மயிலின் வருத்தம்!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 13,151 
 

ஒருநாள் மயில், பிரம்மாவைச் சந்தித்தது.
“”பிரம்மனே, எனக்கு ஏன் இனிமையான குரலைத் தரவில்லை? நான் சத்தமிட்டு ஒலியெழுப்பினால் எல்லோரும் சிரிக்கிறார்கள். அற்பப் பறவையான குயிலுக்குக்கூட இனிய குரலைக் கொடுத்தீர்கள். எனக்கு ஏன் தரவில்லை? ஏமாற்றிவிட்டீர்களே… இது முறையா?” என்று கேட்டது.
மயிலின் வருத்தம்m1இதைக் கேட்டதும் பிரம்மாவுக்குக் கோபம் வந்தது.
“”மயிலே, உனக்குக் குயிலின் மீது பொறாமை; அதனால்தான் இப்படிப் பேசுகிறாய்…” என்றார்.
உடனே மயில், “”பிரம்மனே, எனக்குப் பொறாமை எல்லாம் கிடையாது. என்னை நினைத்து வருத்தப்பட்டு, அப்படிக் கேட்டேன்…” என்றது.
அதற்கு பிரம்மா, “”மயிலே! வானவில்லின் வண்ணங்கள் அனைத்தும் உன் கழுத்தில் மின்னுகின்றன. உன் தோகையை விரித்தாலே, அழகு முத்துக்கள் வரிசையாய்ப் பரப்பியதைப் போல இருக்கும். நடனம் ஆடும் திறமையும் உனக்குத்தானே உள்ளது.
எல்லாவிதமான நல்ல பண்புகளையும் ஒரே பறவையிடத்தில் காண முடியாதே! கிளிக்குப் பேசும் ஆற்றலைத் தந்தேன். கழுகுக்கு வலிமையைக் கொடுத்தேன். பருந்துக்கு வேகத்தைக் கொடுத்தேன். ஆந்தைக்கு அறிவையும் குயிலுக்குக் குரலையும் தந்தேன். உனக்கு மட்டும்தான் அழகான உருவம், ஆடும் திறமை இரண்டையும் தந்தேன். இதற்காக நீ மகிழ்ச்சி அடைந்திடு… அதைவிட்டுவிட்டு குறைப்பட்டுக் கொண்டே இருந்தால், இருப்பதையும் பறித்துவிடுவேன்” என்றார்.
பிரம்மனின் இந்த உரையைக் கேட்டு மயில் தன்னைத் தானே திருத்திக் கொள்ள முன்வந்தது!

– குடந்தை பாலு (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *