குச்சி மனிதன்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,937 
 

முதுகில் ஓர் அடி விழுந்தது.

தொடர்ந்து “”டேய் இடியட் எப்படி இருக்க?”.

திரும்பினேன். முதலில் யாரென்று புரியவில்லை. கோபம் வந்தது.

“”ஹலோ மிஸ்டர்! முன்பின் தெரியாத ஆளை இப்படி அடிக்கலா….” – சொல்லி முடிக்கவில்லை. அவனைத் தெரிந்துவிட்டது. “”டேய் பாலு! வாட் எ சர்ப்ரைஸ்! எப்படிடா இருக்க?”.

பாலு என் பால்ய நண்பன். பல வருடங்கள் கழித்து பார்க்கிறேன். இருவரும் அருகில் இருந்த ரெஸ்டாரெண்டுக்குச் சென்றோம்.

குச்சி மனிதன்ஸ்டைலாக உடை அணிந்திருந்தான்.மெல்லிய உயர் ரக சென்ட் வாசனை அவனைச் சுற்றிப் பரவி இருந்தது. பார்த்தாலே வசதியாக இருக்கிறான் என்று தெரிந்தது. அவன் என்ன செய்கிறான்? என்று கேட்டால் நான் என்ன செய்கிறேன் என்று கேட்பான். எப்படி நான் வேலை இல்லாமல் அலைகிறேன் என்று சொல்வது? வேலை கிடைக்காமல் இல்லை. ஆனால் எப்படியாவது சினிமாவில் சேர வேண்டுமென்ற ஆசையில் தயாரிப்பாளர்களின் கால்களில் விழுந்துகொண்டிருந்தேன். எதுவும் கிடைத்தபாடில்லை. ஒரு ஜோசியன் வேறு எனது வருங்காலம் சினிமாவில்தான் என்று கையில் அடித்து சத்தியம் பண்ணியிருந்தான்.

எனவேதான் “என்ன செய்கிறாய்?’ என்ற கேள்வியைத் தவிர்த்தேன். ஆனால் அவன் விடுவதாக இல்லை. அவன் கேட்ட முதல் கேள்வியே “”என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?”.

எனது தவிப்பைக் கூறினேன். வருத்தப்பட்டான். ஆனால் நன்றாகத் திட்டினான்.

“”நீ காலேஜ் டைம்லேயே சினிமா பைத்தியம்னு எனக்குத் தெரியும். அதற்காக இப்படி வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருப்பாய் என நினைக்கவில்லை”.

கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். “”சரி உனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் அவ்வளவுதானே? டேக் மை கார்டு” என்று சொல்லி அதன் பின்னால் ஒரு தயாரிப்பாளரின் விலாசத்தை எழுதிக் கொடுத்தான்.

“”உனக்கு நல்ல முகவெட்டு இருக்கு. நீ நடிகனாவதில் தப்பில்லை” என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினான். தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு வைக்கோல் கிடைத்ததுபோல் அந்த கார்டை கெட்டியாக பிடித்துக் கொண்டேன்.

கார்டைப் பார்த்தேன். கிராபிக் ஃபிலிம் கம்பெனி என்ற பெயரும், விலாசமும் இருந்தது.

மறுநாளே சீவி சிங்காரித்துக்கொண்டு கிளம்பினேன். பாலுவின் கார்டைப் பார்த்ததும் உடனே உள்ளே அனுமதித்தனர். தயாரிப்பாளர் அறையில் என் வயதுள்ள ஆனால் பந்தாவான இளைஞர் ஒருவர் இருந்தார். அவர் முன் இரண்டு மூன்று கம்ப்யூட்டர்கள் இருந்தன.

“”ஹலோ… நீதான் பாலு அனுப்பிய ஹீரோவா? கம்… கம்… சிட் டவுன்” என்றான். நோ, என்றார். வேலை கொடுக்கப் போகிறவரை அவன், இவன் என்றெல்லாம் சொல்லக்கூடாது அல்லவா?

நடித்துக் காட்டச் சொன்னால் என்ன பண்ணலாம் என்று யோசிக்கும்போது ஒரு உதவியாளரைக் கூப்பிட்டு என் உயரத்தை அளக்கச் சொன்னார். “”ஓகே ரைட்.டெஸ்ட்டுக்கு போகலாம். இவரை ஸ்டுடியோவுக்கு கூட்டிட்டுப் போங்க. ஷூட்டிங் நாளை வைத்துக்கொள்ளலாம்” என்றார்.

ஆஹா! எனது கனவு நிறைவேறும் நாள் வந்துவிட்டது. என் உருவம் பல கோணங்களில் போஸ்டர்களில் ஒட்டப்படும். கதாநாயகி யாரோ?கோல்டன் பீச்சில் ஒரு காட்டேஜ் எடுக்கலாம். என் மனம் இறக்கை கட்டி ஏகமாய்ப் பறந்தது.

ஸ்டுடியோ ஒரு ஹால் அளவுக்கு இருந்தது. டெஸ்ட் எடுப்பதற்கு இது போதும். ஒரு வினோதமான கேமரா இருந்தது. மேலே பார்த்தேன். லைட்டிங் கருவிகள் எதுவும் இல்லை. லைட் இல்லாமல் என்ன ஷூட்டிங் எடுக்கப் போகிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது ஜீன்ஸ் பேண்டும் உடல் அளவுக்கு மிஞ்சிய டீ ஷர்டும் அணிந்த ஒரு பருமனான மனிதர் உள்ளே வந்தார். கேமராவில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த பல வயர்களை எடுத்துக் கொண்டு என் அருகில் வந்தார். அவர்தான் கேமராமேன்.

ஒவ்வொரு வயரின் முனையிலும் குமிழ் போன்ற ஓர் அமைப்பு இருந்தது. ஒவ்வொன்றாக எடுத்து என் தலை, கழுத்து,தோள்கள், கைகள், மார்பு, வயிறு, இடுப்பு, தொடைகள், கால்கள் என பாதம் வரை நிதானமாக மாட்டிக்கொண்டே போனார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது ஏதோ கேள்விப்படாத டெஸ்ட் ஆக இருக்கிறதே என வியந்தேன். பிறகு டைரக்டர் – அதான் என்னை இன்டெர்வியூ பண்ணியவர் உள்ளே வந்தார். கேமராமேனை பார்த்தார். அவர் ஓகே என்று கைகளைத் தூக்கிக் காண்பித்தார்.

“”வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு அசைவுக்கும் உங்களை டெஸ்ட் பண்ணப்போகிறோம் சரியா?” என்றார்.

இதென்ன கூத்தாக இருக்கிறது! வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் என்றால் சரி. ஆனால் “ஒவ்வொரு அசைவுக்கும்’ என்றால்? ஒருவேளை ஸ்ட்ண்ட் படமாக இருக்குமோ? மரத்தில் ஏறுவதுபோல், ஓடுவதுபோல், அடிப்பதுபோல், அடிவாங்கிக் கீழே விழுவது போல், அவர்கள் சொன்னதுபோலவே வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு என்னென்னஅசைவுகள் ஏற்படுமோ அத்தனையும் செய்யச் சொன்னார்கள்.

பிறகு டைரக்டர் என்னைப் பார்த்து “”கொஞ்ச நேரம் வெளி ரூமில் உட்காருங்கள்.சரியாக வந்திருக்கிறதா எனப் பார்க்கலாம்” என்றார்.

வெளியே உட்கார்ந்திருந்தேன். இது நிச்சயம் சண்டைப் படம்தான். நாளைக்கே ஜிம்மில் சேர்ந்துவிட வேண்டியதுதான். உடம்பை சும்மா “கின்’ என வைத்துக் கொள்ள வேண்டும். கதாநாயகியை இம்ப்ரெஸ் பண்ண வேண்டாமா?

டைரக்டர் உள்ளே நுழைந்து அவரது இருக்கையில் அமர்ந்து கீ பேடில் அங்கும் இங்கும் ஏதோ தட்டினார். பின் மானிட்டரைப் பார்த்து முகம் மலர்ந்தார்.

கம்ப்யூட்டர் மானிடர் அவரைப் பார்த்து இருந்ததால் எனக்குத் தெரியவில்லை.

என்னைப் பார்த்து “”ஹலோ ஹீரோ இப்படி வந்து பாருங்கள். வாட் எ ப்யூட்டிஃபுல் மூவ்மெண்ட்ஸ்”

இதயம் படபட என அடித்துக்கொள்ள அவர் பின்னால் சென்று மானிட்டரைப் பார்த்தேன்.

ஒரு குச்சி மனிதன் நான் செய்த அசைவுகளை எல்லாம் மெதுவாகச் செய்து கொண்டிருந்தான்.

என்முகம், என் ஜிம் உடல் இவை எல்லாம் எங்கே? ஏகமாய் வியர்த்தது.

டைரக்டர் என்னைப் பார்த்து “‘ எப்படி – சூப்பர்” என்றார்.

“”சார் என்ன சார் இது? எலும்புக்கூடாய் குச்சி குச்சியாய் இருக்கிறேனே” – ஏமாற்றம் என்னை விழுங்கியது.

“”நாங்கள் தயாரிப்பது ஒரு கார்ட்டூன் படம். இந்த குச்சி மனிதன்தான் பேசிக். இதன் மேல் கிராபிக் மெதேடில் ஒரு கார்டூனிக் முகம் மற்றும் உடைகளை உருவாக்குவோம். நாளையில் இருந்து கதைக்கான அசைவுகளை ரெகார்ட் பண்ணலாம்” மிகவும் உற்சாகமாகப் பேசினார்.

பின் மேஜை டிராயருக்குள் கையை விட்டு இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து என்னிடம் கொடுத்து “”இது அட்வான்ஸ். ஒரு வாரத்துக்குள் முடித்துவிடலாம். முடிந்ததும் இன்னும் ரூபாய் எட்டாயிரம் ஃபைனல் பேமென்ட். ஓகே!”

தூரத்தில் எங்கேயோ “கோவிந்தா கோவிந்தா’ என்ற கோரஸ் கேட்டது.

கார், பங்களா, ரசிகர்களின் கூட்டம், கதாநாயகியுடன் கடற்கரை விடுதியில் கும்மாளம் எல்லாம் காற்றோடு கரைந்தன.

அறைக்கு திரும்பும் வழியில் ஒரு குவார்டர் வாங்கி ஒரே மடக்கில் குடித்துவிட்டுத் தூங்கிவிட்டேன்.

மறுநாள் ஷூட்டிங் போயிருப்பேன் என்று நினைக்கிறீர்களா? போனேன்! ஜோசியம் பலிக்க வேண்டுமே!

– வெல்ஜீன் (ஏப்ரல் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *