மக்கத்துச் சால்வை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 2,118 
 

(1991 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தம்பி | மம்மனிவா ஞாபகமிரிக்காடா மனெ? அண்டெய்க்கி உங்கெ வாப்பால்லாம் பேசாமெ வாயெப் பொத்திட்டாங்கெ. நீ சின்னப்பொடியன். காகத்தெப்போலெ அதெக் கண்டுக்கிட்டாய். உண்டெ சத்தெம் எனைக்கி விசிலடிச்சாப்லெ இரிந்திச்சி.”

“அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலையிலெ அடிபட்டிட்டு.”

“நீ மட்டும் தாண்டா மனெ அதெக் கண்டாய். இண்டெக்கிம் அந்தெச் சத்தம் என்யெ காதிலெ இரையிதிடா மென.

அது எப்பவோ நடந்த விளையாட்டு, நேற்றுப்போயே தான் இருக்கிறது. நெஞ்சில் அப்படியே ஈரமாக

அப்பவெல்லாம் மூன்று நான்கு நாள்களுக்கு முந்தியே பெருநாள் மணக்கத் தொடங்கிவிடும்.

பொழுது விடிந்தால் பெருநாள். பையென்னா ஹோட்டெல் கலகல த்தது. கண்ணாடி ஷோட்கேஸ்’ இரண்டும் ‘பளிச்’ சென்று – உள்ளே தின்பண்டங்கள் கண் சிமிட்டும். பசு நெய்யில் பையென்னாவின் கைப்பட்டுப் பக்குவப்பட்ட மஸ்கெற் வாசம், ஒரு துண்டின் விலை இருபது சதம், ரீ’ ஒன்று பத்து சதம்.

அதுவும் பையென்னாடெ கையால் நோனா மார்க்’ சுட்டிப் பாலில் ‘ போட்டால் தனிச் சுவைதான். இறுகிய சாயமும் கட்டிப்பாலும் அவர் கைப்பட்டுச் சுவை கூட்டும் வித்தை. மஸ்கெற் றில் ஒரு துண்டைக் கடித்து ரீயும் அடித்துவிட்டு வெளியே வரும்போதுதான் ஹொட்டெலுக்குக் குளிரூட்டி நின்ற பூவரசு மரத்தில் ஒட்டியிருந்த கடதாசி கண்ணில் பட்டது.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாளை அசர் தொழுகையின் பிறகு மாபெரும் கம்பு விளையாட்டுப் போட்டி. பிரபல சீனடி வாத்தியார் நூகுத்தம்பியுடன் மோதுபவர்கள் முன்வரலாம். பரிசாக ஒரு மக்கத்துச் சால்வையும் பறங்கி வாழப்பழக் குலையும் வழங்கப்படும். ‘

அந்த வருஷத்துப் பெருநாள் பெரும் கொண்டாட்டமாகவே இருந்தது. பெருநாள் பொழுது உச்சியைக் கடந்து உப்பாத்துப் பக்கமாகக் கெளிந்தும் விட்டது. பக்கத்தூர் சனங்களெல்லாம், கிராமத்தின் சந்தை முகப்பில் ஈயாய் மொய்த்துவிட்டார்கள்.

முன்வரிசையில் – பெரியவர்களின் முழங்கால்களுக்கிடையில் நாங்கள் – வாண்டுக்கூட்டம் – குந்திக் கொண்டோம்.

ஊரின் விதானையாரும், மத்திய செமாரும் கூட்டத்தில் ஒழுங்கை நிர்வகித்துக் கொண்டிருந்தார்கள். பொழுது ஊர்ந்தது. போட்டிக்கு வந்த அண்ணாவியாரும் அவரின் சீடப் பிள்ளைகளும் துடித்துக் கொண்டிருந்தார்கள். சவால் விட்ட நூகுத்தம்பி வாத்தியார் இன்னும் ஆஜராகவில்லை. எல்லோரும் ஆற்றங்கரை வீதியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கேலிப் பேச்சுக்களும் நக்கல்களும் கிளம்பத் தொடங்கின. தூரத்தே ஒரு சைக்கிள் வண்டி மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.

“அன்னா வந்திட்டார்! ஹோய்ரா…!” கூச்சலுடன் கூட்டம் கலகலத்திற்று.

நூகுத்தம்பிதான் வந்து கொண்டிருந்தார். வந்த வேகத்திலேயே அவரின் சைக்கிள் இன்னொருவரின் கைக்கு மாறியது. அடுத்த கணமே அவர், விளையாட்டு நடைபெறும் வீதியின் மையத்தில் பாய்ந்து நின்றார்.

கருங்காலி போன்ற உடல்வாகு. வீச்சுத் தொழிலில் உரம் ஏறிப்போன விசைகொண்ட கைகளும் கால்களும். கட்டுக்கடங்காத காளையின் தோற்றம்.

மீண்டும் கைதட்டல்கள், சீழ்க்கை ஒலிகள் – உடுத்தியிருந்த பழைய கார்ட்’ சாரனைக் களைந்தார். கையிலிருந்த சாரன் பறந்து போய் பூவரச மரத்தில் ஒட்டிக் கொண்டது. உள்ளே முழங்கால் மறைந்த சிறுவாலும் கைவைத்த பனியனும்….

விம்மிப்புடைத்த நெஞ்சிலிருந்து வெட்டுவாளாகக் கரங்களிரண்டும் வெளிக்கிளம்பியது. நின்ற நிலையிலேயே கரங்களிரண்டையும் சுற்றி – அந்தரத்தில் பாய்ந்து – திடீரெனக் குனிந்து பூமியைத் தொட்டு முத்தமிட்டு – ஒப்புதல் எடுத்துச் சலாம் வரிசை போட்டார். மகிழ்ச்சிப் பிரவாகம் கடல்போல் கொந்தளித்து அடங்கியது.

“நூகுத்தம்பியுடன் சிலம்பம் விளையாட விரும்புபவர்கள் வரலாம்.” விதானையாரின் அறிவித்தல்.

சனத்திரளின் மறுகரையில் இன்னோர் உருவம். சுற்றிச் சுழன்று – மின்னல் கோடுகளாய் – கையிலிருந்த கல் விண்ணாங்குத்தடி “ங்………..” ஊதி வெளிவந்திற்று. அகமதுலெவ்வை அண்ணாவியார்தான். அவரின் கையிலிருந்த தடி ஓர் பாம்புபோல அவரைச் சுற்றிச் சுற்றிப் படமெடுத்தாடியது.

பார்வையாளர்களின் பாதங்கள் பூமியில் தாவவில்லை. விளையாடத் தெரிந்தவர்களுக்குக் கையும் காலும் தினவெடுத்திற்று.

“இப்பொழுது நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு. வாழைப்பழக் குலையொன்று பரிசாக வழங்கி, மக்கத்துச் சால்வையால் போர்த்தப்படும்.

விதானையாரின் அறிவிப்பு வந்ததும் கரகோஷம் வானைப் பிளந்தது.

ஒருபக்கம் அகமதுலெவ்வை அண்ணாவியார். மறுபக்கம் நூகுத்தம்பி வாத்தியார். ரெண்டு ரெண்டுதான். சோடையில்லாத சோடி.

முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு நான்கு பாக இடைவெளி விட்டு நின்றார்கள் விதானையார் ஆரம்பம்!’ சொன்னார். அடுத்தகணமே புழுதிப் படலம் கிளம்ப இருவரும் சலாம்வரிசை எடுத்தார்கள்.

சுற்றிச்சுற்றி – அந்தரத்தில் கிளம்பி – நான்கு கைகளும் அரிவாள் போன்று மின்னல் வெட்டி… உருவங்கள் இரண்டு பம்பரம் போல் சுழல்வது மட்டுமே கண்களுக்குப் புலானாகின.

சலாம் வரிசை எடுத்ததும் மீண்டும் அவரவரின் மூலைக்குள் போய் நின்றுகொண்டார்கள்.

அகமதுலெவ்வை அண்ணாவியாருக்கு வெலிகாமத்து மவுலானா வாப்பாதான் குரு. மவுலானா வாப்பாவின் கையால் தொட்டு வாங்கிய தடியை, அவரின் மகன் தொட்டுக்கொடுக்க மிகவும் பாந்தமாகப் பற்றிக் கொண்டார்.

இரு கைகளின் விரல்களுக்கிடையில் நின்று – அக்கம்பு “ங்…..ய்” ததி நர்த்தனமாடியது. ஒரு தடி, நான்காகி, பதினாறாகிப் பல்கிப்பெருகி கண்களுக்குள் மாயாஜாலா வித்தை காட்டிற்று.

எதிர்த்திசையில் நூகுத்தம்பி வாத்தியார். தனது குருவான இந்தியக்கார நானாவின் கையால் வாங்கிய பிரம்புடன் நின்றுகொண்டிருந்தார்.

இரு விளிம்புகளிலும் வெள்ளிப் பூண்களால் மோதிரம் போடப்பட்ட மூங்கில் பிரம்பைத் தனது வலது கையால் மட்டுமே எடுத்துச் சுற்றிச் சுழற்றினார். .

இடக்கை அசையாமலிருக்க வலக்கை மட்டும் சுற்றிச் சுழன்றது. அந்த நுட்பம், லாவகம் அவருக்கே கைவந்த வித்துவம். ஒரு வெள்ளைப் பறவை தனது பரிவாரங்களுடன் தாளலயம் தப்பாது – சிறகடித்துப் பறந்து பறந்து மாயுமே, அவ்வாறு

நூகுத்தம்பியின் கையிலிருந்த வெள்ளிப்பூண் பிரம்பு பறந்தலைந்தது.

முதல் சுற்று முடிந்து – இரண்டாவது ஆட்டமும் தொடங்கிற்று. காகங்களிரண்டும் கம்புகளினூடாக தங்கள் தங்கள் பார்வையைக் குவித்துக் கறுவிக்கொண்டன. ஒன்றையொன்று துரத்தித் துரத்தி…. ஒன்றையொன்று போருக்கு அழைத்து …. அலைக்கழித்து அதே கணம் மின்னலெனச் சீறிப்பாய்ந்து … ஒன்றையொன்று கொத்திக்குதறி…..

புழுதிப்படலம் மேலெழும்ப அந்த அற்புதக் காட்சி!

திடீரெனப் புறப்பட்ட நூகுத்தம்பியின் வெள்ளிப்புறா அகமதுலெவ்வை அண்ணாவியாரின் தோளைத் தொட்டுப் பார்த்துத் திரும்பியது. தடுமாறிய அண்ணாவியார், தழும்பிய பாதங்களை நிலத்தில் பலமாகப் பதித்துக் கொண்டார்.

“அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலையிலெ அடிப்பட்டிட்டு” நானும் மம்மலியும் தான் கூப்போட்டோம். ஊரில், தலையாலெ தெறிச்சதுகள்’ என்று பட்டம் வேறு வாங்கியிருந்தோம்.

“டேய்! பொத்துங்கடா வாயை. யாருக்கிட்டெ கதைக்கிறீங்கெ” அண்ணாவியார்ரெ சீடப்பிள்ளைகளில் ஒருவனான ஈறாங்குட்டி சீறிப்பாஞ்சான்.

“அடிபடெல்லெ அடிபடல்லெ… இவ்வளவு பெரிய மனுஷனுகள் றெ கண்ணையும் மறச்சிட்டு – இந்தெ ஹறாங் குட்டிகள் றெ கண்ணிலெ மட்டும் தைச்சிட்டு….”

மத்திச்செம் பார்த்த புகாரி விதானையார் – அந்தத் தருணம் பார்த்துத் தனது பார்வையை எங்கோ கோட்டை விட்டுவிட்டார். கூச்சலும் இரைச்சலும் கூடிவிட்டது. அண்ணாவி அகமதுவெல்வையின் சீடப்பிள்ளைகள் சுற்றி வட்டமிட்டு நின்றார்கள். ஒவ்வொருத்தனும் நறநற” வென்று பல்லைக் கடித்து….

நூகுத்தம்பி வாத்தியின்மீது பாய்ந்து குதறிக் கிழிக்க வேண்டும்போல் ஆத்திரத்தில் “படபட”த்தனர்.

“டேய்! எங்கெட ஆளுக்கு அடிக்க ஏலுமாடா? வாங்கடா பாப்பம்?” ஆளுக்கொரு கம்புடன் ஆவேசத்துடன் பொங்கினார்கள்.

நூகுத்தம்பி வாத்தி தன்னந்தனியனாய் – வாயில் கைவைத்து விக்கித்துப்போய் நின்றான். ஊர் மத்திச்சத்தினருக்கு அவர்களைச் சமரசத்திற்குக் கொண்டுவருவதே பெரும்பாடாகிவிட்டது.

“டேய்! யாரும் சத்தம் போடவேண்டாம்.” கையில் பிரம்புடன் முகம் கடுகடுக்க’ விதானையார் ஆணையிட்டார். கூட்டம் பெட்டிப்பாம்பாக அடங்கியது.

“போட்டியை மீண்டும் ஆரம்பிப்போம்.” விதானையார் முடிவெடுத்தார்.

“என்னெ திருப்பியும் விளையாடவா?” அவப்பெவேணாம்!” நூகுத்தம்பி வாத்தி அடம்பிடித்தான்.

“நீ அடிச்செத்தெ நாங்கெ பாக்கெல்லெ….” கூட்டத்தில் பெரும்பகுதியினர் கூச்சல் போட்டனர்.

நூகுத்தம்பியின் உள்ளம் குமுறியது.

“நான் வென்றதும் போய். கடைசியிலெ கரையானிண்டும் ஏசிப்போட்டானுகள்.” அவன் கண்கள் கலங்கியது. ஆவேசம் வந்தவனைப்போல – வெள்ளிப்பூண் பிரம்பைக் கையிலெடுத்தான். ஆட்டம் தொடங்கியது. அனைவரின் கண்களும் பிரம்பிலும்…. கம்பிலும்… குத்திட்டுப் பாய்ந்து நின்றன.

விளையாடிக்கொண்டிருந்த நூகுத்தம்பியின் கண்களுக்குள் – நெருப்பு மணி ஒன்று காற்றில் வந்து விழுந்ததைப் போல – கண்கள் பற்றி எரிந்தன. அவன் தம் கையொன்றை கண்களுக்கு அருகில் கொண்டுபோன அதேசமயம் – அவன் தோளை அண்ணாவியார் ஏவிய பாம்பு கொத்திவிட்டு மீண்டது.

“அடிபட்டிட்டு அடிபட்டிட்டு…. அண்ணாவியாருக்கு வெற்றி.”

அண்ணாவியாரைப் தூக்கிக் கொண்டார்கள். விதானையாரும் மத்திச்செமாரும் அவரை மக்கத்துச் சால்வையால் போத்தினார்கள். பையன்னா தமது கடையில் தொங்கிய பறங்கி வாழப்பழக் குலையை அண்ணாவியாரின் கையில் கொடுத்தார்.

சலவாத்துடன் பொண்டுகளின் குரவையொலியும் இணைந்து வானைமுட்ட – அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.

“தம்பி என்னெ யோசிக்காய்?” பழைய ஞாபகத்தில் மூழ்கியிருந்த என்னை அவர் குரல் நிஜத்திற்கழைத்தது.

“நல்லா ஞாபகமிரிக்கி. எனைக்கி நல்லா ஞாபகமிரிக்க அண்டய்க்கி. உங்கெளுக்கு நடந்தது அநீதி தான்.” நான் மிகவும் நிதானமாகச் சொன்னேன்.

“அண்டய்க்கி இந்த மண்ணெவிட்டு – சொந்த பந்தங்களை விட்டு போனெவன் நான். இண்டய்க்கி முப்பது வருஷத்துக்குப் பிறகு வந்திரிக்கென். நீயெல்லாம் ஊரிலே பெரியாக்களாப் போனீங்களாம். எனைக்கிச் சந்தோசம்.”

அவரின் கண்கள் பனித்தன.

“மம்பனிவா! என்டெ புள்ளகள் ரெண்டுபேரு கொழும்புக் கெம்பெஸிலே படிக்கானுகள். மூத்தவன் வெளிநாட்டுக்குப் போய்வந்து தனியா ரெண்டு இன்ஜின் போடு’ வாங்கி ஆழ்கடலுக்குப் போறாண்டாமனெ. மலையிலெ எங்களுக்கு கரையானுகளெண்டுதானே நீதி கிட்டடெல்ல… இண்டைய்க்கி எங்கெடெவென் ஊருக்கும் அல்லாஹ்ட பள்ளிக்கும் தலைவனா வந்திட்டான். எங்கெட நாத்தெப்பிலாலுக்கு கிலோ நூறு ரூவாடா மனெ. அரிசி விலையைக் காட்டிலும் அஞ்சிமடங்கு கூடிட்றா.”

அவர் நெஞ்சில் என்றோ கிளைத்த சுழி – பேரலையாகிப் பொங்கிக் குமுறியது.

“இப்பெ என்னெ செய்வெம்?”

“எனைக்கி நீதி வேணும். நான் திரும்பவும் அகமதுலெவ்வை அண்ணாவியோடெ கம்பு விளையாடணும். என்னையும் மக்கத்துச் சால்வையாலெ போத்தணும்!” அவர் விடாது பேசினார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு – இந்த மனிதனுக்கு இப்படியொரு ஆசையா? மூளையேதும் பிசகோ?”

என் மனம் தவித்தது.

“என்னெ யோசினெ? ராவைக்கு நான் மூத்த ராத்தாட்டான் தங்குவென். சுப்ஹு தொழுதாப்லெ வருவென். முடிவெச் சொல்லு.’

பஞ்சுப் பெட்டியாய் தொங்கிய தாடியைக் கோதி விட்டுக்கொண்டே அந்த மனிதர் கிடுகிடு’ வென்று படியிறங்கிக்கொண்டிருந்தார்.

“யார்ரா வீட்லெ?” நான். “வாங்கம்பி உள்ளெ !”

அகமதுலெவ்வை அண்ணாவியார்ரெ மனைவிதான் அழைக்கிறா. “அண்ணாவியார் எங்கெ?”

“படுகாட்டு வயலெப் பாக்கப்போனாரு. இனி வாற நேரந்தான்.” கூறிக்கொண்டே மெதுவாக அடுப்பங்கரையை நோக்கி….

தேயிலைப் பானை அடுப்பில் ஏறியது. ஐம்பதைத் தாண்டியும் கட்டுக்குறையாத அழகு. அத்தனை பல்லும் முத்துப்போல. அங்கொன்றும் இங்கொன்றுமாக முடியில் மட்டும் வெள்ளிக்கோடுகள்….

“என்னெ தம்பி கனகாலத்தைக்குப் புறகு?”

“அண்ணாவிச் சாச்சாவைச் காணணும்” நான் சொல்லி முடிவதற்குள் – முன் வாசலை சைக்கிள் எட்டிப் பார்த்தது. எங்கள் பேச்சு எங்கெல்லாமோ சுற்றிவளைத்து – நூகுத்தம்பி வாத்தியாருடன் சங்கமித்தது.

“சாச்சா! அது நடந்து முப்பது வரிஷம். இன்னெம் நெஞ்சிலெ அப்படியெ…”

“ஓம்! மனெ அண்டெய்க்கி அவர்தான்…” அண்ணாவி யார் பேச்சை மடக்கிகொண்டார். அவர் முகத்தில் ஏதோவொரு உணர்வுகளின் சாயல் படருகிறது. அவர் தோளில் மக்கத்துச் சால்வை பாரச் சுமையாகியதைப்போல…..

“திருப்பி விளையாடனுமா? அதுக்கென்ன விளையாடுவெம்” என்றவரின் மனம் எதையோ அசைபோட்டது.

“என்ன சீனடி விளையாட்டா? இந்தெ வயசிலெ இந்தக் கிழவனுகெள்?” சாச்சி கேலி பண்ணினா.

அன்று ஜும்ஆ நாள்.

அசர் தொழுகையின் பின்னால் தங்கள் பயங்களையெல்லாம் மறந்தவர்களாக… மக்கள்…

பையென்னா ஹேட்டடெல் பாழடைந்து – சந்தைக் கடைகளெல்லாம் எப்பவோ மூடி – பூட்டுகளில் கறள் கட்டியும் விட்டது.

இழவு வீடுபோல் காட்சியளிக்கும் அந்த வீதியில் மக்கள் திமுதிமுவென்று… எழுபது வயது இளைஞர்கள் இருவரும் களத்தில்….

அகமது லெவ்வை அண்ணாவியார் தனது மூக்குக் கண்ணாடியின் கால்களை – றப்பரைக் கொண்டு கட்டி, பிடரிப்பக்கமாக முடிச்சுப் போட்டுக் கொண்டார். நாற்பது வயதுக்குப்பிறகு அவருக்குப் பார்வைக்கோளாறு ஏற்பட்டு விட்டது.

அன்றைக்கு மத்திச்செம் பார்த்தவர்களில் எவரும் இப்போது உயிரோடில்லை. எல்லோரும் மண்ணுக்குள் மறைந்து விட்டார்கள். புதிய இரத்தங்கள் ஊரைப் பரிபாலித்தது.

“ஆரம்பம்!”

விளையாட்டு ஆரம்பமாகியது. புதிய தலைவர் ஆணையிட்டார். அண்ணாவியாரின் கையில் அதே கல் விண்ணாங்குத்தடி காய்ந்து – தைலம் வற்றி “ங்ங்…'” ஊதிக் கொண்டு படமெடுத்தாடியது. அவர் குந்தி எழுந்து சுற்றிச் சுழன்றார். அந்தரத்தில் வட்டமிட்டு – அதேவேகத்தில் காலடி மண்ணைத் தொட்டு முத்தமிட்டுக்கொண்டார்.

நூகுத்தம்பி மஸ்தானின் கையிலும் அதே வெள்ளிப் பூண் மூக்கில் பிரம்பு. கையிலிருந்து சிறகடித்து கொக்கரித்தது. அவரின் ஒற்றைக் கைச்சுழலில் மூங்கில் பிரம்பு விண்ணொலி பிழிந்தது.

எழுபது வயதுக் காகங்கள் இரண்டும்… நீச்சலடித்து; கரைகட்டி நின்றன. அவர்களின் மார்புகள் உயர்ந்து உயர்ந்து தணிந்தன.

மீண்டும் விளையாட்டுத் தொடங்கியது.

நூகுத்தம்பி மஸ்த்தானோ பழைய வஞ்சத்தை நெஞ்சில் நிரப்பி நெருப்பாகச் சுற்றிச் சுழன்றார்.

அகமதுலெவ்வை அண்ணாவியார். நின்று நிதானித்து எதிரியை மடக்கிப் பிடிக்கப்பார்த்தார். மூங்கில் பிரம்பின் ஒவ்வொரு அடியையும் – லாவகமாகவும் புத்திசாதுரியமாகவும் தடுத்துக்கொண்டிருந்தபோது தான் அது நடந்தது.

அகமதுலெவ்வை அண்ணாவியாரின் கண்ணாடி கழன்று – வீதியின் மறுகரையில் விழுந்து நெருங்கியது…. அதேசமயம் நூகுத்தம்பியின் வெள்ளைப்புறா அவரின் தோளின் அருகில் போய்….

புறா நினைத்திருந்தால் கொத்திக் காயமாக்கியிருக்கலாம். ஒரு கணம் தான் பின்வாங்கிற்று….

அண்ணாவியாரின் கண்களுக்குள் பலநூறு வெள்ளைப் புறாக்கள் – அவர் திக்குமுக்காடிப் போனார்.

நூகுத்தம்பி மஸ்தானின் வேகம் மட்டாகியது. கையிலிருந்த மூங்கில் பறவை, பறந்து பறந்து, சுழன்று சுழன்று அடித்துக்கொள்ள – சிந்தனைக் காகம் அடம் பிடித்தழுதது.

‘கண் பார்வை புகைச்செல்போலெ. இவருடன் நான் மோதுவது நீதியில்லெ. இந்தெ வயசிலெயும் அல்லாஹ் எனைக்கி இவ்வளவு பிலத்தையும் கண்ணில் ஒளியெயும் தந்தானெ இதான் பெரிய பரிசு.’ அவர் மனசு மத்திச்செம் கூறியது.

மறுகணம் அவர் கையிலிருந்த வெள்ளிப் பூண்போட்ட மூங்கில் புறா எங்கோ பறந்துகொள்ள – ஒரே பாய்ச்சலில் அவர் அகமதுலெவ்வை அண்ணாவியாரை ‘முசாபாச் செய்யக் கட்டிப்பிடித்தார்.

அகமதுலெவ்வை அண்ணாவியாரும் தமது கல் விண்ணாங்குத் தடியைத் தூர எறிந்தார்.

இரண்டு காகங்களும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து…. முசாபாச் செய்து…. முத்தமிட்டு……

பார்வையாளர்களின் கண்கள் கசிந்து மேனி சிலிர்த்திற்று.

மஸ்தானின் பிடியிலிருந்து விலகிய அண்ணாவியார் ஏதோ பேச ஆயத்தமானார். கூட்டத்தினர் வாயடைத்து நின்றனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும்! முப்பது வருஷத்திக்கு முந்தி நடந்த போட்டிலெயும் நூகுத்தம்பிதான் வெத்தினார். அண்டெய்க்கி அந்தெ வெத்தியெ என்டெ வரட்டக் கவுரவெம் ஏத்துக்கெல்லெ. அண்டெய்க்கிம் இண்டெய்க்கும் இவருதான் வெத்திவீரன்.” என்றவர் உடனே முப்பது வருடங்களுக்கு முன்னர் ஊர்மக்கள் தன்னைப் போர்த்தி, சங்கை செய்த மக்கத்துச் சால்வையை இடுப்பிலிருந்து பவ்யமாக எடுத்தார். சால்வையின் இரு கரைகளையும் ஒன்றாகப் பிடித்து உதறியவராக – அதேவேகத்தில் நூகுத்தம்பி மஸ்தானைப் போர்த்தியும் விட்டார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது – சங்கைக்குரியவருக்கே சால்வையை வழங்கிவிட்ட திருப்தியில் – பாவச்சுமை கழன்று விட்ட ஆனந்தத்தில் அவரின் கண்கள் கசிந்தன.

நாயகத்தின் பெயரால் சலவாத்து வானத்தை எட்டியது. அந்தப் பூவரச மரமும் ஆனந்தத்தில் சிரித்துக் கொள்ள – நூகுத்தம்பி மஸ்தானின் தோளில் கிடந்த மக்கத்துச் சாவ்வையின் அத்தர் வாசனை காற்றில் கலந்து நிறைந்தது.

-1991- வீரகேசரி, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

– மக்கத்துச் சால்வை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆனி 1992, சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *