எதிர் காலத்திலிருந்து வந்த புத்தகம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: January 26, 2024
பார்வையிட்டோர்: 4,355 
 
 

ரமேஷும் காயத்ரியும் விடுமுறையைக் கழிக்க இப்படி இறந்த காலத்திற்கு செல்வது ஐந்தாவது முறை. முன்பெல்லாம் விமானம் ஏறி கடற்கரையோரப் பகுதிக்கு சென்று விடுமுறையைக் கழிப்பார்கள். இப்போது விடுமுறையில் கால இந்திரம் ஏறி பின்னோக்கிச் செல்கிறார்கள். பொதுவாக, அவர்கள் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கோ அல்லது 20ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கோ தான் பயணம் செய்வார்கள். இந்த முறை, தீவிர வரலாற்று ரசிகையான காயத்ரி 15ம் நூற்றாண்டைப் பார்க்க விரும்பினாள். ரமேஷுக்கு 18ம் நூற்றாண்டின் முன் நடந்த விஷயங்களில் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனாலும், மனைவி அசைப்படுகிறாளே என்று ஒப்புக் கொண்டான். ஒரு பிரபலமான காலப்பயணங்களை நடத்தி வரும் டூர் நிறுவனத்திடம் டிக்கட் புக் செய்தான்.

அந்த ஒரு வார விடுமுறை ரமேஷுக்கு சலிப்பில் முடிந்திருக்கக் கூடும். ஆனால் விடுமுறையின் மூன்றாவது நாள் நடந்த விசித்திரமான ஒரு சம்பவம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. அன்று காயத்ரி தன்னிடம் இருந்த பயண வழிகாட்டி புத்தகத்தை தொலைத்து விட்டாள்.

இங்கு ஒன்று சொல்லியாக வேண்டும். காலப்பயணத் தொழில் அரசாங்கத்தால் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு தொழில். விடுமுறைக்கு வருபவர்கள் கடந்த காலத்தைத் தொந்தரவு செய்து அதன் அமைதியைக் குலைப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. எனவே எதிர்காலத்தில் இருந்து வரும் எந்தப் பொருளும் கடந்த காலத்தில் நிரந்திரமாக தங்கி விடுவது கடுமையாக தண்டிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளின் முடிவிலும், டூர் நிறுவனம் எல்லோர் பொருள்களும் சரியாக இருக்கிறதா என்று கணக்கு பார்ப்பார்கள். அப்போது தான் காயத்ரியின் பயண வழிகாட்டி புத்தகம் காணாமல் போனதைக் கண்டுபிடித்தார்கள்.

சம்பவம் நடந்தபோது அவர்கள் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) நகரில் இருந்தனர். அவர்கள் மதிய உணவுக்காக ஒரு ஏரிக்கு அருகில் இருந்த புல் வெளியில் இறங்கினார்கள். அப்போது புத்தகம் தன் கையில் இருந்ததாகவும் அதற்கப்புறமே அது தொலைந்திருக்க வேண்டும் என்றும் காயத்ரி கூறினாள். முழு குழுவும் ஏரியைச் சுற்றியுள்ள எல்லா இடங்களையும் தேடு தேடு என்று தேடினார்கள். புத்தகம் கிடைக்கவில்லை. டூர் நிறுவனத்திற்கு இது ஒரு பெரும் தலைவலி. அவர்கள் அதை ஒரு சீரியசான சம்பவமாக பதிவு செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் திரும்பி நிகழ் காலத்திற்கு வந்த பின் ஒரு விசாரணை நடக்கும். டூர் நிறுவனம் காலப்பயண விடுமுறைகளை இயக்குவதற்கான லைசென்ஸை இழக்கவும் நேரிடும்.


மறு நாள் ஒரு உயரமான இளைஞன் சம்பவம் நடந்த ஏரியைச் சுற்றி சாவகாசமாக நடந்து கொண்டிருந்தபோது, மரத்தடியில் ஒரு விசித்திரமான பொருளைக் கண்டான். அவன் அதை கையில் எடுத்த பொது, அது ஒரு புத்தகம் என்பதை உணர்ந்தான். ஆனால் அவன் இதற்கு முன்பு பார்த்த புத்தகங்கள் போல் அது இல்லை. பளபளப்பான அட்டை, நேர்த்தியாக எழுதப்பட்ட உரை மற்றும் வண்ணமயமான படங்கள் என்று எல்லாமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தது.

அவன் பெயர் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg). 1450ல் அச்சு இயந்திரத்தை கண்டு பிடித்த அதே ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *