கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 2,070 
 
 

(2016ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

நாம் புலம் பெயர்ந்து பணம் ஈட்டுவதற்காக தாய் மண்ணை விட்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வந்து இம்மும்பை நகரில் அவசரங்களோடு வாழ்ந்திட்ட போதிலும், நம்முடைய கலாச்சாரம், நம் வாழ்க்கை முறை நம் இரத்தத்திலே கலந்து போனதால் தமிழக கலாச்சார வாழ்க்கை மேம்பாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நம் வாழ்க்கை முறையிலே மிகவும் உயர்ந்த ஒன்றான விருந்தோம்பல் என்னும் உயர்ந்த பண்பை இந்நாடகம் மூலம் சுட்டிக் காட்டி அதனால் ஏற்பட்ட நன்மைகள், எவ்வளவு நட்புறவுகள் உருவாகின்றன என்பதை ஒரு சிறிய கோடிட்டு காட்டிடவே இந்த உதய தாரகை நாடகம் உங்கள் முன்னால்.

குடி- குடியைக் கெடுக்கும் என்பது பழமொழி. அதே குடிப்பழக்கத்தின் தீமைகளையும் அதனால் ஏற்பட்ட பலவகை கொடுமைகளையும் அதனால் அழிந்து போன பலருடைய வாழ்க்கையையும் கூட நாம் பல வேளைகளில் கண்கூடாக பார்த்திருக்கவும் செய்திருக்கிறோம்.

குடிப்பழக்கத்தினால் எவ்வாறு மக்கள் பலரின் குடும்பம் பாதிக்கப்படுகிறது. அதனால் எத்தனைக் குடும்பங்களின் அடிப்படை வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்பதையும் ஒரு கடலின் ஒரு துளியாக தொட்டுக் காட்டியுள்ளோம்.

வாழ்வில் விருந்தோம்பல் என்னும் பண்பு எவ்வளவு பெருமை வாய்ந்தது என்பதையும் மதுப்பழக்கம் எவ்வளவு கெடுதலானது என்பதையும் எமது உதய தாரகை நாடகம் மூலம் உணர்த்த முயன்றிருக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் உள்ளங்களிலும் ‘உதய தாரகை’ ஒளிவீசிட எமது அன்பின் நல்வாழ்த்துக்கள்.

காட்சி-1

தேவாலயவளாகம்

பாத்திரங்கள்: சகாய நாதன், எழிலரசி, ரோட்ரிக்ஸ், எமல்டா

சகாய நாதன் : ஹாய் ரோட்ரிக்ஸ் குட்மார்னிங் வாங்க எமல்டா சர்ச்சுக்கு வந்தீங்களா?

எமல்டா: ஆமாம்…… ஆங் உங்க மனைவி எழிலரசி வரவில்லையா?

சகாய நாதன் : அதோ, வந்து கொண்டிருக்கிறாள். (என்றவாறு பின்னே கையை காட்டினார்)

ரோட்ரிக்ஸ்: அதானே பார்த்தேன். சகாய நாதன் எப்போதும் தனியாக வரமாட்டாரே! வணக்கங்க எழிலரசி

எழிலரசி: வணக்கங்க, என்ன இந்த நேரத்திலே இந்தப் பக்கம்?

எமல்டா: சும்மா……பாதரை பார்த்து விட்டு போகலாமென்று வந்தோம். அது சரி நீங்கள்…

சகாய நாதன் : சர்ச் மெயின்டனன்ஸ் பணம் கட்டணும். அப்படியே தேவாலயத்திற்குப் போய் விட்டு வரலாம் என்று நினைத்தோம். என்ன ரோட்ரிக்ஸ் இப்படி வியர்த்துக் கொட்டுகிறது? ஏதாவது பிரச்சனையா?

எமல்டா: அது…

ரோட்ரிக்ஸ் : கொஞ்சம் தலையை சுற்றுகிற மாதிரி இருக்கிறது. (கர்ச்சீப்பை எடுத்துமுகத்தை துடைத்துக் கொள்ள)

சகாய நாதன் : அய்யய்யோ. என்ன பிரச்சனை! எழில் கொஞ்சம் தண்ணீர் பாட்டிலை எடுத்து ரோட்ரிக்ஸ்க்கு கொடு. (எழிலரசி தன் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க வாங்கிக் குடித்தார் ரோட்ரிக்ஸ்)

ரோட்ரிக்ஸ் : சகாய நாதன் உங்களிடம் சொல்வதற்கு ஒன்றும் ரகசியமில்லை. ஆல்கஹாலிக் அனானிமஸ்…. அதான் குடியை நிறுத்துவதற்கு வாரந்தோறும் புதன் கிழமை மதியம் நம் தேவாலயத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதிலே கலந்துக்க வேண்டுமென்று என் மனைவியின் வற்புறுத்தல் தாங்காமல் வர வேண்டிய சூழ்நிலையாகி போய் விட்டது.

சகாய நாதன்: கொஞ்சம் அளவாகக் குடிக்க வேண்டியது தானே?

எமல்டா : என்னது… அளவாகக் குடிக்கிறதா? குடித்து குடித்து குடலில் பாதி வெந்து போச்சு. இன்னும் நிறுத்தவில்லை. என்றால் எனக்கு கணவரே கிடையாது என்ற நிலை. இவரிடம் சொல்லி சொல்லி சலித்துப் போய் விட்டது கேட்கிற மாதிரி தெரியவில்லை.

எழிலரசி : குடிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தானே.

எமல்டா : சின்னக் குழந்தையா? பின்னாலே திரிவதற்கு கொஞ்சம்| சொல்லி விட்டு அந்தப் பக்கம் போய் விட்டு வருவதற்குள் எங்கேயாவது போய் குடித்து விட்டு வந்து விடுகிறார்.

சகாய நாதன் : நண்பர்களிடம் சொல்ல வேண்டியது தானே?

எமல்டா : எங்கே அவர்களிடம் சொல்வது அவர்கள் தானே வாங்கிக் கொடுக்கிறார்கள்.

சகாய நாதன் : ஆல்கஹாலிக் அனானிமஸ் ஃபுரோக்ராம் போனால் குடியை நிறுத்தி விடலாமா?

எமல்டா : அப்படித் தான் சொல்கிறார்கள். அதான் பாதரைப் பார்த்து ரோட்ரிக்ஸ்ஸையும் அந்தப் ஃபுரோகிராமில் சேர்த்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக குடியை நிறுத்தி விட்டு விடுவார் என்ற நம்பிக்கை தான்.

சகாய நாதன் : உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள் நாங்கள் வருகிறோம்.

எமல்டா : ஆங். எழிலரசி. இந்த ஞாயிறு உங்கள் வீட்டிற்கு வரலாமென்றிருக்கிறோம். அதிலே எந்தப் பிரச்சனை யுமில்லையே.

சகாய நாதன் : ஒரு பிரச்சனையும் இல்லை. தாராளமாக வாருங்கள்.

எழிலரசி : அதோ பாதர் வெளியே வருகிறார். அதற்குள் பணத்தை கட்டிவிட்டு வந்து விடலாம்.

எமல்டா : நீங்கள் முதலில் போய் பாருங்கள். அப்புறம் நாங்கள் வருகிறோம்.

காட்சி-2

இடம் : சகாயநாதன் வீடு

(எமல்டா, ரோட்ரிக்ஸ் உள்ளே வர சகாய நாதன் வரவேற்கிறார் உள்ளேயிருந்து எழிலரசி வருகிறார்.)

சகாய நாதன் : வாங்க ரோட்ரிக்ஸ்…வாங்க எமல்டா. எப்படி இருக்கீங்க? அப்புறம்…இப்போது எப்படி இருக்கிறார்? குடிப்பழக்கமெல்லாம் விட்டாச்சா?

எமல்டா : எங்கே நிறுத்துகிறார்? சொல்லிச் சொல்லி சலிச்சுப் போச்சு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒருமுறை வீட்டிற்குள் விழுந்து விட்டார். பேச்சு மூச்சில்லாமல். அப்புறம் இனி குடிக்கவே கூடாதென்ற பிறகு தான் நிறுத்த முயற்சிக்கிறார்.

எழிலரசி : (உள்ளே இருந்து வந்தவாறு) ஹலோ வாங்க….வாங்க

சகாய நாதன் : குடிக்க தண்ணீர் கொடு.. அவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்.

எமல்டா: இப்போது சாப்பாடெல்லாம் வேண்டாம்.

சகாய நாதன் : இவ்வளவு தூரம் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள் சாப்பிடாமல் போனால் எப்படி?

ரோட்ரிக்ஸ்: இல்லை சகாய நாதன். நாங்கள் உங்கள் வீட்டிற்கு பலமுறை வர வேண்டுமென்று நினைத்து வரமுடியவில்லை. நல்ல வேளையாக இன்று வந்து விட்டுப் போக முடிந்தது. உணவெல்லாம் வேண்டாமே! தண்ணீர் கொடுங்கள் போதும்.

சகாய நாதன் : அதெல்லாம் ஒன்றுமில்லை. இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கள்.

எழிலரசி : இதோ பாருங்க! கொஞ்சம் வந்து விட்டுப் போங்களேன்.

சகாய நாதன் : (உள்ளே போய்) என்ன விஷயம்?

எழிலரசி : நமக்குச் சமைப்பதற்கே அரிசி இல்லை. அவர்களைச் சாப்பிடச் சொல்லுகிறீர்கள். எப்படி முடியும்.

சகாய நாதன் : நான் போய் வாங்கி வருகிறேன்.

எழிலரசி : ஏற்கனவே அளவிற்திகமான கடன். நீங்கள் வேலையில்லாமல் இருக்கிறீர்கள் என்று கடைக்காரனுக்கு தெரிந்து விட்டது. அவனும் இனி கடன் கொடுக்க மாட்டான்.

சகாய நாதன்: பக்கத்து வீட்டு ஏக்நாத் வீட்டில் கேட்டுப் பாரேன்.

எழிலரசி : சும்மாவே நம்மைப் பற்றி ஏளனமாக பேசுகிறவர்கள். நான் கேட்கமாட்டேன்.

சகாய நாதன்: வந்திருக்கிறவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டாமா? நான் வேண்டுமானால் கேட்டுப் பார்க்கிறேன்.

(உள்ளே தென் மலர், சில்வியா, மெர்லின் மூவரும் வருகின்றார்கள்)

எமல்டா : வாங்க மெர்லின். ஹலோ சில்வியா சுகமாக இருக்கிறீர்களா? ஹாய் தேன்மலர் இப்போது உங்கள் வீட்டுக்காரருக்கு உடல் நலம் எப்படி இருக்கிறது.

தேன்மலர் : இப்போது அபாயக் கட்டத்தை தாண்டி விட்டார்கள். இன்னும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறார்கள்.

ரோட்ரிக்ஸ் : ஏன்..என்னாச்சி?

எமல்டா : உங்களை மாதிரி தான்… இந்த ஆம்பளைங்களை குடிக்காதீர்கள் என்று சொன்னால் கேட்டால் தானே!

சில்வியா : ஆமாம்! எழிலரசி எங்கே காணோம்.

(சகாய நாதனும் எழிலரசியும் உள்ளே வர)

எழிலரசி : வாங்க சில்வியா…ஏயப்பா தேன்மலர், மெர்லின் எல்லோரும் வந்திருக்கிறார்களே என்ன விஷயம்!

மெர்லின் : நம்முடைய சபை திருவிழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுதான் எழிலரசி கிட்ட சொல்லி விட்டு போகலாம்னு வந்தோம்.

சகாய நாதன் : எழில் வந்தவர்களுக்கெல்லாம் காபி கொடு. அவர்களுக்கு சாப்பிட சாப்பாடு ஏற்பாடு செய்.

தேன்மலர் : சாப்பாடெல்லாம் வேண்டாங்க கொஞ்சம் தண்ணீர் மட்டும் கொடுங்கள்.

சகாய நாதன் : எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள் சாப்பிடாமல் போனால் எப்படி? உணவருந்தி விட்டுச் செல்ல வேண்டும்.

எழிலரசி : (தனியாக) சும்மா வந்திருக்கிறவர்களையெல்லாம் சாப்பிட சொல்கிறீர்கள். நம்மிடம் தேவையான உணவுப் பொருள்கள் இருந்தாலாவது பரவாயில்லை.

சகாய நாதன் : நம்மை பார்ப்பதற்கு வந்திருக்கிறவர்களை பசியோடு அனுப்பலாமா? நான் பக்கத்து வீட்டு ஏக்நாத்திடம் தேவையான அரிசியை வாங்கி வருகிறேன் நீ சமையலுக்கு தயார் செய்.

எழிலரசி : உங்கள் விருப்பம்.

காட்சி-3

இடம்-ரோடு

பாத்திரங்கள்: தேன்மலர், சில்வியா, மெர்லின்

சில்வியா : பார்த்தாயா மெர்லின் சகாயநாதன் வீட்டிலே அவர் வேலையில்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் வர்ற போற எல்லோருக்கும் வீட்டிற்கு வந்தால் சாப்பாடு போடாமல் அனுப்புவதில்லை.

மெர்லின் : உண்மையான விருந்தோம்பல் பண்பு அவர்களிடம் தான் இருக்கிறது. எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எழிலரசியும் அவர் சொல்வதைக் கேட்டு வருகிறவர்க ளுக்கெல்லாம் உணவு கொடுத்து உபசரிக்கிறார்.

தேன்மலர் : உண்மையிலே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம். எவ்வளவு தான் கடன் தொல்லைப்பட்டாலும் வீட்டிற்கு வருகிறவர்க்கெல்லாம் உணவு கொடுக்கும் விருந்தோம்பல் பண்பு எல்லோருக்கும் வருவதில்லை.

மெர்லின் : ஆமாம். தேன்மலர் உன் வீட்டுக்காரருக்கு நல்லபடியாக உடம்பு தேறிவிட்டதா?

தேன்மலர் : பரவாயில்லை. ஆங் அன்றைக்கு எழிலரசி வீட்டில் பார்த்தோமே…….ரோட்ரிக்ஸ். அவருக்கு மிகவும் உடல் பலவீனமடைந்து இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறாராம். அவரும் இப்படித் தான் சொல்லச் சொல்ல நிறுத்தாமல் குடித்துக் குடித்தே உடம்பைக் கெடுத்துக் கொண்டாராம். இப்போது கல்லீரலில் ஏதோ பிரச்சனையாகி விட்டதாம். (எழிலரசியும், சகாயநாதனும் அந்த வழியாக வர) என்ன எழிலரசி இந்தப் பக்கம்.

எழிலரசி : ரோட்ரிக்ஸை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்து விட்டு வருகிறோம். பாவம் மனிதர் ரொம்ப கஷ்டப்படுகிறார்.

சகாய நாதன்: எப்படியும் தேறி விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்த எமல்டா தான் மிகவும் வாட்டமாக இருக்கிறார். கணவருக்கு ஏதும் ஆகி விடுமோ என்று பயந்து எதுவும் சாப்பிடாமல் எடுக்காமல்…

மெர்லின் : என்ன செய்வது தேவன் விட்ட வழியென்று தாமே இருக்காமல் எமல்டாவை இறைவா என் கணவரை கண்டிப்பாக எனக்குக் கொடும் என்று ஆண்டவரை நோக்கி கெஞ்சி மன்றாட சொல்ல வேண்டியது தானே.

எழிலரசி : அவள் உருகி ஜெபிக்கிற மாதிரி யாராலும் ஜெபிக்க முடியாது. அவ்வளவு உருகி உருகி ஜெபிக்கிறாள். கண்டிப்பாக அவள் ஜெபங்கள் கேட்கப்படும். தேவன் அவள் ஜெபத்திற்கு கண்டிப்பாக செவி சாய்ப்பார்.

சகாய நாதன் : வாருங்களேன். வீட்டிற்கு போய்ச் சாப்பிட்டு விட்டுச் செல்லலாமே.

மெர்லின் : இல்லை. நாங்கள் சாப்பிட்டு விட்டுத் தான் கிளம்பினோம். இன்னொரு நாள் சந்திக்கலாம்.

தேன்மலர் : நாமும் ரோட்ரிக்ஸை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்க்க வேண்டாமா?

சில்வியா : நாளை மாலை முடிந்தால் போகலாம்.

காட்சி-4

இடம்-ரோடு

பாத்திரங்கள்: எமல்டா, எழிலரசி

எழிலரசி : என்ன எமல்டா இவ்வளவு பரபரப்பாக இருக்கிறீர்கள்? இப்போது ரோட்ரிக்ஸ் எப்படி இருக்கிறார்.

எமல்டா : அவருக்கு உடல் நிலை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த மருந்தை சிட்டியிலே போய் வாங்க வேண்டும். ஒரு ஆட்டோகாரனும் வர மாட்டேங்குறான். டாக்டர் ஒரு மணி நேரத்திற்குள் மருந்தை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.

எழிலரசி : கவலைப்படாதீர்கள்.நான் வாங்கி வருகிறேன் நீங்கள் போய்] ரோட்ரிக்ஸை பார்த்துக் கொள்ளுங்கள்.

எமல்டா : எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது எழிலரசி. அவர் பிழைத்துக் கொள்வாரில்லையா?

எழிலரசி : கடவுளை நோக்கி நல்லா ஜெபம் பண்ணுங்கள்.அவரால் ஆகாதது ஒன்றுமில்லை. இறந்தோரை உயிர்ப்பித்த அவர், இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்த நம் அன்பு தேவன் உங்கள் கணவருக்கு நல்ல சுகம் கொடுப்பார். விடாது ஜெபியுங்கள். கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னவர் இயேசு பிரான். உங்கள் குழந்தைகள் அப்பம் கொடுத்தால் கல்லையா கொடுப்பீர்கள் நீங்களே இவ்வளவு செய்யும் போது உங்களுக்கு பரலோக இராஜ்ஜியத்தில் வீற்றிருக்கும் தேவன் எதை வேண்டுமானாலும் கொடுப்பேன் என்று சொல்லியுள்ளாரே. மனமுருகி கேளுங்கள். கண்டிப்பாக ரோட்ரிக்ஸை தேவன்| குணமாக்குவார்.

எமல்டா : உங்களுக்குத் தான் வீண் சிரமம் கொடுக்கிறேன்.

எழிலரசி : வேண்டிய நேரத்தில் உதவி செய்யவில்லை எனில் நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதில் கூட அர்த்தமில்லாமல் போய்| விடும். நீங்கள் போய் மருத்துவமனையில் படுத்திருக்கும் ரோட்ரிக்ஸை கவனியுங்கள். நான் மருந்துடன் வருகிறேன்.

எமல்டா : இதோ பணம் எடுத்துக் கொள்ளுங்கள் (பர்ஸை திறக்கிறாள்)

எழிலரசி : அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

காட்சி-5

இடம்-தேவாலய வளாகம்

பாத்திரங்கள்: எழிலரசி, சகாய நாதன், மெர்லின், சில்வியா

எழிலரசி : என்ன மெர்லின் சபை திருவிழா ஏற்பாடுகளெல்லாம் நன்றாக நடக்கிறதா?

மெர்லின் : இந்த வருடம் வேண்டாமென்று முடிவெடுத்து விட்டோம்

எழிலரசி : ஏன்? என்னாச்சு? சுறுசுறுப்பாக எல்லா ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து கொண்டிருந்தீர்களே….

சில்வியா : அது… வந்து.தேன்மலரின் கணவர் தவறிவிட்டார்.

சகாய நாதன் : என்னது குமார் இறந்து விட்டாரா. அவர் உடல்நலம் தேறி வருவதாகத் தானே சொன்னீர்கள்

மெர்லின்: நன்றாக தெம்பாக வீடு திரும்பியவர் டாக்டர் சொல்லியனுப்பிய பின்பும் குடிக்காமல் இருக்க முடியாது என்று குடிக்க ஆரம்பித்தார். பாவம் தேன்மலர் குடும்பம் இப்போது தெருவில் நிற்கிறது.

எழிலரசி : சே……குமாருக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க வேண்டாம். தேன்மலர் தான் பாவம் சகாயநாதனும் நானும் அவங்களைப் போய் பார்த்து விசாரித்து வர வேண்டும்.

எமல்டா : வேகமாக ஓடி வர

எழிலரசி : எமல்டா… என்ன ஆயிற்று ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்.

எமல்டா : அவருக்கு மிகவும் சீரியஸாகி விட்டது. டாக்டர் கையை விரித்து விட்டார். இனி எல்லாம் அவன் கையில் தான் இருக்கிறது என்று மேலே பார்த்து கையை காட்டி விட்டார் எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான் தேவனிடம் ஜெபித்து மனமுருகி என் ரோட்ரிக்ஸை எனக்கு திரும்ப தர கேட்க வந்தேன்.

மெர்லின் : கவலைப்படாதீர்கள்.வாருங்கள் எல்லோரும் போய் சேர்ந்து ஜெபிப்போம்.கடவுள் எமல்டாவை கைவிட மாட்டார்.

எழிலரசி : (சகாய நாதனிடம்) நாமும் போய் ஜெபிக்கலாம். ரோட்ரிக்ஸ் உடல் நலம் தேறி கண்டிப்பாக எமல்டாவிடம் திரும்பி வர கடவுள் வரங்களைப் பொழிவார்.

காட்சி-6

இடம் -மருத்துவமனை

பாத்திரங்கள்: எழிலரசி, சகாய நாதன், மெர்லின், எமல்டா

எழிலரசி : எங்கே எமல்டாவைக் காணோம்? ரோட்ரிக்ஸ் எப்படி இருக்கிறாரோ?

சகாய நாதன் : உள்ளே போய் நர்சிடம் கேட்டுப் பார்க்கலாம். (எமல்டா உள்ளே வந்து) வாருங்கள்

எழிலரசி : எமல்டா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் சிரித்த முகத்தைப் பார்ப்பதற்கு ரோட்ரிக்ஸ் எப்படி இருக்கிறார்.

எமல்டா : ஓரளவு குணமடைந்து முக்கிய கட்டத்தை தாண்டி விட்டார். இன்னும் ஒரு மணி நேரத்தில் ஐசியு-விலிருந்து மாற்றி விடலாமென்று சொல்லி இருக்கிறார்கள்.

(உள்ளேயிருந்து இங்கே எமல்டா யார்? என்று குரல் வர)

இருங்கள் இப்போது வருகிறேன் அவருக்கு என்னவாயிற்றோ?

சகாய நாதன்: பாவம் எமல்டா எவ்வளவு தத்தளிக்கிறார் பார். தன் கணவனை இழந்து விடுவோமோ என்று பரிதவிக்கிறதைப் பார்த்து பாவமாக இருக்கிறது.

எழிலரசி : இந்த ஆண்களை குடிக்காதீர்கள் என்று சொன்னால் கேட்க வேண்டியது தானே பாருங்கள். அவர் குடித்தே இப்படி ஆகி விட்டார். இன்னும் எத்தனை குடும்பங்களில் இந்த நிலைமை.

சகாய நாதன் : ஆமாம். தேன்மலர் குடும்பத்தைப் பார்… குமார் இறந்து போன பிறகு என்ன செய்வது என்று அவன் குடும்பம் ஆடிப் போய் நிற்கிறது. திரும்பவும் இந்த எமல்டா பதை பதைப்பாக வருகிறாளே என்ன விஷயம்.

(எமல்டா உள்ளே வர)

எழிலரசி :வாங்க எமல்டா என்னவாயிற்று.

எமல்டா : தீவிரக் கட்டத்தை தாண்டி விட்டார் ஒரு முறை விழிப்பு வந்து என்னை தேடியவர் திரும்பவும் தூங்கி விட்டார். வாருங்கள். உள்ளே போய் பார்க்கலாம்.

எழிலரசி : ஏதோ தேவனுடைய கிருபை வாருங்கள் ரோட்ரிக்ஸை பார்த்து விட்டு வரலாம்.

சகாய நாதன் : ஐசியு உள்ளே நம்மையெல்லாம் அனுமதிப்பார்களா?

எமல்டா : அவரை ஆர்டினரி பெட்டுக்கு மாற்றியாகி விட்டது.வந்து பாருங்கள்.

(மூவரும் உள்ளே வர ரோட்ரிக்ஸ் இப்போது எப்படி இருக்கிறார்)

சகாய நாதன் : ரோட்ரிக்ஸ் இப்போது எப்படி இருக்கிறீர்கள்?

ரோட்ரிக்ஸ் : இப்போது உடல்நலமாக இருக்கிறது. டாக்டர் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள சொல்லியிருக்கிறார்.

எழிலரசி : எப்படியோ கடவுள் உங்களைக் காப்பாற்றி விட்டார். எமல்டா உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் தெரியுமா?

ரோட்ரிக்ஸ் : பாவம்………அவளுடைய ஜெபம் தான் என்னைக் குணமாக்கிற்று

சகாய நாதன் : உண்மையிலே வல்ல தேவன் உங்களைக் குணமாக்கி திரும்ப ஒரு மறு உயிர்ப்பு தந்திருக்கிறார்.

எமல்டா : கண்டிப்பாக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.என் கணவர் வீடு திரும்பியதும் கண்டிப்பாக ஒரு நன்றி திருப்பலி ஒப்புக் கொடுக்க வேண்டும்.

எழிலரசி : நாமெல்லாம் இப்போது சேர்ந்து இறைவனுக்கு நன்றி கீதம் பாடலாம்.

– சந்தனச் சாரல், மே 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *