கவுண்டனுக்கும் வண்ணாத்திக்கும் வளர்ந்த காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 12,643 
 

கவுண்டனுக்கும் வண்ணாத்திக்கும் வளர்ந்த காதல் என்று சொன்னால் நீங்கள் எரிச்சல் அடையக் கூடும் என்பதால் பொன்னானுக்கும் சின்னாளுக்கும் அரும்பிய காதல் என்றுதான் இந்தக் கதையைத் தொடங்க வேண்டும். கதை என்றால் ஹைதர் அலி காலத்துக் கதை. 1761 இல் கொங்குப்பகுதிகளோடு சேர்த்து மொத்த மைசூர் சாம்ராஜ்யத்திற்கும் ஹைதர் அலி மன்னர் ஆகியிருந்த காலம் அது. ஹைதர் அலியும் சரி அவனது மகன் திப்புசுல்தானும் சரி போருக்கு போவதும், போரில் வென்றால் தோற்றவர்களை சிறை பிடிப்பதும், தோற்றுப்போனால் வென்ற மன்னர்களுக்கு கப்பம் கட்டுவதுமாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். கப்பம் கட்டுவதற்கான பணம் கஜானாவில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கவில்லை. வரி வசூல் என்ற பெயரில் கொங்கு நாட்டு மக்களைத்தான் வறுத்தெடுத்தார்கள்.

ஹைதர் அலி பதவிக்கு வந்த ஆரம்ப காலத்தில் 3000 வீடுகள் இருந்த ஈரோட்டில் வரிகள், போர்கள் என்ற அக்கப்போர்களைத் தாங்காமல் வீடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டிருந்தது. ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தானின் காலத்தில் நிலைமை இன்னும் மோசம் ஆனது. அவன் காலத்தில் எண்ணிக்கை 1000 வீடுகளாக சுருங்கிப்போனது. இவர்கள்தான் அலும்பு என்றால் வெள்ளைக்காரனின் அட்டகாசம் இதைவிடவும் அதிகம். ஜெனரல் மெடோஸ் ஈரோட்டை மொத்தமாக அழித்த பிறகு 1800 ஆம் வருடம் வெறும் 400 வீடுகள் மட்டுமே இருந்தன. இப்படி அல்லல்பட்ட கொங்குநாட்டில் இருந்த காவேரிபுரம்தான் பொன்னாக்கவுண்டனின் ஊர். காவேரிபுரம் எங்கேயிருக்கிறது என்று இப்பொழுது தேடினால் மண்டை காய்வதுதான் மிச்சம் ஆகும். காவிரி ஆற்றுக்கு குறுக்கில் மேட்டூர் அணை கட்டிய போது அழிந்து போன ஊர்களில் காவேரிபுரமும் ஒன்று.

அழிந்து போன ஊரின் காதல் கதை எப்படித் தெரியும் என்ற கேள்வியைக் கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் சொல்லிவிடுவது உத்தமம். அறச்சலூர் கொழந்தாக்கவுண்டன் வீட்டின் தாழ்வாரத்தில் வருடக்கணக்கில் தொங்கிக்கொண்டிருந்த ஓலைச்சுவடியில்தான் இந்தக் கதை எழுதப்பட்டிருந்தது. இந்த ஓலைச்சுவடி பொன்னாக்கவுண்டனின் அந்தரங்க டைரியாக இருந்திருக்கிறது. ஹைதர் அலியும் திப்புசுல்தானும் மக்களின் மீது விதித்த வரிக்கொடுமையிலிருருந்து பெரிய தோட்டத்து சுப்பாயாளின் வாலிப வனப்பு வரை அத்தனையையும் சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார்.

காவேரிபுரத்தை உள்ளடக்கியிருந்த தாலுக்காவிற்கு ’சேனபாக’மாக இருந்த அண்ணய்யனிடம்தான் பொன்னாக்கவுண்டன் எழுதப்படிக்க பழகியிருக்கிறார். அண்ணய்யன் கன்னட தேசத்தில் இருந்து வந்திருந்த பிராமணன், ஒரு தாலுக்காவிற்கு அமுல்தாராக இசுலாமியனையும் பிற நிர்வாகங்களுக்கு பிராமணனையும் ஹைதர் அலி காலத்தில் நியமித்திருந்தார்கள். அமுல்தார் என்பவர் கிட்டத்தட்ட இன்றைய தாசில்தார் மாதிரி.

பொன்னாக்கவுண்டன் கருகருவென்று உயரமாக இருப்பாராம். இரண்டு காதுகளிலும் கடுக்கண்கள் உண்டு. நீளமாக வளர்த்தியிருந்த சடையை சுருட்டி கொண்டை போட்டிருந்த அவரோடு உடன்பிறந்த மூத்தவர்கள் ஆறு பேர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் திருமணம் ஆகியிருந்தாலும் ஒரே வீட்டில்தான் இருந்தார்கள். பொன்னாக்கவுண்டனுக்கும் திருமணத்தை முடித்துவிட்டு சொத்துக்களை பாத்தியம் செய்துவிடுவதாக அவரது அப்பா யோசித்து வைத்திருந்தார். அப்பொழுது பொன்னாக்கவுண்டனுக்கு பதினாறு வயது ஆகியிருந்தது. சைட் அடிக்க பழகத் துவங்கிய வயதுதான். சைட் என்றால் தூரத்தில் தலையைக் குத்திக் கொண்டு போகிற பெண்களை ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் பார்த்துக் கொண்டு பொன்னாக்கவுண்டனும் தலையை குத்திக் கொள்வார். இந்தப்பருவத்தில்தான் கவுண்டனின் வாழ்க்கையின் குறுக்காக சின்னாள் ஒரு கோட்டை அழுந்தக் கீறினாள்.

ரங்கவண்ணானின் மூன்றாவது மகள்தான் சின்னாள். மூத்தவளை கணக்கம்பாளையத்திற்கு கட்டிக் கொடுத்திருந்தார்கள். இரண்டாவதாகப் பிறந்திருந்த மகன் வீட்டில் இருந்தபடியே வெள்ளாவி போடுவதையும், பெட்டி தேய்ப்பதையும் பார்த்துக் கொள்வான். பொழுது விடிந்தவுடன் ரங்கவண்ணானும் சின்னாளும் கவுண்ட வளவில் எடுத்த அழுக்குத்துணிகளை மோலியாகக் கட்டி கழுதை மீது வைத்து வண்ணான் பாறைக்குச் செல்வார்கள். பொழுது உச்சி ஏறும் வரை வெளுப்பார்கள். வெளுத்த துணிகளை காயவைத்துவிட்டு ரங்க வண்ணான் கண் அயரும் போது சின்னாள் கொஞ்சம் விறகு வெட்டி விடுவாள்.

கவுண்ட வளவில் துணி எடுக்க வந்த போதெல்லாம் சின்னாளை சைட் அடித்திருக்கிறார் பொன்னாக்கவுண்டன். சின்னாளுக்கு பதின்மூன்று வயதுதான். ஆனால் வேலை செய்து முறுக்கேறிக் கிடந்த உடம்பு. அப்பொழுதெல்லாம் ஜாக்கெட் என்ற கான்செப்ட் வந்திருக்கவில்லை போலிருக்கிறது. மேலாக்கை மீறித்தெரியும் அவளது சிறு மார்பு பார்ப்பதற்கு தேங்காய் குருத்து போலிருந்தது என எழுதியிருக்கிறார். இப்படி சைட் அடிப்பதும் கவிதை எழுதுவதுமாக நிறுத்தியிருக்கலாம். சின்னாள் அழுக்குத்துணி எடுக்க வரும் போதெல்லாம் நூல் விட்டதில் ஒரு கட்டத்தில் அவள் பிக்-அப் ஆகிவிட்டாள்.

காதல் மொட்டுவிட்டிருந்த ஆரம்ப கட்டத்தில் ”உங்க சாதிக்காரங்களுக்குத் தெரிந்தால் எங்களை வெட்டிப்போடுவார்கள்” என்று தயங்கியிருக்கிறாள். அடிமேல் அடி வைத்து ஆலமரத்தையே இடம் மாற்றும் பொன்னாக்கவுண்டனுக்கு சின்னாள் மனதையா மாற்ற முடியாது. மாற்றிவிட்டார். காதல் பற்றிக் கொள்வது கூட அத்தனை பெரிய சிரமம் இல்லை. ஆனால் தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்வதுதான் பெரும்பாடாக இருந்திருக்கிறது.

அபார்ட்மெண்ட்டும், தியேட்டரும் இல்லாத அந்தக்காலத்தில் காவேரிபுரத்தில் மொத்தமே 32 வீடுகள் தான். ஊரின் எந்த மூலையில் ஒளிந்தாலும் ஏதோ கண்கள் பார்த்துவிடக் கூடும் என்ற பயத்திலேயே இடம் தேடியிருக்கிறார். கடைசியாக பெரிய தோட்டத்தில் இருக்கும் பாழ்கிணறு சரியான இடம் என்று தேர்வு செய்து பொன்னாக்கவுண்டனே இறங்கி சுத்தம் செய்திருக்கிறார். முழுக்கிணறையும் சுத்தம் செய்யவில்லையாம். இவர்கள் மறைவாக அமர்ந்து ரொமான்ஸ் செய்யும் அளவிற்கு தோதான இடத்தை தயார் செய்திருக்கிறார்.

இப்படியே வளர்ந்த காதலுக்கு ஆசிட் ஊற்றும் விதமாக கிணற்றுக்குள் கும்மாளமடித்த இவர்களின் அட்டூழியத்தை பார்த்த ராசாக்கவுண்டன் பொன்னாக்கவுண்டனின் அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். பொன்னாக்கவுண்டனின் அப்பா மூன்று ஆட்கள் தின்னும் சோற்றை ஒரே ஆளாகத்தின்னும் கழுமுண்டராயன், பொன்னாக்கவுண்டனை பொடக்காலியில் விட்டு வெளுத்துக்கட்டிவிட்டார்.

ரங்கவண்ணானையும் தென்னை மரத்தில் கட்டி வைத்து இரண்டு நாட்களுக்கு அடித்திருக்கிறார்கள். ஏகப்பட்ட வலியிலும் வெறுப்பிலும் வீடு வந்த ரங்க வண்ணான் சின்னாளை வெள்ளாவியில் வைக்காத குறையாக நொக்கியிருக்கிறான். வலி பொறுக்க முடியாமல் சின்னாள் கதறியது கவுண்ட வளவில்லெல்லாம் கேட்டிருக்கிறது. ரங்கவண்ணான் அவளை இழுத்துச் சென்று வண்ணாரக்கருப்பராயன் முன்னால் சத்தியம் செய்யச் சொல்லியிருக்கிறான். இனிமேல் பொன்னாக்கவுண்டனும் சின்னாளும் பார்த்தால் கூட அவளைக் கொன்றுவிட்டு தானும் செத்துப்போவதாகச் சொல்லியிருக்கிறான். அவன் செய்தாலும் செய்துவிடுவான்.

தன் அப்பனிடம் வாங்கிய அடியில் பொன்னாக்கவுண்டனுக்கும் முகம் பிய்ந்து தொங்குகிறது. வலி அடங்கும் வரை டைரி எழுதுவதை கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறார். அதற்கு பிறகான ஓரிரு மாதங்கள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் பொன்னாக்கவுண்டனுக்கும் சின்னாளுக்கும் கசமுசா நடந்திருக்கும் போலிருக்கிறது.

பொன்னாக்கவுண்டன் சின்னாளை வைத்திருக்கிறான் என ஊருக்குள் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்பதிலிருந்து சுவடி மீண்டும் தொடங்குகிறது. இந்தப் பேச்சால் வெறுத்துப்போன பொன்னாக்கவுண்டனின் பெற்றோர் அவனது மாமன் மகள் சரசாளையே கட்டி வைப்பதாக முடிவு செய்துவிட்டார்கள். இதைத் தெரிந்து கொண்ட சின்னாள் பொன்னாக்கவுண்டனிடம் அழுது தீர்த்திருக்கிறாள். இத்தனை நாள் சின்னாளை உறிஞ்சிய பொன்னாக்கவுண்டன் தன் புத்தியைக் அப்பொழுது காட்டியிருக்கிறான். நாம் இப்படியே இருந்துவிடலாம் என்றும் கடைசி வரைக்கும் உன்னை வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னானாம் இது ஒத்துவராத பட்சத்தில் செத்துப்போ எனச் சின்னாளிடம் எரிந்து விழுந்திருக்கிறான்.

எதிர்த்துப் பேசினால் கொன்று போடக் கூட தயங்கமாட்டான் என்பதால் சின்னாள் அமைதியாகிவிட்டாள். இரண்டொரு நாட்கள் மனம் அமைதியில்லாமல் கிடந்தவள் நேற்றிரவு தூங்கும் போது கறுக்கு அரிவாளை தலையணைக்கு அடியில் வைத்திருக்கிறாள். கறுக்கு அரிவாள் ரம்பத்தில் இருப்பதைப் போன்று பற்களைக் கொண்டிருக்கும். நெல் அறுக்க கறுக்கு அருவாளைத்தான் பயன்படுத்துவார்கள். பொன்னாள் தலையணைக்கு அடியில் அரிவாள் வைப்பதைப் பார்த்த ரங்க வண்ணான் அரிவாள் எதற்கு என்று கேட்டிருக்கிறான். ஒரு சாரைப்பாம்பை அறுத்து வீசப்போவதாகச் சின்னாள் சொல்லியிருக்கிறாள். ’பாம்பை அடித்துக் கொல்லாமல் அறுத்து வீசுவதாகச் சொல்லுகிறாள் கிறுக்கன் மவ’ என்று சிரித்துக் கொண்டே தூங்கிப்போனவன் அடுத்த நாள் அழுக்குத்துணி எடுக்கும் வீடுகளில் எல்லாம் இதைச் சொல்லியிருக்கிறான். எல்லோரது வீட்டிலும் சிரித்திருக்கிறார்கள். பொன்னாக்கவுண்டனுக்கு மட்டும் கோபம் உச்சிக்கு ஏறியது. ஆனால் யோசித்தவன் கோபத்தை அடக்கிக் கொண்டு ஆறேழு மாதங்களாக சின்னாளின் கண்களில் படாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறான். ஹைதர் அலி இறந்து திப்பு சுல்தான் பதவிக்கு வந்திருந்தான்.

– ஜூன் 8, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *