கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,210 
 

ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஒநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன :

கிளி : ஒநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க?

ஒநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன்.

கிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க?

ஒநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும் என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும் என்னைக் கண்டால் ஒடிப் போகுதுங்க. நான் இங்கே இருந்து என்ன பயன்?

கிளி : நீங்க போகிற காட்டிலே இப்படியெல்லாம் உங்க கிட்ட நடந்துக்க மாட்டாங்களா, என்ன?

ஒநாய் : அந்தக் காட்டிலே இருக்கிற புலி சிறுத்தை யெல்லாம் என்னைக் கண்டதும் தடவிக் கொடுக்குது; மானும் முயலும் என்னோடு ஓடி விளையாடுது.

கிளி : அப்படியா? அப்படியானால் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேள் அண்ணே! “உன் விஷப்பற்களையும், கூர்மையான நகங்களையும் இங்கேயே, இந்தக்
காட்டிலேயே கழட்டி வைத்துவிட்டுப் போ!”

ஒநாய் : அதையெல்லாம் இங்கே கழட்டிப்போட்டு விட்டு போனால், அந்தக் காட்டிற்குப்போய் நான் என்ன பண்ணுவேன்?

கிளி : அப்படி நீ செய்யவில்லையானால், வெகுசீக்கிரத்தில் அந்தக் காடும் இந்தக் காடு மாதிரியே ஆகிவிடும் என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது கிளி.

இதிலிருந்து காட்டின்மேல் எந்தத் தப்பும் இல்லை; ஒநாய் நடந்துகொள்ளும் முறையில்தான் தப்பு இருக்கிறது என்று அந்தக் கிளி செல்லாமல் சொல்லிவிட்டது. நமக்கும் இது ஒரு படிப்பினை அல்லவா?

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *