பெண்டீர்க்கழகு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 1,262 
 
 

மதிய உணவு வேளைக்குப் பின்னரும் “ஸ்ரீ செம்புர்ணா” இருபத்து நான்கு மணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்த உணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம் என்பதால் ஒவ்வொரு வினாடியும் அங்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. சுவை மிகுந்த பிரியாணியைச் சாப்பிட வேற்று இனத்தவர்களும் அங்கு பெருமளவில் கூடுவது வியப்பானத் தகவல்.

மருத்துவ சோதனைக்கு மனைவியை அழைத்துச் சென்று திரும்பும் போதெல்லாம் வழியில் இருக்கும் அந்த உணவகத்திற்குத் தவறாமல் மனைவியை நான் அழைத்துச் செல்வது வழக்கம். சுவையான உணவுக்காக மட்டுமல்லாமல் உணவகத்தின் சுத்தமான சூழல், பணியாளர்களின் முகம் சுழிக்காத உபசரணைகள் மனைவிக்கு மிகவும் பிடிக்கும் அம்சங்களாகும்.

மாலை மணி நான்கு இருக்கும்.காரை விட்டு இறங்குகிறோம்.அந்த வேளையிலும் கொழுத்தும் வெயில் மண்டையைச் சுர்ரென்று தாக்குகிறது.வியர்க்கும் உடம்பில் மிளகாய்ப்பொடி பட்டதுபோல் உடலெல்லாம் எரிகிறது.கண்களைத் திறக்க முடியாத சூரிய ஒளி. குளிர்சாதனம் பொருத்தப்பட்ட காரில் பயணித்த போது உணராத வெப்பத்தைக் காரை விட்டு இறங்கிய போது நன்கு உணர முடிந்தது. மனைவி சேலைத் தலைப்பினால் உடம்பை மூடிக்கொள்கிறார். நடையைத் துரிதப்படுத்துகிறோம். உணவகத்திற்குள் நுழைந்தபோது குளிர்சாதனத்தின் இதமான காற்று எங்களை மகிழ்வை ஏற்படுத்துகிறது. அடிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியாக ஏதாவது சில்லென்று குடித்தால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. ஆனால், குளிர்பானம் உடம்புக்கு ஒத்துக்காது என்பதால் வழக்கமான பானத்தைதான் அருந்த வேண்டி இருந்தது. நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி அலமாரியில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் மசாலைக் கலவையினால் உருவான உணவுகளின் மணம் மூக்கைச் சுண்டி இழுக்கின்றன. இருக்கையில் அமர்வதற்கு முன்பாகவே சாப்பிடப் போகும் உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்கிறோம்.

“வணக்கம்……நலமா இருக்கிங்களா….?” முதலாளி முத்துபாண்டி நாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்கு வருகிறார். “ஆண்டவன் புண்ணியத்தால நல்லா இருக்கோம் முதலாளி” கை கூப்புகிறேன். அவர் மகிழ்ச்சியுடன் என் கைகளைப் பிடித்துக் குலுக்குகிறார். அவர் சிறிது நேரம் எங்களுடன் பேசிவிட்டு தம் கள்ளாவிற்குச் செல்கிறார்.

பல இன மக்களும் தம் உணவகத்துக்கு விரும்பி வரவைக்கும் வித்தையை அவர் கரைத்துக் குடித்திருந்தார். பத்து ஆண்டுகளில் ஐந்து உணவங்களுக்குத் தமது ஐந்து பிள்ளைகளையும் முதலாளிகளாக்கிச் சாதனைப் படைத்தவர் முத்துபாண்டி.

இவரைப் போன்றவர்களின் சாதனைகள்தாம் நாட்டில் ஆங்காங்கே பரவலாக நிகழ்வதால் சிறுபான்மை இனமாக வாழும் தமிழர்களின் பொருளாதாரச் செழிப்பை மிடுக்காய் உலகுக்குப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

சில நிமிடங்களில் ஆவி பறக்கும் தேநீரும் சுடச்சுடச் இரவா தோசைகளும் எங்கள் மேசைக்கு வருகின்றன. “ஐயா….இன்னும் ஏதும் வேணும்ணா சொல்லுங்க…..நான் கொண்டு வர்றேன்…..”

“தேவை பட்டால் கூப்பிடுறேன் சேது……”

உணவகத்துக்துக்கு எப்போது சென்றாலும் சேதுதான் எங்களுக்கு உணவு பரிமாறுவார். தமிழ்நாடு காஞ்சிபுரத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இங்கு பணிபுரிய வந்தவர். பணிவுடன் வாடிக்கையாளர்களிடம் கவனித்துக் கொள்ளும் கலையை இவரிடம்தான் மற்ற வேலையாட்கள் கற்றுக் கொண்டிருந்தனர்.

கடை முதலாளியே பல முறை சேதுவைப் பற்றி என்னிடம் புகழ்ந்து பேசியிருக்கிறார். பொறுப்பான வேலையாள் எனும் நல்ல பெயரை சேது பெற்றிருந்தார். நாங்கள் சாப்பிடத் தொடங்குகிறோம். மனைவி உணவுவைச் சுவைத்துச் சாப்பிடும் அழகை இரசிக்கிறேன். அவர் விரும்பிய உணவைச் சாப்பிடச் செய்த திருப்தியில் நானும் புன்முறுவலுடன் உணவைச் சுவைக்கிறேன்.. எங்கள் இருக்கைக்கு எதிரில் உணவருந்திக் கொண்டிருந்த இருவர் எழுகின்றனர்.பணியாளர்கள் உடனே மேசையைச் சுத்தம் செய்கின்றனர். சுற்றும் முற்றும் பார்க்கிறேன். என் எதிரிலுள்ள மேசையைத் தவிர மற்ற மேசைகளில் வாடிக்கையாளர்கள் தத்தம் உணவுகளை அமைதியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சில நிமிடங்களே சென்றிருக்கும் இளம் பெண்கள் இருவர் எதிரிலுள்ள இருக்கைகளை நோக்கி வருகின்றனர். சுமார் இருபத்தைந்து வயதுக் குட்பட்டவர்களாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும். இரு பெண்களில் ஒருவர் கவர்ச்சி நடிகை நமிதாவை நேரில் பார்த்த திகைப்பு எனக்கு. வெள்ளைச் டீ சட்டையும் நீல நிறத்தில் பிடிப்பான ஜீன்சும் அணிந்திருந்தாள். உடல் தடிப்பாக இருந்தாலும் அழகாகவே இருந்தாள். தினமும் சிறிது உடல் பயிற்சி செய்தாலே இங்கேயும் ஒரு நயன்தாரா இருப்பது உறுதி என்று மனம் கூறுகிறது.

“வாம்மா கௌரி…” முதலாளிதான் வரவேற்கிறார். ஆடி அசைந்து வந்த கௌரி, “ஆய்….அங்கிள் எப்படி இருக்கிறீங்க…? ” கையசைத்துவிட்டு தம் தோழியுடன் காலியான இருக்கையில் அமர்கிறாள் கௌரி.

“வணக்கம்மா… என்ன சாப்பிடுரிங்க….?” விரைந்து வந்த பணியாளர் ஒருவர் கேட்கிறார். “செம பசியாக இருக்கிறேன்… வழவழன்னு கேள்வி கேட்டுக் கிட்டு இருக்காம….வழக்கமா நாங்க சாப்பிடுற ஸ்பெசல் ஆயிட்டங்கள சீக்கிரமா கொண்டாந்து வையுங்க…” கட்டளை இடுகிறாள் கௌரி. ஒரு பெரிய செம்பில் குடிப்பதற்காகப் பனிக்கட்டிகள் நிறைந்த மோர் ததும்ப ததும்ப மேசை மீது கொண்டு வந்து வைக்கிறார் பணியாளர். தோழிக்கு சிறிய கிளாசில் தண்ணீர் வைக்கப் படுகிறது. “சேது ஆர்டர் கொடுத்த உணவுகளக் சீக்கிரமா கொண்டாந்து பரிமாறுங்கப்பா……” குரல் கொடுத்துக் கொண்டே முதலாளி கௌரியின் மேசைக்கு வருகிறார். வமக்கமாக வரும் வாடிக்கையாளர்களை காமே அருகிலிருந்து கவனித்துக் கொள்வது அவரது வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்று.

செம்பிலிருந்த சில்லென்று இருக்கும் மோரை சிறிது உறிஞ்சிய கௌரி அருகில் வந்து நிற்கும் முதலாளியை நிமிர்ந்து பார்க்கிறாள். “என்னம்மா கௌரி…… உங்களப் பெண் பார்க்க வந்தாங்களே….மாப்பிளைவீட்டார் என்ன சொன்னாங்க? மாப்பிளைக்கு உங்களப் பிடிச்சிருக்கா? மாப்பிள்ளை என்ன சொன்னார்?” முதலாளியின் பேச்சில் ஆவலின் கொப்பளிப்பு தூக்கலாக இருந்தது. கடை முதலாளிக்கும் தெரிந்த பையந்தான். சீலன் என்பது அவர் பெயர்.

இளம்வயதிலேயே ஒரு நிறுவனத்தில் பொறுப்புள்ள அதிகாரியாக வேலை செய்கிறார். அடிக்கடி தமது உணவகத்துக்கு வந்து செல்லும் சீலன் இனிமையாகப் பேசும் சுபாவத்தைக் கொண்டவர். அவரும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்தான். சமயத்தில் மாலை வேளைகளில் நண்பர்களோடு வரும் அவர் தேநீருடன் மசால் வடையை விரும்பிச் சாப்பிடுவார். “கௌரி நான் கேட்ட கேள்விக்குப் பதிலே இல்லே?”

“தெரியல…..” யதார்த்தமாகப் பதில் கூறுகிறாள். “பெண்ண பார்த்திட்டுப் போயி ஒருவாரம் ஆயிடுச்சு……இன்னும் பதில் தெரியலேனு சொல்றீயேமா? விபரம் தெரியாதப் பிள்ளையா இருக்கிறியேமா நீ ” அலுத்து கொள்கிறார். “நான் என்ன செய்யிறது முதலாளி? குடும்பத்தோட ஆணும் பெண்ணுமா பத்து கார்ல வந்தாங்க. என்னைப் பார்த்தாங்க. மாப்பிளையும் என்னைப் பார்த்தாரு. எல்லாருமா தேநீரைக் குடிச்சிட்டு, பிறகு முடிவ சொல்றதா சொல்லிட்டுப் புறப்பட்டுப் போனவங்க……இன்னும் பதில் ஏதும் சொல்லல….அதுக்கு நான் என்ன செய்யிறது?” கௌரியின் வெகுளித்தனமானப் பதிலைக் கேட்டு முதலாளி வாயடைத்துப் போகிறார். மனம் கமழும் உணவு வகைகளைப் பெரிய தட்டில் ஏந்திவாறு இரு பணியாளர்கள் வருகிறார்கள். உணவின் மணம் கௌரியின் பசியை மேலும் தூண்டுகிறது.கௌரிக்கு பெரிய தலைவாழை இலை போடப்படுகிறது. தோழிக்கு அளவான இலைதான்.

கொண்டு வந்த உணவு வகைகளை இலையைச் சுற்றி அழகாக அடுக்கி வைக்கின்றனர். “பொறுமையா உருசிச்சிச் சாப்பிடுட்டு…..போகும் போது சாப்பாடு எப்படி இருந்துச்சுனு சொல்லிட்டுப் போம்மா கௌரி”முதலாளி அங்கிருந்து நகருகிறார்.

“சரிங்க முதலாளி….” முதலாளியின் முகத்தைப் பார்க்காமலேயே பதில் கூறிய கௌரி இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை நோட்டமிடுகிறாள். எல்லாம் தனக்குப் பிடித்த உணவு வகைகள்தாம். கோழி, மீன், ஊடான் பொரியல், முட்டை அவியல், ஆட்டிறைச்சிப் பிரட்டல் குளம்புடன் சற்று பெரிய தட்டில், பச்சடி,கோபிஸ்,பயிற்றங்காய் பிரட்டல்கள். மீன் குழம்பு, சிறிய தட்டுகளில், சாம்பார், தயிர், ரசம்,மற்றும் அப்பளம். வாலை இலையின் நடுப்பகுதியில் சிறிய குன்று போல் எழுப்பிய நிலையில் வைக்கப்பட்ட சாதம் ஆவி பறக்கிறது. சாதத்தில் ஆட்டிறைச்சுக் குழம்பு ஊற்றப் படுகிறது.

“அம்மா…. குழம்பு போதுமா?” பணியாளர் பணிவுடன் கேட்கிறார்.. “குழம்புப் பாத்திரத்த இங்கேயே வெச்சிட்டுப் வெச்சிட்டுப் போங்க தேவையானத நானே ஊற்றிக்கிறேன்” கௌரி தம் கைப்பையிலிருந்து கைபேசியை எடுத்து உணவுடன் செல்பி எடுத்துக் கொள்கிறாள். உணவுடன் கௌரியைப் பல கோணங்களில் படம் எடுக்க உதவுகிறாள் தோழி. அங்கிருந்த பணியாளர்களும் முகம் சுழிக்காமல் நல்ல கோணத்தில் படம் எடுக்க கௌரிக்கு உதவுகின்றனர்.அருகில் உணவருந்தி கொண்டிருந்த வாடிக்கையாளர்களைப் பற்றி யெல்லாம் கௌரி கண்டு கொள்ளவில்லை.

“வாவ்….! .சோ நைஸ் டூ சீ…….! கேன் ஐ டேக் அ பிச்சர்?” நடு வயது கொண்ட வெள்ளைக்காரர் ஒருவர் புன்னகை தவலும் முகத்துடன் கௌரியைக் கேட்கிறார். நமது நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கும் சுற்றுப்பயணியாக அவர் இருக்க வேண்டும்.தம் மனைவியுடன் அவர் காணப்பட்டார்.அளவான உடல் அழகுடன் அவர்கள் இருவரும் காட்சியளிக்கின்றனர். அட……………….! நாம சாப்பிடும் சாப்பாட்டைக் கூட வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆர்வமுடன் படம் எடுக்கப்போறாரே……! ஆச்சரியத்தில் கௌரி என்ன பேசுவதென்றே தெரியாமல் தடுமாறுகிறாள் ஒரு கணம். “சுவ….யூ கேன் டேக் எனி அமௌன் ஆப் போட்டோஸ்” கௌரிக்கு தாம் சாப்பிடுப்போகும் உணவு வகைகளை ஒருவர் அதுவும் வேற்று இனத்தவர் படம் எடுப்பதைப் பெருமையாக எண்ணிக்கொள்கிறாள்.

பல கோணங்களில் கிளிக் செய்துக்கொண்ட அந்த ஆங்கிலலேயத் தம்பதியினர் கௌரியிடம் நன்றி கூறுகின்றனர். ‘இப்படி அளவு இல்லாமல் சாப்பிட்டால் உடம்பு பெருக்காத என்ன?’ கௌரியைப் பார்த்து அவர்களுக்கு கேட்கத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், ஊரைச் சுற்றிப் பார்க்க வந்த நேரத்தில் நல்லதைச் சொல்லப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று முன்னெச்சரிக்கை போலும், கூடுதலாக ஒரு புன்னகை ஒன்றை கௌரியிடன் உதிர்த்துவிட்டு விடை பெற்றுச் செல்கின்றனர்.

கௌரி கைபேசியில் எடுத்தப் படங்களை ஆர்வமுடன் யார் யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தாள்.

“கௌரி…..சாப்பாடு சூடு ஆறிடப் போவுது….சாப்பிடலாமா?” தோழி நினைவுபடுத்துகிறாள். “…..ஆங்…….சாப்பிடலாம்……”கௌரியும் அவள் தோழியும் சாப்பிடத் தொடங்குகிறார்கள். கீரை,காய்கறிகளை ஒரம் கட்டி வைத்துவிட்டு மாமிச உணவுகள் ஒவ்வொன்றையும் உருசித்து உண்கிறாள் கௌரி. அவளுக்கு மிகவும் பிடித்த ஆட்டிறைச்சியை முதலில் சுவைக்கிறாள். பின்னர் கோழி, நண்டுப் பொறியல் ருசித்து உண்கிறாள். அவள் தோழி நிதானமாக இலையில் பரப்பி வைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுகிறாள்.கௌரி எல்லா உணவுகளையும் ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் பரபரப்புடன் சாப்பிடத் தொடங்குகிறாள். திடீரென புரக்கை ஏற்படுகிறது,அதைத் தொடர்ந்து விக்கல் ஏற்படுகிறது. ஒரு கணம் கௌரி தடுமாறிப் போகிறாள். தம் இடதுக் கைகளால் தலை உச்சியில் தட்டிக் கொள்கிறாள். அவசர அவசரமாக செம்பிலிருந்து மோரை எடுத்து அருந்துகிறாள்.

“யாரோ…….என்னை நினைக்கிறாங்க…..”

“கௌரி….இந்த நேரத்துல உன்ன யாரு நினைக்கப் போறாங்க?”

“ஏன்….போன வாரம் என்ன பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக் கூட இப்போது நினைக்கலாம் இல்லையா?”

“இருபத்தைந்து வருசமா பெற்று வளர்த்த அம்மா…..அப்பா தூரத்துல தங்கி வேலை செய்யிற தம் பிள்ளைய நினைக்க மாட்டாங்களா கௌரி….?”

“ம்…… நினைப்பாங்க .சரி சரி….பேசாம சாப்பிடு…எனக்கு இன்னும் பசி அடங்கல..”

“மெதுவா சாப்பிடு என்ன அவசரம் கௌரி?” கௌரியின் உச்சந்தலையை மெதுவாகத் தட்டிக் கொடுக்கிறாள் தோழி. “ஐயா…..கொஞ்சம் சாதம் போடுங்க…” பதமான சூட்டிலுள்ள சாதத்தைப் பக்குவமாக இலையில் போடுகிறார் பணியாளர்.

அதோடு, உறைப்பான ஆட்டிறைச்சைத் தட்டில் கொண்டு வந்து வைக்கிறார் பணியாளர்.. முத்து முத்தாய் முகத்தில் அரும்பி நின்ற வியர்வையை டிசுவால் துடைத்துக் கொண்ட கௌரி தொடர்ந்து உண்ணத் தொடங்குகிறாள். சுமார் அரை மணி நேரத்தில் இலையில் வைக்கப்பட்ட முக்கால் பகுதி உணவு காலியாகிப் போகிறது. காலியாகிப் போன செம்பில் மோர் நிரப்பப் படுகிறது. அந்நீரைச் சிறிது குடித்தபின், இறால் வருவலைக் கொண்டுவரச் சொல்கிறாள். தட்டு நிறைய இறால் வருவல் கம கம என்ற மணத்தோடு கொண்டு வரப்படுகிறது. முதல் முறையாக இறாலைச் சாப்பிடுபவள் போல் ஆவலுடன் சாப்பிடுகிறாள். மூன்றாவது முறையாக கௌரியின் இலையில் சாதம் வைக்கப்படுகிறது.

இப்போது இலையில் மாமிச உணவுகளின் எலும்புகளும், மீன்களின் முட்களும் மட்டுமே எஞ்சியிருந்தன. தீண்டப்படாமல் இலையின் ஓரங்களில் காய்கறிகள், கீரைகள் மட்டுமே பரிதாபமாக ஒதுங்கி இருந்தன. “ஏப்…!” திடீரென்று பெரியதாக ஏப்பம் விடுகிறாள் கௌரி. அருகில் வந்த பணியாளரிடம் ஏதோ கூறுகிறாள். வேகமாக தலையை ஆட்டிச் சென்றவர் பெரிய கிளாசில் ஆவி பரக்க இஞ்சி காப்பி கொண்டு வந்து வைக்கிறார். அருகில் அமர்ந்திருந்த தோழி உணவு உண்பதை சில நிமிடங்களுக்கு முன்பே நிறுத்தியிருந்தாள். கௌரி உணவை உண்டு முடிக்கும் வரையில் காத்திருப்பது அவளுக்குப் பழகிப்போன ஒன்று.

கடந்த இரண்டு வருடங்களாக ஒரே அலுவலகத்தில் இருவருக்கும் வேலை; ஒரே அறையில் வாடகைக்கும் இருந்தனர்.ஒரே மாநிலத்திலிருந்தும் இங்கு வேலைக்கு வந்தவர்கள்.பக்கத்து பக்கத்து ஊரைச் ஊரைச் சேர்ந்தவர்கள். ஒத்த வயது என்பதால் இருவருக்கிடையில் நல்ல புரிந்துணர்வு.கருத்து வேறுபாடு கடுகளவும் இல்லாமல் இருந்தனர். சூடாகக் கொண்டு வந்த இஞ்சி காப்பியை ஒரே மூச்சில் குடித்து முடிந்தாள் கௌரி. சுமார் முக்கால் மணி நேரமாக உணவை உண்டபின்பு களைப்படைந்தவள் இருக்கையில் சாய்ந்து அமர்கிறாள். “கௌரி….சாப்பிட்டு முடிஞ்சதா….?” தோழி புன்முறுவலுடன் கேட்கிறாள்.

“ஏப்…!” பெரிய ஏப்பம் தோழிக்குப் பதிலாகத் தருகிறாள் கௌரி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொள்கின்றனர்.சிறிது நேரம் அங்கு அமைதி நிலவுகிறது. திடீரென வழக்கத்துக்கு மாறாக கௌரி அமைதியாகிப்போகிறாள். முகம் மாறியது!

“என்ன கௌரி..ஒரு மாதிரியா இருக்கே…?”

“வயிற்ற கலக்குறமாதிரி தெரியுது……!” கௌரியின் முகம் வெளிரிப் போகிறது.

“சீக்கிரமா……பின்னால போயிட்டு வா கெளரி…!”அவசரப்படுத்தினாள் தோழி. “சரி….என் கைப்பைய பத்திரமா பார்த்துக்க……நான் பின்னால போயிட்டு வர்ரேன்….!” கௌரி அவசரமாக இருக்கையை விட்டு வேகமாக எழுந்து உணவகத்தின் பின் பகுதிக்கு விரைகிறாள்.

“ஐயோ…. அம்மா……!” கௌரியின் அலரல் சத்தம் வேகமாக கேட்கிறது. “என்னை மன்னிச்சிடுங்க…..!” இளைஞர் ஒருவர் நடுக்கத்தோடு கூறுகிறார் “நான்தான் உங்கள் மோதிட்டேன்…. என்னை மன்னிச்சிடுங்க….!” கடுமையான வலியிலும் அப்போதுதான் அந்த இளைஞனைக் கூர்ந்து பார்க்கிறாள். மின்சாரம் தாக்குண்டவள் போல் போல் ஆச்சரியத்தில் கௌரியின் கண்கள் விரிகின்றன. .கௌரியின் அலரல் கேட்டு ஓடிவந்த தோழி, இடுப்பில் பலமாக அடிபட்டு தரையில் சரிந்த கெளரி வலியால் துடிப்பதைப் பார்க்கிறாள். கௌரிக்கு முதலுதவி செய்யும் இளைஞரைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள் தோழி……!

– முற்றும் –

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *