எக்கேலுவின் கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 16, 2024
பார்வையிட்டோர்: 661 
 
 

ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் சம்பவம் நடந்தது. சிறையில் வளர்ந்த தாடியை மழிக்கக்கூடாது என்பது அதிகாரிகளின் கூடுதல் தண்டனை. ஆகவே அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் பிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித்தரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். ஜேர்மன்காரர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, அன்றாடம் செலவுக் கணக்கு எழுதி வைப்பது. இரண்டு, பீர் குடிப்பது. இரண்டாவது குறிக்கோள்தான் அவருடைய சிறைவாசத்துக்கு காரணம்.

பிரெடரிக் வேலை செய்தது சோமாலிலாண்ட் எனும் நாட்டில். இது சோமாலியாவில் இருந்து தனியாகப் பிரிந்து, உலகத்தில் வேறு எந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படாமல், சோமாலியாவுக்கும், எத்தியோப்பியாவுக்கும், இந்து சமுத்திரத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட குட்டி நாடு. பிரெடரிக்கின் மனைவி அமெரிக்கக்காரி, பெயர் மார்த்தா. சோமாலிலாண்டில் குடிவகை தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே பிரெடரிக் ரகஸ்யமாக வீட்டிலே சோளத்திலிருந்து பீர் தயாரித்து இரவு நேரங்களில் அருந்துவார். ஒருவருடமாக வாழ்க்கை நிம்மதியாகப் போனது. ஒருநாள் போலீஸ் எப்படியோ இதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இரண்டு மாதம் சிறையில் இருந்துவிட்டு நீண்ட தாடியுடன் அவர் வீடு திரும்பினார்.

பிரெடரிக் தம்பதிகளின் வேலைக்காரி அதிகாலை சந்தைக்குப் போனவள் அலறிக்கொண்டு திரும்பி வந்தாள். அழுதபடியே மார்த்தாவிடம் ஏதோ சொன்னாள். மார்த்தாவும் அவளுடன் சந்தைக்கு ஓடினார். அங்கே வழக்கத்திலும் பார்க்க சனக்கூட்டம் சேர்ந்துவிட்டது. 100, 200 பேர் சுற்றிவர நின்றார்கள். மார்த்தா இடித்து முன்னேறி எட்டிப் பார்த்தார். அவர் இருதயத்தை யாரோ பிய்த்துப் போட்டது போல இருந்தது. சாக்குத்துணியில் சுற்றி அப்பொழுதுதான் பிறந்த சிசு ஒன்று வீதியிலே வீசப்பட்டிருந்தது. எறும்புகளும், ஈக்களும் மொய்த்தன. கண்கள் மூடியிருந்தாலும் குழந்தை முனகும் சத்தம் கேட்டது. மூன்று குட்டி விரல்கள் வெளியே நீட்டின. பார்ப்பவர்கள் மனதை உருக்கும் காட்சி அது. ஊர்த்தலைவர் கட்டளையிட்டிருந்தபடியால் ஒருவராலும் சிசுவை அணுக முடியவில்லை.

மார்த்தாவிடம் டெலிபோன் வசதி கிடையாது. ரேடியோவில் கணவரைத் தொடர்பு கொண்டார். நீண்ட தாடி இருந்ததால் ஊர் தலைவருக்கு அவரிடம் மரியாதை இருந்தது. ஆனால் சிசுவை ஒருவரும் தொடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பிரெடரிக்கின் மேலதிகாரிகள் ஜெனீவாவைத் தொடர்புகொண்டு அவர்கள் மூலம் அரசாட்சியில் இருந்தவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ரோட்டில் கிடந்த குழந்தையை மார்த்தா மீட்டபோது பின்மதியம் மூன்று மணி. ஊர்த்தலைவரும், மக்களும் அவரை வெறுப்புடன் பார்த்தார்கள். வீடுவரை தொடர்ந்து மிரட்டினார்கள். அவர் பொருட்படுத்தவில்லை; பயந்ததாகக் காட்டவுமில்லை. வீடு வந்தபின்னர்தான் குழந்தை ஆண் என்பதைக் கண்டுபிடித்தார். எகேலு என்று பெயர் சூட்டினார். ஹாவாய் மொழியில் அதன் பொருள் மூன்று. கணவர் கேட்டதற்கு சொன்னார். ’இன்று தேதி மூன்று. நேரமும் மூன்று. குழந்தை மூன்று விரல்களை காட்டி என்னை அழைத்தது.’

குழந்தையின் சுவாசப்பை மெல்ல மெல்ல மூச்சுவிட தானாகவே கற்றுக்கொண்டது. எகேலு திடீரென்று விக்கி ஒரு கணம் விழித்தான். அந்தக் கணத்தில் மார்த்தாவுக்கு அந்த விழிகள் நன்றி சொன்னதுபோல பட்டது. ஆரம்பத்தில் இருந்தே எகேலு வித்தியாசமானவன் என்ற நினைப்பு மார்த்தாவுக்கு இருந்தது. அவன் சிரிப்பது கிடையாது. பசிக்கு அழுவதும் இல்லை. பலவந்தமாக பாலை ஊட்டினால்தான் உண்டு. அவன் பார்வை எதையும் பார்க்காத பார்வை. ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல இருக்கும். நடுச்சாமத்தில் சிலவேளை மார்த்தா விழித்துக்கொண்டு குழந்தையை பார்ப்பார். அது தூங்காமல் நெடுநேரம் கிடக்கும். அந்தக் கண்கள் எங்கோ தூரத்தில் நிலைத்திருக்கும்.

தவழத் தொடங்கியதும் குழந்தை வீடு முழுக்க நகர்ந்து ஆராய்ந்தது. பிரெடரிக்கிடம் நிறையப் புத்தகங்கள் இருந்தன. எகேலு புத்தகங்களை ஒவ்வொன்றாக இழுத்துப் பார்ப்பான். கிழிக்காமல், கசக்காமல் பக்குவமாக ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவான். விளையாட்டுச் சாமான்கள் அவனுக்கு தேவையே இல்லை. ஒரு புத்தகத்தை கொடுத்தால் போதும். அதனுடனே அன்று முழுவதும் கழிப்பான்.

ஒன்றரை வயது மட்டும் அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியது கிடையாது. சோமாலிலாண்ட்டின் தலைநகரமான ஹர்கீசாவுக்கு சென்று அங்கே அவனை மருத்துவரிடம் காட்டலாமா என கணவனும் மனைவியும் ஆலோசித்தார்கள். ஆனால் அதற்கு அவசியம் இருக்கவில்லை. ஒருநாள் இரவு வழக்கம்போல மூவரும் மேசையில் அமர்ந்து உணவருந்தினார்கள். உயரமான நாற்காலியில் உட்கார்ந்து எகேலு கரண்டியால் உணவை எடுத்து வாயில் வைத்தான். அவன் கண்கள் மட்டும் எங்கோ தூரத்தில் சஞ்சரித்தன. பிரெடரிக் நெஞ்சுவரை வளர்ந்துவிட்ட தாடியை தன் மேல் சட்டைக்குள் நுழைத்துவிட்டு, மாட்டிறைச்சியை வெட்டி வாயில் வைத்தார். பின்னர் வாழைப்பழத்தை கடித்துக்கொண்டு மேசையில் தாளம்போட்டு மகனுக்கு விளையாட்டுக் காட்டினார். ‘நிறுத்து. நான் சிந்திக்கிறேன் அல்லவா?’ என்று சுத்தமான ஜேர்மன் மொழியில் எகேலு வாயை திறந்து பேசினான். பிரெடரிக்கின் கை அரை அடி உயரத்தில் மேசைமேல் அப்படியே நின்றது. மார்த்தா வாயில் வைத்த உணவை விழுங்கவில்லை. ’என்ன சொன்னாய், மகனே?’ என்று அதிர்ச்சி நீங்காமல் பிரெடரிக் கேட்டார். மறுபடியும் எகேலு அதையே சொன்னான்.

அன்று மார்த்தாவும் பிரெடரிக்கும் நீண்ட நேரம் எகேலு பற்றி விவாதித்தார்கள். மேற்கொண்டு என்ன செய்வது என்று மட்டும் அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அடுத்தடுத்து வந்த நாட்களில் ஜேர்மன் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் அவன் தடங்கல் இல்லாமல் பேசுவது தெரியவந்தது. மற்றக் குழந்தைகள்போல வார்த்தை வார்த்தையாக அவன் பேசவில்லை. வசனங்களை இலக்கண சுத்தமாக அமைத்து நிதானமாகப் பேசினான். இவன் அபூர்வமான குழந்தை என்று உணர்ந்த பின்னர் பிரெடரிக் இன்னும் அதிக கவனம் எடுத்தார். எழுத்துக்களையும் அவற்றின் உச்சரிப்பையும் சொல்லிக் கொடுத்தபோது முதல் தடவையாக எகேலுவின் முகத்தில் மகிழ்ச்சி விளையாடியது. புத்தகப் பக்கங்களை சும்மா திருப்புவது போய் எழுத்துக்கூட்டி தானாகவே அவற்றை படிக்க ஆரம்பித்தான்.

அவனுக்கு பேச்சு வந்தாலும் அவன் தொடர்ந்து பேசுவது கிடையாது. நீண்ட மௌனம்தான். இன்னது செய்வான், இன்னது செய்யமாட்டான் என்றும் சொல்லமுடியாது. தினம் தினம் ஆச்சரியப்படுத்தினான். ஒரு நாள் மதியம் அகாசியா மரத்தின் கீழ் நின்றபோது ’அம்மா’ என்றான். மார்த்தாவுக்கு திக்கென்றது. ’புறப்படு. மழையை பார்க்கப் போவோம்.’ ‘மழையா, அது என்ன?’ என்றார் மார்த்தா. ‘அதற்கு உருவம் கிடையாது. நிறம் கிடையாது. எல்லை கிடையாது. திசை கிடையாது. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது. மிருதுவானதும் அழகானதும். ஆகாயத்தின் மணம் அதில் இருக்கும்.’ ‘அப்படியா?’ என்றார் மார்த்தா. அவரால் வேறு பதில் தயாரிக்க முடியவில்லை.

இன்னொரு நாள் அம்மா என்றான். மார்த்தா அதிர்ச்சியை ஏற்பதற்கு தயாராக முகத்தை மாற்றிக்கொண்டு நின்றார். ’ஒரு முறை நீ எனக்கு பால் பருக்கியபோது சூடான பாலைத் தந்தாய். எனக்கு வாய் வெந்து விட்டது. நான் கதறிக் கதறி அழுதேன்’ என்றான். ’ஆமாம். தவறுதலாய் செய்துவிட்டேன். உனக்கு அப்போது மூன்று மாதம். எப்படித் தெரியும்?’ என்றார். ’எனக்கு ஞாபகம் இருக்கு. ஆனால் அப்போது என்னால் பேசமுடியவில்லை. நீ பாலைப் புகட்ட வரும்போது நான் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டுவது அதனால்தான். எங்கே சூடான பாலைத் தந்துவிடுவாயோ என்ற பயம்தான்.’ ’மன்னித்துவிடு, எகேலு’ என்றாள் மார்த்தா. அவன் பார்வை பல மைல்கள் தூரத்துக்கு போய்விட்டது.

ஒருநாள் எகேலுவை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். அவர் சோதனைகள் செய்து முடித்த பின்னர் கூறினார். ’இவன் அபூர்வமான குழந்தை மேதை. அதுதான் இவன் மனம் எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையின் வசம் இருக்கிறது. அதை கெடுக்கும் விதமாக ஏதாவது செய்யவேண்டாம். நீங்கள் ஒன்றுமே கற்பிக்கத் தேவையில்லை. அவனாகவே கற்றுக்கொள்வான். வசதிகளை மட்டும் செய்து கொடுங்கள். இசைமேதை மோசார்ட் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர் சிறுவனாக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அந்தக் காலத்தில் பிரபல இசை மேதையாக இருந்தவர் பெயர் கிரிகோரியோ. அவர் அபூர்வமான இசைக்கோவை ஒன்று தயாரித்து அதை போப்பாண்டவர் முன்னிலையில் இசைத்துக் காட்டினார். அந்தக் கூட்டத்தில் சிறுவன் மோசார்ட்டும் இருந்தான். அன்று வீட்டுக்கு திரும்பிய மோசார்ட்டால் இரவு தூங்கவே முடியவில்லை. அவன் கேட்ட இசை காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த இசையின் குறிப்புகளை ஞாபகசக்தியில் இருந்து அப்படியே மீட்டு இரவிரவாக எழுதினான். காலையானபோது அந்த அற்புதமான இசைக்கோர்வை முழுவதையும் திரும்பவும் படைத்துவிட்டான். உங்கள் மகனும் பெரிய மேதை. அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவன் வழியிலேயே விடுங்கள்’ என்றார்.

ஒவ்வொரு நாளையும் எகேலு புதிய நாளாக மாற்றினான். ஒரு விடுமுறை நாள் வீட்டுத் தோட்டத்தில் உட்கார்ந்து மூவரும் வேடிக்கை பார்த்தார்கள். பெற்றோரின் சம்பாசணையில் அவன் கலந்து கொள்வதில்லை. வழக்கம்போல புத்தகம் ஒன்றின் பக்கங்களை திருப்பியபடி இருந்தான். வீட்டிலே உள்ள புத்தகங்கள் முடிந்துவிட்டதால் வெளிநாட்டில் இருந்து நூல்களை வரவழைத்துக் கொடுத்தார் பிரெடரிக். எதை படித்தாலும் அதை அவன் மறப்பதில்லை. இன்ன புத்தகம் வேண்டும் என்று அவன் கேட்பதுமில்லை. அன்றும் அப்படித்தான் ஏதோ ஒரு புத்தகத்தை கையில் வைத்து பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டிருந்தான்.

மஃரிப் தொழுகைக்கான அழைப்பு காற்றில் வந்தது. ஓர் அம்பு எய்தால் அது விழும் இடம் தெரியவேண்டும். அதுதான் மஃரிப் தொழுகைக்கான நேரம். பகல் முடியவில்லை, இரவு தொடங்கவில்லை. பிரம்மாண்டமான பறவை ஒன்று சத்தமிட்டபடி மேலே பறந்துபோனது. எகேலு ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு ’அது கோரிபஸ்டார்ட் பறவை. எங்கேயோ பக்கத்தில் நிலத்திலே குழிபறித்து முட்டை இடப்போகிறது. உலகிலேயே அதிக எடைகொண்ட பறக்கக்கூடிய பறவை இதுதான்’ என்றான். இத்தனைக்கும் அவன் அந்தப் பறவையை இதற்கு முன்னர் கண்டது கிடையாது. எல்லாம் எங்கேயோ புத்தகத்தில் படித்ததுதான்.

அடுத்து நடந்த சம்பவத்துக்கு பின்னர்தான் நைரோபிக்கு மாற்றல் கேட்கவேண்டும் என்ற எண்ணம் தம்பதிகளுக்குத் தோன்றியது. வருமான வரி கணக்கு சம்பந்தமாக பிரெடரிக் ஏதோ எழுதியவர் பாதியில் மார்த்தாவை அழைத்து ’எங்கள் கூட்டு வருமானத்தில் 23 சத வீதம் எவ்வளவு?’ என்று கேட்டார். மார்த்தா கல்குலேட்டரை தேடியபோது ஏதோ சிந்தனையில் இருந்து விடுபட்ட எகேலு சரியான விடையை சொன்னான். அவனுக்கு 1, 2, 3 என எண்களை யாரும் கற்றுக் கொடுத்தது கிடையாது. தானாகவே எங்கேயோ படித்து கணித அறிவை வளர்த்திருந்தான். ’எப்படித் தெரியும்?’ என்றெல்லாம் கேட்கமுடியாது. ’எப்படியோ தெரியும்’ என்றுதான் பதில் வரும்.

அவர்கள் மாற்றல் கேட்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ’ஒரு மாதம் முன்னர் நைரோபியில் அமெரிக்க தூதரகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் பலியாகியுள்ளனர். சில அமெரிக்கர்கள் வீடு திரும்பிவிட்டார்கள். அங்கே தொண்டு நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை. உங்களுக்கு அங்கே போகச் சம்மதமா?’ என்று மேலதிகாரி எழுதிய கடிதம் வந்தது. உடனேயே சம்மதம் தெரிவித்து பிரெடரிக் எழுதினார். நைரோபி வந்ததும் முதல் வேலையாக தாடியை மழித்தார். எகேலுவுக்குகூட அவரை அடையாளம் தெரியவில்லை. அவனுடைய மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாடிய சில நாட்களில் பிரபலமான மனநல மருத்துவர் ஒருவரைப் போய்ப் பார்த்தார்கள். சோமாலிலாண்ட் மருத்துவரைப் போலவே அவரும் ’ஒன்றுமே செய்யவேண்டாம். பையன் அவன் வழியிலேயே வளரட்டும். அவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு’ என்று நம்பிக்கையூட்டினார்.

மருத்துவ மனையின் நாலாவது மாடியிலிருந்து கீழே இறங்கி வரவேற்பறையை தாண்டியபோது பெரும் சத்தம் கேட்டது. அந்தக் காட்சியை கண்டு மூவரும் செய்வதறியாது உறைந்து போனார்கள். தரையிலே ஒரு பெண் உருண்டு கொண்டிருந்தாள். நீள முரட்டுத் துணியினால் உடம்பை சுற்றியிருந்ததால் அவள் ஒரு சோமாலியப் பெண் என ஊகிக்க முடிந்தது. அவள் ஏன் கத்துகிறாள், என்ன மொழியில் பிதற்றுகிறாள் என்பது ஒருவருக்கும் புரியவில்லை. மருத்துவமனை காவலாளி அவளை சத்தமிடவேண்டாம் என அதட்டினான். அவளுடைய ஓலம் ஆஸ்பத்திரியை நிறைத்தது.

மார்த்தாவின் கையை உதறிவிட்டு அந்தப் பெண்ணிடம் ஓடினான் எகேலு. அவளிடம் ஏதோ கேட்டான். அவள் பதில் சொன்னாள். மீண்டும் எதோ கேட்டான். அவர்கள் சம்பாசணை தொடர்ந்தது. காவலாளி அதைப் பார்த்து திகைத்துப்போய் நின்றான். எகேலு வரவேற்பறை பெண்ணிடம் ஆங்கிலத்தில் அந்தப் பெண் சொன்னதை விவரமாகச் சொன்னான். ’அந்த அம்மாவின் கணவர் ரோட்டிலே வலியில் துடித்து மயங்கிக் கிடக்கிறார். உடனே உதவி கிடைக்காவிட்டால் அவர் உயிர் போய்விடும். அவசர கவனிப்பு தேவை.’

அடுத்த நிமிடம் ஆஸ்பத்திரி பரபரவென்று இயங்கியது. மனிதரை உள்ளே கொண்டு வந்து அவசர சிகிச்சை அளித்தார்கள். மருத்துவர் சொன்னார் ’இன்னும் ஒரு நிமிடம் தாமதித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கவே முடியாது.’ அடுத்தநாள் பத்திரிகைகள் அந்த சம்பவம் பற்றி எழுதின. சில பத்திரிகையாளர்களும், டிவி சானல்களும் எகேலுவை பேட்டி கண்டன. எகேலு ஜேர்மன் மொழியிலும், ஆங்கிலத்திலும், ஸ்வாஹிலியிலும் எதுவித தயக்கமும் இன்றி பேட்டி அளித்தான். ஒரே நாளில் எகேலு நாட்டில் மிகப் பிரலமாகிவிட்டான்.

எகேலுவுக்கு பள்ளிக்கூடம் தேவையில்லை, அவன் வீட்டிலேயே படிக்கலாம் என்பதில் பிடிவாதமாக இருந்தார் மார்த்தா. அவன் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவனுக்கு எழுத்து வராது. தன் பெயரைக்கூட எழுதத் தெரியாது. வீட்டிலேயே எழுதப் படிப்பிக்கலாம் என மார்த்தா நினைத்தார். மனநல மருத்துவர் வேறு மாதிரி அபிப்பிராயப் பட்டார். ’அவன் சமுதாயத்தில் வளர வேண்டியவன். பள்ளிக்கூடத்தில் அவன் புதிதாக ஒன்றையுமே கற்கப் போவதில்லை. ஏற்கனவே கற்றுக் கொண்டதைத்தான் கற்பிப்பார்கள். ஆனாலும் வகுப்பிலே மற்ற மாணவர்களோடு பழகுவது அவனுக்கு உலகத்தை கற்றுக் கொடுக்கும்’ என்றார்.

மார்த்தா மழலையர் பள்ளிக்கூடத்தை நோக்கி எகேலுவுடன் நடந்தார். விண்ணப்ப படிவத்தை ஏற்கனவே நிரப்பியிருந்தார். அனுமதி பொறுப்பாளர் எகேலுவைப் பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தார். ’வருக, வருக’ என்று வரவேற்றார். ’எகேலு என்றால் பொருள் மூன்று அல்லவா? இப்பொழுது உனக்கு மூன்று வயது நடக்கிறது. அப்ப சரி. நாலு வயது நடக்கும்போது உன் பெயரை நாலு என்று மாற்றுவாயா?’ ஒரு நகைச்சுவைக்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார். மார்த்தாவுக்கு எரிச்சலாக வந்தது. இதுவா பள்ளிக்கூடம்? குழந்தையிடம் ஓர் ஆசிரியர் இப்படியா பேசுவது? நிலத்தை பார்த்துக்கொண்டு எகேலு பேசினான். ‘உங்களுடைய பெயர் பாட்ரு என்று வெளியே கதவில் எழுதியிருக்கிறது. பாட்ரு என்பது ஸ்வாஹிலி அல்ல, அரபு வார்த்தை. பூரணசந்திரன் என்று பொருள். உங்கள் முகம் சந்திரன் போலவும் இல்லை. பிரகாசமும் கிடையாது. வெறும் இருட்டுத்தான்’ என்றான். யாரோ ’கெக்’ என்று சிரித்தார்கள். எகேலு கையைப் பறித்துக்கொண்டு வெளியே ஓட, மார்த்தா அவனைத் தொடர்ந்தார்.

வீடு திரும்பும் வழியில் எகேலு பேசினான். ‘அம்மா, சாக்கிலே சுற்றி வீதியிலே வீசப்பட்டு கவனிப்பாரின்றி கிடந்த என்னை எடுத்து நீ ஏன் வளர்த்தாய்.’

’உனக்கு அது தெரியுமா?’

‘தெரியும் அம்மா. முழுக் கிராமமும் என்னை கொல்ல நினைத்தது. நீ தன்னந்தனியாக எதிர்த்து நின்று காப்பாற்றினாய்.. நீ எனக்கு கொடுத்த அந்தப் பெரிய அன்பை என்னால் திருப்பி தரவே முடியாது. நான் எத்தனை ஆயிரம் புத்தகம் படித்து அறிவை பெருக்கினாலும் என்ன பிரயோசனம்? அன்புக்கு நிகர் ஒன்றுமே கிடையாது. இந்த உலகத்தில் ஆகப் பெரியது அன்புதான். அது உன்னிடம் இருக்கிறது’ என்றான்.

‘மகனே, நாளைக்கு நீ பெரிய விஞ்ஞானி ஆகலாம், தத்துவவாதி ஆகலாம், படைப்பாளி ஆகலாம். அதுவெல்லாம் பெரிதில்லை. ஓர் ஏழை சோமாலிப் பெண்ணின் கணவரை சாவிலிருந்து காப்பாற்றினாய்.. அதுதான் பெரிது. அந்த நேயம் உன்னிடம் இருக்கிறதே. நான் பெருமைப்படுகிறேன்’ என்றார் மார்த்தா.

உருவமில்லாத, நிறமில்லாத, எல்லை இல்லாத, திசை இல்லாத, தொட மிருதுவான ஆனால் பிடிக்க முடியாத ஆகாய மணம் கொண்ட மழையை முதன் முறையாக எகேலுவின் கண்கள் கண்டன. .

– ஆகஸ்ட் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *