கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 1,222 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

13 – 14 | 15 – 16


    15. ஆவூர்க் கோட்டை

    கைச்சிறையில் சிக்குண்டு கிடந்த கன்னரத்துக் கட்டழகியை நோக்கிக் “கணக்கை மறந்துவிட்டேன்” என்று பளிங்குச்சுளைப் படிகளில் சொன்ன சோழன் நலங்கிள்ளி, உண்மையில் அன்றும் கணக்கை மறந்தான். அன்று நாள் கணக்கை மட்டுமல்ல, நாழிகைக் கணக்குகளையும் மறந்துவிட்டதால், அவளை அணைத்த வண்ணம் இராப்பொழுது ஓடுவது தெரியாமல், நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டான். பஞ்சணையைவிட மென்மையான அவள் உடலின் அமைப்பு அவன் நினைப்பை அடியோடு இழக்கச்செய்து விட்டதால், புகாரை விட்டு சொர்க்கத்துக்கு ஓடிவிட்ட மன்னன், பொழுதுவிடியச் சிறிது நேரம் இருக்குமுன்பே அவளை விட்டுப் பிரிந்தான். 

    பிரிந்தும் பயனென்ன? அடுத்த நாட்களும் உடல் பிரிந்தாலும் அவளைப் பற்றிய நினைவு பிரியாததால், நாட்கள் வெகு துரிதத்தில் ஓடின. அடுத்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், அவூரை முற்றுகையிட்ட மாவளத்தானிடம் இருந்து வந்த ஓலைகளை மட்டும் நலங்கிள்ளி ஏதோ சம்பிரதாயத்துக்குப் படித்துவிட்டுப் புலவரிடம் அனுப்பிவிட்டான்.அவன் நீதி ஸ்தலத்தில் உட்கார்ந்த போதும், நீதி விசாரணை, தண்டனை முதலியவற்றை புலவரே நடத்தி நிர்ணயித்தார். மன்னன் அவற்றுக்கு எல்லாம் தலையை மட்டும் ஆட்டினான். அரசர் குழப்பத்தை, மயக்கத்தை, புலவர் மட்டுமல்ல, அமைச்சர்களும் விசாரிக்கப்பட்ட குற்றவாளிகளும் கண்டனர். அவனி சுந்தரியும் கவனிக்கவே செய்தாள். அதுமட்டும் அல்ல, அவளையும் மன்னனையும் இணைத்து அரண்மனை ஊழியர்கள் பேசிக் கொண்டதும், அரைகுறையாக அவள் காதில் விழுந்தது. ஆனால் மன்னனுக்குத் தன்னால் ஒரு அவப்பெயர் உண்டாகக் கூடாது என்ற நினைப்பால், அவனிடம் இருந்து விலகியே நிற்கலானாள். அதன் பலன், அவள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இருந்தது. 

    அவளை அடுத்த நாளும் அதற்கு மறுநாளும் பளிங்குச்சுனைப் படியில் காணாத மன்னன், மூன்றாவது நாள் இரவில் அவள் அறைக்கே சென்று கதவைத் தட்டினான். அவளே வந்து கதவைத் திறந்து, வாயிற்படியிலேயே நின்றாள். “நிரம்ப நேரமாகிவிட் டது அரசரே!” என்று கடுமையான குரலில் சொல்லவும் செய் தாள் 

    “ஆம். அதனால் என்ன?” என்று சீறினான் நலங்கிள்ளி. 

    “உங்களையும் என்னையும் பற்றி அரண்மனை ஊழியர்கள் பேசுகிறார்கள்.” 

    “ஆம். அதனாலென்ன?” 

    “மன்னன் மதியிழந்து விட்டான் என்று உங்களைத் தூற்று கிறார்கள்”. 

    “ஆம். அதனால் என்ன?”

    மூன்று முறை கிடைத்த ஒரே பதிலால் நிலைகுலைந்துவிட்ட அவனி சுந்தரி, கோபத்துடன் கேட்டாள், “நீங்கள் என்ன கிளிப் பிள்ளையா?” என்று. 

    “இல்லை. கிளிப்பிள்ளை மற்றவர் சொன்னதைத்தான் திருப்பிச் சொல்லும். ஆனால் நான், சொன்னதையே திருப்பிச் சொல்கிறேன்” என்று நலங்கிள்ளி, அவளைத் தன் கையால் தள்ளிவிட்டு, உள்ளே நுழையப் பார்த்தான். 

    அவனி சுந்தரி மிகுந்த சினத்துக்கும் கலக்கத்துக்கும் உட்பட்டாள். “உங்களுக்கு என்ன புத்தியே இல்லையா?” என்று வினவினாள், அவனை உள்ளே விடாமல் தடுக்க முயன்று. 

    “இல்லை” மன்னன் பதில் திட்டமாக வந்தது 

    “இல்லையா?”

    “இல்லை. அது பறிபோய் இரண்டு இரவுகள் ஓடிவிட்டன”. 

    “இன்றிரவு…” 

    “அதைத் திரும்பப் பெற வந்தேன்”. 

    “என்னிடம் இருக்கிறதா அது?” 

    “ஆம். உன்னிடமேதான்” என்று சொன்ன நலங்கிள்ளி, அவளைத் தள்ளிவிட்டுப் பஞ்சணையில் போய் உட்கார்ந்துவிட்டாள். அவனி சுந்தரியும் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாமல், கதவைத் திறந்து வைத்துவிட்டுப் பஞ்சணையை நோக்கி நடந்தாள். அங்கு சென்று அரசன் எதிரில் நின்றாள். 

    நலங்கிள்ளி அவளை ஏறெடுத்து நோக்கினான். “அவனி சுந்தரி! கதவு திறந்திருக்கிறது” என்று மெதுவாகக் கூறவும் செய்தான். 

    “அதனால் பாதகமில்லை” உஷ்ணத்துடன் கூறினாள் கன்னரத்து இளவரசி. 

    “பாதகமில்லையா?” 

    “ஆம்” 

    “ஏன்?” 

    “ஏற்கனவே ஊரறிந்த விஷயம். அதற்கு மறைவு எதற்கு?” இந்த சொற்களை வெறுப்புடன் சொன்னாள் அவனி சுந்தரி. மேலும் சொன்னாள் “மன்னவா! நீங்கள் என் இதய மன்னராகி விட்டீர்கள். நான் வேறு யாருக்கும் இனிச் சொந்தமில்லை. ஆனால் ஒரு சபதம் இருக்கிறது; அது முடிவாகும் வரை நான் உங்களை மணக்க முடியாது. இரண்டு இரவுகளுக்கு முன்பு, பளிங்குப்படிகளில், மதியிழந்த நிலையில் நடந்ததை மறந்துவிடுங்கள்” என்று. 

    இதைக் கேட்ட நலங்கிள்ளி, சற்றே யோசனையில் ஆழ்ந்தான். “என்ன சபதம் அது?” என்று வினவினான் சில விநாடிகள் கழித்து. 

    “கிள்ளிவளவரைக் கொன்றவன் தலையைக் கிள்ளி எறியாத வரையில், நான் மணப்பதில்லை என்று சபதம் செய்திருக்கிறேன்”, என்றாள் அவனி சுந்தரி, 

    “என்று?” 

    “நேற்று.” 

    “யாரிடம்?” 

    “புலவரிடம்.” 

    அயர்ந்துவிட்டான் அரசன் நலங்கிள்ளி. “புலவரிடம் இதைப் பற்றிப் பேசினாயா?” என்று வினவினான். 

    “நான் பேசவில்லை.அவர் பேசினார்…. “

    “என்னிடம் சொல்லவில்லையே அவர்.” 

    “சொல்ல அவசியமில்லை. விஷயம் முக்கியமாக என்னைப் பற்றியது.” 

    “அப்படியா?” நலங்கிள்ளியின் இந்தக் கடைசிக் கேள்வியில் ஏளனம் இருந்தது. 

    அவனி சுந்தரி அவனை மிக நெருங்கி, அவன் தலையைத் தனது மார்பில் அணைத்துக்கொண்டு, மவுனமாக நின்றாள் சில விநாடி கள். பிறகு விலகி நின்று, துக்கம் நிரம்பிய குரலில் பேசினாள், “மன்னவா! புலவர் மாளிகைக்கு நேற்றுப் பகல் சென்றிருந்தேன், அங்கு புலவர் என்னைப் பரிதாபத்துடன் பார்த்தார். அவனி சுந்தரி! உன் நிலை எனக்குப் புரிகிறது. ஆனால் மக்களுக்குப் புரியாது. போருக்கும் புரியாது” என்றார், துன்பம் கலந்த குரலில். அதைப் பற்றித்தான் நான் பேச வந்ததாகக் குறிப்பிட்டேன். மாண்ட மன்னனின் ஈமச்சடங்குகள் முடியாதிருக்கையில், எனது நடத்தை தவறானது என்பதை ஒப்புக் கொண்டேன். புலவர் என் வெளிப்படைப் பேச்சை ரசித்தார். ஆனால் சொன்னார்: “அவனி சுந்தரி! இதனால் மன்னன் பெயர் சீரழிந்து கிடக்கிறது. தம்பி போர்முனையில் இருக்கையில், தமையன் கன்னரத்தரசியின் காலடியை முற்றுகையிடுகிறான்” என்று மக்கள் நகைக்கிறார்கள். “இது சோழ நாட்டுக்குப் பெரும் தீது” என்று நானும் ஒப்புக் கொண்டேன். “இதற்கு என்ன பரிகாரம்?” என்று வினவினார், புலவர். “கிள்ளிவளவன் உயிரை மாய்த்த கிராதகன் தலையை யார் கிள்ளி என் முன்பு கொண்டு வருகிறார்களோ அவரைத்தான். நான் மணப்பேன்” என்று, அவர் முன்பு சபதம் செய்தேன். 

    இங்கு பேச்சை முடித்த அவனி சுந்தரி, நலங்கிள்ளியை உற்று நோக்கினாள். நலங்கிள்ளி பெரிதாக நகைத்தான். “மாவளத்தான் ஆவூர் போயிருக்கிறான். அங்கு அவன் நிச்சயம் நெடுங்கிள்ளியைக்  கொன்றுவிடுவான். ஆகவே நீ அவனைத்தான் மணம் புரியும்படியாக இருக்கும்” என்றும் கூறினான், நகைப்புக்கிடையே. 

    “ஆவூரைப் பிடிக்க உங்கள் தம்பியால் முடியாது. நெடுங்கிள்ளியும் உங்கள் தம்பி கையில் சிக்கமாட்டான்” என்றாள். அவனி சுந்தரி திட்டமாக. 

    “மாவளத்தான் வீரத்தை நீ அறிய மாட்டாய்” என்றான் நலங்கிள்ளி. 

    “நெடுங்கிள்ளியின் தந்திரத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்றாள் அவனி சுந்தரி பதிலுக்கு. 

    நலங்கிள்ளி நீண்ட நேரம் யோசித்துவிட்டு, “உனக்கு எப்படி அத்தனை திட்டமாகத் தெரியும்? மாவளத்தான் நெடுங்கிள்ளியைக் கொல்ல மாட்டான் என்று?” என்று வினவினான். 

    அவனி சுந்தரி மெள்ளச் சொன்னாள், “சொன்னால் நீங்கள் நகைப்பீர்கள்” என்று. 

    “சொல், நகைக்கவில்லை” என்றான் நலங்கிள்ளி. 

    “அன்றிரவு பளிங்குச்சுளையில்…” என்று தொடங்கினால் அவனி சுந்தரி. 

    “என்னிடம் சிறையிருந்தாய்.” 

    “பிறகு இங்கு வந்து படுத்தேன். உறங்கிவிட்டேன்.” 

    “உம்” 

    *உறங்கியதும், கனவு ஒன்று கண்டேன்.” 

    ”என்ன கனவு?” 

    “நீங்கள் நெடுங்கிள்ளியை வடக்கில் கொல்வதாக.” 

    “வடக்கிலா? அங்கு எதற்காக நான் போகப் போகிறேன்?” 

    “எதற்காகவோ தெரியாது. கனவு அப்படித்தான் இருந்தது; அது கண்டிப்பாய் நடக்கும்”. என்று திட்டமாகக் கூறிய அவனி சுந்தரியின் கண்களில், ஒரு புத்தொளி பிறந்தது. 

    “கனவுகளெல்லாம் கண்டிப்பாய் நடக்குமா?” 

    “என் கனவுகள் இன்றுவரை அப்படித்தான்.” 

    இதை நலங்கிள்ளியால் நம்ப முடியவில்லை. ‘ஏதோ பிதற்று கிறாள் இந்தப் பெண்’ என்று நினைத்துக் கொண்டு, அவள் அறையைவிட்டு வெளியேறினான். ஆனால் அடுத்த நாள் கிடைத்த செய்தி, அவனுக்குப் பெருவியப்பைத் தந்தது. அவனி சுந்தரியின் கனவு ஒருவேளை நடந்துவிடுமோ என்று கூட அஞ்சினான். 

    அன்று மாவளத்தானிடம் இருந்து தூதன் ஒருவள் வந்திருந்தான். மன்னன் அந்தரங்க அறையில் புலவருக்கு எதிரிலேயே தனது செய்தியை அறிவித்தான்.”ஆவூர்க் கோட்டை முற்றுகை சீக்கிரத்தில் முடியாது என்று இளவரசர் கூறச் சொன்னார். கோட்டைக் கதவுகளை நெடுங்கிள்ளி திறக்கவும் இல்லை. போருக்கு வரவும் இல்லை. கையைக் கட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கிறான் எனவும் சொல்லச் சொன்னார்” என்று கூறினான், தூதன். 

    “யானைகளை விட்டுக் கோட்டைக் கதவுகளை உடைத்து உட்புகுவதுதானே?” என்று கேட்டான் நலங்கிள்ளி. 

    “முயன்று பார்த்தோம். முடியவில்லை. கதவுகள் மிகப் பலமாக இருக்கின்றன”. 

    “நெடுங்கிள்ளி எத்தனை நாள் இப்படிக் காலந்தள்ளப் பார்க்கிறான்?” என்று வினவினான் நலங்கிள்ளி. 

    “புரியவில்லை இளவரசருக்கு.”

    நலங்கிள்ளி மட்டுமல்ல, புலவரும் யோசனையில் ஆழ்ந்தார். கடைசியில் புலவர் சொன்னார்: “தூதா! நீ இன்று இளைப்பாறு. நாளைக் காலையில் நானும் உன்னுடன் வருகிறேன்” என்று கூறித் தூதனை அனுப்பினார். 

    அவர் கூற்று நலங்கிள்ளிக்குப் பெரும் வியப்பை அளித்தது. “நீங்கள் எதற்குப் போக வேண்டும்?” என்று வினவினான். 

    “நீ போக முடியாது. பதினாறு நாட்கள் முடிய இன்னும் சில நாட்கள் இருக்கின்றன” என்றார் புலவர். 

    “நீங்கள் போய் என்ன செய்ய முடியும்?”. 

    “நிலவரத்தை அறிய முடியும்?” 

    “அறிந்து என்ன செய்வீர்கள்?” 

    “நெடுங்கிள்ளியை போருக்கு வரச் சொல்லுவேன்; அல்லது சரணடையச் சொல்லுவேன். 

    “அவன் மறுத்தால்?” 

    “மறுக்க முடியாது.” 

    “ஏன்?” 

    “இஷ்டப்பட்டால் அவனைக் கொன்றுவிட என்னால் முடியும்?”  

    “கொல்ல என்ன வைத்திருக்கிறீர்கள்?”

    “பாட்டு.” 

    “பாட்டா!” 

    “ஆம்.” 

    “பாட்டு கொல்லுமா?” 

    “கொல்லவும் முடியும்.” 

    நலங்கிள்ளி பதில் ஏதும் சொல்லவில்லை. கடைசியாக “சரி உங்கள் இஷ்டம்” என்றான். 

    மறுநாள், தூதனுடன் புறப்பட்ட கோவூர் கிழார், இரண்டு நாள் நிதான பயணத்துக்குப் பிறகு, ஆவூர்க் கோட்டை முன்பு தோன்றினார். அவரை மாவளத்தான் எதிர்கொண்டான். அப்பொழுது இரவு மூன்று நான்கு நாழிகைகள் இருக்கும். கோட்டைக்குள் இருந்து திடீரென பல அழுகுரல்கள் பலமாகக் கேட்டன. புலவர் திகைத்துப் போனார், “இது என்ன மாவளத்தான்?” என்று வினவினார். 

    “தெரியவில்லை. உள்ளே சென்று பார்த்தால்தான் தெரியும் தினம் இப்படிப் பகலிலும் இரவிலும் அழும் ஒலி கேட்கிறது”. 

    “சரி, ஒரு தூதனைப் பந்தத்துடனும் கொம்புடனும் என்னுடன் அனுப்பு” என்றார் புலவர். 

    ”எதற்கு? என்று கேட்டான் மாவளத்தான். 

    “கோட்டைக்குள் புக.” அமைதியுடன் வெளிவந்தது புலவிரின் பதில். 


      16. ஓலைக் கவிதை

      ஆவூர்க் கோட்டைக்குள் இருந்து இரவில் எழுந்த பலமான அழுகுரல்களின் காரணத்தை அறிய மாட்டாததால், அதை அறிந்துவரத் தீர்மானித்த கோவூர் கிழாரின் எண்ணத்துக்கு உடனடியாக இணங்கினான் இல்லை, இளைய சோழனான மாவளத் தான். உள்ளே சென்றால், புலவரின் கதி யாதாகுமோ என்ற அச்சத்தால் “புலவர் பெருமானே! எதிரி கோட்டைக்குள் நீங்கள் செல்வது தற்சமயம் அவ்வளவு உசிதமல்ல” என்று தடுத் தாள். 

      புலவர் மாவளத்தானை வியப்பு நிறைந்த கண்களால் நோக்கி “ஏன் உசிதமல்ல?” என்று வினவினார். 

      மாவளத்தான் சிறிதே சந்தித்தான். 

      “நெடுங்கிள்ளியின் சுபாவம் உங்களுக்குத் தெரியாததல்ல” என்று பதில் கூறினான். 

      “நன்றாகத் தெரியும்” என்றார் புலவர். 

      “கொடியவன்” என்று குறிப்பிட்டான், மாவளத்தான். 

      “என்ன கொடியவனாய் இருந்தாலும் புலவர்களை ஒன்றும் செய்யமாட்டான்” என்று திட்டமாகச் சொன்னார், கோவூர் கிழார். 

      “அங்குதான் தவறு செய்கிறீர்கள்” என்று சொன்ன மாவ வாத்தான், “இரண்டு நாளைக்கு முன்பு இங்கு ஒரு புதுமை நிகழ்ந்தது” என்றும் சொற்களைக் கூட்டினான். 

      சிந்தனை ததும்பிய விழிகளை மாவளத்தான் மீது திருப்பிய கோவூர் கிழார், “என்ன புதுமை அது?” என்று வினவினார். 

      மாவளத்தான் உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான். “புலவர் பிரான் தவறாக நினைக்கக் கூடாது…” என்று துவங்கினான். 

      “சொல் விஷயத்தை” 

      “இரண்டு நாளைக்கு முன்பு இங்கு இளந்தத்தனார் வந்திருந்தார்.”. 

      “யார்? என் முதல் சீடனா?” 

      “ஆம்” 

      “எங்கே அவன் இப்பொழுது?” 

      “கோட்டைக்குள் இருக்க வேண்டும்”. 

      “இருக்க வேண்டுமா?”

      “ஆம். உங்களைப் போல்தான் அவரும் கோட்டைக்குள் செல்ல விரும்பினார். நான் தடுத்தும் கேட்கவில்லை. ஆகையால் அனுப்பி வைத்தேன். அப்புறம் வெளியில் அவர் வரவில்லை.”

      இதைக் கேட்ட புலவர் திகைத்தார். “சரி,சரி இரண்டு நறுக்கு ஓலைகள் கொண்டு வா” என்றார். 

      நறுக்கு ஓலைகள் கொண்டு வரப்பட்டதும், அவற்றில் எழுத் தாணி கொண்டு விடுவிடுவென்று சில வரிகளை எழுதினார். பிறகு அவற்றில் ஒரு ஒலையைக் கொடுத்து, “மாவளத்தான்! நாளை மாலைக்குள் நான் கோட்டையில் இருந்து திரும்பி வராவிட்டால். நீ இதை நமது அவைக்களப் புலவர்களிடமும், என் சீடர்களிடமும், முக்கியமாக நலங்கிள்ளியிடமும் கொடு” என்று கூறிவிட்டு. சரி நான் புறப்பட ஏற்பாடுகளைச் செய்” என்று கூறினார். 

      மாவளத்தான் ஓலைகளில் இருந்த வரிகளைப் படித்தான். பிரமித்தான். “புலவர் பெருமானே! இந்த ஓலையில் கண்ட பாட்டு, நமது நாட்டில் பரப்பப்பட்டால், வெளிநாடுகளுக்கும் போகுமே” என்றான் வருத்தத்துடன்.

      “ஆம், போகும்.” 

      “போனால், சோழ வம்சத்துக்கே அழியாப் பழியை உண்டாக்குமே?” என்றான். 

      “உண்டாக்காது! சோழர் வம்சத்தில் இப்படியும் ஒருவன் இருந்தான் என்று நெடுங்கிள்ளியை மக்கள் தூற்றுவார்கள். வேறு எந்த விளைவும் ஏற்படாது” என்று கூறிவிட்டு, மாவளத்தான் பாசறையில் இருந்து புலவர் கிளம்பினார். புலவருடன் கொம்பு ஊதுபவன் ஒருவனையும், பந்தம் பிடிப்பவன் ஒருவனையும், மாவளத்தான் இஷ்டவிரோதமாக அனுப்பி வைத்தான். 

      புலவர் அவ்விருவரும் பின்தொடரக் கோட்டையின் பெரு வாயிற் கதவுக்கு அருகில் வந்து, கொம்பைப் பலமாக ஊதப் பணித்தார். கொம்பு ஊதப்பட்டதும், கோட்டைக் கதவுகளுக்கு மேலிருந்து மதிள் தளத்தின்மீது தோன்றிய ஒரு உபதளபதி, “வந்திருப்பது யார்?” என்று இரைந்து வினவினான். 

      ‘கதவைத் திற’ கோவூர் கிழாரின் கட்டளை அவரிடமிருந்தே பலமாக ஒலித்தது. 

      உபதளபதி சற்று எட்டிப் பார்த்தான். பந்தத்தின் வெளிச். சத்தில் புலவர் முகத்தைக் கண்டதும், சரேலென மறைந்தான். சுமார் ஒரு நாழிகைக்குப் பிறகு கதவுகள் திறக்கப்பட்டு, புலவர் மட்டும் அனுமதிக்கப்பட்டார், உள்ளே. 

      கோட்டைக்குள் நுழைந்த கோவூர் கிழார், அங்கிருந்த நிலை கண்டு, பல விநாடிகள் அயர்ந்து நின்றுவிட்டார். இருட்டிவிட்ட அத்தனை நேரத்துக்குப் பிறகும், அந்த ஊரின் மாதர்கள், மககளில் குழந்தைகளை எடுத்துக் கொண்டு தெருவில் வந்து. அவற்றின் அழுகைகளை நிறுத்தக் கைகளால் சீராட்டிக் கொண்டு இருந்தார்கள். நகர வணிகரும், விவசாயிகளும், மற்றும் பல ஊழியர்களும், அவரவர் வீட்டு வாயிற்படிகளில் சோகக்களையுடன் உட்கார்ந்திருந்தார்கள். 

      புலவர் கால் ஓடமாட்டாமல் நிலைத்து நின்று, அந்தக் கோரக் காட்சியைப் பல விநாடிகள் பார்த்தார். மக்கள் சோறு இல்லாமலும், குழந்தைகள் பாலில்லாமலும் தவிக்கும் காட்சி யைக் கண்டதும், சோர்ந்த மனதுடன் அரண்மனை நோக்கி நடந் நார். 

      ஆவூர் சிறு ஊராகையால், நாலைந்து தெருக்களைத் தாண்டியதும், அரண்மனை அவர் முன்பாக எழுந்தது. அரண்மனை வாயிலில் காவல் பலமாக இருந்தது. வாளை உருவி நின்ற காவலர் அங்குமிங்கும் புரவிகளில் உலாவிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் எவ்விதச் சோர்வும் இல்லாததைக் கவனித்த கோவூர் கிழார், கோட்டையின் அழுகுரலுக்குக் காரணத்தை நொடிப் பொழுதில் ஊகித்துக் கொண்டார். இருப்பினும் அதை வெளிக் குக் காட்டாமல், அரண்மனை வாயிலில் நின்று “மன்னனை நான் பார்க்க விரும்புவதாகச் சொல்” என்று பக்கத்தில் வந்து கொண் டிருந்த உப தளபதியை நோக்கிக் கூறினார். 

      “அரசருக்கு முன்பாக அறிவித்துவிட்டோம்; வாருங்கள்” என்று உப தளபதி அவரை உள்ளே அழைத்துச் சென்றான். 

      நீதி மண்டபத்தில் நெடுங்கிள்ளி புலவரைச் சந்தித்தான். அவர் வந்ததும், அரியணையில் இருந்து எழுந்திருந்து, “வரவேண்டும்” என்று முகமன் கூறி, அவர் உட்கார ஒரு ஆசனத்தையும் காட்டினான்.

      புலவர், நெடுங்கிள்ளியைக் கூர்ந்து நோக்கினார், சில விநாடிகள். பிறகு ஆசனத்தில் சென்றமர்ந்து அரசனையும் அமரப்பணித்தார். நெடுங்கிள்ளியின் இதழ்களில் ஒரு குரூரப் புன்னகையிருந்தது. “புலவர் பெருமானின் வருகைக்கு ஆவூர் என்ன பாக்கியம் செய்ததோ?” என்று கேட்டான் 

      புலவரின் கண்கள் அச்சமின்றி அவனை நோக்கின. “ஆவூர் பாக்கியத்தைப் பார்த்தேன், எனது அபாக்கியத்தையும் அறிந்தேன்” என்றார் புலவர், வருத்தம் தோய்ந்த குரலில். 

      “ஏன் ஆவூருக்கு என்ன குறைவு?” என்று வினவினான் நெடுங் கிள்ளி. 

      “நீ மன்னனாயிருப்பதைவிட, அதற்கு வேறு என்ன குறைவு வேண்டும்?” என்று வினவினார் புலவர்,பதிலுக்கு. 

      இதைக் கேட்ட நெடுங்கிள்ளி இரைந்து நகைத்தான். “புலவரே! உமக்குத் துணிவு அதிகம்” என்றும் கூறினான். 

      “அதில் உனக்கு இத்தனை நாள் சந்தேகம் இருக்கிறதா?

      “இல்லை” 

      “ஏன்?” 

      “புலவர்களுக்கு அசட்டுத் துணிவு உண்டென்பது எனக்குத் தெரியும்.” 

      “அப்படியா?”

      “ஆம். இரண்டு நாளைக்கு முன்பு உமது முதல் சீடர்…” என்று ஏதோ சொல்ல முற்பட்ட நெடுங்கிள்ளி, வார்த்தைகளை முடிக்காமல், இளநகை பூத்தான். 

      புலவர் முகத்தில் வருத்தம் மறைந்து, இகழ்ச்சிக்குறியும் மறைந்து, அச்சம் லேசாக உதயமாயிற்று. 

      “இளந்தத்தனைப் பற்றிக் கூறுகிறாயா?” என்று வினவினார். 

      ”ஆம்” என்றான் நெடுங்கிள்ளி மெள்ள நகைத்து. 

      “அவனை என்ன செய்தாய்?” 

      “இன் னும் ஏதும் செய்யவில்லை. சிறையில் அடைத்து வைத்து இருக்கிறேன். நாளை உங்கள் கண்களுக்கு விருந்து கிடைக்கும்”. 

      “என்ன விருந்து?” 

      “தங்கள் சீடன் வெட்டுப்பாறைக்குப் போவதை நேரில் பார்க்க நீங்கள் கொடுத்துவைக்க வேண்டுமல்லவா?”

      புலவர் கண்களில் அதுவரை இருந்த அச்சம் மறைந்து சினம் பெரிதாக விரிந்தது. “மன்னனே! நீ நெருப்புடன் விளையாடுகிறாய். உடனடியாக இளந்தத்தனை விடுவித்துவிடு” என்று கூறினார், சினம் குரலிலும் ஒலிக்க. 

      “இளந்தத்தனையா! அந்த இரண்டுங்கெட்டான் புலவன், நான் கொடுத்த பொற்கிளியை அவன் ஊரில் விட்டெறிந்தான். என் கண் முன்பாக. அதைப் பொறுத்தேன், இங்கு வந்திருக்கிறான் வேவுபார்க்க. இதை எப்படிப் பொறுக்க முடியும்?” என்று சீறினான் மன்னவனும். 

      கோவூர் கிழாரின் சொற்களில் சீற்றமிருந்தும், நிதானமும் இருந்தது. 

      “புலவர்கள் ஒருநாளும் வேவுபார்க்க மாட்டார்கள்” என்றார். 

      “வேறு எதற்கு வந்தார் இங்கே?” போலி மரியாதை இருந்தது நெடுங்கிள்ளியின் கேள்வியில். 

      “எதற்கு வந்ததாகச் சொன்னான்?” என்று வினவினார் புலவர். 

      “நான் கொடுத்த பொற்கிழியை விட்டெறிந்ததற்கு மன்னிப்புக் கேட்க வந்திருப்பதாகச் சொன்னார். தவிர, அதற்குப் பிராயச் சித்தமாக மேலும் பரிசு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதாகக் கூறினார். எப்படிக் கதை?” என்று கேட்டான் நெடுங்கிள்ளி. 

      “அது கதையல்ல மன்னவா; உண்மை. புலவர்கள் பொய் பேசமாட்டார்கள். இளந்தத்தன் தன் செய்கைக்கு வருத்தம் தெரிவிக்கவே வந்திருக்கிறான். அவனை விடுதலை செய்துவிடு” என்றார் புலவர் திட்டமாக. 

      “அது மட்டுமல்ல மன்னவா! இளந்தத்தனை விடுதலை செய்து அனுப்பியதும், போருக்கும் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே செல். கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது வீரர்களுக்கு அழகல்ல” என்ற புலவர், “தவிர ஒரு விஷயம் புரியவில்லை எனக்கு, கோட்டைக்குள் மக்களும் குழந்தைகளும் அழக் காரணம் என்ன?” என்று கேட்டார். 

      நெடுங்கிள்ளியின் கண்களில் ஒரு விபரீதச்சாயை படர்ந்தது. “சோறு இல்லாவிட்டால் மக்கள் அழுகிறார்கள். பால் இல்லா விட்டால் குழந்தைகள் அழுகின்றன” என்று விளக்கினான் நெடுங் கிள்ளி. 

      புலவர் மன்னவனை விநோதமாகப் பார்த்தார். “அவர்கள் குதிர்களில் உள்ள நெல் என்னவாயிற்று? புழக்கடைப் பசுக்கள் என்ன ஆயின?” என்று வினவினார் புலவர். 

      “நெல் இங்கு அரண்மனைக் களஞ்சியத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பசுக்களும் இங்கு கொட்டடியில் கட்டப்பட்டு இருக்கின்றன”. 

      “அப்படியா? மக்கள், நெல், பசுக்கள்.”

      “படைப் பிரிவுகளுக்குத் தேவையாயிருக்கிறது. படைதானே கோட்டையைக் காக்க வேண்டும்.” 

      “மக்களின் சொத்தைப் பறித்துப் படைகளுக்குக் கொடுத்து விட்டாயா?”

      “ஆம்” 

      “இதுதான் உன் அரசின் லட்சணமா? இது தர்மமா?” 

      “தர்மம் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. நான் தானியங்களைச் சேகரிக்கு முன்பு, மாவளத்தான் முற்றுகையிட்டு விட்டான். அதனால் நேர்ந்த தொல்லை இது.” 

      நெடுங்கிள்ளியின் விபரீதமான தர்ம நியாயத்தை நினைத்த கோவூர் கிழார், அவர் கோழைத்தனத்தையும், அதில் கலந்து விட்ட நெறிகெட்ட செய்கையையும் நினைத்து மனம் வெதும்பினார். அதனால் ஏற்பட்ட சினத்தை வெளிக்குக் காட்டாமல், எழுந்து நின்றார். அந்த நீதி மண்டபத்தில் அங்கிருந்த மந்திரிப் பிரதானிகளை ஒருமுறை கூர்ந்து நோக்கினார். “யாராவது ஒருவர் சென்று இளந்தத்தனை அழைத்து வாருங்கள்” என்றார். அவர், கட்டளை மிகக் கம்பீரமாக இருந்தது. 

      அதைக் கவனித்த நெடுங்கிள்ளியும் சிறிது பயந்து, “சரி அந்தப் புலவனை இழுத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் இரண்டு வீரர்களுக்கிடையில் வந்த இளந்தத்தனிடம் தமது மடியில் இருந்த ஓலையைக் கொடுத்து “இளந்தத்தா! இதை இரைந்துபடி” என்று கூறினார். 

      இளந்தத்தன் அலட்சியமாக, இரைந்து ஓலைக் கவிதையைப் படித்தான். அதைக் கேட்ட சபை அயர்ந்து நின்றது. 

      இளந்தத்தன் பாடி முடித்ததும், “வா நாம் செல்வோம்” என்று இளந்தத்தனை நோக்கிக் கூறிய கோவூர் கிழார், மன்னனை நோக்கித் தமது கண்களைத் திருப்பி, “நாளைக் காலையில் கோட் டைக் கதவுகள் திறக்க வேண்டும். இல்லையேல்…” என்று எச்சரித்தார். 

      அவர் துணிவு மட்டுமல்ல, எச்சரிக்கையும் சபையில் இருந்த அனைவரையும் திகைக்க வைத்தது. புலவர் அவர்களை மீண்டும் திரும்பிப் பாராமல் இளந்தத்தன் பின்தொடர, கம்பீர நடை நடந்தார் வாயிலை நோக்கி சபையில் இருந்தோர் அச்சமுற்றனர், இளந்தத்தன் படித்த பாட்டை எண்ணி. அடுத்துப் புலவர் என்ன செய்வார் என்பதும் புரிந்ததால், யாரும் அவர்களைத் தடை செய்யவில்லை. மேலும் புலவருக்குச் சினமூட்டுவது தனக்கு அனர்த்தத்தை விளைவிக்கும் என்ற எண்ணத்தால், நெடுங்கிள்ளியும் ஆசனத்தில் இருந்து எழுந்தானில்லை.

      – தொடரும்

      – அவனி சுந்தரி, ராணி முத்து, ராணி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

      Print Friendly, PDF & Email

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *