பான்யாவின் பயணம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 1, 2024
பார்வையிட்டோர்: 3,502 
 
 

பான்யா பறக்க ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு. அதிகச் சோர்வு காரணமாக, உடம்பு தளர்ந்திருந்துச்சு. இறக்கைகள் பிய்ந்துவிடுமோனு பயமும் வந்துச்சு.

எல்லாம் ஆன்யாவை நம்பி வந்ததன் பலன். ‘நகரத்துக்குக் குடிபெயர்ந்தே ஆகணும். அங்கேதான் நல்லா வாழமுடியும். சாப்பாட்டுக்குப் பஞ்சமே இருக்காது. வயித்தை நிரப்ப, விதவிதமான தின்பண்டங்கள் கிடைக்கும். நிறைய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும்’ என்றெல்லாம் சொல்லி, பான்யாவின் ஆசையைத் தூண்டிவிட்டது ஆன்யா.

யார் இந்த பான்யா, ஆன்யா?

ரெண்டுமே ஈக்கள். பொறந்ததிலிருந்தே நட்போடு பழகி, இணைபிரியாத நண்பர்களா இருக்காங்க. போன வாரம் ஒருநாள், திடீர்னு ஆன்யா காணாமப்போயிட்டா. மாட்டுத் தொழுவம், கடைவீதிக் குப்பை, கசாப்புக் கடை வாசல்ன்னு தேடிப் பார்த்துக் களைச்சுப் போச்சு பான்யா.

ஆனால், வெளியூர் போயிருந்த ஆன்யா, ஒரு வாரம் கழிச்சு உற்சாகமாகத் திரும்பி வந்துச்சு. சுத்திப் பார்த்துட்டு வந்த ஊர்கள் பற்றி கதை கதையா சொல்லிச்சு.

“வா, நம்ம நகரத்துக்குப் போகலாம். பால், பழங்கள், சக்கரை, பலகாரம் எல்லாம் கிடைக்குது. ஜனத்தொகை அதிகம் உள்ள ஊர்களில் சுகமா வாழலாம். பிரச்னையே இருக்காது” என்று தேன் பூசிய வார்த்தைகளால் நண்பன் பான்யாவை மயக்கிருச்சு.

பேசிவெச்ச மாதிரியே, ரெண்டு ஈக்களும் வெளியூர் பயணத்துக்குக் கிளம்பினாங்க. வேர்த்து விறுவிறுக்கப் பறந்து பறந்து நகரத்துக்கு வந்து சேர்ந்தாங்க. குட்டியூண்டு உடம்பைத் தூக்கிட்டிப் பறக்கமுடியாத பான்யாவைப் பார்த்துச் சமாதானம் செஞ்சு பேசிச்சு ஆன்யா.

“இன்னும் கொஞ்ச தூரம்தான். பெரிய பஜாருக்குள்ளே நுழைஞ்சுடலாம். ம்ம்ம்.. சோர்ந்து போகாதே பான்யா”

“நிறுத்து, ஆசைகாட்டி ஆசைகாட்டியே பகல் முழுக்க அலைய விட்டுட்டே. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கணும்”

கடுமையான கோபத்தில் இருந்தது பான்யா. என்னதான் செய்றது? ஆன்யா காட்டப்போற அதிசயங்களைப் பார்த்துருவோம் என்ற ஆசையும் விடலை. பசி வயிற்றைக் கிள்ளிச்சு.

“பொறுமையா இரு. பிரமாதமான விருந்து கிடைக்கும்’’ என்ற ஆன்யாவின் சமாதான வார்த்தையைக் கேட்டு ஆறுதல் அடைந்தது பான்யா.

ஈக்கள் இரண்டும் பஜாரை வந்தடைந்தன. பசும்பாலில் தயாரித்த நெய் வாசம் மூக்கைத் துளைக்க, இரண்டு ஈக்களும் நெய் விற்பனைக் கடைக்குள் நுழைந்தன. கடைக்காரர் நெய் பாத்திரத்தை மூடிவெச்சிருந்தார். வாடிக்கையாளர்கள் வரும்போது, மூடியைத் திறந்து கரண்டியால் நெய்யை எடுத்து ஊற்றிக்கொடுத்துவிட்டு மறுபடியும் மூடிவைத்தார்.

பான்யாவுக்குப் பெருத்த ஏமாற்றம். மூக்கு நிறைய வாசனை பிடித்ததுதான் மிச்சம். ஒரு துளி நெய்கூடச் சுவைக்கக் கிடைக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் நாக்கைச் சப்புக்கொட்டியபடி இருப்பது? “ச்சே” எனச் சலித்துக்கொண்டது.

“சரி, வா… அதோ தர்பூசணிக் கடை இருக்குது” என்றது ஆன்யா.

இரண்டு ஈக்களும் மலைபோலக் குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணிக் கடைக்குள் நுழைந்தன. கடைக்காரர், ஒரே ஒரு பழத்தைப் பல கீற்றுகளாக வெட்டிவைத்திருந்தார். ஆனால், அவற்றை ஈக்கள் மொய்க்காதபடி வலைக்கூடையைக் கவிழ்த்திருந்தார்.

ஒரு சிறுவன் சாப்பிட்டுக் கீழே போட்ட சின்னத் துண்டில், எல்லா ஈக்களும் போட்டியிட்டு உட்கார்ந்தன. கூட்டத்துக்கு மத்தியில் நுழைய எவ்வளவோ முயற்சி செய்து பான்யா தோற்றுப்போச்சு. பசி மயக்கம்.

“நாம நெனச்சபடி ஒண்ணும் நடக்கல. நடக்கவும் நடக்காது. இதெல்லாம் வீண் ஆசை” என அலுத்துகிச்சு பான்யா.

“இப்படி யோசிசுட்டே இருந்தா பயன் இல்லை. ஒரு வாய் சாப்பிடலைன்னா செத்தா போயிருவோம். இப்படி ஓர் அனுபவமும் வாழ்க்கைக்குத் தேவைதான்” என்றது ஆன்யா.

கோடையின் கதகதப்பு குறையாத கடைத்தெருவின் மறுமுனைக்கு, ஈக்கள் இரண்டும் பறந்து கரும்புச்சாறு விற்கும் நடைவண்டியைச் அடைந்தன.

கரும்புச்சக்கை கொட்டிக்கிடந்த பிரம்புக்கூடையில், ஏராளமான ஈக்கள் உட்கார்ந்திருந்தன. ‘நீயா நானா?’ எனப் போட்டி போட்டு ஒன்றின்மேல் ஒன்று விழுந்து சண்டையிட்டபடி இருந்தன. அந்தக் காட்சியைக் கண்ட பான்யா திகைச்சுப்போய் நின்னது.

‘‘ஐயோ ஆன்யா! இதென்ன வாழ்க்கை? போட்டி, சண்டை, வம்பு, கூச்சல், குழப்பம்… இப்படி அநாகரிகமா, போட்டி நிறைந்த உலகத்தில சுகத்தை எதிர்பார்க்கிறது நல்லாயில்லே’’ என்று ஆதங்கத்தை எடுத்துச் சொன்னது பான்யா.

அதேநேரம் கரும்புச்சாறு பாத்திரத்துக்கு மேலே பறந்து வந்து உட்கார்ந்தது ஆன்யா. கடைக்காரர் தோளிலிருந்த துண்டை எடுத்து வீசினார். அவ்வளவுதான்… புயலில் சிக்கின மாதிரி பல அடிகள் தள்ளிப்போய் விழுந்துச்சு. அதனிடம் அசைவில்லை.

ஆன்யா அருகில்போய் சில நொடிகள் கண்ணீர் விட்ட பான்யாவுக்கு அதுக்கு அப்புறம் அங்கிருக்கப் பிடிக்கல. பழைய இருப்பிடத்தை ஞாபகம்வெச்சுப் பறக்க ஆரம்பிச்சது. வழியில் ஒரு நாவல் மரத்தடியில் நசுங்கிக்கிடந்த பழத்தைச் சாப்பிட்டுப் பசியாறிச்சு.

மறுநாள் காலையில், ஒரு மாட்டுத் தொழுவத்தை வந்தடைந்துச்சு. ஒரு பாட்டி, பசுவுக்குப் புண்ணாக்கு வைத்துவிட்டு, கன்றுக்குட்டிக்குக் கையளவு வைக்கோல் வைத்தார். அவர் நகர்ந்துபோனதும், பசுவின் மடியில் பறந்துசென்று உட்கார்ந்துச்சு பான்யா. கன்றுக்குட்டி குடிச்சு மிச்சமாக ஒட்டியிருந்த ஒரு துளி பாலைக் குடிச்சதும் அதற்கு வயிறு நிரம்பியது.

“வாழ்க்கையில் நாம நிறைய எதிர்ப்புகளை உருவாக்கிக்கிறோம். அதுதான் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் கொடுக்குது. நமக்கான தேவையை இயற்கையிடமிருந்து அளவோடு எடுத்துக்கிட்டாலே நிம்மதியா சந்தோஷமா வாழலாம் எனப் புரிஞ்சது.

பசுவுக்கும் கன்றுக்கும் நன்றி சொல்லிட்டு உற்சாகமாகப் பறந்துச்சு பான்யா.

– மார்ச் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *