யார் உன்னை அழைத்தார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 2,425 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு எறிகணைகள் கூவல் ஒலியுடன் தலையைக் கடந்தன. ஒரு கணம் நிதானித்தேன். வழமையான அதிகாலை உபசரிப்பா? யானை வரவின் மணியொலியா?

யோசிச்சு முடிக்குமுன் ஒரு இருபத்தைந்து, முப்பது எறிகணைகள் சுழற்றி விசிறப்பட்டு விழுந்து வெடிக்க, மனமும் கையும் ஒரே நேரத்திலேயே இயங்கின. நான் வோக்கியை (Walky talky) இயக்கி “என்ன மாதிரி” என்று கேட்க அதே நேரம், நிறைய “என்ன மாதிரியும்….”

“பதினெட்டால் வந்திட்டான், இருபத்திரெண்டால் வந்திட்டான், இருபத்தொன்பதால் வந்திட்டான், முப்பத்தாறால் வந்திட்டான்” எனவும் குரல்கள் ஒலிக்க, நிலைமை சட்டெனப் புரிந்து போனது. வரலாம். வருவான் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், அவசரமாகச் செய்யப்பட்ட தயார்ப்படுத்தல்கள் எல்லாம் எந்தளவில் இருக்கின்றன எனப் பார்த்து வரப் புறப்பட்ட நான் முன்னணியும் இல்லாமல், பின்னணியும் இல்லாமல் இடைவழியில். கொஞ்சம் சிக்கல்தான். 50 கலிபர் காரரைப் பார்ப்பதற்காகாத்தான் நான் புறப்பட்டிருந்தேன். இனிப் பின்னுக்கு போய் வேலையில்லை. கலிபர்காரருடன் தொடர் பெடுத்து கதைத்துவிட்டு, திரும்பி முன்னணிக்கு போவதுதான் மிகச் சரியான முடிவு. மெயினின் அதிர்வெண்ணுக்கு வோக்கியை ஓடவிட்டுப் பார்த்தேன். சேராவண் அங்கிருந்தவாறே முன்னணிக்காரரையும் மோட்டர்காரரையும் இணைத்துக்கொண்டிருந்தாள்.

திடீரென எனக்கு எங்களின் 50 கலிபர் அடி கேட்டது. அதற்கிடையில் அவ்வளவு தூரம் போய்விட்டானா? வேகமாக அவர்களின் அதிர்வெண்ணுக்குப் போனேன். அவர்கள் ஏற்கனவே அந்த அதிர்வெண்ணில் நின்றவாறு என்னை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவசரமாகக் குறுக்கிட்ட நான்,

“லீமாசேராதான் நிக்கிறன். சொல்லுங்கோ” என்றேன். “லீமாசேரா, எங்களுக்கு இடது பக்கம் நூற்றம்பது தள்ளி கிட்டதட்ட நூறு பேராவது பின்னுக்கு போயிட்டாங்கள். நாங்கள் குடுத்துக் கொண்டேயிருக்கிறம். ஆளும் விடாமல் போய்க்கொண்டேயிருக்குது”

“விடாமல் குடு பப்பா இந்தியா. குடுத்துக்கொண்டேயிரு. எல்லாப் பக்கத்தையும் அவதானிப்பில வச்சிரு. எல்லாருக்கும் இலக்குப் பிரிச்சுக் குடு”

“விளங்குது லீமாசேரா. அதுக்கேற்ற மாதிரித்தான் எல்லாம் போட்டிருக்கிறன்”

என்றாள் பப்பா இந்தியா. அவள் ஒரு சிங்கி. யாரும் சொல்லாமலேயே எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் கற்பூரப் புத்திக்காரி. இனி நான் தாமதிக்காமல் மெயினுக்கு போய் சேர வேண்டும். சேராவண் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பாள். ஆயிரம் வேலைகளிருக்கும் இப்போது.

மெயினின் அதிர்வெண்ணுக்கு போய், பப்பா இந்தியாவை இராணுவம் கடந்து கொண்டிருக்கும் செய்தியை சேராவண்ணுக்கு சொல்லியவாறு வேகமாக மெயினை நோக்கி ஓடினேன். நான் நின்ற நடுத்துண்டுக்குள் இன்னும் எறிகனைகள் விழவில்லை. ஏன்? நடுத்துண்டுக்குள் இராணுவம் நிற்கிறதோ? எனக்கு வலப்புறம் வேப்ப மரத்தருகே ஏதோ அசைவு தெரிய, பார்வையைக் கூர்மைப்படுத்தினேன். ஆளேதான். என்னிலிருந்து எழுபத்தைந்து மீற்றர் இடைத்தூரம் வரும். உடம்பெல்லாம் வகை தொகையில்லா பாரங்களைச் சுமந்தவாறு இராணுவம் பின்னணிக்கு ஓடிக்கொண்டிருந்தது. எங்களுடைய எக்கோ லீமா குறுக்குத் தகட்டு வரிசையில்தான் ஓடுகிறார்கள். நிலைமையைச் சேராவண்ணுக்குச் சொன்னேன்.

“எக்கோ லீமா வரிசையோ? சிக்கலில்லை. வண் செவிணுக்கு அறிவிச்சு ஒழுங்கு படுத்துறன். நீ கெதியாய் வா” என்றாள் சேராவண். நான் பாய்ந்தடித்து மெயினுக்கு போய்ச் சேரவும் எக்கோலீமா வரிசையை எங்களுடைய எறிகணைகள் துடைத்தழிக்கத் தொடங்கின. நான் எதிர்பார்த்த மாதிரியே சேராவண் பதுங்கு குழியுனுள்ளே இல்லை.

“கெதியா வா. உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறன். டெல்ரா பதினெட்டு, இருபத்திரண்டு, இருபத்தொன்பது, முப்பத்திரண்டு உடைபட்டு அவன்ரை போக்குவரத்துப் பாதையா இருக்குது. எங்கட ஆட்கள் விழுந்திட்டினம். மிஞ்சியிருந்த ஆட்களை இழுத்துக்கொண்டு போய் பன்னிரண்டிலையிருந்து பதினாறுவரைக்கும் போட்டிட்டு ராங்கோ மைக் நிக்கிறாள். பதினெட்டிலையிருந்தும், முப்பத்திரண்டிலையிருந்தும் கடும் எதிர்ப்பு வருதாம். இவ்வளவு நேரமும் செல் போட்டுக் குடுத்தும் போகேலாமல் இருக்குதாம். எங்கட லைனுக்கு ஒரு கிலோ மீற்றர் பின்னாலை அவன் ஒரு லைனைப் போட்டிட்டு நிக்கிறன். எங்களுக்கு எல்லாப் பக்கத்திலையும் அவன். இனி நான் இதிலை நிண்டு வேலையில்லை. தனித்தனிய நிண்டு என்னைத் தொடர்பு எடுத்த எல்லாரையும் எப்பிடியாவது டெல்ரா நாப்பத்தியிரண்டுக்கு வரச் சொல்லியிருக்கிறன். நான் நாப்பத்தொண்டுக்குப் போறன். நீ பதினாறுக்குப் போ. ரெண்டு பக்கத்தாலையும் நெருங்கி லிங்க் பண்ணுவம். பாதையை மூடுற வரைக்கும் எங்களுக்கு பின்னால் நிக்கிறவன் பலமாத்தான் நிப்பான். சப்ளையை மறிச்சாத்தான் அவனை உடைக்கலாம். உனக்கு விளங்குதோ?” என்றாள் சேராவண் பதுங்கு குழியின் முகட்டில் நின்றவாறு. அவளும், அவளுடன் நின்றவர்களும் முழுமையான தயார் நிலையில்.

பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்னோடு ஒரு 40 mm இருந்தால் நல்லது என்று மனதில்பட, அல்பாலீமாவைக கூட்டிக்கொண்டு, என்னுடைய இடைப்பட்டி முழுமையும் குண்டுகளைக் கொழுவிக்கொண்டு பதினாறை நோக்கி ஓடிப்போனேன்.

பதினாறுக்குப் போனேன் என்பதைவிட, நான் கொலை வலயத்துக்குள் போனேன் என்பதுதான் உண்மை. பதினாறு, பதினைந்து என்று எங்களுடைய ஆட்கள் நின்ற காப்பரண்கள் எல்லாம் எதிரியின் எறிகணை மழைக்குள் குளித்தபடி. இந்த எறிகணை வீச்சுள்ளும் யாராவது எஞ்சியிருப்பார்களா? வோக்கியில் ராங்கோ மைக்கைக் கூப்பிட்டவுடனேயே, “எனக்கு உன்னைத் தெரியுது. வேகமாக ஓடிவா” என்று கத்தினாள். அல்பாலீமாவும் நானும் ஓடிப்போய் பதினாறுக்குள் சறுக்கிப் பாய்ந்த வேகத்தில் சமநிலை குழம்பிச் சரிந்து விழப்போன எம்மை உள்ளிருந்தவர்கள் தாங்கிக்கொண்டார்கள்.

“இதுக்குள்ளாலை பார்” என்றெனக்குச் சுடும் ஓட்டைக்குள்ளால் காட்டினாள் ராங்கோமைக் அணிவகுத்து நின்ற மொட்டைத் தென்னைகளுக்கிடையில் பார்த் தேன். இருபது பேரளவில் கொண்ட இராணுவ அணி பதினெட்டின் ஊடாக உள் நுழைந்துகொண்டிருந்தது. முதுகில் வயர்லெஸ் ரிசீவரை சுமந்தபடி வந்த முதலாமவன் பதினெட்டைக் கடக்கவும் பக்கவாட்டாக நெற்றியில் சூடுபட,

அப்படியே விழுந்தான். இது பதுங்கிச் சூடு. நம்மவர்கள்தான்.

“சினைப்பர் எங்க நிக்குது” என்றேன். “புட்டிப் பொசிசனிலையிருந்து இந்தியா அல்பாதான் குடுத்துக்கொண்டி ருக்கிறாள்” என்று ராங்கோ மைக் சொல்லவும், அல்பா லீமா தன் 40mm ஆல் இரண்டு எறிகணைகள் ஏவ, நின்றவள் ஏனைய ஓட்டைகளால் சுட, விழுந்தவர்கள் போக மற்றவர்கள் ஓடித் தப்பினார்கள். இந்தத் தென்னைமர அணிவகுப்பையும் இடையிடையில் தலை நீட்டும் மாமரங்களையும் கடந்து நீண்ட தூரங்களுக்கு மிகச் சரியாகச் சுடுவதும் கொஞ்சம் சிரமம்தான். எனக்குப் பொறுமையே இல்லை. சேராவண் இன்னும் போய்ச் சேரவில்லையோ? போயிருந்தால் தொடர் பெடுத்திருப்பாளே?

“லீமாசேரா சேராவண்” வோக்கி கூப்பிட்டது. இவளுக்குச் சாவேயில்லை. “சொல்லுங்கோ சேராவண். நான் பதினாறிலைதான் நிக்கறன்.” “சரி. நான் நாப்பத்தொண்டுக்கு வந்திட்டன். தொடங்குவம். வண்செவிணின்ரை நம்பருக்கு வா”

போனேன். இரு முனைகளால் நாங்கள் இறங்கப்போவதை வண் செவினுக்குச் சொல்லி எறிகணை உதவி கேட்டாள். வண்செவிண் தயாரானது. நாங்களும் தயாரானோம்.

“வருகுது பாருங்கோ” என்றது. பார்த்துக்கொண்டிருந்தோம். கும் கும் கும்மென்றது. அவை மிகச் சரியாகப் பதினெட்டுக்கு நேரே விழுந்து ‘ வெடித்தன. “சரியா ? “சிக்கலில்லை வண் செவின். இப்படியே இருக்கட்டும். தேவையெண்டால் கேக்கிறன், நான் தொடங்கிறன்.”

“உடனே தொடங்கு” “அல்பா லீமா” நான் வாய் மூட முதலே அவள் தன் 40mmஐத் தோளில் தொங்கவிட்டு 81 ஆல் குறிபார்த்தபடி, “அடி, விடாதை… அடி, அடி, அடி…” என்றவாறு நகர்வகழிக்குள் குதித்துப் பதினெட்டை நோக்கி ஓடத் தொடங்க, அவள் பின்னே ஒரு PKLMG இயக்குனர், சுடுனர், உதவியாளர் தத்தம் ஆயுதங்களுடன் ஓட, இன்னும் இருவர் நகர்வகழிக்குள் பாய முற்பட, நான் அவர்களைப் பிடித்திழுத்து, ரெண்டு பேரும் நில்லு. தேவைப்பட்டால் கூப்பிடுறன்” என்று அதட்டிவிட்டு, போனவர்களின் பின்னே பாய்ந்து ஓடினேன்.

என் பின்னே தொப்புத் தொப்பெனச் சத்தம் கேட்கத் திடுக்கிட்டுத் திரும்பினால், அந்த இருவரும் என் பின்னே ஓடி வந்துகொண்டிருந்தார்கள். சட்டெனக் கோபம் வந்தபோதும் ஒன்றும் பேசாமல் ஓடினேன். சண்டை தொடங்கினால் ஒருவரையும் கட்டுப்படுத்த இயலாது. நான் முந்தி, நீ முந்தி என்று எல்லோரும் வாலைக் கிளப்பிக்கொண்டு வெளிக்கிட்டு விடுவார்கள். வந்து என்னவென்றாலும் செய்யட்டும்.

பதினெட்டில் எதிர்பார்த்தளவு எதிர்ப்பில்லை. பதுங்கு குழிக்கு ஒரு குண்டடித்தோம். பாய்ந்து சுட்டோம். உற்றுப் பார்த்தோம். மூன்று இராணுவத்தினர் பிய்ந்து தொங்கிப்போய்க் கிடந்தனர். இது வண் செவிண் செய்த வேலை. தாமதிக்க நேரமில்லை.

“சேராவண் லீமாசேரா. நான் பதினெட்டில் நிக்கிறன்”

“அதிலை சிக்கலில்லையெண்டா வேகமாக மற்றதுக்குப் போ. ஆக்களைக் குவிய விடாதை”

சாளிபிறேவோவின் ஆட்கள் வானிலெழும்பிக் காற்றைக் கிழித்தபடி டெல்ரா நாற்பது, நாற்பத்தொன்றுப் பக்கம் குதித்து வெடிக்கும் ஓசை கேட்டது. சரி சேரா வண்ணும் இறங்கப் போகிறாள்.

நாங்கள் இனி அவதானமாகப் போகவேண்டும். பின்னே வந்த இருவரிடமும் இரண்டு பக்கங்களையும் அவதானித்தவாறு நகருமாறு பணித்துவிட்டு பார்த்துப் பார்த்து நகர்ந்தோம். முன் பக்கவாட்டுப் பற்றை மறைவுகளிலிருந்து சூடு வந்தபோதெல்லாம் அல்பா லீமா தன் 40mm ஆல் ஒன்று கொடுப்பாள். நாங்களும் சடசடப்போம். பெரும்பாலும் எதிர்ப்பு அடங்கிவிடும். பத்தொன்பது, இருபது, இருபத்தொன்றெல்லாம் சிறு எதிர்ப்புகளுடன் விழுந்து விட, இருபத்திரண்டை நெருங்க முன்பே நகர்வகழியின் வளைவு மறைவிலிருந்து வீசப்பட்ட இரு கைக்குண்டுகள் எம்மை வரவேற்றன.

“பின்னுக்குப் போ. பின்னுக்குப் போ” என்று கத்தியவாறு அல்பா லீமா எல்லாரையும் பின்னுக்கு தள்ளி நகர்வகழியின் இன்னொரு வளைவில் விட்டாள். குண்டுகள் வெடித்த கையோடு அல்பாலீமா எறிகணை ஏற்றப்பட்டிருந்த 40mm ஐ அவசரமாகத் தோழுக்கு உயர்த்தினாள். அதற்கு முன்னே என் பின்னால் வந்த வால்களில் ஒன்று “இந்தா பிடி” என்றவாறு ஒரு குண்டை எறிய, அது முன்னே விழுந்து வெடித்த புழுதி அடங்க முன்னரே சூடுகளை வழங்கியவாறு முன்னே பாய்ந்தோம். என் முன்னே போனவள் தடக்குப் பட்டவாறே போன ஏதோ ஒன்றில் என் கால்களும் தடக்க, குனிந்து பார்த்தேன். இராணுவத்தின் உடல். சற்று அசைவதுபோல மனதுக்குப்பட, அவன் நெற்றியில் என் துப்பாக்கி முனையை அழுத்திச் சுட்டுவிட்டு நகர்ந்தேன்.

இருபத்தியிரண்டிலிருந்து கிடைத்துக்கொண்டிருந்த எதிரிப்புக்கு முகம் கொடுக்க இயலாமல் இருந்தது. தலையை உயர்த்தி சுடுவதற்கு எதிரி எங்களை அனுமதிக்கவில்லை. நாங்கள் வியர்த்து களைத்து, எவரும் அசைக்க முடியாத பலத்துடன் அமைத்த காப்பரணுள் பாதுகாப்பாக இருந்தவாறு எதிரி விளையாடிக்கொண்டிருந்தது எரிச்சலைக் கிளப்பியது. ஒரே ஒரு 40mm ஐ துவாரத்தினூடே ஏவ முடியுமென்றால் கதையே வேறு. இருபத்திரண்டுக்கும் எங்களுக்குமிடையே ஒரு பதினேழு மீற்றர் இடைத்தூரம் வரும். அதைக் கடப்பதற்குள் இந்தப் பாடு.

ஒரே இடத்தில் அதிக நேரம் தாமதிப்பதும் ஆபத்து, ஒரு இறுக்கமான முடிவை எடுத்தாகவேண்டிய நிலை எங்களுக்கு. என் பின்னோடு வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். நான் வாய் திறக்க முன்னரே ஒருத்தி.

“நான் போய்க் குண்டடிக்கிறன். எனக்கு காப்புச் சூடு தாங்கோ” என்றவாறு என் பதிலுக்குக் காத்திராமல், ஏற்கனவே பாதுகாப்பு ஊசி கழற்றப்பட்ட நிலையில் வைத்திருந்த குண்டுகளோடு எங்களை ஏறி மிதித்தவாறு ஓட, நகர்வகழிக்குள் பதுங்கியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து இருபத்திரண்டை நோக்கி சூடுகளை வழங்கினோம்.

எதிர்த் திசையிலிருந்து சூடு வரும்போது குனிந்து ஓட வேண்டுமென்ற விதி முறைகள் எல்லாம் பயிற்சியின் போது மட்டுமே எம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன. சண்டை தொடங்கி விட்டால் Bend ஆவது, crawl ஆவது, Duck walk ஆவது. நிமிர்ந்தபடி ஓட்டந்தான்.

இருபத்திரண்டிலிருந்து வந்த எந்தச் சூடுமே குண்டோடு ஓடியவளில் கொழுவவில்லை என்பது நம்ப முடியாத உண்மை. எங்களுடைய திடீர்ச் சூடும் குண்டேந்தியவளின் வருகையும் எதிரியைக் குழப்பிவிட்டதோ, என்னவோ, அவர்களின் சூடு நின்றுவிட்டது. இன்னுமொரு ஐந்து மீற்றரில் காப்பரண் வாயிலை அவள் நெருங்கிவிடுவாள். அதற்குள் சற்றும் எதிர்பாராமல் அது நடந்தது. காப்பரணில் இருந்த இராணுவ வீரன் நகர்வகழிக்குள் குதித்த கணத்திலேயே துப்பாக்கியை தோளுக்குயர்த்தினான். அவனின் துப்பாக்கியின் சுடுகுழல் முட்டும் தூரத்தில் இவள். காப்பரண் வாயிலுள் இவள் குண்டெறிந்தது முதல் நடந்ததா? அவன் இவளைச் சுட்டது முதலில் நடந்ததா? அல்லது எல்லாம் ஒரே சமயத்திலா? சொல்ல முடியவில்லை.

சுட்டவனைச் சுட்டோம். குண்டு வெடிப்பால் அதிர்ந்த காப்பரணுள் புகுந்து சுட்டோம். உள்ளே விழுந்து கிடந்த ஆறேழு பேருமே பெரிய மல்லர்கள். எதிரியின் போக்குவரவுப் பாதையாக இருபத்திரண்டு இருந்ததால், கடந்து போக யோசனையாக இருந்தது. நிறுத்திவிட்டுப் போக ஆட்களும் போதாது. சேரா வண்ணைக் கேட்டுப் பார்க்கலாம்.

சேராவண் நின்ற அதிர்வெண்ணில் ஒலித்த கட்டளைகளும் வேண்டுகோள்களும் அவர்களின் நிலைமையைத் தெளிவாக்கின. அவர்கள் முப்பத்தாறை நெருங்க முடியாமல் எங்களைப்போலவே சிக்கல்பட்டவாறு இருக்கிறார்கள். நின்று யோசிச்சு என்ன செய்வது? ராங்கோமைக்கைக் கூப்பிட்டேன்.

“பதினெட்டையும், இருபத்திரண்டையும் கண்காணிப்பில் வச்சிரு. நான் அங்கால போறன்” என்றேன். நகர்ந்தோம். இருபத்தியேழை அடையும்வரை கடும் சிக்கல்கள் நிகழவில்லை . இருள் கவியத் தொடங்கிவிட்டது. நகர்வை நிறுத்திவிட்டு இருபத்தியேழிலேயே நின்றோம். இருபத்தொன்பதில் நிற்கும் எதிரி எந்தநேரமும் எம்மைத் தாக்கலாம். பின் புறத்திலிருந்து வரும் இராணுவத்தினர் தற்செயலாகவேனும் உள் நுழையலாம். எனவே விழிப்போடு இருந்தோம்.

இரவு ஒன்பது, ஒன்பதரை இருக்கலாம். அல்பாலீமா என் தோளைத் தொட்டாள் அவள் காட்டிய திசையில் உற்றுப் பார்த்தேன். ஐயமில்லை அது இரண்டு மனிதர்கள்தான். இருபத்தெட்டு பக்கத்திலிருந்து நகர்வகழியில் குனிந்தபடி அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். எம்மவர்களாக இருக்கக்கூடிய வாய்ப்பேயில்லை. ஒருத்தி சுட்டாள் திடீரென இருவரையும் காணவில்லை ஓடி விட்டார்களோ? ஓடினால் இந்த இரவில் தொப்பு தொப்பெனச் சத்தம் கேட்டிருக்குமே? அப்படியே நிலத்தில் குந்திவிட்டார்களோ? ஊர்ந்தவாறு மேலும் நகர்கிறார்களோ? தெரியவில்லை. இரண்டு துப்பாக்கிகள் அவர்கள் மறைந்த இடத்தையே குறி பார்க்க, ஏனையவை எங்கும் அடிக்கக்கூடிய தயார் நிலையில். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் அசைவொன்றும் இல்லை. என்ன நடந்திருக்கும்? யோசிச்சுக்கொண்டிருக்கையிலேயே ஒரு தலை உயர்ந்தது. கூடவே இன்னொரு தலையும். மறுபடியும் அவை எம்மை நோக்கியே அசைந்தன, சொல்லி வேலையில்லை. அமெரிக்கர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அணிகளென்ற நினைப்புத்தானே இவர்களின் பிழைப்பைக் கெடுக்கின்றது.

எங்கள் எல்லோருடைய துப்பாக்கிகளும் அந்த இரு தலைகளையும் வெளுத்து வாங்கிவிட்டன. துப்பாக்கி வெடி ஓசையை விட, கையெறி குண்டுகள் வெடித்த ஓசையும் சேர்ந்து எழுந்தது. பாதுகாப்பு ஊசி கழற்றப்பட்ட நிலையில் அவர்கள் கொண்டு வந்த குண்டுகளாயிருக்கும்.

எல்லாம் முடிந்தவுடன் மளமளவென எல்லோரும் இருபத்தேழுக்குள் புகுந்துகொண்டோம் இருபத்தொன்பதிலிருந்து எதிரி ஏவிய 60mm மழை எம்மை அணுக முன்பே புகுந்து கொண்டோம். எல்லாமே முன் பின்னாகவும் பக்கவாட்டாகவும் விழுந்து வெடித்தன. கும்மிருட்டு. தலைவரின் நண்பனான இயற்கை எங்களோடு நட்பாயிருந்தது. எனவே தப்பிக்கொண்டோம்.

நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. பின்புறம் தூர எங்கோ உரையாடல் கேட்டது. அது மெல்ல எங்களை நெருங்க மொழி விளங்கியது. உள் நுழைந்த இராணுவத்தினர் சிலர் ஏதோ தேவைக்காகத் தம் பகுதிக்குப் போகப் போகிறார்களோ? நெருங்கியபின் அடிக்க தயாரானோம். ஆனால் குரல்கள் எம்மைவிட்டு விலகி இருபத்தொன்பதுப் பக்கமாகப் போயின. அதுதானே அவர்களின் பாதை. போய்விட்டார்கள்.

சிறிது நேரத்தின் பின் இன்னும் கொஞ்சக் குரல்கள். எம்மை நோக்கி வந்தன போலத் தோன்றினாலும் இருபத்தாறுப் பக்கமாகப் போயின. திடீரென்று கதை நின்று போனது. ரோச் வெளிச்சம் அடிக்கப்பட்டது. பிறகு மறுபடியும் உரையாடல் ஆரம்பமானது. ஆனால் அது இப்போது எம்மை நோக்கி நகர்ந்தது. இருளில் உற்று உற்றுப் பார்த்து விழிகள் வெளியே விழுந்துவிடும் போல் இருந்தன. இப்போது இருபத்தொன்பதுக்கும் எங்களுக்குமிடையிலான நகர்வகழியில் சில தலைகள் தெரியத் தொடங்கின. ஓரிருவர் அல்ல. வந்தது ஒரு அணி. உரையாடல் மிக இயல்பாக நடந்தது. ஏதோ தமது தளமொன்றின் வரவேற்பறையில் நிகழ்வதுபோல. இவர்கள் எங்களது பகுதிக்குள் வந்ததே பெரிய பிழை. வந்ததும் போதாமல், உல்லாசப்பயணம் வந்தவர்கள் போல் ஊர் சுற்றிப் பார்த்து விட்டு, பளைப்பகுதியிலே தலைகளற்றுக் கிடக்கும் தென்னைகளையும் எண்ணிக் கணக்கெடுத்துவிட்டு திரும்பி வேறு செல்கின்றார்களா? ம்….

எங்களுடைய PKLMG அவர்களை வழியனுப்பத் தயாரானது, உண்மையிலேயே அது ஒரு அருமையான சண்டைதான். எங்களைவிட ஆண்களின் உயரம் அதிகம்தானே. எங்களுக்கு ஏற்ற ஆழத்தில் நாங்கள் வெட்டியிருந்த நகர்வகழியால் எதிரிகளின் தோளைக்கூட மறைக்க இயலாமல் போயிற்று. காப்பரண் வாயிலில் தன்னை நிலைப்படுத்திய றிமுடுஆபு இடம் வலமாக நாலைந்து தடவைகள் சுழன்று சீறிவிட்டு உள் நுழைய, சூட்டுத் துவாரங்களினூடே நாங்கள் தொடங்கினோம். எதிர்ப்பு கடுமையாகத்தான் இருந்தது. சண்டை கிட்டதட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. ஒரு கட்டத்தின் பின் எதிர்ப்புச் சூடு வரவில்லை . அதற்காக முழு இராணுவமுமே இறந்துவிட்டதாக நம்ப நாம் தயாராகவில்லை .

காயமடைந்தவர்களை மற்றவர்கள் இழுத்து செல்ல முயல்வார்கள். முதுகில் சுமந்தபடி நீண்ட தூரங்களுக்கு சுமந்து செல்லக்கூடிய பயிற்சி களைக்கூட அவர்கள் பெற்றிருக்கலாம். பெரும்பாலும் காயமடைந்த, இறந்த வீரர்களை எடுத்துச் செல்லவே விரும்புவார்கள். எம்மை சும்மா விட்டுச் செல்வதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

எல்லாருடைய காதுகளுமே எங்களை விட்டுப் புறப்பட்டு நகர்வகழிக்குள் இறங்கிவிட்டிருந்தன. ஒவ்வொரு சிறு ஒலியையும் ஒள்வாங்கி மூளைக்கு அனுப்பி, பரிசோதித்துக்கொண்டன. ஒரு சத்தம் சற்று வேறுபாடாக ஒலித்தது. சர்ர்க்…. சர்ர்க்… ஏதோ இழுபடும் ஒலி, அல்பாலீமாவின் 40mm ஒருதரம் இயங்கியது. எங்கும் அமைதி. சார்க் ஒலியைக் காணவில்லை. இன்னுமொரு ஐந்து, பத்து நிமிட கழிந்த பின்னர் சர்ர்க், சர்ர்க் சனியன் இன்னும் சாகவில்லையோ? ஒரு கையெறிகுண்டை வீசினோம். அமைதி. இடைவெளி விட்டு, பின்னரும் அதே சர்ர்க், சார்க்.. யாரடா இவன் நாசாமாகப் போகின்றவன்? கோபம் மேலிட்டது. ஒருவனோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ உயிருடன் இருப்பது? தெரியவில்லை . சரியாகத் தெரியாமல் குண்டுகளைச் செலவழிக்க யோசனையாக இருந்தது. கவனிக்காதது போலிருந்து நடப்பதைக் கவனிக்க முடிவெடுத்தோம். ஆனால் பின்னர் அதற்குள்ளிருந்து ஓசைகள் எதுவும் எழவில்லை. அல்லது எழுந்த ஓசையைக் களைப்பு மேலிட்டால் காதுகள் உள்வாங்கவில்லை. ஏதோ ஒன்று.

வானில் அழகாக நட்சத்திரங்கள் மின்னின. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ரவைகள் சீறின. எறிகணைகளும் இடையிடையே பறந்தன. விழிப்பாகவே இருக்கிறோம் என்று எதிரியும் நாங்களும் பேசிக்கொள்ளும் சங்கேதமொழி இது. நேரம் மூன்றைக் கடந்துவிட்டது. மனமும் உடலும் சோர்வை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டுச் சண்டைக்கு தயாரானது. விடிவதற்குள் இருபத்தேழைவிட்டு வெளியேறி விடவேண்டும். என்பதே நோக்கமாக இருந்தது. சில நேரம் நிலம் தெளிய முன்னரே இருபத்தேழு ராங்க் ஒன்றால் ஏறி மிதிக்கப்படலாம். அல்லது முற்றுகையிடப்படலாம்.

இருபத்தாறை நோக்கி போவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இறந்த மனிதர்களை ஏறி மிதித்தவாறே போகவேண்டியிருக்கும் என்பதுதான். சிலவேளை ‘இறந்தவர்’ களில் சிலர் எழுந்து நின்று சுடலாம். அப்படி நடந்தால் பராவாயில்லையே. சண்டை பிடித்துக்கொண்டே நகரலாம். உயிரோடு உள்ளபோது அவர்கள் மேல் எழும் கோபம் இறந்த பின் ஏன் வருவதில்லை என்பது புரியவில்லை.

3.30 ஆகிவிட்டது. இனியும் தாமதிப்பதில் வேலையில்லை எல்லோரும் நகர்வகழிக்குள் இறங்கினோம். முன்னே போனவர்கள் கால் வைத்த இடங்களில் பின்னே போனவர்கள் கால் வைத்து நடந்தோம். எதிர்ப்பு எழவில்லை காயத்துடன் இழுத்துப்போக முயற்சித்தவன் அல்லது முயற்சித்தவர்கள் சில வேளை அதிகளவு இரத்தப்போக்கால் இறந்திருக்கலாம். விழுந்தவர்களைக் கடந்த பின்னும் முதுகு கூசியது. எத்தனை பேர் கடந்து போனோம் என எண்ணி விட்டு அதன் பின் எழும்பி முதுகில் சுடுவார்களோ? திரும்பிப் பார்த்தேன்

“என்னக்கா?” என்றாள் பின்னால் வந்தவள். “ஏதேனும் அசைவு?” “ஒரு பிரச்சனையுமில்ல?” சிந்தனைகள் பல மாதிரி ஓடின. இருபத்தி யிரண்டிற்கு எதிரி மறுபடி வந்துவிட்டானோ? தெரியவில்லை. இருபத்தி யேழிற்கு காலையில் என்ன நடக்கும்? தெரியவில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் எங்களுடைய ரவைகள் குறைந்துவிட்டன என்பதும், நகர்வகழியில் விழுந்து கிடப்பவர்களிடம் ரவைகள் இருக்கின்றன என்பதுவும்தான், உடனேயே ரவைகளை நிரப்பிக்கொண்டோம். அல்பாலீமா தன் காற்சட்டைப் பைக்குள்ளும் 40mm எறிகணைகளைத் திணித்துக் கொண்டாள்.

இருபத்தாறுக்கு வந்ததும் சேராவண்ணைக் கூப்பிட்டேன். நிலைமையைத் சொன்னேன். முப்பத்தாறைப் பிடித்தபின் முப்பத்திரண்டை நெருக்கும் முயற்சியில் தன்னைத்தவிர எல்லோருமே காயமும் வீரச்சாவும் என்றும், தான் இப்போது வேறு சிலருடன் முப்பத்தைந்தில் நிற்பதாகவும், விடிந்ததும் நிலைமையைப் பார்த்து முப்பத்திரண்டை நெருங்கப் போவதாகவும் குறிப்பிட்டாள். ராங்கோ மைக்கைக் கூப்பிட்டேன். இரவிரவாக இருபத்திரண்டுப் பாதையால் நடமாட்டம் இருந்ததாகவும், தாங்கள் சுட்டதாகவும், இப்போது சத்தம் ஒன்றும் இல்லை என்றும் அவள் குறிப்பிட்டாள்.

“ஆனாலும் கவனம். பதினெட்டை விட்டிடாதை, இருபத்திரண்டையும் இடையிடையில பார்த்துக்கொள்” என்றேன்.

இரண்டாம் நாள் சண்டை முதல் நாளைவிடக் கடுமையானதும், சிக்கலானதுமாக இருந்தது. இருபத்தேழை எதிரியின் சுறிபுகள் முத்தமிட்டதோடு எமது பக்க சண்டை ஆரம்பமானது. வண்செவிணின் ஆட்கள் எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க இருபத்தொன்பதில் கும் கும் எனக் குதித்து வெடித்தார்கள். அடி அடியென்று அடித்து இருபத்தொன்பதைப் பிடித்தோம். சேராவண்ணை தொடர்பெடுத்து நிலைமையைச் சொன்னபோது, தான் ஏற்கனவே முப்பத்திரண்டைப் பிடித்துவிட்டு அதில் நிற்பதாகக் குறிப்பிட்டாள்.

ராங்கோமைக்கைக் கூப்பிட்டோம் பதினாறுக்கும் இருபத்தாறுக்கும் இடையில் மாறி மாறி நடந்து கொண்டிருந்த அவளின் அணி இருபத்தாறிலிருந்து பதினாறை நோக்கி வந்துகொண்டிருந்தபோது பதினெட்டில் இராணுவம் நின்றிருக்கிறது. அவர்களை இரு முனைகளால் இவர்கள் தாக்கிக்கொண்டிருந்தபோது இடையில் நின்ற அணிக்கு இருபத்திரண்டுப் பக்கத்தால் முதுகு அடி கிடைத்திருக்கின்றது. எனவே ராங்கோமைக் நேரடியாக இறங்கிப் பதினெட்டை அடித்துப் பிடித்திருக்கிறார்கள். தன்னைச் சேர்த்து மூவர் மட்டுமே, முழுவதுமாக எஞ்சியிருப்பதாகவும், மூவரும் இருபத்திண்டில் நிற்பதாகவும், இயலுமான காயக்காரர்கள், சிறப்பு எல்லைப்படை வீரர்களைப் போட்டுப் பதினெட்டை பாதுகாப்பதாகவும், வித்துடல்களை பதினாறில் வைத்திருப்பதாகவும் ராங்கோ மைக் குறிப்பிட்டாள்.

எல்லாருடைய நிலைமைகளையும் தெரிந்துகொண்ட சேராவண், அடுத்த கட்டளைகளை வழங்கினாள்.

“சிக்கலில்லை, எல்லாத்தையும் சமாளிக்கலாம். இப்ப உங்கட பாதையால் சிறப்புக்குரிய ஆட்கள் வருகினம். ஆக்களைப் போட்டு எல்லாப் பாதையையும் மூடுங்கோ. இனி அவன் உள்ளுக்கை வரக்கூடாது. வந்தவன் திரும்பியும் போகக்கூடாது. விளங்குதோ?”

“விளங்குது சேராவண்” “ராங்கோமைக். உனக்கு விளங்குதோ?” “விளங்கிட்டுது சேரா வண்” “சரி உடனே ஒழுங்கு படுத்துங்கோ . ஆட்களை எனக்கும் அனுப்புங்கோ. வேறையில்லை”

சிறப்பு எல்லைப்படை வீரர்கள் ராங்கோமைக்கை வந்து சந்திக்கவே இருண்டுவிட்டது. இரவிரவாக அவர்களைப் பதினெட்டு, இருபத்திரண்டு, இருபத்தொண்பது, முப்பத்திரண்டு, முப்பத்தாறு, நாற்பத்தொன்பது என எதிரி பாவித்த அனைத்துப் பாதைகளிலும் நிறுத்தினோம். இருபத்திரண்டில் ராங்கோமைக், முப்பத்திரண்டில் நான். நாற்பத்தியொன்றில் சேராவண்ணும் ஏனைய நிலைகளில் எங்களில் எஞ்சிய ஒவ்வொருவருமாக சிறப்பு எல்லைப்படை வீரர்களுக்குப் பொறுப்பாக நின்று கொண்டோம்.

என்னுடன் வற்தவர்களில் PKLMG இயக்குனரும் ஒரு T56-2 காரியுமே மிச்சம். அல்பா லீமாவின் 40mm என்னிடமிருந்தது. இனி விடிந்த பின்னர்தான் சண்டை. காவற் கடமையை என்னிடம் தராமல் தமக்குள்ளேயே பகிர்ந்து கொண்டார்கள் அந்த வீரர்கள்.

“நான் கொஞ்ச நேரம் பாக்கிறன்” என்று கேட்டுப் பார்த்தேன். பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். வீட்டில் தம் தங்கைகளை தனியே விடாத, தூரப் பயணங்களின் போது தம் மிதிவண்டிகளில் ஏற்றிச் செல்கின்ற அண்ணாக்களாகவும், தமது உழைப்பின் ஒரு பகுதியை அக்காமாரின் சீதனத்துக்காக சேர்க்கும் தம்பிமாருமாக இருந்துகொண்டே, தேவைப்படும் நேரங்களில் சண்டைக்கு வந்து போகும் இவர்களுக்கு என்னைப் பார்க்க பாவமாகத்தானே இருந்திருக்கும்.

ஐந்து ஆண்களிடையே தனித்த ஒரு பெண்ணாக நின்ற எனக்கு அவர்கள் இல்லாத பக்குவமெல்லாம் பார்த்தார்கள். கையோடு கொண்டு வந்த பணிசையும் தண்ணீர் கானையும் முதலிலேயே என்னிடம் தந்துவிட்டார்கள். சாப்பிட்டு முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, இன்னுமொரு பணிசையும் தந்து “வைச்சிருந்து பசிக்கிற நேரம் சாப்பிடுங்கோ” என்றார்கள். இரண்டு ஓலைகளை இழுத்துவந்து போட்டுவிட்டுப் “படுங்கோ விடிய எழுப்பிறம்” என்றார்கள். எனக்கு சிரிப்பும் வந்துவிட்டது. தலைப் பக்கத்திலும் ஒருவரும் கால் பக்கத்தில் ஒருவருமாக கண்ணியமான தூரத்தில் காவல் செய்த அவர்கள் இருட்டில் என் சிரிப்பை கவனித்திருக்கமாட்டார்கள். ஏதோ என்னுடைய உடல் பொருள் ஆவி எல்லாமே தமது பொறுப்பில் இருப்பதுபோல அவதானமாக நடந்துகொண்டார்கள்.

ஓலையில் சாய்ந்த எனக்கு வானத்து நட்சத்திரங்கள் தெரிந்தன. மார்பில் 40mm உம், T562 உம் சாய்ந்திருந்தன. இருபத்தொன்பதைப் பிடிப்பதற்கான கடும் சண்டை நடந்து கொண்டிருந்த நேரம் எதிரியின் PKLMG அடி அல்பா லீமாவின் வலது தோளிலிருந்து வயிற்றின் வலது புறம்வரை வரிசையாக சல்லடைபோட, தள்ளாடியபடியே என்பக்கம் திரும்பியவள், 40mm ஐ என்னிடம் நீட்டியபடியே ஏதோ சொல்ல முயன்றபடி குப்புற என்மேல் சரிந்தாள். அவள் விழுந்த வேகத்தில் நானும் விழுந்தேன். “விடாதை அடி” என்று விழுந்தபடியே மற்றவர்களிடம் கத்திவிட்டு, அவளை நான் புரட்டியபோது உயிர் பிரிந்துவிட்டிருந்தது.

என்ன சொல்ல நினைத்திருப்பாள் அல்பாலீமா என்ற குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படும் எங்கள் அன்பிற்குரிய அகல்யா? இப்போது என்னுடன் கதையேன் அகல்யா. அப்போது எனக்கும் நேரம் இருக்கவில்லை. இப்போது பேசேன்.

அகல்யாவின் தொற்றுப்பல் சிரிப்பு கண்களுக்குள் வந்து போனது. 50 கலிபரைப் பார்ப்பதற்காகக் காலையில் நான் புறப்பட்டபோது அகல்யா எழும்பியிருக்கவில்லை “வயிற்றுக்குத்து” என்று முனகினாள். வழமையாகவே இவள் வயிற்றுக்குத்து என்றால் சுருண்டு விடுவாள். நாங்களும் வேலை சொல்ல மாட்டோம். வீட்டிலென்றால் எங்களை ஒரு வேலையும் செய்ய விடாமல் அம்மாவே எல்லாம் செய்து, சின்ன மீன் வாங்கி அரைத்த கறி வைத்து, அது, இதுவென்றெல்லாம் பக்குவம் பார்ப்பார். இங்கு அதற்கேது நேரம்? ஆளை ஆறுதலாக விட்டுவிடுவோம்.

எழுந்து நடமாடாமல் கால் சோர்ந்து கிடந்தவள் எப்படித்தான் என்னோடு ஓடி ஓடிச் சண்டை பிடித்தாளோ! ஒருதரம்கூட முகம் சினக்காமல் நான் சொன்னதை எல்லாம் செய்து… தனக்கு அடிப்படையாகத் தேவையான பொருட்களை வரும்போது கையோடு கொண்டுவந்தாளோ? அவசரத்தில் மறந்தாளோ? இரவிரவாகச் சண்டை நடந்ததே ஓய்வு வேண்டும் என்று அவளும் கேட்கவில்லை. சண்டை அழுத்தத்தில் எனக்கு நினைவு வரவில்லை. என்ன செய்தாய் அகல்யா? இப்போது என்னோடு கதையேன்.

புயல் மையங்கொண்ட கடலாய் மனம் பேரலைகளை வீசிக் கொந்தளித்தது.

இருபத்தொன்பதுக்குப் பின்னுக்குள்ள வடலியருகே ஓலைகளால் மூடப்பட்டபடி அகல்யா, தொடைக் காயத்தால் குருதி குபு குபுவென ஓட PKLMG யை உடனேயே உதவியாளரிடம் கொடுத்துவிட்டுத் தானே தன் காயத்துக்குக் கட்டுப்போட்டு நகர்வகழிக்குள் சாய்ந்தபடியே கண்மூடிப்போன PKLMG சுடுனர் ஆதிரை, எனக்கு விழவேண்டிய சூட்டை குறுக்கே பாய்ந்து தன் தலையில் வாங்கிக்கொண்ட றிமுடுஆபு இயக்குனர் அலையிசை எல்லாருமே இருக்கிறார்கள்.

“தங்கச்சி” என்று யாரோ கனவில் கூப்பிட்டதுபோல் இருக்க, திடுக்கிட்டு விழித்து நேரத்தைப் பார்த்தேன். 3.40. எப்போது உறங்கினேன் என்பதே தெரியவில்லை. எழும்பி அப்படியே ஓலையில் இருந்தேன்.

“பணிசைச் சாப்பிடுங்கோ தங்கச்சி” என்றவாறு தண்ணீர்க் கானைத் தந்தார்கள். இரண்டு நாட்களாகப் பல் துலக்காத வாய்க்குக் பணிசின் சுவையே தெரியவில்லை.

அன்றைய பகல் சண்டையின் போது எனக்கு ஒரு வேலையுமே இருக்கவில்லை. எங்களுடைய எல்லா மோட்டர்களும் தமது அதியுச்ச திறமையை வெளிப்படுத்த, உள் நின்ற இராணுவம் ஓடத் தொடங்கியது. ஓடிய இராணுவத்தை தடுத்துச்சுட்டபடி அவர்கள் உள் நுழைந்த பாதைகளில் நாம். முன்னே வந்தவர்கள் சூடுபட்டு விழுந்த விடயம் அறியாமல் பின்னே வருபவர்களும் அதே வழியிலேயே வந்து சூடுபட்டனர். தொகையாக ஓடிவரும் இராணுவம், சூடு விழத்தொடங்க பிரிந்து வலம், இடமாக ஓட முயற்சிக்கும்போது அடுத்தடுத்த நிலைகளில் நின்றவர்களுக்கு, “ஆள் வந்து உங்களைச் சந்திக்கும்” என்று வோக்கியில் அறிவித்தது மட்டுமே நான் செய்த வேலை. தமது பாதைகள் முழுவதும் தடைப்பட்ட நிலையில் திரும்பி உட்பக்கம் ஓடுவதும், மறுபடி பாதையை நோக்கி வருவதும், அடிவிழ ஓடுவதுமாக இருந்த இராணுவம், ஒரு கட்டத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளூடே முட்கம்பிச் சுருள்களைப் பாய்ந்து கடந்து ஓட முற்பட, புதைக்கப்பட்டிருந்த எமது கண்ணிவெடிகளும், செப்பமாக அமைக்கப்பட்டிருந்த இடறு கண்ணிகளும், சூழ்ச்சி பொறிகளும் தம் பணியைச் செவ்வனே செய்யத் தொடங்க, என் மூளையில் மின்னலடித்தது.

அட அட அட! இவை இவற்றை இப்படி இப்படி வை என்று கண்ணிவெடிகள் விடயத்தில் அவர் தனிக் கவனம் எடுத்து, தளபதிகளிடம் நேரடியாகச் சொல்லி, விளங்கப்படுத்தி, எங்களை வேலை செய்வித்ததெல்லாம் இதற்காத்தானா? பாய்ந்து பாய்ந்து நாம் சுட்டதை விடவும், ஆற அமர யோசிச்சு அவர் போட்ட திட்டம் எதிரிக்கு சேதத்தைக் கொடுத்த ஆச்சரியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சேராவண்ணும் நானும் முன்னணிப் பகுதியைப் பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தோம். காவலரண்கள் சரிந்து அல்லது குலைந்து சேதமடைந்திருந்தன. திருத்தவேண்டும். வேலி பிய்ந்து அல்லது எரிந்து போயிருந்தது. உடனேயே பச்சையோலை வெட்டியாவது அடைக்கவேண்டும். வேலி விழுந்ததால் பதுங்கிச் சூட்டு அபாயம் அதிகரித்திருந்தது. நகர்வகழிக்குள் இறங்க முடியாது. குண்டடித்ததால் அகன்றும் தூர்ந்தும், அகற்றி முடிக்கப்படாத இராணுவச் சடலங்களால் நிறைந்தும் கிடக்கின்றன. பிணவாடை அடங்க ஒரு மாதமாவது செல்லும்.

எக்கோலீமா வரிசையைக் கடக்கும்போது கால்கள் தாமாகவே நின்றுகொண்டன. இந்தச் சண்டையில் எதிரிகளை நான் முதன்முதலில் கண்ட இடம், ஏராளம் இராணுவம் எறிகணை வீச்சில் மாண்ட இடம். நிமிர்ந்தபடி கிடந்தது ஒரு சிங்களவனின் உடல். எம்மவர்களில் யாரோ ஒருத்தியின் குறிதவறாத சூடு அவன் நெற்றியைத் துளையிட்டிருந்தது. திறந்தபடி விறைத்திருந்தன அவன் விழிகள். அவன் கண்களையே பார்த்தபடி நின்றேன்.

இளைஞனே, யார் நீ? எங்கிருந்து வந்து இங்கென் காலடியில் செத்துக் கிடக்கின்றாய்? இங்கே உனக்கு என்ன வேலை?

– கனவுக்கு வெளியேயான உலகு சிறுகதைத் தொகுப்பு 2002 பங்குனி, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *