ஆர்ஏஜேஏ ராஜா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 6,299 
 

மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன்.

நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன கன்னங்களுக்கு மேலே சாராயம் வழிந்து கொண்டிருந்த பிதுங்கின பெரிய விழிகள் என்னைப் பார்த்ததும் நொடி நேரத்தில் தாழ்ந்து பதுங்கின.

ஆர் ஏ ஜே ஏ ராஜா நான் ராஜா வந்திருக்கேன் சித்தப்பாவின் குரல் காதுகளில் ஒலித்தது.

அப்பா வகையில் துாரத்து சொந்தம்.கௌரவமான குடும்பத்தில்தான் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் பஞ்சாயத்து ஆபிசில் எழுத்தராகவும் தலைமையாசிரியராகவும் இருக்கையில் இவர் மட்டும் இப்படி ஆனதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? ஒரு மரத்தின் இருவிதைகளில் ஒன்று பூத்துக் குலுங்குவதற்கும் மற்றொன்று பட்டுப் போவதற்கும் யார் காரணம் சொல்ல முடியும்

அந்தக் குடிகாரப் பயகிட்ட மனுஷன் பேசுவானா என்று உறவினர்களும்,அவனிடம் நமக்கெதற்கு வம்பு என்று ஊர்க்காரர்களும் ஒதுங்கிக் கொண்டு விட்டதால்தான் ராஜா சித்தப்பா கேட்பாரற்று கோவில் காளை போல் திரிய ஆரம்பித்திருக்க வேண்டும்.

கேபிள் டிவி,டிஷ் டிவிகள் ஏன் சாதா டிவி கூட(துர்தர்ஷன்) இல்லாத ஆசிர்வதிக்கப்பட்ட என் பள்ளி நாட்களில் என்னைப் போன்ற சிறுவர்களின் ஆகப் பெரிய பொழுதுபோக்கு, ஹட்ச் விளம்பரத்தில் வரும் நாயைப் போல ராஜா சித்தப்பாவை பின்தொடர்வதுதான்.

திருஆவினன்குடி வாசலில் சூடம் வாங்கிக் கொண்டிருந்தவனின் சைக்கிளில் ஏறி மிதித்தபடி வையாபுரி குளத்தினுள் (அப்போதெல்லாம் பைபாஸ் பாலம் கட்டப்படவில்லை) சென்று கொண்டிருந்தார்.சைக்கிள் சொந்தக்காரன் திருடன் திருடன் என்று கத்தியதும் யூ டர்ன் அடித்து திரும்பியது அவன் விதி.அருகில் வந்ததும் சைக்கிளை அப்படியே கீழே போட்டு விட்டு ஒரு அறை.ஏன்டா……………..,என்ன திருடன்னா சொன்ன?

அவன் வாயோரம் சூடாக வழிந்த ரத்தம் அவனிடம் சொன்னது ஆர் ஏ ஜே ஏ ராஜா வந்திருக்கிறார் என்று.

நீங்களெல்லாம் சைக்கிள் ஓட்டிப் பழகும்போது எலெக்ட்ரிக் கம்பம்,புளிய மரம் அல்லது எருமை மாடு தானே குறுக்கே வரும்.நான் ஓட்டிப் பழகும் போது ராஜா சித்தப்பா வந்தார்.அவர் மேலே மோதிச் சரிந்த வினாடியில்,சைக்கிள் பழகித் தர வந்த கண்ணன் போன இடம் தெரியவில்லை.

டாம் அண்ட் ஜெரியில் பூனையிடம் சிக்கிக் கொண்டு மடமடவென உயிலெழுதும் எலியின் மனநிலையில் இருந்தேன்.சற்றுமுன்புதான் ப்ளாடர் காலி செய்யப்பட்டிருந்ததால் டவுசர் தப்பியது.நியாயத்தீர்ப்பு நாளின் பாவி போல் காத்திருந்த என்னை சிவந்த விழிகளால் முறைத்துப் பார்த்த சித்தப்பா,டேய் அண்ணன் மகனே பாத்து ஓட்றா என்று மன்னித்துச் சென்றது என் வாழ்வில் நிகழ்ந்த மிகச் சில அற்புதங்களில் ஒன்று.

ஒருமுறை வேறு ஏரியாவில் சென்று ப்ரச்சனை செய்தாரென்று ஆறுபேர் திருஆவினன்குடி வாசலில் வைத்து பின்னி எடுத்து விட்டார்கள்.வாய்,முகமெல்லாம் ரத்தம் வழிய வழிய தள்ளாடி எழுந்து டேய்……………… ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கொத்தை வாங்கடா என்று அறைகூவல் விடுத்த போதுதான் சித்தப்பா எங்களுக்கெல்லாம் பெரிய ஹீரோவாகிப் போனார்.
பின்னொரு நாள் சன்னதி வீதியில் பழைய தேவஸ்தான ஆபிசுக்கு முன்னால் காசு வாங்கிக் கொண்டு ஆசிர்வாதம் தந்து கொண்டிருந்த யானையிடம் முழு போதையில் சென்ற வணக்கம் சொன்னார்.அது ரோட்டில் கிடந்த வாழைப்பழத்தை எட்டி எடுக்கும் முயற்சியில் இருந்ததால் இவரை கவனிக்கவில்லை.

அவ்வளவுதான் ரௌத்ரமூர்த்தியாக மாறிப் போன சித்தப்பா ஏய் நாயே(???),இந்த ஆர்ஏஜேஏ ராஜா உனக்கு வணக்கம் சொல்றேன்,திமிரா பண்ற ஒரு அப்பனுக்கு பொறந்திருந்ததா வா மோதிப் பாக்கலாம் என்று ருத்ரதாண்டவம் ஆடினார்.ராஜா வேணாம் தள்ளிப் போயிரு அதுக்கு தண்ணி வாட ஆகாது சிக்கின அவ்ளவுதான் என்ற பாகனின் வார்த்தைகளுக்கெல்லாம் கட்டுப்படாமல் சலம்பிக் கொண்டிருந்தவர்,வாழைப்பழத்தை மறந்து விட்டு துதிக்கையால் துளாவியபடி ஓரடி முன்னேறிய யானையைக் கண்டதும் உன்ன அப்புறமா கவனிச்சுக்கறேன் என்று யானைக்கும் பாகனுக்கும் பொதுவாக சொல்லியபடி தன் வீரத்திற்கு சற்றும் பொருந்தாமல் தள்ளாடி நடந்து போனார்.

ராஜா சித்தப்பாவை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருப்பதாக கோபால் சொன்னதை எங்களால் நம்பவே முடியவில்லை.வீரையா மாமாவிடம் ஏதோ பிரச்சனை செய்ததால் அவர் கம்ளைன்ட் கொடுத்துததான் போலீஸ் வந்திருந்தது.அவரது கைகளை பின்புறமாக மடக்கிக் கட்டுவதற்கு உதவும் தைரியம் கோபாலுக்கு எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை.
மாமா கொஞ்சம் பொறு சாப்பிட்டுட்டு வந்துர்றேன் என்று சாப்பிட்டுக் கொண்டே போலீசிடம் சொல்ல, குதிரை வண்டியில் ஏற்றிய பின்னும் மாமா, வா வண்டில எடமிருக்கு என்று போலீஸை அழைக்க ராஜா சித்தப்பாவைத் தவிர வேறு யாருக்கு துணிச்சல் இருக்கிறது.

அவ்வளவுதான் ராஜாவோட ஆட்டம் முடிஞ்சது. ஒரு வருஷம் உள்ள போட்ருவாங்களாம் என்று வீரையா மாமா சொன்னதாக கோபால் சொன்னதைக் கேட்டதும் எங்களுக்கு துக்கம் தாளவில்லை. ராஜா சித்தப்பா இல்லாமல் அடிவாரமா?

பெரிய கடைவீதியில் வாங்கிய என்னுடைய புது பம்பரம் குத்தப்படும் ஆக்கர்களால் சிதைந்து கொண்டிருந்த துக்கத்தில் நான் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் கண்ணன் ஓடி வந்து சொன்னான்.நாயர் டீக்கடையில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருக்கும் செய்தியை.

நாயர் டீக்கடைக்குப் பக்கத்தில் பெட்டிக்கடையில் பீடி வாங்கப் போன கோபால்,இதைக் கேட்டதும்,அங்கே போகாமல் ரெண்டு தெரு தள்ளிப் போய் பீடி வாங்கியதும்,ரொம்ப நாட்களுக்கு ராஜா சித்தப்பாவின் கண்களில் படாமல் பதுங்கியதும் இன்றுவரை நண்பர்களிடையே பிரசித்த பெற்ற நகைச்சுவையாக வழங்கி வருகிறது.

கிருஷ்ணா ஸ்டோரில் கல்கண்டு பொட்டலங்களை சூறை விட்ட போதும்,சொன்ன நேரத்தில் சட்டையை தைத்துத் தராததால் ஷோகேஸ் கண்ணாடியை உடைத்து தன் துணியை ரத்தம் வழியும் கைகளால் எடுத்துச் சென்ற போதும் பின்தொடர்ந்த நான் அறிந்திருக்கவில்லை,கால ஓட்டத்தில் சாராயமும்,போலீசில் வாங்கிய அடிகளும் தின்றது போக மிச்சமிருக்கும் தளர்ந்து ஒடுங்கின முதிர்ந்த பறவையாய் அவரை பின்னாட்களில் பார்க்க நேரிடுமென்று.

டீ போடட்டுமா என்று ஜானகி கேட்டதும்தான் சித்தப்பாவை காபி சாப்பிடக் கூட கூப்பிடவில்லையே என்ற குற்றஉணர்வு உறுத்தியது.

சட்டென்று எழுந்து வெளியே போய் பார்த்தேன்.

பிரஸ் வாசல் காலியாக இருந்தது.அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நாலைந்து ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

அன்று மாலை,இனி எப்போதுமே நான் காபி சாப்பிட கூப்பிட இயலாதபடிக்கு ராஜா சித்தப்பா இறந்து போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *