மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 17, 2013
பார்வையிட்டோர்: 11,961 
 

அஸீஸ் நேஸின்
ஆங்கில வழி தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

அவர் இறுதியாகச் சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடு கடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம்மக்களுக்கும் அவர் புதியவர். அவர் சிறையிலிருந்தபோது அவருடைய மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார்.

அவரது எல்லா எதிர்பார்ப்புகளும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டுசெல்லப் போதுமான பணம்கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக்கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக்கொள்வாரா?

எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார். அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல, நகருக்கு வெளியேயும்கூட வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்த வேண்டியிருக்கும். செலுத்தத் தவறினால், வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வான் என்பதால் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு முகம்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனாலும் அவரது பழைய தட்டச்சுப் பொறி யையும் உடைந்து சிதறிப்போயுள்ள வீட்டுத் தளவாடங்கள் சிலவற்றையும் வைப்பதற்கு ஓரிடத்தைத் தேடிக்கொள்ளவே வேண்டும். மிருகக் காட்சிசாலைக்குப் புதிதாக வந்துள்ள விலங்கொன்றைப் பார்க்க வருவது போல், தன்னைப் பார்க்கவும் மக்கள் வருவார்களெனச் சந்தேகித்த அவர் அமைதியானதொரு வாழ்க்கை நடத்த எண்ணினார். அதனால் அவர் அப்பிர தேசத்தினொரு மூலையில் மக்களின் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீடொன்றின் ஓர் அறையை வாடகைக்கு எடுத்தார்.

நகரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் நடப்பதன் மூலம், அந்த இடத்தை அடையலாம். புத்தகங்களை வைத்திருக்கும் பழைய சூட்கேஸ், சிதைந்த தட்டச்சுப் பொறி, உடைந்து சிதறிப்போன வீட்டுத் தளவாடங்கள் ஆகியன வாடகைக்கு எடுத்த அறைக்குக் கொண்டுவரப்பட்டன. அவர் அறையிலிருந்த யன்னலைப் பத்திரிகைத் தாள்களால் மறைத்தார்.

அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் பாதையின் எதிர்ப் புறத்தில் சிறியதொரு சில்லறைக் கடையிருந்தது. அதற்கும் கொஞ்சம் தூரத்தில் பாதையின் இடது பக்கத்தில் சிறியதொரு பழக்கடையொன்றும் இருந்தது. அவர் அக்கடைகளில் தனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டார். சில்லறை வியாபாரியும் பழ வியாபாரியும் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய நண்பர்களாயினர். அவர்களது வியாபாரம் மிகவும் சொற்பமானதாக இருந்தது. ஒரு நாளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு மட்டும்தான். அதிகமாகப் பணம் செலவு செய்யக்கூடியவர்கள் அந்தக் கடைகளுக்கு வரவில்லை. அந்த இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கடையைக் கொண்டுசெல்வதற்கும் தேவையான வசதிகள் அக்கடை உரிமையாளர்களுக்கு இருக்கவில்லை.

சில தினங்களுக்குப் பிறகு, சில்லறைக் கடைக்கு முன்னால் சுடச்சுட அப்பம் விற்குமொரு கடை ஆரம்பிக்கப்பட்டது. எந்நாளும் மத்தியான வேளையில் வருமொரு வியாபாரி, இரவின் இருள் சூழும்வரையில் அங்கே சுடச்சுட அப்பம் விற்றான். அதற்கும் சில தினங்களுக்குப் பிறகு இன்னுமொரு வியாபாரி, அதற்குப் பக்கத்திலேயே பாண் விற்க ஆரம்பித்தான். பழ வியாபாரியின் கடையின் பகுதியொன்றை வாடகைக்கு எடுத்த இன்னுமொருவன், கண்ணாடி அலமாரியொன்றில் கேக்குகளை வைத்து விற்றான். சிறிது காலம் சென்ற பிறகு, சப்பாத்துத் தைப்பவனொருவன், பழச்சாறு பானம் விற்கும் சைக்கிள்காரனொருவன், தின்பண்ட வியாபாரியொருவன் ஆகியோர் அப்பகுதியில் தமது வியாபாரத்தைத் தொடங்கினர்.

சொற்ப காலத்துக்குள்ளேயே அவரது வீட்டைச் சூழவிருந்த பகுதி, சிறியதொரு சந்தை போல் ஆகிவிட்டிருந்தது. வீதியைப் பெருக்கும் மனிதனொருவன், வியாபாரிகளால் அசுத்தமடையும் அப்பிரதேசத்தைக் காலையிலிருந்து இரவுவரை சுத்தப்படுத்திக்கொண்டேயிருந்தான் சில்லறைக் கடைக்கும் பழக்கடைக்குமிடையில் புதியதொரு கோப்பிக் கடையும் ஆரம்பிக்கப்பட்டது. அங்கே போய் வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.

அவர் தங்கியிருந்த வீட்டைச் சூழவிருந்த பாழடைந்த வீடுகளும் அறைகளும் புதிய குடியிருப்பாளர்களால் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தப் பிரதேசத்துக்குச் சடுதியில் உதித்திருக்கும் அதிர்ஷ்டத்தை எண்ணி அவர் வியந்தார். எவ்வாறாயினும் அவரால் இன்னும் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள இயலவில்லை. தனியாகவும் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியாது. எவரேனும் அவருக்கு வேலை கொடுத்தாலும், அவரைக் காவல் துறை எப்போதும் கண் காணித்துக்கொண்டிருப்பதை அறிந்ததும் அவரது சேவையைத் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டனர்.

அவருக்கு அவருடைய நண்பர்களிடம் கடன் கேட்பதுவும் இயலாது. அவர்களில் அநேகர் வேலையற்றவர்கள். மற்ற நண்பர்கள் இவ்வுலகை விட்டும் சென்றிருந்தனர். நகரத்துக்குச் சென்று தனது அறையில் வாடகை தராமல் தங்கிக்கொள்ளும்படி சொன்ன நண்பரொருவரது வேண்டுகோளையும் அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் தங்கியிருந்த பிரதேசத்தை விட்டுச் செல்வது சிரமமாக இருந்தமையே அதற்குக் காரணம். அவர் சில்லறை வியாபாரியிடமிருந்தும் பழ வியாபாரியிடமிருந்தும் ஏனைய வியாபாரிகளிடமிருந்தும் இடைக்கிடையே கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருந்தார். அவர் அந்தக் கடனையெல்லாம் திருப்பிக்கொடுக்க வேண்டும்.

ஒரு மாலை வேளையில் அவர் இந்தக் கடன்களையெல்லாம் திருப்பிக்கொடுத்துவிட்டு அப்பிரதேசத்தை விட்டும் செல்வது எவ்வாறெனச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். அறைக்கு வெளியே அவரைச் சந்திக்க மூவர் வந்திருந்தனர். சில்லறை வியாபாரி, பழ வியா பாரி மற்றும் கோப்பிக் கடைக்காரன். அவர் தனது எளிய அறைக்குள் அவர்களை அழைத்துவந்தார்.

“என்னை மன்னிக்க வேணும். கோப்பியோ வேறு ஏதாவதோ உங்களுக்குத் தர எனக்கு வழியில்ல.”

சில்லறை வியாபாரி புன்னகைத்துக்கொண்டே, அவனது கையிலிருந்த கடதாசிப் பையை மேசையின் மீது வைத்தான்.

“அதுக்குப் பரவால்ல. நாங்க வந்தது வேறொரு விஷயத்துக்கு. இந்தாங்க கோப்பியும் சீனியும்.”

அவர் கலவரமடைந்தார். இவர்கள் இவற்றை எடுத்து வந்திருப்பது எதற்காக? அவர்கள் இங்கு வந்திருப்பது, தான் கடனாகப் பெற்றிருந்த பணத்தைத் திருப்பிக் கேட்பதற்காகத்தான் என அவர் எண்ணியிருந்தார். ஆனால் இவர்கள் பரிசுகள் எடுத்து வந்திருப்பது ஏன்?

“ஐயா இந்தப் பகுதியை விட்டுட்டுப் போக நினைச்சிருக்கிறதா நாங்க கேள்விப்பட்டோம். அது நெசம்தானா?” சில்லறை வியாபாரி கேட்டான்.

“ஆமா . . . அப்படியொரு எண்ணமிருக்கு.”

அவர்கள் வந்திருக்கும் காரணம் இப்போது அவருக்குப் புலப்பட்டது. அவர்களிடமிருந்து கடனாகப் பெற்றிருந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தான் தப்பிச் செல்ல முயல்வதாக அவர்கள் எண்ணியிருக்கக்கூடும்.

“ஆமா. நான் இந்த அறையை விட்டுப் போகப் போறதா எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?”

“எங்களுக்கு அக்கம்பக்கத்துலருந்து கேள்விப்பட்டுச்சு.”

“ஆனா அது பற்றிக் குழப்பமடைய வேணாம். நான் உங்கக்கிட்ட வாங்கிய கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்காம இங்க இருந்து போகப் போறதில்ல.”

“எங்கள வெட்கப்படவைக்க வேணாம் ஐயா. ஐயாக்கிட்ட இருந்து எங்களுக்குப் பணம் தேவையில்ல.”

“எனக்குன்னா ஐயாக்கிட்ட இருந்து கிடைக்குறதுக்கு எதுவுமில்ல. ஐயா எனக்குப் பணம் கொடுத்தாலும் நான் வாங்கமாட்டேன்” பழ வியாபாரி சொன்னான்.

“ஏனது?”

“நாங்க வந்தது ஐயாவோட சேவையை கௌரவிக்க. ஐயா எங்களுக்குப் பெரியதொரு சேவையை நிறைவேற்றித் தந்திருக்கீங்க.”

அவருக்கு மெலிதாக வியர்த்தது. எதுவும் பேச முடியாதபடி தொண்டையில் ஏதோ அடைபட்டது போல உணர்ந்தார்.

“அது பற்றி ஞாபகப்படுத்தவும் வேண்டாம்.” அவர் உளறலாகச் சொன்னார்.

அவர்கள் அவர் யாரென அறிந்துகொண்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராடிய புரட்சியாளர் தான் தானென அவர்கள் எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறார்கள்.

கோப்பிக்கடை உரிமையாளன் திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான்.

“இந்தப் பகுதியைவிட்டுப் போறதுக்கு நினைச்சிருக்கிற யோசனையை விடச் சொல்லி நாங்க தாழ்மையா வேண்டுறோம்.”

“ஆமா. நாங்க அதைச் சொல்லத் தான் வந்தோம்.” பழ வியாபாரி இடை நிறுத்தினான்.

“எனக்கு வாடகை கொடுக்க வழியொண்ணு இல்ல. அதனால நான் போயே ஆகணும்.”

“எங்களுக்குத் தெரியும்.” பழ வியாபாரி பேசத் தொடங்கினான்.

“எங்க எல்லோருக்குமே தெரியும். நாங்க வியாபாரிகளெல்லோருமே ஒன்றுசேர்ந்து ஐயாவின் வீட்டு வாடகையை எங்களுக்கிடையில சேகரித்து ஒவ்வொரு மாசமும் கொடுக்குறதா தீர்மானித்திருக்கிறோம். எங்க எல்லோருடைய வேண்டுகோளும் ஐயா இந்தப் பகுதியைவிட்டுப் போயிட வேணாங்குறதுதான்.”

“வாடகையப் பத்தி யோசிக்க வேணாம். நாங்க அதப் பார்த்துக்கொள்றோம். இந்தப் பகுதியைவிட்டு மட்டும் போயிட வேணாம்.” சில்லறை வியாபாரி இடைமறித்தான்.

அவரது விழிகள் ஆனந்தத்தால் நிரம்பின. அவர் வழிநடத்திய மக்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பல வருடங்களுக்குப் பிறகாவது மக்கள் உணர்ந்துவைத்திருப்பது அவரது மகிழ்ச்சியை இரு மடங்கு, மும்மடங்குகளாகப் பெருகச் செய்தன.

“அதுன்னா முடியாது.” அவர் மீண்டும் சொன்னார்.

“என்னால அதை ஏத்துக்க முடியாது. வீட்டு வாடகை மட்டுமல்ல. எனக்கு இப்ப வேலையொண்ணுகூட இல்ல. அதனால எனக்கு இந்தப் பகுதியில வாழ முடியாது. எனக்கு என்னோட கூட்டாளியொருத்தன் கிட்டப் போய் வாழ்க்கையக் கொண்டு செல்ல முடியும்.”

கோப்பிக் கடைக்காரன் திரும்பவும் கதைத்தான்.

“நாங்க இது எல்லாத்தையும் பற்றியும் கதைச்சோம். ஐயாவுக்கு மாசாமாசம் தேவைப்படுறதையெல்லாம் வியாபாரிகளுக்கிடையில சேகரித்துத் தர்றோம். என்னவாயிருந்தாலும் இந்தப் பகுதியை விட்டுட்டு மட்டும் போயிட வேணாம்.”

மூவரும் ஒன்றாக இணைந்து வற்புறுத்தினார்கள். மக்கள் இப்போது விழிப்படைந்திருக்கிறார்களென அவர் உணர்ந்தார். மக்களது உணர்வுகளில் புதியதொரு உத்வேகம் பிறந்திருக்கிறது. கடந்த காலங்களில் அவர் எடுத்துச்சென்ற மக்கள் போராட்டத்தைக் கேலிசெய்த வியாபாரிகள்கூட இப்போது அவரது மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். அவரது கண்களிரண்டும் ஆனந்தக் கண்ணீரால் ஈரமாகின.

“ரொம்ப நன்றி. . . ஆனா எனக்கு உங்க உதவிகள ஏற்றுக்கொள்ள முடியாது.”

அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புறுத்தினார்கள்.

“ஐயாவுக்கு இந்த அறை பொருத்தமானதாயில்ல.” சில்லறை வியாபாரி தொடர்ந்தான்.

“இங்க வசிக்கிறதுக்கு இடங் காணாது. ஐயாவுக்கு இந்த அறை பிடிக்கலன்னா, மாடி வீடொண்ணு இங்க பக்கத்துல இருக்கு. அந்த வீட்டோட மேல் மாடியை வாடகைக்கு எடுத்துத் தர முடியும். குளியலறை, கழிப்பறை எல்லாமே அதுக்குள்ளேயே இருக்கு. நாங்க ஐயாவ அங்க தங்கவைக்கிறோம்.”

“எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஐயாவ எங்களிடமிருந்து தூரமாக் காம இங்கேயே வச்சுக்கிறதுதான்.” கோப்பிக் கடைக்காரன் சொன்னான்.

அவர் பெரியதொரு குழப்பத்துக்குள்ளானார்.

“சரி. ஏன் நீங்க எல்லோரும் என்னை இந்தப் பகுதியிலேயே இருக்க வற்புறுத்துறீங்க?”

“அது நல்ல தெளிவான காரணம். எங்களுக்கு நல்லதொரு வியாபாரமிருக்கு ஐயாவுக்கு நன்மை கிடைக்க.”

“பைத்தியமா? நானென்ன அந்தளவுக்கா உங்களோட கொடுக்கல் வாங்கல் செய்றேன்?”

“ஐயாவோட கொடுக்கல் வாங்கல் எதுவுமில்ல. கொடுக்கல் வாங்கல் செய்றது மற்றவங்களோட. ஆனா அந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது ஐயாதான். ஐயா இங்க வர்றதுக்கு முன்னாடி என்னோட கடைக்கு வந்தது ரெண்டு மூணு பேர்தான். ஐயா வந்தப்புறம் இந்தப் பகுதி மனிசக் குடியிருப்பாயிடுச்சு. இப்ப பாருங்க . . . புதிய கடைகள் தொறக்கப்பட்டிருக்கு. அவையெல்லாமே ஐயாவுக்கு நன்மை கிடைக்க நடந்தவை” சில்லறைக் கடை வியாபாரி விவரித்தான்.

“எங்களுக்குத் தயவு பண்ணுங்க ஐயா. ஐயா இங்க இருந்து போய்ட்டா எந்த சந்தேகமுமில்லாம என்னோட கோப்பிக் கடையை மூட வேண்டி வரும்.”

அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புறுத்தினார்கள். அவர்களுடைய குடும்பம், பிள்ளைகள் குறித்து அவர் சிந்திக்க வேண்டும். அவர்களெல்லோருமே வாழ்க்கை நடத்துவது அவரால்தான். தேவைப்பட்டால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்கவும் வியாபாரிகள் முன்வந்தனர்.

“நன்றி. ஆனா என்னோட சேவை அந்தளவு பெறுமதியுடையதல்ல. நான் நல்ல ஆரோக்கியமா இருக்கும் போதே வேலை செய்யணும். உங்களுக்காக நான் செய்ய வேண்டியிருப்பது நான் இங்க தங்குறது மட்டும்தானே?”

“ஆமா . . . அவ்ளோதான். நாங்க ஐயாவோட பெறுமதிமிக்க பெயரை எப்பவுமே மறக்கமாட்டோம். ஐயா இங்க வந்ததோடே ஐயாவோட நடவடிக்கைகளைக் கவனிக்கன்னு பொலிஸார் படையொண்ணே இந்தப் பகுதிக்கு வந்துச்சு. அவங்களுக்கு சேவை செய்ய சப்பாத்துத் தைக்கிறவன், வியாபாரிகள்னு இந்தப் பக்கம் வந்தாங்க. இன்னும் கொஞ்ச நாள் போகும்போது பொலிஸ் படையோட வேலைகளைக் கண்காணிக்கன்னு இன்னொரு பொலிஸ் படையொண்ணு வந்துச்சு. அவங்களோட தேவைகளச் செஞ்சு கொடுக்க இன்னும் வியாபாரிகள் இங்க வந்தாங்க. இவங்க எல்லோருமே வியாபாரிகளிட்ட இருந்து சாமான்கள் வாங்கத் தொடங்கினாங்க.” பழ வியாபாரி கூறினான்.

“அதற்குப் பிறகு நான் கடையொண்ணு திறந்தேன். ஐயாவுக்கு நன்மை கிடைக்க பொலிஸ்காரர்கள் அந்தி நேரங்கள்ல எங்க கடைக்கு வந்து கோப்பிக் கோப்பைகள் மூணு, நாலுன்னு குடிக்கிறாங்க.”

அவர் வேதனையோடு அவர்களைப் பார்த்தார்.

“அவர்கள் எல்லோருமே பொலிஸ்காரர்களா?”

“சிலர் பொலிஸ்காரர்கள் . . . சிலர் பொலிஸ்காரர்களில்லை. ஒரு இடத்துக்குப் பத்துப் பேர் வரும்போது அவங்களோட அவங்க குடும்பமும், நண்பர்களுமுன்னு அம்பது பேரளவில வருவாங்க. ஐயா இப்ப இந்த மாதிரி போய்ட்டா இந்தப் பகுதி பழைய நிலைக்கே போய்டும். எல்லாப் பொலிஸ்காரங்களுமே திரும்ப ஐயா பின்னால போய்டுவாங்க.”

“அப்ப எங்க வியாபாரம் படுத்துடும்.” சில்லறை வியாபாரி சொன்னான்.

“பிச்சைக்காரங்க எங்களுக்குத் தயவு பண்ணுங்க” பழ வியாபாரி கெஞ்சினான்.

“ஐயா போகவே வேணும்னா நாங்க காசு கொஞ்சம் சேர்த்து முன்னேறுறவரைக்கும் கொஞ்ச காலத்துக்கு இருங்க” கோப்பிக் கடைக்காரன் வேண்டினான்.

அவர் ஒரு கணம் சிந்தித்தார். “எங்கு சென்றாலும் இதே நிலைமைதான்.”

“சரி . . . நான் போகல. ஆனா நீங்க கொண்டுவந்திருக்குற பரிசுகளையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டு போங்க.”

அவர் கடதாசிப் பையைத் திரும்ப அவர்களது கையில் வைத்தார்.

பழ வியாபாரி வெளியேறும்போது மீண்டும் திரும்பினான்.

“நாங்க எங்க மத்த வியாபாரிகளிட்டயும் இந்தச் செய்தியைச் சொல்லட்டுமா?”

“ம்ம்..! நல்லது . . . நான் இந்தப் பகுதியிலிருந்து இப்பவே போறதில்ல. ஆனா எனக்கு உங்கக்கிட்ட இருந்து எதுவுமே வேணாம்.”

“ஐயாவுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்.” கோப்பிக் கடைக்காரன் ஆசீர்வதித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *