என் நண்பன் பெயர் நாணயக்கார…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,950 
 

(1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொட்டாஞ்சேனையிலிருந்து, நாணயக்காரவும் நானும் கோட்டைக்கு “வந்தோம். ‘யாழ்தேவியில் ராஜநாயகம் வருவதாகக் கடிதம் போட்டிருந்தான். வண்டி வருவதற்கு இன்னமும் ஒரு மணி நேரத்திற்கு மேலிருந்தது.

“என்னடா செய்யலாம்?” என்றான் நாணா. எனக்கும் புரியவில்லை. இனி, எங்கள் அறைக்கு – பம்பலப்பிட்டிக்குப் போய் விட்டுத் திரும்பி வருவது முடியாத காரியம்.

“ஸ்ரேஷனடியிலை பேசிக்கொண்டிருக்கலாம்; வா, சாப்பிட்டு வருவோம்” என்றேன்.

சாப்பிட்டுவிட்டுத் திரும்பி ‘ஸ்ரேஷ’னின் முன்னால் ‘ஒல்கொட்’ சிலையருகில் வந்த போது, நாணா மிக உற்சாகமாயிருந்தான். அவன் எடுத்த அந்த ட்றாம் அதற்குக் காரணமாய் இருந்திருக்கக்கூடும். அவன் எப்போதுமே இப்படித்தான்; அளவுக்கு மேல் போகாது. அந்த ஆறடி உயரமும், அதற்கேற்ற ஆகிருதியுமான உடம்புமுள்ள நாணாவின் கம்பீரத்திற்கு இந்த மப்பின் உசார் மேலும் பொலிவூட்டும். தீர்க்கமான மூக்கும், அதன் கீழ்க் ‘கருகரு’ மீசையுமாய் – ஒரு சாயலில் ராவணனைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

‘எண்டா, ராவணா…’ என்று செல்லமாக நான் அழைக்கும் போதெல்லாம் கட கட’ வென்று அவன் சிரிக்குந் தொனியில், ‘மாத்தறை – யாழ்ப்பாண’மோ, அல்லது சீனா – தானா வோ தலைநீட்ட முடியாத அளவுக்கு எமக்கிடையில் இறுகியிருந்த நட்பின் வைரந் தெரியும். கல்லூரியில் ஒரே வகுப்பு. ஒரே அலுவலகத்தில் ஒரே வேலை. தவிர நாணா இப்போது என் ரூம் மேட்’.

“நிப்பமா? உள்ளுக்குப் போவமா?’ என்றான். “இதிலையே கொஞ்சம் நிப்பம்” இன்னும் அரைமணி நேரம் இருந்தது.

ஒரே குளிர். பனி மூட்டங்களிடை வாகனங்களின் ஒளிக் கதிர்கள் பீச்சப்படுக்கையில் முப்பரிமாணமுள்ள குவியமாகிற பரிணாமம்… உடலைச் சிலிர்க்க வைக்கிற காற்று… அங்கொன்றும் இங்கொன்றுமான யந்திர ஒலிகள் இல்லா விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

“இவர்களையெல்லாம் பார்த்தாயா?” என்றான் நாணா, கீழே படுத்துக் கிடந்தவர்களைக் காட்டி.

ஆண் – பெண், குழந்தை – கிழவர் என்று ஒரு மினி’ உலகமே அங்கு – ‘ஒல்கொட்’ சிலையடியிலிருந்து ‘ஸ்ரேஷன்’ விறாந்தை வரை வியாபித்திருந்தது. நாணா கேட்டதுந்தான் அதைக் கவனித்தேன். இவ்வளவு நாளும் வருகிற போகிற போதெல்லாம் கண்டு கண்டு அது ஒரு சாதாரண விஷயமாய்ப் போய்விட்ட காரணத்தால், நான் அதைக் கவனிக்கவில்லை.

“இவர்கள் இந்நாட்டு மக்களில்லையா?”- சிகரட்டை ஊதியபடி நாணா கேட்டான்.

நான் பேசவில்லை .

“…டேய், இவங்களுக்கு வேலை வேண்டாம், காக- சாப்பாடு கொடுக்க வேண்டாம். ஒரு சத்திரமாவது கட்டிப் போட்டா, இந்தப் பனியிலை இப்படிக் கிடக்கத் தேவையில்லையடா…”

ஆங்காங்கே தூவப்பட்டிருந்த அந்தக் கும்பலிடை பலர் இன்னமும் தூங்கவில்லை. நாணாவின் உரத்த பேச்சால் ஈர்க்கப்பட்டு, எங்களை அவதானித்தனர்.

“நீ சொல்றது சரிதான்; கொஞ்சம் மெதுவாகப் பேசு. எல்லாரும் பார்க்கிறார்கள்” என்றேன்.

உண்மையில் நாணாவின் துடிப்பு எனக்குப் புரிந்து தான் இருந்ததென்றாலும், இந்த இரண்டு ‘மொட்டையன் ’களும் பேசி ஆகிற காரியமா இது?

நாணா பிறகு பேசாமலிருந்தான். இருவருமாக நடந்து போய் ஸ்ரேஷன் விறாந்தையில் நின்றோம். திரும்புகையில் நுழைவாசலருகில் நின்றவர்களைக் கண்டதும் எனக்குத் திடுக்கிட்டது.

சிறில்!

இலேசான ஒரு குளிர் முள்ளந்தண்டில் ஓடுவது போல- ‘ராஜ நாயகத்தைப் பார்த்துக் கொண்டிராமல், பேசாமல் அறைக்குப் போய் விட்டாலென்ன என்று நினைத்தேன். என்னைக் கண்டால் என்ன செய்வானோ’ என்கின்ற பயம் மேலோங்கிற்று. திரும்பி நாணாவை மெல்லத் தட்டுவதற்குள் – சிறில் என்னைக் கண்டு கொண்டான்!

அந்தப் பார்வை – அதிற் பின்னியிருந்த கொடூரம்… எனக்கு வியர்த்தது. நாணாவின் கரங்களை இறுகப் பற்றிக் கொணடேன். சிறில் என்ன நினைத்தானோ, விடு விடென்று ஸ்ரேஷனுக்குள் போய்விட்டான். ஆனால், எனக்கென்னவோ, அவன் சும்மாயிருப்பானென்று தோன்றவில்லை. நடுங்கிய கரங்களை உணர்ந்ததும், நாணா “என்னடா?” என்றான்.

“சிறில்…” – எனக்கு மேலே பேச வரவில்லை .

“எங்கே?” என்றவனின் கண்டத்திலிருந்து கடகட’ வென்ற வெண்கலச் சிரிப்பொலி எழுந்தது. அந்தக் கம்பீரத்தில் – அதன் தைரியத்தில் – நான் சமநிலைக்கு வருகையில், “வீணாகப் பயப்படாதே; நானிருக்கிறேன்” என்றான் நாணா.

வெளியே உறைந்த குளிர், இப்போது அதிகரித்தது போலொரு உணர்வு. சிறிலுக்கு நான பயப்படுகிற காரணம் – நாணாவும் அறிவான்

ஓர் அபலைப் பெண்ணைப் பழிவாங்க இந்த சிறில் முன் பொருதரம் – முயன்றபோது, என் தலையீட்டால் அவன் திட்டங்கள் கவிழ்ந்து…

அதன் விளைவாய் இந்த ‘தெமலப்பய’லுக்கு ஒரு பாடங்கற்பிக்க மானந்து அலையும் சிறில்…

எங்கள் சொந்தக் ‘கொழுவ’ லுக்கு ஒரு இனவாத முலாம் பூசும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறான்.!

நாணா உலுக்கிறான்.

“என்னடா, இன்னுமா நடுக்கம்?”

நான் தலையாட்டினேன்.

ராஜநாயகம் வந்தாயிற்று. மூவரும் பஸ்தரிப்புக்கு வந்தோம்.

பஸ்ஸைப் பார்த்துக்கொண்டு நின்ற அலுப்பில் நேரம் ஊர்வது போலிருந்தது. பஸ்தரிப்பில் எங்களைவிட வேறெவருமில்லை. இரைந்தபடி குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருந்த டாக்ஸி’ களும் மறைந்துவிட்டன.

பின் புறத்திலிருந்து ஒரு செருமல் கேட்டது. திரும்பினால் சிறில்! இன்னும் யாரோ இரண்டுபேருடன் நின்றான்.

“நாணா….” என்றேன். இதற்குள் சிறில் மிக அருகில் வந்துவிட்டான் – தமிழர்களைப் படுமோசமாகத் திட்டியபடி. அவனுக்கு நல்ல வெறி. “இண்டைக்கு நான் உன்னைக் கொன்றாலுஞ் சரி! ஆனா நீ என்னைத் தொட்டியோ, தமிழன் சிங்களவனை அடித்தா னென்று நாளைக்கு கொழும்பே கலங்கும். கவனம்!

என்னைப் பார்த்துக் குழறினான்.

நாணயக்கார வாயிலிருந்த சிகரட்டை எறிர் – சித்த கணம் சிறிலின் சட்டை அவன் கையிலிருந்தது! ” ‘சி’ யைத் ‘த’ அடித்தால்தானே, பிழை? டேய் காவாலி! ‘சி’ யை ‘சி’யே அடிக்கிறேன் – நானும் ‘சி’ நீயும் ‘சி’! இனி எப்படி இனக்கலவரம் வரும்? எளிய ராஸ்கல்…. உன்ர அக்கிரமத்துக்கு அவன் துணை வரேல்லையெண்டு இந்த வேலையா செய்யிறாய்?” நாணாவின் வாய்ப்பேச்சு இவ்வளவு தான்.

அம்மூவரும் நிறைவெறி யில் நின்றதால் என் நண்பனின் வேலை இலகுவாயிற்று. திகைப்பில் கரைந்த நிமிடங்கள்…..

“இனி, இந்த வேலையை நினையாதே!” – விழுந்தவனுக்கு நாணாவின் குரல் அபயமளித்தது.

ராஜநாயகம் டாக்ஸிக்கு கைதட்டினான்.

-1972, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *