனப் புகுந்து மொய்க்கும் இனியதோர் உலகமாக மாறியிருந்தது வசந்த மண்டபம். பகலில் சோலைகளிலும் நந்தவனங்களிலும் தனது ஆற்றலைக் காட்டும் வசந்தம் முன்னிரவிலே அந்த இனிய சூழலில் கொலுவிருந்தது போலும்!

திடீரென்று “அதோ பார் மகிழம்! ஒரு அழகி உன் மீது வைத்த கண்ணை மீட்க மறந்து போனாள்!” என்று நண்பன் உரைக்கவும், மகிழ்வண்ணநாதன் அத்திசையில் தன் விழியை எறிந்தான்.

அகல் விளக்குகளிடையே ஒரு குத்து விளக்குப் போலும், மலர்க் குவியல்கள் மத்தியில் ஒரு ரோஜா போலும் திகழ்ந்தாள் அவள். “யார்? நம்ம சீதையா?” என வியப்புற்றது அவன் மனம். ஆகா!” என்று அதிசயித்தது ரசனை உள்ளம். அவன் முகம் மலர்ந்து தன்னைக் கவனித்து நிற்பதை உணர்ந்ததும் அவளு டைய அகன்ற பெரிய விழிகள் கயலெனப் புரண்டன, மீண்டும் அவன் மீது மோதவதற்காக, அந்தப் பார்வை தான் அவனை இடர் செய்தது! அவன் உள்ளத்தில் அவள் இடம் பிடித்து விட்டாள்.

அவள் நின்ற நிலையை, அசைந்த அசைவுகளை, அவளது மோகனப் பார்வையை, முகத்தின் அழகை, விழிகளின் சுடரொளியை அவன் மறக்கவேயில்லை. அதன் பிறகு அவளே ஒரு படையெடுப்பாக விளங்கினாள். அவனை வென்று விட்டாள். அவளைத் தன்னவளாக்கிக் கொள்ளத் தவித்தான் அவன், சந்தர்ப்பங்கள் அவனது பார்வைக்கு விருந்தளித்தன. ஆசையைத் தூண்டி வந்தன.

இவை எதுவும் மாறி ஆடம்பெருமாள் பிள்ளைக்குத் தெரியாது. அவர் தமது மூத்த குமாரனுக்கு, பெரும் பணக்கார ரான திருமலைக்கொழுந்துப் பிள்ளையின் மகளை மணம் முடித்து வைக்க முன் வந்தபோதுதான், பையன் பெரிய அதிர் வெடியைத் தூக்கி அவர் எதிர்பாராத விதத்திலே விட்டெறிந் தான். “சீதை இல்லையென்றால் எனக்குக் கல்யாணமே வேண்டாம்” என்றான்.

மா.ஆ.பெருமாள் பிள்ளை போதித்தார். மிரட்டினார். முடிவாக, தம்மை நம்பியிருக்கும் யுவ யுவதியரின் மகிழ்ச்சியை விடத் தம்முடைய கெளரவம், அந்தஸ்து, பணத்தாசை முதலியனவே முக்கியம் என்று கருதுகிற ஒரு சில பெரியவர்களைப் போலவே திடமாக அறிவித்தார். “எலே மகிழம்! இந்தப் பெருமாள் பிள்ளையை உனக்கு நல்லாத் தெரியாதுடா. ஐயாவாள் உன் கண்ணிலே ஒரு செப்புச் சல்லி கூடக் காட்டமாட்டாக. ஆமா தெரிஞ்சுக்கோ. அந்த நத்தம் புறம்போக்கைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ நடுத் தெருவிலே நிற்க வேண்டியதுதாண்டா, அடேலேய்: ஆமா, ஐயாப்பிள்ளை உன்னைச் சந்தியிலே நிற்க வச்சிரு வாருடா, நிக்க வச்சிருவாரு!” என்று கூப்பாடு போட்டார்.

ஆனால் மகிழ்வண்ணன் அவருடைய பயமுறுத்தல்களுக் கெல்லாம் மசிய வில்லை. அவனுடைய நினைவெல்லாம் சீதையாக இருந்தாள், கனவெல்லாம் அவளாகவே நிழலாடினாள்.

சீதையும் இத்தகைய எண்ணத்தையும் வியப்பையும் அவன் உள்ளத்தில் தூண்டிவிடும் அழகுப் பாவையாக வளர்ந்து வந்தாள். மங்கைப் பருவம் அவள் மேனி முழுவதும் பொங்கி வழிந்தது; கண்ணின் பார்வையில் கவிதை கொட்டியது; இதழ்க் கடையின் குறும்புச் சிரிப்பு அவனையே கொத்தி எடுத்தது. அவள் தன் அத்தை மகள் என்பதில் அவன் பெருமை கொண்டான்; அவள் தன் உரிமை, அவளைத் தன்னுடைய வளாக வரித்துக் கொள்ளலாம் என்பதில் மட்டற்ற மகிழ்வே கண்டான். அவன் ஆசை வெள்ளத்துக்கு அணைபோட முயன்றார் தந்தை. அவர் முயற்சி வெற்றி பெறுவதாவது?

அவன் தனது உறுதியை எடுத்துச் சொன்னான். “வருவது வரட்டும்” என்றான். “சின்னஞ் சிறுசுகள் சந்தோஷமாக இருந்தால் போதும்” எனும் நினைப்புடைய தாய் ஆண்டாள் அம்மாளின் பேச்சு எடுபடவில்லை. சீதையின் அன்னை லட்சுமி அம்மாளோ அழுவதும், புலம்புவதும் மூலையில் இருந்த மூக்கைச் சிந்திப் போடுவதும்தான் தன்னால் ஆகக் கூடிய காரியங்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாள்.

“வெறும் பேச்சு பையனுக்கு புத்தி புகட்டாது. சொல்லைச் செயல்படுத்தினாலதான் தம்பியாயுள்ளெ அப்பா – சாமி என்று அலறி அடித்துக் கொண்டு வருவாரு, தங்கக் கம்பியாகி இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்குவாரு” என்று தீர்மானித்தார் பிள்ளை. வீட்டை விட்டு வெளியே போ என்று ஆணை காட்டியது அவர் விரல்.

மகிழ்வண்ணன் போனான். அவன் அழைப்புக்கு இணங்கி, சீதையும் அவனைப் பின் தொடர்ந்தாள். மாறி ஆடும் பெருமாள் பிள்ளை அவர்களின் வீடு, துக்க வீடாக மாறிக் களை இழந்து காணப்பட்டது.

அப்பொழுது முன்னிரவு நேரம். நிலவு இலேசாக அழு வழிந்து கொண்டிருந்தது. குளிர் காற்று சிலுசிலுத்தது.

மறுநாள் அழுகை நாளாகவே உதயமாயிற்று. இரவில் சினுசினுக்கத் தொடங்கிய தூறல் இடைக்கிடை பெரு மழையாகிப் பேயாட்டம் போட்டது. சற்று ஒயும். மீண்டும் சிணுங்கும். குளிர் குறையவே இல்லை. பகலின் விடிவும் அதே தன்மையில்தான் அமைந்தது.

“குழந்தைகள் எங்கே போனார்களோ; என்ன ஆனார்களோ!” என்று ஆண்டாள் அம்மாளின் உள்ளம் பதைபதைத்தது. லட்சுமியின் பேதை மனம் காரணம் புரியாக் கலவரத்தாலும் சோகத்தாலும் கனத்துக் கிடந்தது.

காலம் ஊர்ந்து கொண்டிருந்தது.

பன்னிரண்டு – ஒரு மணி இருக்கலாம். மாடு மேய்க்கச் செல்லும் ஒருவன் ஓடோடி வந்து மாறியாடும் பெருமாள் பிள்ளையிடம் ஒரு சேதி சொன்னான் –

ஊருக்கு வெளியே சிறிது தள்ளி, ரயிலடிக்குப் பாதை வளைந்து செல்கிற இடத்தில், ஒரு குன்று இருந்தது. பாறை என்றும், பொத்தை என்றும், “வெள்ளி மலை” என்றும் விதவிதப் பெயர் பெற்றிருந்த அவ்விடத்தில், குன்று தோறும் ஆடிடும் குமரன்” கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குன்றின் ஒரு பக்கம் செங்குத்தாக உயர்ந்து, கீழே பெரும் பள்ளம் உடையதாக இருந்தது. ஆபத்தான இடம் அது. மேலே நின்று வேடிக்கையாக எட்டிப் பார்த்து கால் வழுக்கி விழுந்தும், தற்கொலைத் திட்டத்தோடு செயல் புரிந்தும் “பரலோக யாத்திரை” மேற்கொண்டவர்களைப் பற்றி எப்பொழுதாவது அவ்வூரார் பரபரப்படைய வாய்ப்பு கிட்டுவது உண்டு.

அந்தப் பள்ளத்தில் சின்ன ஐயாவும் சீதை அம்மாளும் விழுந்து கிடந்ததைத் தற்செயலாகக் காண நேர்ந்த மாடு மேய்ப்பவன் எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் சொல்லியவாறே, பிள்ளைவாளிடம் வந்து சேர்ந்தான். விஷயமறிந்த பிள்ளையின் வாய் சொல்லிற்று, “சவங்க எக்கேடும் கெடட்டும்” என்று. எனினும், அவர் இதயம் பதைத்தது; உடல் படபடத்தது. வண்டியும் ஆட்களுமாக அவர் அங்கே போய்ச் சேர்ந்தார். பலரும் பலவிதமாய்ப் பேசாமல் இருப்பார்களா? பேசினார்கள்!, பேசினார்கள் !

ரயிலுக்குப் போகிற போக்கில், மழைக்கு ஒதுங்கியபோது இருட்டில் தடுமாறி, கால் வழுக்கி பள்ளத்தில் விழுந்திருக்கலாம் அவனும் அவளும் என்று ஒரு கட்சி. இரண்டு பெரும் பேசி மனப்பூர்வமாகவே விழுந்திருப்பார்கள் என்பது எதிர்க்கட்சி.

நோக்கம் எதுவாக இருந்திருப்பினும், விளைவு எதிர்பாராத தாக அமைந்து கிடந்தது. மகிழ்வண்ணநாதனோ, சீதையோ உயிரற்ற கட்டையாய் மாறிவிடவில்லை. ஆனால் –

மாறி ஆடும் பெருமாள் பிள்ளையின் வயிற்றெரிச்சலுக்கும் மன எரிச்சலுக்கும் வித்து இங்குதான் ஊன்றப்பட்டது.

சீதையின் முதுகெலும்பிலே பலமான அடி. மகிழ் வண்ணனின் கால்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

இருவரையும் வீட்டுக்கு எடுத்து வந்து வைத்திய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் பெருமாள் பிள்ளை. அவர் பொதுவாக நல்ல மனுசன்தான்; மனித உள்ளம் பெற்றவர் தான். பணத்தைத் தண்ணிராக வாரி இறைத்தார். ஆயினும், சீதை படுத்த படுக்கையிலேயே கிடக்க வேண்டியவளாகவும், மகிழம் நொண்டியாகவும் மாறுவதை எந்த வைத்தியமும் எவ்வளவு மருந்தும் தடுத்து நிறுத்த இயலவில்லை.

“பாவம்! இரண்டு பேரையும் இஷ்டம்போல் வாழ விட்டிருக்கலாம்” என்று பிள்ளை அவர்களின் மனச் சாட்சி உறுத்தத்தான் செய்தது. அதை மறைப்பதற்காக அவர் உறுமுவதை மேற் கொண்டார்.

“என்ன காதலோ! என்ன சாதலோ! மனிதர்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிற விதத்தில் வாழவும் முடிவதில்லை. வாழத்தான் முடிவதில்லை, செத்துப்போகலாம் என்று ஆசைப்பட்டால் அது எப்படி சாத்தியமாகும்? தங்களுக்கும் தொல்லை; இருப்பவர்களுக்கும் தொல்லைதான்!

நிரந்தர நோயாளிகள் இரண்டு பேரை வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலை மீது சுமந்து விட்டதனால்தான், மாறி ஆடும் பெருமாள் பிள்ளை சிடுசிடுக்கும் அண்ணாவியாகி விட்டார் என்று சிலர் சொல்வது வழக்கம். அந்தச் சுமையை அவரிடம் தள்ளிவிட்ட “காதல். காதல் போயின் சாதல்” என்கிற விதி அவரைப் பித்தராய் – பேயராய் மாற்றுவதும் இயல்பாயிற்று. அவர் கோபம் கொள்வதில் நியாயமில்லை என்று தள்ள முடியுமா என்ன?

– வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *