அமர வாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,721 
 

முன்னுரை

பர்மாவிலிருந்து தாய்நாட்டிற்குத் திரும்பி வந்த பிறகு என் உள்ளம் அமைதி இழந்து அலைப்புண்டிருந்தது. ஓரிடத்தில் நிலையாக இருப்பது சாத்திய்மில்லாமல் போயிற்று. என் மனோநிலையை வியாஜ்யமாகக் கொண்டு தேச யாத்திரை செய்யத் தொடங்கினேன். அந்த தேச யாத்திரையைப் பெரும்பாலும் வட இந்தியாவிலேயே செய்யும்படி தூண்டிய காரணம் ஒன்று இருந்தது.

வீர ராஜபுத்திரர்களின் நாட்டில் அதிசயமான வீரச் செயல்கள் நிகழ்ந்த புராதனமான கோட்டை கொத்தளங்களையும், பாழடைந்த பழைய ஊர்களையும் அழகு குடி கொண்ட புதிய பட்டணங்களையும் அந்தப் பட்டணங்களிலே லீலா விநோதங்களுக்குப் பெயர் போன சிருங்கார அரண்மனைகளையும் சுற்றிப் பார்த்துச் சலித்த பிறகு, கடைசியாக, அஜ்மீர் ஸ்டேஷனிலிருந்து பம்பாய்க்குப் போவதற்கு டிக்கட் வாங்கினேன். ஆஜ்மீரில் டிக்கட் கொடுத்த ஸ்டேஷன் குமாஸ்தா ஒரு எச்சரிக்கை செய்தார். “வழியில் ரட்லம் சமஸ்தானத்தில் ஏதோ கலாட்டா நடப்பதாகத் தெரிகிறது. கால திட்டப்படி ரயில் போய்ச் சேர்வது நிச்சயமில்லை. நீங்கள் வேறு மார்க்கமாய்ப் போவது நல்லது!” என்று அவர் சொன்னார்.

அதற்கு நான், “எத்தனையோ கலாட்டாக்களை நான் பார்த்திருக்கிறேன் ஐயா! பரவாயில்லை. டிக்கட் கொடுங்கள்” என்றேன்.

ஆஜ்மீர் ஸ்டேஷனில் ஜனங்கள் அங்கங்கே கும்பல் கூடிப் பரபரப்புடன் பேசிக் கொண்டிருந்த விஷயம் என்னவென்பது மேற்படி டிக்கட் குமாஸ்தாவின் எச்சரிக்கையின் மூலம் எனக்குத் தெரிய வந்தது.

ரயில் புறப்பட்டபோது அதில் வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் ரொம்பக் குறைவாக இருந்தது. ஏறியிருந்தவர்களில் போலீஸ்காரர்கள், இந்திய சிப்பாய்கள், இங்கிலீஷ் டாம்மிகள் ஆகியவர்கள் தான் அதிகமிருந்தார்கள்.

இத்தனை நாளும் ரயில் பிரயாணத்தில் கூட்டத்திலேயே கிடந்து அவஸ்தைப்பட்ட எனக்கு இது பெரிதும் உற்சாகத்திற்குக் காரணமாயிருந்தது. ஒருவருமே ஏறியிராத ஒரு இரண்டாம் வகுப்பு வண்டியைக் கண்டுபிடித்து அதில் ஏறிக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டேன். பிரயாணத்துக்கான உடையைக் களைந்து விட்டுக் கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஹாய்யாகக் காலை நீட்டிக் கொண்டு படுத்தேன். ரயிலும் கிளம்பிற்று.

ரட்லம் ஜங்ஷன்

நான் நிம்மதியான நினைவற்ற தூக்கம் தூங்கி எத்தனையோ காலம் ஆயிற்று. என்றாலும், ஓடும் ரயிலின் ஓசையும் சுழலும் சக்கரங்களின் சத்தமும் பெரும்பாலும் என்னைக் கண்ணயரச் செய்வது வழக்கம். எத்தனை நேரம் அன்று நான் தூங்கினேனோ தெரியாது. பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றிய கனவு கொண்டு திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்தேன். ரயில் ஓடாமல் நிற்கிறது என்று தெரிந்தது. நிற்கிற இடம் ஸ்டேஷன் இல்லை என்று என் உள்ளுணர்வு சொல்லிற்று. ஸ்டேஷன் என்றால் அதற்கென்று தனி உரிமையுள்ள சில சப்தங்கள் கேட்கும். வண்டியில் இடம் பிடிக்க ஓடுகிறவர்களின் நடமாட்டம், ஏறி இறங்குகிறவர்களுடைய ஆர்ப்பாட்டம், ‘கரம் சா’ ‘கரம் தூத்’ கூப்பாடு, போர்ட்டர்களின் ஆரவாரம் – இவற்றிலிருந்து ரயில் பெரிய ஜங்ஷனிலோ சிறிய ஸ்டேஷனிலோ நிற்கிறதென்பதைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், இங்கே அம்மாதிரி சப்தங்கள் இல்லை. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து இனந்தெரியாத சப்தங்கள் கேட்டன. வண்டியின் பலகணி ஒன்றைத் திறந்து உள்ளே குப் என்று புகுந்த குளிர்ந்த பனிக் காற்றைப் பொருட்படுத்தாமல் வெளியே தலையை நீட்டினேன். என்னைப் போலவே பல தலைகள் வண்டிக்கு வெளியே நீட்டப்பட்டிருந்தன. ஒரு சிலர் கீழே இறங்கி ரயிலோரமாக நடந்து கொண்டிருந்தார்கள். எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு பட்டணம் இருப்பது தெரிந்தது. எப்படித் தெரிந்தது என்றால், அந்தப் பட்டணத்தில் ஆங்காங்கே சில வீடுகள் தீப்பிடித்து எரிய, மேற்படி தீயின் வெளிச்சத்தில் பட்டணம் தெரிந்தது! பட்டணம் தெரிந்த திசையிலிருந்து படார், படார் என்று துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது.

அடுத்த வண்டியிலிருந்து தலையை நீட்டியவரைப் பார்த்து, “என்ன ஸார், விசேஷம்! ரயில் எங்கே வந்திருக்கிறது?” என்று கேட்டேன். “ரட்லம் ஸ்டேஷனுக்கு அருகில் வந்திருக்கிறது; டவுனில் ஏதோ கலாட்டா நடப்பது போல் காண்கிறது!” என்றார்.

ஆஜ்மீர் ஸ்டேஷனில் டிக்கட் குமாஸ்தா சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

சில நிமிஷத்துக்கெல்லாம் ரயில் கார்டின் விஸில் சப்தம் கேட்டது; ரயிலும் புறப்பட்டது. மெதுவாக நகர்ந்து சென்று கை காட்டி மரத்தைத் தாண்டி ரட்லம் ஸ்டேஷனுக்குள் போய் நின்றது. வண்டியிலிருந்த சிப்பாய்கள் முதலியோர் மளமளவென்று கீழே இறங்கினார்கள். பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் ஜனங்கள் கும்பல் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கம் போன ஸ்டேஷன் அதிகாரி ஒருவரை நிறுத்தி, “என்ன ஐயா விசேஷம்? வண்டி இதற்கு மேல் போகுமா? போகாதா?” என்று கேட்டேன். அவர் தமது வாயிலிருந்த சிகரெட்டை எனக்குப் பதில் சொல்வதற்காக எடுக்கலாமா, வேண்டாமா என்று சிறிது யோசனை செய்துவிட்டுப் பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய், “கொஞ்ச தூரத்துக்கப்பால் ரயில் பாதை சேதமாயிருக்கிறது. செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் பொழுது விடிந்தபிறகுதான் ரயில் புறப்படும்” என்றார்.

உடனே நான் படுக்கையை சுற்றிக் கட்டினேன். களைந்து வைத்த உடுப்பைப் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு போர்ட்டரைக் கண்டுபிடித்துப் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொள்ளச் செய்தேன். மேற்பாலத்தில் ஏறி இறங்கி முதல் நம்பர் பிளாட்பாரத்தில் இருந்த வெயிட்டிங் ரூமுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

வெயிட்டிங் ரூமில் விளக்கு எரியவில்லை. வெளியில் பிளாட்பாரத்து விளக்கிலேயிருந்து மங்கலான வெளிச்சம் வந்தது. அறை அடியோடு காலி என்று முதலில் தோன்றியது. அப்புறம் சுற்றும் முற்றும் நன்றாய்ப் பார்த்ததில் அந்த எண்ணம் தவறு என்று தெரிந்தது. சுவர் ஓரமாகக் கிடந்த தாழ்ந்த பிரம்புக் கட்டிலில் ஒரு மனிதர் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய முகம் சுவரின் பக்கமாகத் திரும்பியிருந்தபடியால் அவர் யார், இன்ன மாதிரி மனிதர் என்று இனம் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு வட்ட மேஜையும், அதன் இரண்டு பக்கங்களில் இரண்டு நாற்காலிகளும் கிடந்தன. சாமான்களைக் கீழே வைக்கச் சொல்லிவிட்டு ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். போர்ட்டரிடம் மறுபடியும் ரயில் கிளம்பும் போது வந்து கூப்பிடும்படி சொன்னேன்.

போர்ட்டர் போன பிறகு சிறிது நேரம் வட்ட மேஜை மீது கைகளை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் பிறப்பு வளர்ப்பைப் பற்றியும், வாழ்க்கையில் நான் அடைந்த அனுபவங்களைப் பற்றியும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இந்த மாதிரி முன் பின் தெரியாத ஒரு வடநாட்டு ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நாள் நள்ளிரவில், நான் தன்னந் தனியாக உட்கார்ந்திருப்பேன் என்று நாலைந்து வருஷங்களுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், சொல்லியவருக்குப் பைத்தியக்காரப் பட்டம் சூட்டியிருப்பேன்.

என்ன அர்த்தமற்ற காரியம் இது? என் வாழ்க்கையையே இப்படி அர்த்தமற்றதாகத்தான் போய் விடுமோ?

‘டப் டப் டப்பார்’ என்று துப்பாக்கி வெடிச் சத்தம் மறுபடியும் கேட்டது. சுவருக்கருகில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த மனிதர் ஒரு தடவை புரண்டு படுத்தார். மறுபடியும் ஒரு நொடிப் பொழுதில் அவருடைய முகம் சுவரின் பக்கமாகத் திரும்பி விட்டது.

ஜே ஹிந்த்!

என்னுடைய கண்ணிமைகளும் லேசாக வளைந்து கொடுக்கத் தொடங்கின. படுக்கையைத் தரையில் விரித்துக் கொண்டு படுக்கலாமென்று எண்ணி நாற்காலியிலிருந்தபடியே குனிந்து படுக்கையைப் பிரித்தேன். அப்போது யாரோ ஒருவர் அந்த அறைக்குள்ளே வருவது தெரிந்தது. குனிந்தபடியே கடைக்கண்ணால் வருவது யார் என்று கவனித்தேன். அவ்வளவுதான்; என் கைகள் வெட வெட என்று நடுங்கத் தொடங்கின. படுக்கையைக் கட்டியிருந்த தோல் வாரைக் கழற்ற முடியவில்லை. வெளியே எங்கேயோ தூரத்தில் கேட்ட துப்பாக்கி வெடியின் சத்தம் இப்போது என் நெஞ்சுக்குள்ளே வெடிப்பது போல் கேட்டது. சட்டென்று ஒரு பெரு முயற்சி செய்து மனதை திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். உள்ளே வந்த மனிதர் சுவர் ஓரமாகப் பெட்டி படுக்கையை வைத்து விட்டு வந்து எனக்கெதிரே வட்ட மேஜைக் கருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

முதலில் அவர் என்னைப் பார்க்கவில்லை. வெயிட்டிங் ரூமில் வாசல் வழியாகப் பிளாட்பாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு, நான் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை உணர்ந்ததினால் தானோ என்னமோ, என் பக்கமாகப் பார்த்தார். முதலில் அசட்டையாகப் பார்த்தார்; பிறகு உற்றுப் பார்த்தார்.

“ஜே ஹிந்த்!” என்றார். அந்தக் குரலும் வார்த்தைகளும் என் உள்ளத்தில் அடங்கிக் கிடந்த எத்தனையோ உணர்ச்சிகளைப் பொங்கும்படிச் செய்தன. மிகவும் பிரயத்தனப்பட்டு உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிகளையும் கண்களிலே துளிக்கப் பார்த்த கண்ணீரையும் அடக்கிக் கொண்டு கம்மிய குரலில் நானும் “ஜே ஹிந்த்!” என்று வாழ்த்தினேன்.

“தமிழர் போலிருக்கிறது” என்றார்.

“ஆமாம்!” என்றேன்.

“நாம் எங்கேயாவது சந்தித்திருக்கிறோமா? உமது முகம் பார்த்த முகமாய்த் தோன்றுகிறது; ஆனால் எங்கே பார்த்தோமென்று ஞாபகம் வரவில்லை” என்றார்.

அவருக்கு ஞாபகம் வராததற்கு மங்கலான வெளிச்சத்தைத் தவிர வேறு காரணமும் உண்டு என்பதை நான் அறிந்திருந்தேன். பேச்சைத் திருப்ப விரும்பினேன்.

“பர்மா அல்லது மலாயில் பார்த்திருக்கலாம். அந்த குழப்பமான காலத்தில் பார்த்த பதினாயிரம் முகங்களில் எதையென்று ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்?” என்று சொல்லி, மேலே அவர் பேச இடங்கொடாமல், “இந்த இருளடைந்த ஸ்டேஷனிலிருந்து ரயில் எப்போது கிளம்பும், ஏதாவது தெரியுமா?” என்று கேட்டேன்.

“அதுதானே தெரியவில்லை. நீங்கள் எந்தப் பக்கம் போக வேண்டுமோ?”

“பம்பாய்ப் பக்கம் போகிறேன்.”

“நான் டில்லிக்குப் போக வேண்டும்.”

“டில்லிக்கா? நீங்கள் டில்லி செங்கோட்டையில் நடந்த விசாரணையில்…” என்று தயங்கினேன்.

“இல்லை; நான் செங்கோட்டைக் கைதியில்லை. பர்மாவிலிருந்து நேரே வந்தவன், செங்கோட்டையிலிருந்து விடுதலையான ஒரு மனிதரைத் தேடிக் கொண்டு பம்பாய்க்குப் போனேன். அதற்குள்ளே அவர் பம்பாயிலிருந்து கிளம்பிப் போய்விட்டதாகத் தெரிந்தது… உங்களுக்கு மேஜர் ஜெனரல் குமரப்பாவைத் தெரியுமா!” என்று அவர் திடீரெனக் கேட்டார்.

“குமரப்பாவைத் தெரியாமலிருக்க முடியுமா? நேதாஜிக்கு அடுத்தபடியாக ஐ.என்.ஏ. வீரர்களின் பக்தியைக் கவர்ந்த மகாபுருஷர் அல்லவா?”

“ஆமாம்; அந்த மகா புருஷரைத் தேடிக் கொண்டுதான் போகிறேன். எதற்காகத் தெரியுமா?”

“தெரியவில்லையே?” என்று தயங்கிக் கூறினேன்.

அவர் தம்முடைய கால் சட்டையின் பைக்குள்ளே கையை விட்டு ஒரு ரிவால்வரை எடுத்து என் முகத்துக்கு நேரே அதைப் பிடித்தார்.

“இதிலே ஆறு குண்டுகள் இருக்கின்றன. ஆறில் ஐந்து குண்டுகளையாவது குமரப்பாவின் மார்பில் செலுத்துவதற்காகத்தான். ஒன்று, இரண்டு, மூன்று…”

என்னுடைய உள்ளத்தில் அப்போது குமுறி எழுந்த அலைகளை அடக்கிக் கொண்டு, “இது என்ன பேச்சு பேசுகிறீர்கள்? தயவுசெய்து ரிவால்வரைச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள்!” என்றேன்.

அவர் அப்படியே செய்தார். பிறகு இரண்டு கைகளாலும் சிறிது நேரம் முகத்தை மூடிக் கொண்டிருந்தார்.

“ஏதோ ரொம்பவும் மன வேதனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!” என்றேன்.

அவர் தமது முகத்தை மூடியிருந்த கைகளை எடுத்துவிட்டு, “இந்தப் பிரயாணம் தடைப்பட்டதினால் ரொம்பவும் மனத்தளர்ச்சியடைந்து விட்டேன். தயவு செய்து மன்னியுங்கள்” என்றார்.

“ரயில் இன்று இரவு கிளம்பப் போவதில்லை. நம் இருவருக்கும் தூக்கம் வரவும் இல்லை. நீங்கள் உங்கள் அநுபவங்களைச் சொன்னால், நானும் பிற்பாடு என் கதையைச் சொல்கிறேன். இராத்திரி பொழுது போகும்” என்றேன்.

“நீரும் ஐ.என்.ஏ. சகோதரர்; அதிலும் தமிழ் நாட்டாராயிருக்கிறீர். உம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது? ஆனால் கதையை எந்த இடத்தில் ஆரம்பிக்கிறது என்று தான் யோசிக்கிறேன்!”

“சுதந்திரப் படையில் தாங்கள் சேர்ந்ததிலிருந்து ஆரம்பிக்கலாமே?” என்றேன்.

“இல்லை, இல்லை; கதையைச் சொல்வதாயிருந்தால் முதலிலிருந்தே தொடங்குவதுதான் சரி!” என்று சொல்லிவிட்டு, சுவர் ஓரமாகக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த மனிதரைத் திரும்பிப் பார்த்தார்.

“அவர் அசந்து தூங்குகிறார். மேலும் யாரோ வடக்கத்தி மனுஷர் என்று தோன்றுகிறது. நாம் தமிழில் பேசினால் அவருக்கு என்ன தெரியப் போகிறது?” என்றேன்.

இன்னும் கொஞ்சம் தாஜா பண்ணிய பிறகு அவர் தமது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

கர்னல் குமரப்பா

கதாநாயகனுடைய பெயர் டாக்டர் ராகவன். செல்வக் குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய தகப்பனார் ஒரு பிரபல டாக்டர். தமது புதல்வனும் தம்மைப் போல் வைத்தியத் தொழிலில் பிரபலமாக வேண்டுமென்று அவர் விரும்பினார். தந்தையின் விருப்பத்தைப் புதல்வன் வெகு நன்றாக நிறைவேற்றி வைப்பான் என்று தோன்றியது. வைத்தியக் கல்லூரியில் படித்து மிகச் சிறப்பாகத் தேறினான். பிறகு அவன் தமக்கு உதவியாகப் ‘பிராக்டிஸ்’ செய்ய வேண்டுமென்று தந்தை விரும்பினார். ஆனால் பையனுக்கு வைத்திய சாஸ்திரத்தில் ஏற்பட்டிருந்த அபார மோகமானது அதற்கு குறுக்கே நின்றது. “நமது மெடிகல் காலேஜில் இப்போது சொல்லிக் கொடுப்பதெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாலிருந்த வைத்திய சாஸ்திரம். சென்ற பத்து வருஷத்தில் எத்தனையோ அதிசயங்களை மேனாட்டு வைத்திய நிபுணர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நான் அமெரிக்காவுக்குப் போய் அவற்றைக் கற்றுக் கொண்டு வருகிறேன்” என்றான். பிள்ளையின் பிடிவாதமான கோரிக்கைக்குத் தகப்பனாரும் சம்மதிக்க வேண்டியிருந்தது.

ராகவன் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகும் அவன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கக் கூடவில்லை; பெரிய கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சம்பளமில்லாத உதவி ஸர்ஜனாகச் சேர்ந்தான். அவ்விதம் ஆஸ்பத்திரியில் வேலை செய்தால் தான் தன்னுடைய வைத்திய சாஸ்திர அறிவு விசாலித்துப் பரிபூரணம் அடையும் என்று சொன்னான்.

மகனுடைய நோக்கத்தை அறிந்து தகப்பனார் பெருமையடைந்தார். இவன் வெறுமே பணம் சம்பாதிப்பதற்காக வைத்தியம் செய்யப் பிறந்தவன் அல்ல. வைத்திய சாஸ்திரத்தையே விரிவுபடுத்தி மனித வர்க்கத்துக்கு நன்மை செய்யப் பிறந்தவன் என்று தீர்மானித்து அப்படியே செய்ய அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்துச் சில காலத்துக்கெல்லாம் அவர் வைத்தியம் என்பதே தேவையில்லாத மேல் உலகத்துக்குச் சென்றார்.

தந்தையினுடைய சரமக்கிரியைகளைச் சரிவரச் செய்வதற்குக் கூட டாக்டர் ராகவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. அவ்வளவுதூரம் அவன் வைத்தியக்கலை அறிவின் வளர்ச்சியில் முழுகிப் போயிருந்தான். அவன் வேலை செய்த பெரிய ஆஸ்பத்திரியில் அவனுடைய இலாகாவுக்குத் தலைவராயிருந்தவர் கர்னல் குமரப்பா என்பவர். அவர் ஐ.எம்.எஸ். வர்க்கத்தைச் சேர்ந்தவர். சென்ற யுத்தத்தின் போது, போர்க்களத்துக்குப் போய் வந்தவர். பிற்பாடு ஐரோப்பாவுக்குச் சென்று வியன்னா நகரிலும் பெர்லின் நகரிலும் இருந்த பிரபலமான வைத்திய சாலைகளில் கொஞ்ச காலம் இருந்து தமது வைத்தியக் கலை ஞானத்தை வளர்த்துக் கொண்டு திரும்பியிருந்தார். எனவே வைத்திய உலகத்தில் அவருக்கு மிகவும் பிரசித்தமான பெயர் ஏற்பட்டிருந்தது. “யமதர்ம ராஜனுக்கு ஏதாவது ஆப்ரேஷன் பண்ணிக் கொள்ள நேர்ந்தால் அவன் கூடக் கர்னல் குமரப்பாவிடம் வந்துதான் ஆக வேண்டும்” என்று சொல்வார்கள். அத்தகையவர்களின் கீழே வேலை செய்வதால் தன்னுடைய வைத்திய ஞானத்தையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ளலாம் என்று டாக்டர் ராகவன் எண்ணியிருந்தான். ஆனால் இது விஷயத்திலும் சீக்கிரத்திலே ஏமாற்றம் அடைந்தான். கர்னல் குமரப்பா இரண சிகிச்சையில் பெரிய நிபுணராயிருக்கலாம்; ஆனால் அவருக்கு வைத்தியக் கலையில் அவ்வளவு சிரத்தையில்லை என்று தோன்றியது. பல முக்கியமான ரண சிகிச்சை கேஸுகளை அவர் தமக்கு உதவியாக அமர்ந்த டாக்டர்களிடம் விட்டு வந்தார். ஏதாவது சந்தேகம் கேட்டால் சரியாகப் பதில் சொல்வதில்லை. கேள்வியை மனதில் சரியாக வாங்கிக் கொள்ளாமலே எதையோ கேட்பதற்கு எதையோ பதில் சொல்வது வழக்கமாயிருந்தது.

கரனல் குமரப்பா இப்படி மெய்ம்மறந்து எதிலும் சிரத்தையில்லாமல் ஏனோதானோ என்றிருப்பதற்கு ஒரு கெடுதலான காரணத்தைச் சிலர் கற்பித்துச் சமிக்ஞையாகப் பேசினார்கள். முதலில் அதை டாக்டர் ராகவன் கொஞ்சங் கூட நம்பாததோடு அப்படிப் பேசினவர்களைக் கடுமையாகக் கண்டித்தான்.

அந்த விஷயம் பின்வருமாறு: மெடிகல் காலேஜில் படித்துத் தேறியிருந்த டாக்டர் ரேவதி என்ற பெண் சென்ற வருஷத்தில் அந்த ஆஸ்பத்திரியில் ஒரு வருஷப் பயிற்சி பெரும் பொருட்டு, ‘ஹவுஸ் ஸர்ஜனாக’ வந்திருந்தாள். அவள் தேசத் தொண்டில் பிரசித்தி பெற்றிருந்த காலமான ஒரு தேச பக்தரின் மகள். கர்னல் குமரப்பா அந்தப் பெண்ணிடம் அளவுக்கு அதிகமான அபிமானம் காட்டுகிறார் என்று பொறாமைக்காரர்கள் சிலர் புகார் செய்தார்கள். இதைக் குறித்து ஆஸ்பத்திரிக்குள்ளேயும் வெளியேயும் சிலர் ஜாடைமாடையாகப் பேசினார்கள். இந்த மாதிரிப் பேச்சு காதில் விழுந்தபோதெல்லாம் டாக்டர் ராகவன் பளிச்சென்று, “இந்த தேசத்தில் மனதில் அசுத்தம் உள்ளவர்கள் யாரைப் பற்றியாவது ஏதேனும் அவதூறு சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். தங்களுடைய மனதிலுள்ள அசிங்கத்தைப் பிறர் மேல் ஏற்றி வைத்துப் பேசுவார்கள்” என்று வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடுவான்.

காதல் யாத்திரை

எனினும் டாக்டர் ரேவதியின் மேல் கர்னல் குமரப்பாவின் விசேஷ அபிமானத்தைப் பற்றிக் கேட்ட பிறகு அவனுடைய கவனம் டாக்டர் ரேவதியின் மீது அதிகமாகச் செல்ல ஆரம்பித்தது. இது ரேவதியின் கவனத்தையும் கவர்ந்தது. முதல் தடவை பேசின உடனேயே ரேவதிக்கும் ராகவனுக்கும் சிநேகப் பான்மை ஏற்பட்டுவிட்டது. இதைக் ‘காதல்’ என்று யாராவது சொல்லியிருந்தால் சுத்த பைத்தியக்காரத்தனம் என்றுதான் டாக்டர் ராகவன் சொல்லியிருப்பான். ஆயினும் வரவர, காவியங்களிலே காதல் என்பதற்கு என்னென்ன இலட்சணங்கள் கூறப்பட்டிருக்கின்றனவோ, அவையெல்லாம் ராகவன் – ரேவதியினுடைய நடவடிக்கைகளில் காணப்படலாயின. ஏதாவது ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஒருவரையொருவர் அடிக்கடி சந்திக்கப் பிரயத்தனப் பட்டார்கள். ஒருவருடைய பேச்சு இன்னொருவருடைய காதுக்கு மிகவும் இனிமையளித்தது. தங்களை அறியாமலேயே ஒருவருடைய கண்கள் இன்னொருவருடைய கண்களை நாடிச் சென்றன்.

அதோடு நின்றுவிடவில்லை. சில நாளைக்கெல்லாம் டாக்டர் ராகவனுடைய மனதில் பொறாமை என்னும் தீ பற்றி எரியத் தொடங்கியது. டாக்டர் ரேவதி வேறு எந்த ஆண் டாக்டரோடாவது நெருங்கிப் பேசுவதைப் பார்த்தால் ராகவனுக்குக் கோபம் வந்தது. எந்த ஆண் நோயாளியிடமாவது ரேவதி சிரத்தை எடுத்துக் கவனித்தாலும் கூட ராகவனுக்குப் பொறுக்க முடியவில்லை.

இந்த நிலையில் டாக்டர் குமரப்பாவையும், ரேவதியையும் பற்றிய வம்புகள் பேச்சுக்கள் ராகவனுடைய நினைவுக்கு அடிக்கடி வந்து உறுத்தத் தொடங்கின. அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கலாமென்று அவன் மனம் யோசனை செய்யத் தொடங்கியது. டாக்டர் குமரப்பாவைத் தனிமையாக அவருடைய அறையில் பார்த்துவிட்டு ரேவதி திரும்பும் போது, ராகவன் அவளைக் கவனமாகப் பார்க்கத் தொடங்கினான். அப்போதெல்லாம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக படபடப்புடன் அவள் வருவதையும் சில சமயம் அவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்திருப்பதையும் பார்த்த போது அவனுடைய உள்ளம் கொதித்தது. ரேவதியை இதைப் பற்றிக் கேட்டே விடுவது என்று அவன் முடிவாகத் தீர்மானித்திருந்த சமயத்தில் ஒரு நாள் அவனிடம் வந்து, “டாக்டர், நான் பெரிய அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தங்களுடைய யோசனையும் உதவியும் எனக்கு வேண்டும்” என்று பரபரப்புடன் கூறினாள். அன்று மாலை ஆஸ்பத்திரி வேலை முடிந்தவுடன் தன்னுடைய வீட்டுக்கு வந்து சந்திக்கும்படி சொன்னான் ராகவன். அப்படியே அன்றிரவு ரேவதி ராகவனுடைய வீட்டுக்குச் சென்று தன் வாழ்க்கை வரலாற்றைக் கூறினாள். வாழ்நாளெல்லாம் தேசத் தொண்டு செய்த தன் தந்தை எப்படி பூர்வீக பிதிரார்ஜித சொத்தையெல்லாம் செலவழித்து விட்டுக் குடும்பத்தை நிராதரவாய் விட்டு விட்டுக் காலமானார் என்பதையும், தன்னைத் தக்க இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்கத் தன் தாயார் செய்த பிரயத்தனங்கள் எப்படிப் பலனளிக்காமல் போயின என்பதையும், தன்னுடைய சொந்த முயற்சியால் அநாதைப் பெண்கள் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து தேறி மெடிகல் காலேஜிலும் சேர்ந்து படித்து டாக்டர் ஆனதையும் பற்றித் தெரிவித்தாள். கர்னல் குமரப்பா முதலில் தன்னிடம் காட்டிய அன்பைக் குறித்துப் பெருமையடைந்து வந்ததையும், மற்றவர்களின் அவதூறான ஜாடைமாடைப் பேச்சுக்களை அலட்சியம் செய்து வந்தது பற்றியும் குறிப்பிட்டாள். கடைசியாக ரேவதி சொன்னாள்: “டாக்டர் ராகவன்! கொஞ்ச நாளாக எனக்கே இது விஷயத்தில் சந்தேகம் உண்டாயிருந்தது. கர்னலின் நடை உடை பாவனைகள் அவ்வளவு நன்றாயில்லை. அவரை நான் தனியாக அவருடைய அறையில் சந்திக்க நேரும் போதெல்லாம் என் முதுகில் தட்டிக் கொடுத்தும் கன்னங்களைத் தொட்டும் முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டும் “ரேவதி! உன்னைத் தான் நான் முழுக்க முழுக்க நம்பியிருக்கிறேன். ஒரு சமயம் வரும்; அப்போது என்னை நீ நம்பி நான் சொன்னபடி கேட்க வேண்டும்; கேட்பாயல்லவா?” என்று இவ்விதமெல்லாம் சொல்கிறார். இன்றைக்கு அவர், ‘ரேவதி நான் மறுபடியும் வெளிநாட்டுப் பிரயாணம் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன், என்னோடு நீ கிளம்பி வருகிறாயா?’ என்று கேட்டபோது எனக்கு ஆத்திரம் உண்டாகி என் கண்களில் கண்ணீரும் வந்துவிட்டது. அதைப் பார்த்த கர்னல், ‘ஆ! நீ ரொம்ப நல்ல பெண்ணாயிருந்தாய்! உன்னிடம் நான் எவ்வளவோ எதிர்பார்த்தேன். என்னுடைய காரியத்துக்குக் கைகொடுப்பாய் என்று நம்பியிருந்தேன்; அந்த மூடன் ராகவன் உன் மனதைக் கெடுத்து விட்டான்!’ என்றார். பிறகு அங்கே நிற்க முடியாமல் விரைந்து வந்துவிட்டேன்!”

இவ்விதம் ரேவதி கூறியதைக் கேட்டு கொண்டிருந்த ராகவன் சிறிதுநேரம் மௌனமாக ஆலோசனையில் இருந்தான். பிறகு, “என் அருமை ரேவதி! ஒரு விஷயம் கேட்கிறேன். அதற்குச் சங்கோசப்படாமல் பதில் சொல்ல வேண்டும். கர்னல் குமரப்பா மனைவியை இழந்தவர் என்பது உனக்குத் தெரியும். ஒரு வேளை உன்னை இரண்டாந்தாரமாக கல்யாணம் செய்துகொள்ள அவர் விரும்பலாம் அல்லவா?” என்றேன்.

“அந்தச் சந்தேகம் என் மனதிலும் சில சமயம் தோன்றியதுண்டு” என்று ரேவதி சொன்னாள்.

“அப்படியானால் அதைப்பற்றி உனக்கு என்ன ஆட்சேபம்? கர்னல் குமரப்பாவை மணந்து கொள்ளும் பாக்கியம் தள்ளக்கூடியதல்லவே?” என்ற கூறி, ரேவதியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தான் ராகவன்.

“ஒருவேளை மூன்று மாதத்துக்கு முன்னால் அவர் கேட்டிருந்தால் அதில் எனக்கு ஆட்சேபமிருந்திராது. இப்போது ஆட்சேபமிருக்கிறது” என்றாள் ரேவதி.

“அது ஏன்? மூன்று மாதத்திற்குள் அதற்கு விரோதமாக என்ன காரணம் ஏற்பட்டிருக்கிறது?”

“தங்களுடன் சிநேகம் செய்து கொண்டது தான்!” என்று ரேவதி கூறியபோது, என்னதான் அவள் கல்வியும் நாகரிகமும் படைத்த நவயுகப் பெண் ஆனாலும் கொஞ்சம் தலை குனியத்தான் செய்தாள்.

ரேவதி இவ்விதம் தன் மனோநிலையை ஒருவாறு குறிப்பிட்ட பிறகு, பரஸ்பரம் இருவரும் தத்தம் இருதயத்தை நன்றாய்த் திறந்து காட்டுவதற்கு வழி ஏற்பட்டது. ராகவனுடையை வாழ்க்கையோடு தன்னுடைய வாழ்க்கையை என்றென்றைக்கும் பிணைத்துக் கொள்ளவும், அவனுக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யவும் ரேவதி சித்தமாயிருந்தாள் என்று ஏற்பட்டது. ராகவனோ ரேவதியின் கடைக்கண் பார்வைக்காக, பாரதியார் வாக்கின் பிரகாரம் நூற்றிரண்டு மலைகளைப் பொடிப் பொடியாக்கவும் காற்றிலேறி விண்ணைப் பிளக்கவும் தயாராயிருந்தான்.

கடைசியில் ராகவன் சொன்னான்:-“என் கண்ணே! பொறாமையும், பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த இந்த தேசமே எனக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் வழியில் நான் மலாய் நாட்டில் இறங்கிச் சில நாள் தங்கியிருந்தேன். பூலோகத்தில் சொர்க்கம் உண்டு என்று சொன்னால் அது மலாய் நாடுதான். அந்த நாட்டுக்கு நாம் போய் விடலாம், வருகிறாயா?”

மேற்படி யோசனையை மறு பேச்சின்றி ரேவதி ஒப்புக் கொண்டாள். தீர்மானம் செய்த ஒரு மாதத்துக்கெல்லாம் இருவரும் கப்பலேறி மலாய் நாட்டை அடைந்தார்கள். கோலாலம்பூரில் ஜாகை ஏற்படுத்திக் கொண்டு வைத்தியத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்றரை வருஷ காலம் அவர்களுடைய வாழ்க்கை உண்மையில் சொர்க்க வாழ்க்கையாகவே இருந்து வந்தது.

நேதாஜி விஜயம்

நிர்மலமான நீல வானத்திலிருந்து திடீரென்று இடி விழுந்தது போல், ஒரு நாள் ஜப்பான் அமெரிக்காவைத் தாக்கி யுத்தம் தொடங்கிய செய்தி வந்தது. அதன் பலனாகப் பிரிட்டன் ஜப்பான் மீது போர் தொடங்கியது. சிங்கப்பூரில் இரண்டு பிரமாண்டமான பிரிட்டிஷ் யுத்தக் கப்பல்கள் ஜப்பான் ஆகாச விமானிகளால் தாக்குண்டு கடலுக்கடியில் சென்றன. சில நாளைக்கெல்லாம் மலாய் நாட்டின் மீது ஜப்பானின் படையெடுப்புத் தொடர்ந்தது. சரித்திரத்திலேயே இல்லாத மிகவும் சொற்ப காலத்தில் மலாய் நாடு ஜப்பானுடைய வசமாயிற்று. அப்போதெல்லாம் ராகவனும் ரேவதியும் ஒரே பீதியிலும், கவலையிலும் ஆழ்ந்திருந்தார்கள். ஜப்பானியக் கொலைகாரர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் பயங்கர விபரீதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தலைவெட்டி ராஜாங்கத்தில் எந்த நிமிஷம் யாருடைய தலைக்கு ஆபத்துவருமோ, யார் கண்டது? சாக நேர்ந்தால் இருவரும் கை கோர்த்துக் கொண்டு சாக வேண்டுமென்று அவர்கள் திட சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்கள். இப்படிச் சில மாத காலம் சென்றது. பிறகு அந்த மகத்தான சம்பவம் உலக சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கூடிய சம்பவம் ஏற்பட்டது. ஸ்ரீ சுபாஷ் சந்திரபோஸ் மலாய் நாட்டுக்கு வந்து சுதந்திர இந்திய அரசாங்கத்தை ஸ்தாபித்தார். அவருடைய அரசாங்கம் ஆட்சி புரிவதற்கு அப்போது ஒரு சாண் அகல பூமி இல்லாவிட்டாலும், மலாய் நாட்டிலுள்ள இந்தியர்கள் எல்லோரும் தாங்கள் சுதந்திர இந்திய அரசாங்கத்தின் கீழ் வாழ்கிறோம் என்ற உணர்ச்சி பெற்றார்கள். அவர்களுடைய தோள்கள் பூரித்து உயர்ந்தன. அவர்கள் மார்புகள் விசாலித்து நிமிர்ந்தன. இதற்கு முன் எக்காலத்திலும் அறிந்திராத பெருமித உற்சாகமும் குதூகலமும் அவர்களுடைய உள்ளத்தில் பொங்கித் ததும்பின.

நேதாஜியின் சுதந்திர இந்திய அரசாங்கத்தைப் பல தேசத்து அரசாங்கங்கள் அங்கீகரித்தன. அதற்கு முன்னால் இந்தியர்களைப் புழுக்களைப் போல் மதித்து நடத்திய ஜப்பானியர், நேதாஜியின் வருகைக்குப் பிறகு இந்தியரிடம் மிக்க மரியாதை காட்டத் தொடங்கினார்கள். இந்தியரின் உயிருக்கும், சொத்து சுதந்திரங்களுக்கும் தக்க பாதுகாப்பு ஏற்பட்டது.

நேதாஜியின் நோக்கம் என்னவென்பது சீக்கிரத்திலேயே தெரிய வந்தது. இந்திய சுதந்திர சைன்யம் ஒன்றை அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குப் படையெடுத்துச் சென்று பிரிட்டிஷாரைத் துரத்தி விட்டு புது தில்லியில் பூரண சுதந்திரக் கொடியை உயர்த்துவது தான் அவருடைய உத்தேசம் என்று தெரிந்தது. இந்த எண்ணத்துடன் நேதாஜி இந்திய சுதந்திரப் படை திரட்டத் தொடங்கினார். அதுவரையில் எச்சிற் கையினால் காக்கை ஓட்டாத லோபிகளாயிருந்தவர்கள் உள்பட மலாயிலும் பர்மாவிலும் வாழ்ந்த இந்தியர்கள் பதினாயிரம், லட்சம் என்ற கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். கனவிலே கூடப் போர்க்களம் செல்வது பற்றி எண்ணி அறியாதவர்கள் நேதாஜியின் சுதந்திரப் படையில் சேரத் தொடங்கினார்கள். அப்படி சுதந்திரப் படையில் முதன் முதலில் சேர்ந்தவர்களில் டாக்டர் ராகவனும், டாக்டர் ரேவதியும் இருந்தனர். தங்கள் மூலமாகப் பாரதத் தாயின் விடுதலை நடைபெற வேண்டியிருக்கிறதென்றும், அதனாலேதான் தங்களைக் கடவுள் மலாய் நாட்டில் கொண்டு வந்து சேர்த்தார் என்றும் இப்போது அந்தத் தம்பதிகள் பூரணமாக நம்பினார்கள். மலாயிலிருந்து பர்மாவுக்குப் போன முதல் கோஷ்டியோடு புறப்பட்டுச் சென்றார்கள்.

சில தினங்களுக்கெல்லாம் ரங்கூனிலிருந்து இந்திய சுதந்திரப் படையானது ‘ஜே ஹிந்த்!’ ‘டில்லி சலோ!’ என்று வானளாவக் கோஷமிட்டுக் கொண்டும்,

“கதம் கதம் படாயே ஜா குஷீகே கீத காயே ஜா”

என்னும் சுதந்திரப் போர் கீதத்துடனும் அஸ்ஸாம் எல்லைப் புறத்தை நோக்கிக் கிளம்பியது. கிளம்பிய போது அந்தப் படையைச் சேர்ந்தவர்களின் உற்சாகத்துக்கு அளவே கிடையாது. நேதாஜி நேரில் வந்திருந்து அவர்கள் புறப்படும் போது பேசிய பேச்சு மரக்கட்டைக்குக் கூடச் சுதந்திர வீர உணர்ச்சியை ஊட்டக் கூடியதாயிருந்தது. அப்படியிருக்க, ஏற்கனவே தாய் நாட்டின் விடுதலைக்காக உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்யச் சித்தமாயிருந்தவர்களைப் பற்றிக் கேட்பானேன்? புது டில்லியில் சுதந்திரக் கொடியை உயர்த்தி நேதாஜியை இந்தியக் குடியரசின் முதல் அக்கிராசனராகச் செய்யும் வகையில் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லையென்று பிரக்ஞை செய்து கொண்டு அவ்வீரர்கள் கிளம்பினார்கள். அத்தகைய சுதந்திர ஆவேச வெறி டாக்டர் ராகவனையும் கொள்ளை கொண்டிருந்தது. ஆயினும் அவனுடைய உற்சாகத்தை ஓரளவு குறைப்பதற்குரிய இரு காரணங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று ரேவதியைப் பிரிந்து போக வேண்டியிருக்கிறதே என்பது. ஏனெனில் ரேவதி சேர்ந்திருந்த பெண்கள் படை போர் முனைக்கு உடனே அனுப்பப்படவில்லை. இவ்விதம் ஒருவரையொருவர் பிரிய நேர்ந்தது அவர்கள் இருவருக்குமே மனவேதனையை அளித்தது. என்றாலும், அவர்கள் ஈடுபட்டிருந்த மகத்தான இலட்சியத்தை முன்னிட்டு ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு பிரியத் தயார் ஆனார்கள். மறுபடியும் சந்தித்தால் சுதந்திரப் பாரத தேசத்தில் சந்திப்பது, இல்லாவிடில் வீர சொர்க்கத்தில் சந்திப்பது என்று ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பிரிந்தார்கள்.

ரேவதியின் பிரிவினால் ஏற்பட்ட மனச் சோர்வை ஒருவாறு ராகவன் சமாளித்துக் கொண்டான். ஆனால் வேறொரு காரணத்தினால் மனதில் ஏற்பட்ட சங்கடம் அவ்வளவு சுலபமாக சமாளிக்கக் கூடியதாயில்லை. அந்தக் காரணம் ராகவன் சேர்ந்திருந்த சுதந்திரப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் குமரப்பா என்பதுதான்!

முதலில் இந்த உண்மை தெரிந்ததும் ராகவன் ஆச்சரியத்தினால் திகைத்துப் போனான். விசாரித்து அவர் எப்படி இந்திய சுதந்திரப் படையில் மேஜர் ஜெனரல் ஆனார் என்பதைத் தெரிந்து கொண்டான். பர்மாவை ஜப்பானியரிடமிருந்து பாதுகாப்பதற்காக முதன் முதலில் ரங்கூனுக்கு வந்த மதராஸிப் படையில் ஐ.எம்.எஸ்.டாக்டர் என்ற முறையில் அவர் வந்து சேர்ந்த சில நாளைக்குள்ளே ஜப்பானியரால் நாற்புறமும் சூழப்பட்டு சரணாகதி அடைய நேர்ந்தது. சரணாகதி அடைந்தவர்கள் எல்லோரும் முதலில் சிறையில் வைக்கப் பட்டிருந்தார்கள். பிறகு, அவர்களிலே நேதாஜியின் சுதந்திரப் படையில் சேர இசைந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படி விடுதலையானவர்களில் கர்னல் குமரப்பாவும் ஒருவர். நேதாஜியின், விசேஷ அபிமானத்துக்கு அவர் சீக்கிரத்தில் பாத்திரராகி சைன்யத்தின் டாக்டராக இருப்பதற்குப் பதிலாக மேஜர் ஜெனரல் என்ற பட்டத்துடனே ஒரு பெரிய சைன்யப் பகுதிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையெல்லாம் அறிந்த பிறகு ராகவனுடைய ஆச்சரியம் நீங்கிற்று. ஆனால் மனதில் ஒருவித திகில் மட்டும் இருந்து கொண்டிருந்தது. மேலும் ஜெனரல் குமரப்பா நமது கதாநாயகன் ராகவனை ஏற்கனவே தெரிந்தவர் என்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. இது ராகவனுடைய மன அமைதி குலைவதற்கு பெரிதும் காரணமாயிருந்தது.

கிராதகன் உள்ளம்

வழிப் பிரயாணத்தில் நேர்ந்த சகிக்க முடியாத கஷ்டங்களையெல்லாம் உள்ளத்தின் உறுதியினால் சகித்துக் கொண்டு ராகவனுடைய படை காட்டுப் பாதைகளிலும், மலை வழிகளிலும் பல நூறு மைல் தூரம் பிரயாணம் செய்து கிட்டத்தட்ட அஸ்ஸாமின் எல்லைப் புறத்தை அடைந்தது. அந்த வீர சுதந்திரப் படைக்கு அங்கே ஒரு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அந்தப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் அதற்குள்ளாக புது டில்லியை அடையப் போகிறோம் என்ற எண்ணத்தை விட்டு விட்டான். இந்தியாவின் எல்லைக்குள்ளே அடியெடுத்து வைத்து இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும் நேதாஜிக்காகவும் ஒரு துப்பாக்கி வேட்டாவது தீர்த்து விட்டு சாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டான். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது கூட முடியாத காரியம் என்று தெரிய வந்தது.

அவர்களுக்கு முன்னால் வந்திருந்த இந்திய சுதந்திர சேனையின் வீரர்கள் ஏற்கெனவே இந்தியாவின் எல்லைக்குள்ளே பிரவேசித்து இம்பால் போர் முனையில் மகத்தான வீரப் போர் புரிந்தார்கள். அவர்களுக்குள்ளே எத்தனையோ அரவான்களும் அபிமன்யுக்களும் இணையில்லாத தீரத்தைக் காட்டினார்கள். உயிரைத் திரணமாக எண்ணிப் பத்து பிரிட்டிஷ் வீரருக்கு ஒரு சுதந்திர வீரர் வீதம் சில இடங்களில் நின்று சண்டையிட்டார்கள். ஆனாலும் என்ன பிரயோஜனம்? காந்தி மகானின் அஹிம்ஸா மார்க்கத்திலேயே பாரததேசம் சாத்வீக சுதந்திரத்தை அடைய வேண்டும் என்று இருக்கும் போது, அவர்களுடைய முயற்சி எவ்விதம் பலிதமடையும்?

பிரிட்டிஷ் ஆட்சிக்குத் துணையாக அமெரிக்க ஆகாச விமானங்கள் ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்தன. இந்திய சுதந்திர வீரர்களுக்கும், ஜப்பானிய வீரர்களுக்கும் துணையாகப் போதிய ஜப்பானிய ஆகாச விமானங்கள் வந்து சேரவில்லை. சின்னஞ்சிறு ஜப்பான் தன்னுடைய சக்திக்கு மேலே காலை அகட்டி வைத்துவிட்டது! நாலாபுறமும் சூழ்ந்து தாக்கிய எதிரிகளுக்கு ஈடு கொடுக்க அதனால் முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் பிரவேசித்த ஜப்பானிய வீரர்களும் சுதந்திர இந்திய வீரர்களும் பெரும்பாலும் அங்கேயே உயிர் துறக்க நேர்ந்தது. ஒரு சிலர் இந்தியாவின் எல்லையை மறுபடியும் பின்புறமாகக் கடந்து பர்மாவில் பிரவேசிக்க வேண்டியதாயிற்று. இப்படியாக முன்னணியில் சென்றிருந்த படையில் இறந்தவர்கள் போக மற்றவர்கள் பின் வாங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் காப்டன் ராகவனுடைய படை இந்தியாவின் எல்லைக்குச் சமீபத்தில் வந்து தங்கியது. சைனியம் தங்கிய இடம் காட்டுப் பிரதேசம்; கையோடு கொண்டு வந்திருந்த உணவுப் பொருள் வெகு சீக்கிரம் கரைந்து போய்க் கொண்டிருந்தது. அந்தச் சைனியத்திலிருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் முன்னால் போகப் போகிறோமா, பின்னால் போகப் போகிறோமோ என்று தெரியாமல் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

டாக்டர் ராகவனும் அதே மனோநிலையிலேதான் இருந்தான்.

ரங்கூன் வீதிகளில் இந்திய சுதந்திரப் படை அணிவகுத்துச் சென்ற போது இரு புறமும் சமுத்திரம் போல் நின்ற ஜனங்கள் – பர்மியர்களும் இந்தியர்களும் – எவ்வளவு உற்சாகம் காட்டினார்கள்! எப்படி பூமாரி பொழிந்து வாழ்த்துக் கூறி வழி அனுப்பினார்கள்!

புது டில்லிக்குப் போய்க் கொடி ஏற்றுவதற்குப் பதிலாகத் திரும்பவும் ரங்கூனுக்கே போய்ச் சேர்ந்தால், அந்த ஜனங்கள் எப்படி நம்மை வரவேற்பார்கள்?

நல்லது; ரேவதிதான் என்ன சொல்வாள்?… ஆகா! சுதந்திர முழக்கத்துடன் கிளம்பிய இந்திய சுதந்திர படை இத்தகைய முடிவுக்கு ஆளானதைக் கேட்டால் அவள் மனம் எப்படித் துடிக்கும்? அவள் இப்போது எங்கே இருக்கிறாளோ? நேற்றுப் புதிதாக வந்திருப்பதாகச் சொன்னார்களே, அந்தப் பெண்கள் படையில் ஒருவேளை அவள் இருப்பாளோ? அவளையாவது சந்திக்க முடிந்தால் இந்த மனோ வேதனைக்கு ஒரு மாற்றாக இருக்கும்.

இப்படிப்பட்ட சிந்தனைகளில் காப்டன் ராகவன் ஆழ்ந்திருந்த சமயம், மேஜர் ஜெனரல் அவனைக் கூப்பிடுவதாகச் செய்தி வந்தது. “எதற்காகக் கூப்பிடுகிறார்?” என்ற அதிசயத்துடன் ராகவன் குமரப்பாவிடம் சென்றான்.

காப்டன் ராகவனை அவர் ஏற இறங்கப் பார்த்தார். பிறகு, “காப்டன்! உம்மிடம் மிக முக்கியமான ஒரு வேலையை ஒப்புவிக்கப் போகிறேன்” என்றார்.

ராகவன் கம்பீரமாக “மிக்க வந்தனம், ஜெனரல்! என் உயிரைக் கொடுத்தாவது கட்டளையை நிறைவேற்றுவேன்!” என்று சொன்னான். ஆனால், அவன் மனதிற்குள் ஏனோ திக்திக் என்றது.

“உயிரைக் கொடுக்கிறேன் என்று சொல்வதில் பயனில்லை. இந்தியாவின் வருங்காலத்தையே உம்மிடம் ஒப்புவிக்கப் போகிறேன். ஒரு கடிதம் கொடுப்பேன். அதைக் கொண்டு போய் பத்திரமாய்ச் சேர்க்க வேண்டும். வழியில் உயிருக்கு அபாயத்தைத் தேடிக் கொள்வது துரோகம் செய்வதாகும்.”

“கடிதம் யாருக்கு?” என்று ராகவன் கேட்டபோது அவனுடைய குரல் தழதழத்தது.

“வேறு யாருக்கு? நமது மகோந்நத தலைவருக்குத்தான். தற்சமயம் நேதாஜி அந்தமான் தீவில் இருக்கிறார். ஆகாச விமானத்தில் போய்க் கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் பதிலும் வாங்கிவரவேண்டும்.

சற்று முன்னால் ராகவன் மனதில் குடிகொண்டிருந்த பயமெல்லாம் பறந்தது. குமரப்பாவிடம் சொல்ல முடியாத நன்றி அவனுடைய உள்ளத்தில் ததும்பியது.

“ரொம்ப வந்தனம்! இதோ புறப்படத் தயார்!” என்று எக்களிப்புடன் சொன்னான்.

“ஆனால் இந்த முக்கியமான கடிதத்தை அவ்வளவு சுலபமாக உம்மிடம் ஒப்புவிக்க முடியாது. அதற்கு முன்னால் உமக்கு ஒரு சோதனை இருக்கிறது. அதில் நீர் தேறியாக வேண்டும்.”

சிறிது நேரம் ராகவனுடைய மனதைவிட்டு அகன்றிருந்த சந்தேகங்கள், பயங்கள் எல்லாம் திரும்பவும் அதி விரைவாக வந்து புகுந்தன. “என்ன சோதனை?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டான். “நாலு நாளைக்கு முன்பு இங்கு வந்து சேர்ந்த படையில் ஒருவர் மீது பிரிட்டிஷ் ஒற்றர் என்ற சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்ததில் அது நிச்சயமாயிற்று. நமக்குள்ளேயிருந்து கொண்டு ஒற்று வேலை பார்ப்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமல்லவா?”

“தெரியும்! மரணதண்டனை!”

“அந்த தண்டனையை நீர் நிறைவேற்ற வேண்டும்.”

ராகவன் மனதில் பெரும் திகில் உண்டாயிற்று. மேலே எதுவும் பேச முடியாமல் நின்றான்.

“ஒற்று வேலை பார்த்தது ஒரு பெண்; அவள் உமக்கு அறிமுகமுள்ள பெண்தான்!”

ராகவனுக்கு இப்போது எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அவள் ரேவதியாகத்தான் இருக்க வேண்டும்; சந்தேகமில்லை. ஆ! இந்தக் கொடிய கிராதகன் இந்த முறையில் இருவர் மேலும் பழி தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறான். இத்தனை நாள் ஒன்றுமே வெளியில் காட்டிக் கொள்ளாமல் வேஷம் போட்டதெல்லாம் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத்தான்.

ராகவன் ஒரு நிமிஷ நேரம் யோசனை செய்தான். படைத் தலைவர்களின் கட்டளைகளை மறுவார்த்தை பேசாமல் நிறைவேற்றுவதாகச் செய்து கொடுத்த பிரதிக்ஞையை ஞாபகப் படுத்திக் கொண்டான். அதை நிறைவேற்றிவிட்டு, நேதாஜியையும் கடைசி முறையாகத் தரிசித்துவிட்டுப் பிறகு தன் சொந்தப் பழியைத் தீர்த்துக் கொள்வதென்று முடிவு செய்தான்.

“என்ன யோசனை செய்கிறீர்? ஒப்புக் கொள்கிறீரா இல்லையா?” என்று அதிகாரக் குரலில் கேள்வி வந்தது.

“கட்டளையை நிறைவேற்றுகிறேன்!” என்று ராகவன் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

“ரொம்ப சரி! இதோ துப்பாக்கி! இதில் ஐந்து குண்டு இருக்கிறது; ஐந்தையும் தீர்த்து விட வேண்டும்; ஒரு வேளை கை நடுக்கத்தினால் குறி தவற இடமிருக்கக் கூடாதல்லவா?”

இவ்விதம் சொல்லிக் கொண்டே குமரப்பா மேஜை மேல் கிடந்த துப்பாக்கியை எடுத்து நீட்டினார். ராகவன் அதற்குள் மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தான். சிறிதும் கை நடுக்கமின்றித் துப்பாக்கியை வாங்கிக் கொண்டான்.

காப்டன் ரேவதியின் கண்ணைக் கட்டி ஒரு பாறையின் பக்கத்தில் நிறுத்தியிருந்தார்கள்.

ராகவனும் அவளுக்கு எதிரில் முப்பது அடி தூரத்தில் நின்று கொண்டான். துப்பாக்கியை குறி பார்த்துவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டான். விசையை இழுத்தான்.

ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து!

ஐந்து வெடியும் ராகவனுடைய தலையின் உச்சியில் ஐந்து இடி விழுந்தது போல் வெடித்தன.

அவனுடைய தலை சுழன்றது. மறுபடியும் ஒரு பெரு முயற்சி செய்து சமாளித்துக் கொண்டான். கண்ணைத் திறந்து பார்த்த போது ஏற்கெனவே ரேவதி நின்ற பாறை ஓரத்தில் புகை சூழ்ந்திருப்பதைக் கண்டான். அந்தப் புகையினிடையே தரையில் ஓர் உருவம் கிடந்தது!

அங்கிருந்து காப்டன் ராகவனை மிக அவசரமாக விமானக் கூடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

அதன்பிறகு அவன் குமரப்பாவைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கடிதம் அவனிடம் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. விமானம் தயாராய் நின்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அதில் ஏறுவதற்கு யத்தனித்த சமயத்தில் ராகவனுடைய நண்பன் ஒருவன் வந்து அவன் காதோடு ஒரு செய்தியைச் சொன்னான். அதை அவனால் நம்ப முடியவில்லை. “ஆஹா! ஏன் பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்? ஏன் புண்பட்ட நெஞ்சில் வேலை எடுத்துக் குத்துகிறாய்?” என்று கேட்டான். “இல்லை, ராகவன்! நான் உன்னை ஏமாற்றவில்லை. நான் சொன்னது சத்தியம்” என்றான் நண்பன். மேலே பேசுவதற்கு அவகாசம் இல்லை. விமானத்தின் காற்றாடிச் சிறகுகள் சுழலத் தொடங்கின.

விமானம் மறைந்தது

அந்தமான் தீவில் சென்று விமானம் இறங்கியதும் நேதாஜியைத் தேடிக் கொண்டு ராகவன் அதிக தூரம் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் அவன் இறங்கிய விமானகூடத்தின் பக்கத்திலேயே நேதாஜியும் இருந்தார். அவரைச் சுற்றி இந்திய சுதந்திர சர்க்காரின் மந்திரிகள் சிலரும், மற்றவர்களும் இருந்தார்கள்.

அவர்களைப் பார்த்தால் ஏதோ ஒரு மிக முக்கியமான முடிவுக்கு வந்தவர்களைப் போலத் தோன்றியது. எல்லோருடைய முகத்திலும் சோகக் குறி காணப்பட்டது.

சில மாதத்துக்கு முன்பு வீரலக்ஷ்மி தாண்டவமாடிய நேதாஜியின் பூரண சந்திரனையொத்த முகத்தை சோகக் கிரகணம் பிடித்திருந்தது.

காப்டன் ராகவன் தான் கொண்டு வந்த கடிதத்தை நேதாஜியிடம் கொடுத்தான். நேதாஜி அதைப் படித்தபோது அவருடைய சோகச் சாயை படர்ந்த சௌந்தர்ய வதனத்தில் புன்சிரிப்பின் ரேகை காணப்பட்டது.

படித்து முடித்ததும் அவர் சொன்னார்…”ஆகா! எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள். ‘நாங்கள் உயிரை விட்டு விடுகிறோம்; நீ மட்டும் எப்படியாவது தப்பிப் பிழைத்து உயிரோடிருக்க வேண்டும்’ என்கிறார்கள். ‘பாரதத் தாயின் விடுதலைக்காக’ என்று சேர்த்துக் கொண்டு சொல்கிறார்கள்… காப்டன் ராகவன்! நீ திரும்பிப் போக வேண்டிய அவசியமில்லை. உன்னுடைய ஜெனரலுக்கு முன்னமே நான் கடிதம் அனுப்பி விட்டேன். உன்னைப் பற்றி குமரப்பா ரொம்பப் பாராட்டியிருக்கிறார். அவருடைய சிபாரிசின் படி உனக்கு லெப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கிறேன், ஜே ஹிந்த்!” என்றார்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் “ஜே ஹிந்த்!” என்று முழங்கினார்கள்.

“நண்பர்களே! சுதந்திர இந்தியாவின் சேனாதிபதி பதவியிலிருந்து நான் செய்த கடைசி காரியம் இதுவாக இருக்கலாம்.” என்று நேதாஜி சொன்னபோது சுற்றி இருந்தவர்களில் ஒருவர் குறுக்கிட்டு, “இல்லை, நேதாஜி இல்லை; ஒரு நாளும் இல்லை, பாரத பூமியில் புது டில்லியில் தாங்கள் சுதந்திர இந்திய சைதன்யத்தின் மாபெரும் சேனாதிபதியாக விளங்கும் காலம் கட்டாயம் வரும்!” என்றார்.

“உங்களுடைய வாக்கு பலிக்கட்டும்! நண்பர்களே! இப்போதைக்கு நான் விடைபெற்றுக் கொள்கிறேன். நான் எங்கே போனாலும் என்ன செய்தாலும் உங்களையெல்லாம் மறக்க மாட்டேன். வருங்கால வேலையைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்ததும் ரேடியோ மூலம் தெரிவிப்பேன். பாங்காங்கிலிருந்தோ, டோ க்கியோவிலிருந்தோ, வேறிடத்திலிருந்தோ பேசுவேன். எல்லோரும் அந்தச் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள், அதன்படி செய்யுங்கள்.”

“அப்படியே செய்வோம் நேதாஜி! ரேடியோவில் தங்களுடைய வீர கர்ஜனைக் குரல் எப்போது கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.”

நேதாஜி கம்பீரமாக நடந்து சென்று தயாராய்க் காத்திருந்த ஆகாச விமானத்தில் ஏறிக் கொண்டார். விமானத்தின் இறகுகள் சடசடவென்று சுழன்றன. விமானம் முதலில் விர்ரென்று ஏறத் தொடங்கியது. சுற்றிச் சுற்றி வந்து மேலே மேலே மேலே சென்றது. விமானம் வானத்தில் ஒரு சிறிய கரும்புள்ளியைப் போல் ஆகும் வரையில் எல்லோரும் மேலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கர்னல் ராகவனும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். கடிதத்தை நேதாஜியிடம் ஒப்புவித்ததும் தன்னுடைய சொந்த விஷயத்தை அவரிடம் சொல்லி மேஜர் ஜெனரல் குமரப்பாவைப் பழிவாங்க அனுமதி கேட்க வேண்டுமென்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை என்பதைக் கண்டான். நேதாஜியும் அவருடைய துணைவர்களும் கண்ட ஒரு மகத்தான கனவு – பாரத சுதந்திரக் கனவு – துகள் துகளாகப் போய்க் கொண்டிருந்த சமயம் அது. எல்லோரும் அவ்வளவு மகத்தான விஷயத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய சொந்த விஷயம் அற்பத்திலும் அற்பமானதாக அவனுக்குத் தோன்றியது. ஏற்கனவே அவன் நேதாஜியைப் பார்த்திருந்த போதிலும் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில்லை. எடுத்த காரியத்தில் அத்தகைய பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருந்த சமயத்தில் அவருடைய தீரமும் கம்பீரமும் அவனுடைய உள்ளத்தை முழுக்க முழுக்கக் கவர்ந்து ஜன்ம ஜன்மங்களிலேயும் அப்பேர்ப்பட்ட தலைவரின் கீழ் அடிமைத் தொண்டு செய்யலாம் என்று உறுதி கொள்ளச் செய்தது. அவர் ஏறிய ஆகாச விமானம் உயரக் கிளம்பிய போது அவனுடைய உயிரானது உடலை மட்டும் இந்த பூமியில் விட்டு விட்டு மேலேறிச் செல்வது போலத் தோன்றியது. விமானத்தின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாகச் சின்னதாகி, சிறிய கரும்புள்ளியாகி, கடைசியில் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்தபோது, கர்னல் ராகவன் சற்று நேரம் ஸ்ம்ரனையற்று ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தான். எல்லாரையும் போல் ‘ஜேய் ஹிந்த்’ கோஷம் செய்வதற்குக் கூட அவனுடைய நா எழவில்லை. அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. கண்ணீரைத் துடைத்துக் கொள்ள கையை உபயோகிக்கும் சக்தியைக் கூட அவன் இழந்து விட்டிருந்தான்.

நங்கூரம் இல்லாமல், சுக்கான் இல்லாமல், மாலுமிகளும் இல்லாமல் நடுக் கடலில் அலைகளால் மோதப் பட்டு காற்று அடித்த திசையில் அங்கு மிங்கும் அலைந்து மிதந்து கொண்டிருக்கும் கப்பலைப் போல் சில காலம் லெப்டினென்ட் கர்னல் ராகவன் பர்மாவில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். மேஜர் ஜெனரல் குமரப்பாவும் அவர் தலைமையிலிருந்த சுதந்திர சேனையின் வீரர்களும் பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. கேப்டன் ரேவதியைப் பற்றி யாதொரு தகவலும் தெரியவில்லை. பாறை ஓரத்துப் பயங்கர சம்பவத்துக்குப் பிறகு ஆகாய விமானத்தில் ஏறும் சமயத்தில் அவனுடைய நண்பன் ஒருவன் வந்து காதோடு சொன்ன செய்தி உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளவும் அவனால் முடியவில்லை. குழப்பமும் ஏமாற்றமும் துயரமும் குடி கொண்டு அலைப்புண்ட உள்ளத்தோடு லெப்டினென்ட் கர்னல் ராகவன் தாய் நாட்டுக்கு வந்து சேர்ந்தான். ஒருவித நோக்கமும் இலட்சியமும் இன்றி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தபோது, டில்லி செங்கோட்டையிலிருந்து மேஜர் ஜெனரல் குமரப்பா விடுதலையானார் என்று ஒரு நாள் பத்திரிகையில் படித்தான். பின்னர் அவரைத் தேடிக் கொண்டு அலைந்தான். அந்தத் தேடல் முற்றுப் பெறாத நிலையிலேதான் ரட்லம் ஜங்ஷனில் அன்றிரவைக் கழிக்கும்படி நேர்ந்தது.

வேஷம் கலைந்தது

லெப்டினென்ட் கர்னல் ராகவன் சொன்ன கதையை முழுதுமே கேட்டுக் கொண்டிருந்தபிறகு, “தாங்கள் கூறிய வரலாறு மிகவும் பரிதாபகரமாயிருக்கிறது; மேலே என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டேன்.

“தற்சமயம் என்னுடைய வாழ்க்கையின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். மேஜர் ஜெனரல் குமரப்பாவை நான் சந்தித்தாக வேண்டும். அதற்குப் பிற்பாடுதான் வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் என்னால் யோசிக்க முடியும்” என்றார் கர்னல் ராகவன்.

“குமரப்பாவை நீங்கள் சந்திக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. உங்கள் பிடிவாதத்தை விட்டு விடுவதே நல்லது” என்று சொன்னேன்.

“அது மட்டும் முடியாது. குமரப்பா யமனுலகத்துக்கே போயிருந்தாலும் அங்கேயும் போய் அவரைக் கண்டுபிடித்தே தீருவேன்!” என்றார் ராகவன்.

“கண்டுபிடித்து என்ன செய்வீர்கள்?” “கண்டுபிடித்து, ‘அட பாதகா! என் ரேவதி எங்கே? அவளை என்ன செய்தாய்?’ என்று கேட்பேன். சரியான பதில் சொன்னால் விட்டு விடுவேன். இல்லாவிடில் இதோ இந்தக் கைத்துப்பாக்கியிலுள்ள ஆறு குண்டுகளையும் ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து என்று எண்ணி அவர் மார்பில் செலுத்துவேன்!”

“கர்னல் இது என்ன பைத்தியக்காரத்தனம்!”

“ஆம்; இங்கே உட்கார்ந்து நான் உம்மிடம் பேசிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனந்தான். இத்தனை நேரம் உம்மிடம் பேசி வியர்த்தமாக்கினேனே?” என்று சொல்லிக் கொண்டே கர்னல் ராகவன் எழுந்தார்.

அவரை நான் “அவசரப்பட வேண்டாம்; உட்காருங்கள்” என்று சொல்ல வாயெடுத்தேன். ஆனால் நெஞ்சில் எண்ணியது வாயில் வரவில்லை; அப்படி என்னைப் பேச முடியாமல் செய்த சம்பவம் ஒன்று அப்போது நேர்ந்தது.

சுவர் ஓரத்தில் இத்தனை நேரமும் படுத்திருந்த மனிதர் சட்டென்று எழுந்தார். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்து வந்தார். வெளியிலேயிருந்து வந்த மங்கிய விளக்கின் ஒளி அவர் முகத்தில் பட்ட போது, என்னைத் தூக்கிவாரிப் போட்டுத் திகைப்படையச் செய்தது.

ஏனெனில், அந்த மனிதரை எனக்கு நன்றாய்த் தெரியும்; அவர் மேஜர் ஜெனரல் குமரப்பாதான்!

‘என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை’ என்று சாதாரணமாய் கதைகளில் எழுதுகிறார்களே அது இப்போது என் விஷயத்தில் முற்றிலும் உண்மையாயிற்று. நிஜமாக அவர் குமரப்பாதானா? இத்தனை நேரமும் அந்த மூலையில் படுத்திருந்தவர் அவர்தானா?

குமரப்பாவின் குரல் எப்போதுமே கனமாகவும் கம்பீரமாகவும் இருக்கும். இப்போது வழக்கத்தை விட அதிக கனமும் கம்பீரமும் பொருந்திய குரலில் அவர் “கர்னல் ராகவன், உம்முடைய நண்பர் கூறியது தவறு, இதோ நானே, சாஷாத் மேஜர் ஜெனரல் குமரப்பாவே ஆஜராயிருக்கிறேன். உம்மை மிகக் கடுமையான சோதனைக்கு நான் உட்படுத்தியது வாஸ்தவம்தான். அதற்கு பரிகாரம் செய்யவே இதோ வந்திருக்கிறேன். உம்முடைய கைத்துப்பாக்கியிலுள்ள குண்டுகளை என் மார்பிலே செலுத்த நீர் விரும்பினால் அப்படியே செய்யலாம். அவை நிஜக்குண்டுகள்தானே? புகைக் குண்டுகள் அல்லவே?” என்று கூறிவிட்டு நகைத்தார். அந்த நகைப்பு ஏனோ எனக்குப் பயங்கரத்தை உண்டாக்கிற்று.

ராகவனுடைய முகத்தைப் பார்த்தேன். அந்த முகத்தில் குரோதமும், அசூயையும், ஆங்காரமும் கோர தாண்டவம் ஆடின. கண்கள் நெருப்புத் தணலைப் போல் ஜொலித்தன. ஏதோ பேசுவதற்கு முயன்றார். ஆனால் உதடுகள் துடித்தனவே தவிர வார்த்தைகள் வெளிவரவில்லை. துப்பாக்கியை எடுத்துக் குமரப்பாவின் மார்பிற்கு எதிரே நீட்டிய போது அவர் கைகள் சிறிது நடுங்கின.

சட்டென்று நான் குதித்து எழுந்து, “ராகவன்! ஒரு நிமிஷம் பொறுங்கள்!” என்று கூவிய வண்ணம் அவர் கையைப் பிடித்துக் கொண்டேன். என் கை பட்டதும் ராகவனுக்கு ரோமாஞ்சனம் உண்டானதை உணர்ந்தேன். எனக்கும் அதேவிதமான அநுபவம் ஏற்பட்டது.

குமரப்பா ராகவனைப் பார்த்து, “ரேவதி எங்கே என்று என்னைக் கேட்கிறீரே? உம்முடைய சிநேகிதரைக் கேட்பது தானே?” என்றார்.

நான் பதட்டத்துடன், “ஆம்! நான் சொல்கிறேன். கர்னல் ராகவன் ஒரு நிமிஷம் பொறுப்பதாக வாக்களித்தால் சொல்கிறேன்” என்றேன். பிறகு என் முகத்தை ஒரு நிமிஷம் வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு, (சொல்வதற்குக் கூச்சமாயிருக்கிறது) அது வரையில் என் மேலுதட்டில் மேற்புறத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த ‘ஹிட்லர்’ மீசையை எடுத்து எறிந்தேன். தலையை நன்றாக மூடியிருந்த ‘மப்ளரை’யும் கையில் எடுத்துக் கொண்டேன். (எங்கும் குழப்பமாயிருந்த அந்த நாட்களில் தொந்தரவுக்குள்ளாகாமல் பிரயாணம் செய்வதற்காகச் சில சமயம் நான் அப்படி வேஷம் தரிப்பது வழக்கம்)

வேஷம் நீங்கிய என் முகத்தைப் பார்த்ததும் “ஆஹா! ரேவதியா?” என்று ராகவன் கூச்சலிட்டார்.

“ஆம்! ரேவதிதான்!” என்றேன்.

“இத்தனை நேரம் என்னை ஏமாற்றி என் வாயைப் பிடுங்கி என் மனத்திலிருந்ததையெல்லாம் கொட்டும்படி செய்தாயல்லவா? உன்னை என்ன செய்கிறேன் பார்!”

“இருந்தாலும் இந்தப் புருஷர்களுக்குக் கொஞ்சமாவது கூச்சம், சங்கோசம் என்பது கிடையாது! எனக்குந்தான் மனதிற்குள் எவ்வளவோ ஆர்வம் இருந்தது. அதையெல்லாம் நான் கட்டுப்படுத்திக் கொண்டு இத்தனை நேரம் சும்மா இருக்கவில்லையா?”

ஆனால் புருஷர்கள் எல்லாரையும் நான் குறை சொல்லக்கூடாது. சமய சந்தர்ப்பத்தைப் பார்த்து ரஸக் குறைவு ஏற்படாமல் நடந்து கொள்கிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் குமரப்பா அப்படித்தான் நடந்து கொண்டார். ஒரு நிமிஷங்கூட அங்கே நிற்காமல் சுவர் அருகே சென்று சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு புறப்பட்டார். அவர் வாசற்படியைக் கடக்கும் போது தான் இவருக்குச் சுய அறிவு வந்தது! நானும் என்னை விடுவித்துக் கொண்டு அப்பால் நகர்ந்தேன்.

“ஜெனரல்! ஜெனரல்! எங்களை மன்னிக்க வேண்டும்!” என்று ராகவன் அலறினார்.

மேஜர் ஜெனரல் திரும்பிப் பார்த்து, “உங்களை நான் மன்னிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? நீங்கள்தான், என்னை மன்னிக்க வேண்டும்!” என்றார்.

“ஜெனரல்! ஒரு விஷயம் தயவு செய்து சொல்ல வேண்டும். நம் அருமைத் தலைவர் நேதாஜி மரணமடைந்தது உண்மையா?” என்று ராகவன் பரபரப்போடு கேட்டார்.

குமரப்பாவின் முகத்தில் அப்போது அதி விசித்திரமான ஒரு புன்னகை தவழ்ந்தது.

“ராகவன்! நீரா இப்படிப்பட்ட கேள்வி கேட்பது? இந்திய சுதந்திரப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு மரணம் என்பது உண்டா? அமர வாழ்வு பெற்றவர்கள் அல்லவா நாம்? அதிலும் நம் நேதாஜிக்கு மரணம் ஏது?”

இவ்விதம் சொல்லிவிட்டு மேஜர் ஜெனரல் குமரப்பா வெயிட்டிங் ரூமின் வாசற்படியைக் கடந்து சென்றார்.

அவரைப் பின் தொடர்வதற்காக அடி எடுத்து வைத்த ராகவனை நான் கையைப் பற்றி நிறுத்தினேன். பிறகு என் முகத்தை ஒரு நிமிஷம் வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு, (சொல்வதற்குக் கூச்சமாயிருக்கிறது) அது வரையில் என் மேலுதட்டில் மேற்புறத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த ‘ஹிட்லர்’ மீசையை எடுத்து எறிந்தேன். தலையை நன்றாக மூடியிருந்த ‘மப்ளரை’யும் கையில் எடுத்துக் கொண்டேன். (எங்கும் குழப்பமாயிருந்த அந்த நாட்களில் தொந்தரவுக்குள்ளாகாமல் பிரயாணம் செய்வதற்காகச் சில சமயம் நான் அப்படி வேஷம் தரிப்பது வழக்கம்)

வேஷம் நீங்கிய என் முகத்தைப் பார்த்ததும் “ஆஹா! ரேவதியா?” என்று ராகவன் கூச்சலிட்டார்.

“ஆம்! ரேவதிதான்!” என்றேன்.

“இத்தனை நேரம் என்னை ஏமாற்றி என் வாயைப் பிடுங்கி என் மனத்திலிருந்ததையெல்லாம் கொட்டும்படி செய்தாயல்லவா? உன்னை என்ன செய்கிறேன் பார்!”

“இருந்தாலும் இந்தப் புருஷர்களுக்குக் கொஞ்சமாவது கூச்சம், சங்கோசம் என்பது கிடையாது! எனக்குந்தான் மனதிற்குள் எவ்வளவோ ஆர்வம் இருந்தது. அதையெல்லாம் நான் கட்டுப்படுத்திக் கொண்டு இத்தனை நேரம் சும்மா இருக்கவில்லையா?”

ஆனால் புருஷர்கள் எல்லாரையும் நான் குறை சொல்லக்கூடாது. சமய சந்தர்ப்பத்தைப் பார்த்து ரஸக் குறைவு ஏற்படாமல் நடந்து கொள்கிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் குமரப்பா அப்படித்தான் நடந்து கொண்டார். ஒரு நிமிஷங்கூட அங்கே நிற்காமல் சுவர் அருகே சென்று சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு புறப்பட்டார். அவர் வாசற்படியைக் கடக்கும் போது தான் இவருக்குச் சுய அறிவு வந்தது! நானும் என்னை விடுவித்துக் கொண்டு அப்பால் நகர்ந்தேன்.

“ஜெனரல்! ஜெனரல்! எங்களை மன்னிக்க வேண்டும்!” என்று ராகவன் அலறினார்.

மேஜர் ஜெனரல் திரும்பிப் பார்த்து, “உங்களை நான் மன்னிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? நீங்கள்தான், என்னை மன்னிக்க வேண்டும்!” என்றார்.

“ஜெனரல்! ஒரு விஷயம் தயவு செய்து சொல்ல வேண்டும். நம் அருமைத் தலைவர் நேதாஜி மரணமடைந்தது உண்மையா?” என்று ராகவன் பரபரப்போடு கேட்டார்.

குமரப்பாவின் முகத்தில் அப்போது அதி விசித்திரமான ஒரு புன்னகை தவழ்ந்தது.

“ராகவன்! நீரா இப்படிப்பட்ட கேள்வி கேட்பது? இந்திய சுதந்திரப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு மரணம் என்பது உண்டா? அமர வாழ்வு பெற்றவர்கள் அல்லவா நாம்? அதிலும் நம் நேதாஜிக்கு மரணம் ஏது?”

இவ்விதம் சொல்லிவிட்டு மேஜர் ஜெனரல் குமரப்பா வெயிட்டிங் ரூமின் வாசற்படியைக் கடந்து சென்றார்.

அவரைப் பின் தொடர்வதற்காக அடி எடுத்து வைத்த ராகவனை நான் கையைப் பற்றி நிறுத்தினேன்.

முடிவுரை

லெப்டினென்ட் கர்னல் ராகவனும், நானும் மதராஸ் மெயில் வண்டியில் சென்னையை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது குமரப்பாவைப் பற்றியே நாங்கள் அதிகமாகப் பேசும்படி இருந்தது. சென்னை ஆஸ்பத்திரியில் அவர் கீழ் வேலை பார்த்தபோது அவரைப் பற்றி நான் எண்ணியது பெருந்தவறு என்று பின்னால் தெரிந்து கொண்டேன். குமரப்பா ஐரோப்பாவுக்குப் போயிருந்த போது வியன்னாவில் ஸ்ரீ சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்து அவரிடம் பக்தி கொண்டாராம். சுபாஷ் பாபு இந்தியாவிலிருந்து மறைந்த பிறகும் அவருடைய காரியங்களைப் பற்றிக் குமரப்பாவுக்குச் செய்தி வந்து கொண்டிருந்ததாம். நான் ஒரு பெரிய தேசபக்தருடைய மகளாதலால் என்னையும் நேதாஜியின் சேவைக்குப் பயன்படுத்தலாம் என்று குமரப்பா நினைத்தாராம். அதைத்தான் நான் தவறாக அர்த்தம் செய்து கொண்டு அவஸ்தைப் பட்டேன். என்னைப் பாறையடியில் நிறுத்தி ராகவனைச் சுடும்படிச் செய்தது உண்மையில் ஒரு சோதனைதான். அந்த துப்பாக்கியில் வெடி குண்டு கிடையாது; புகைக் குண்டுகள் இருந்தது. இதைப் பற்றியெல்லாம் திரும்பத் திரும்ப அலுப்பில்லாத அதிசயத்துடன் நாங்கள் பேசிக் கொண்டு போனோம்.

“நமது வாழ்க்கையின் அதிசய சம்பவங்களுக்குள்ளே மிகவும் அதிசயமானது, ரட்லம் ஜங்ஷனில் அன்றிரவு நாம் குமரப்பாவைச் சந்தித்ததுதான்” என்று ஒருமுறை நான் சொன்னேன்.

“அதே இடத்தில் நாம் இருவரும் சந்தித்ததைக் காட்டிலுமா?” என்றார் என் அருமைக் காதலர்.

“ஆமாம்; அதைவிடக் கூட அதிசயந்தான்!”

கர்னல் ராகவன் சிறிது கோபத்தோடு, “அது எப்படி?” என்று கேட்டார்.

என்னுடைய பெட்டிக்குள்ளே சில நாளாகப் பத்திரப் படுத்தி வைத்திருந்த ஒரு தினசரிப் பத்திரிகையை எடுத்துக் கொடுத்தேன். அதில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டினேன். அதைப் படித்ததும் ராகவனுக்கு எல்லையற்ற வியப்பு ஏற்பட்டதென்பதை அவருடைய முகக்குறி உணர்த்திற்று. மேற்படி பத்திரிகைச் செய்தி வருமாறு…

“இந்திய சுதந்திரப் படையில் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்தவரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆப்தருமான மேஜர் ஜெனரல் குமரப்பா சென்னை… ஆஸ்பத்திரியில் நேற்று சேர்க்கப்பட்டார். சிகிச்சை எதுவும் பயன்படாமல் இன்று மாலை அவர் மரணமடைந்த செய்தியை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்…”

லெப்டினென்ட் கர்னல் ராகவன் திரும்பத் திரும்பத் திரும்ப மேற்படி செய்தியைப் படித்துப் பெருமூச்சு விட்டார்.

“தேதியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.

“ஆம்; ரட்லம் ஜங்ஷனில் நாம் சந்தித்ததற்கு மூன்று தினங்களுக்கு முன்னால்!” என்றார் ராகவன்.

“அன்றிரவு அவரைப் பார்த்தபோதே எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது!” என்று நான் சொன்னேன்.

“அமர வாழ்வைப் பற்றி ஜெனரல் குமரப்பா கூறியதின் உண்மைப் பொருள் இப்போதுதான் எனக்கு நன்றாய் விளங்குகிறது!” என்றார் என் உயிர்த்துணைவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *