முதலிரவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 6,905 
 

ஒரு வழியாக சுகன்யாவுடன் சுந்தரேசனுக்கு தடபுடலாக கல்யாணம் நடந்து முடிந்தது.

அடுத்ததாக அவன் முதலிரவுக்காக ஏராளமான எதிர்பார்ப்பில், எப்படா சாந்தி முகூர்த்தம் வரும் என்று காத்திருந்தான். பல வருடங்களுக்கு முன்பே பெண் சுகத்திற்காக உடல் தயாராக இருந்தாலும், திருமணம் என்கிற ஒரு சமூக அங்கீகரிப்பிற்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பது அவனுக்கு சுத்த அபத்தமாகப் பட்டது. எனினும் வேறு வழியில்லை.

அப்பா கல்யாணப் பேச்சை ஆரம்பித்ததுமே அவன் மனசில் முதலிரவு வேட்கைதான் ரகசியமாக முதன் முதலில் மையம் கொண்டது.

பதின்மூன்று வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரையில் ஏறக்குறைய ஒரு மாமாங்கம் ஒரு பெண்ணின் அருகாமைக்காக, ஒரு இன்பமான புதிய அனுபவத் தேடலுக்காக சுந்தரேசன் ஆவலுடன் காத்திருந்தான். இந்தக் காத்திருத்தல் மிகவும் எக்கமானது, கஷ்டமானது, கொடுமையானது.

அந்தக் காத்திருத்தல் இன்றுதான் நிறைவேறப்போகிறது…. இனி தனக்காக ஒரு பெண்…. அவளுடன் சுதந்திரமாக இஷ்டத்துக்கு புணர்ச்சியில் ஈடுபடலாம் என்கிற எண்ணமே அவனில் மிகுந்த உற்சாகத்தை உண்டாக்கியது.

முதலிரவு….

சுகன்யா தலையைக் குனிந்தபடி அறையினுள்ளே வந்தாள்.

மயில் கழுத்து நிறப் பட்டுப் புடவை அவளுடையை சந்தன நிறத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது.

வாசனைப் பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஏசி அறையின் நறுமணம் சூழ்ந்த அகன்ற கட்டிலின் மெத்தையில் அமர்ந்திருந்த சுந்தரேசன் – அவளையும் தன்னருகே கட்டிலில் அமர வைத்தான். பின்பு களைப்போடும், ஓய்வோடும், அவசரத் தேவையோடும் தன் மனைவி சுகன்யாவின் பட்டுப் புடவை நிறைந்த இளம் மடியில் உரிமையுடன் தலை வைத்து நீளவாக்கில் படுத்துக் கொண்டான்.

புத்தம் புதிய பொன் வளையல்கள் நிறைந்த கைகளால் தன் கணவனின் கரிய கேசத்தை காதலுடன் அளைந்தபடி சுகன்யா வர்ணம் உலராத சித்திரம் போல் வியர்வையுடன் வெகுளியாக அமர்ந்திருந்தாள்.

வெகுநேரம் வரைக்கும் அந்தத் தோற்றத்திலேயே இருவரும் பேச்சு இல்லாமலேயே இருந்தார்கள். சுந்தரேசனுக்கு பட்டுப் புடவையின் பெண்மணத்தை நுகர்ந்தபடியே பேசாமல் படுத்தே இருக்கலாம் போலிருந்தது. அத்தனை களைப்பாக இருந்தது அவனுக்கு. படுத்திருந்த நிலையிலேயே விழிகளை மட்டும் உயர்த்தி சுகன்யாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“என்னங்க?” சுகன்யா மெல்லிய குரலில் அன்போடு கேட்டாள்.

“கால் வலிக்குதா?” சுந்தரேசனும் மென்மையான குரலில் கேட்டான்.

“இல்லையே…”

“நிம்மதியா இப்படியே விடிய விடிய படுத்திருக்கணும் போல இருக்கு…”

“தாராளமா படுத்துக்குங்க…”

“யப்பா கல்யாணம்னு சொல்லி, இந்தக் கோடையில், அதுவும் அக்னி முன்னால் உட்கார வைத்து நம்மை பெண்டை எடுத்துட்டாங்க…”

சுகன்யா மெளனமாக இன்னும் சுந்தரேசனின் தலைமுடியை அளைந்து கொண்டிருந்தாள்.

“சுகன்யா, நமக்கு இது முதல் இரவு மாதிரியே தெரியலை…”

“ஏன்?”

“கல்யாணத்துக்கு முன்னாடியே நாலஞ்சு தடவை நாம் உன் வீட்லயும், என் வீட்லையும் மீட் பண்ணிக்கிட்டது இப்ப உன்னிடம் தனிமையில் பழக ரொம்ப ஈஸியா இருக்கு… உனக்கு எப்படித் தோணுது?”

“எனக்கு எந்த மாதிரியும் தோணலை…”

“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா சுகன்யா?”

“ம்…”

“நெஜமாவே பிடிச்சிருக்கா?”

“அப்ப ஒருத்தரை பொய்யாக்கூட பிடிக்குமா?”

குனிந்து நாணத்துடன் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் சுகன்யாவின் கண்களையே பார்த்தான். வானத்தில் பதித்தாற்போல அவளின் கண்கள் எதையோ பிரவகித்துத் தளும்பிக் கொண்டிருந்தன. நிலா அளவுக் காதலும், நட்சத்திர அளவுப் பாலுணர்வும் அந்தக் கண்களில் கலந்து மிதந்தன. கடற்கரையில் அப்போதுதான் வந்து கரை ஒதுங்கிய புத்தம் புதிய ஈரமான பெரிய சங்கு போல அந்த முகம் ஒளி கொண்டிருந்தது.

“ஐ லவ் யூ டியர்…” அழகிய மனைவியின் அருகாமையில் சுந்தரேசன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டான்.

சுகன்யா மெளனமாக இருந்தாள்.

“நீயும் என்னை ஐ லவ் யூ டியர்னு சொல்லு சுகன்யா.”

“ஐ லவ் யூ டியர்.”

“ஐ லவ் யூ வெரிமச்… நீயும் சொல்லு.”

“ஐ லவ் யூ வெரிமச்…”

“ஒரு பெண் என்னை ஐ லவ் யூன்னு சொல்றது இதுதான் என் வாழ்க்கையில் முதல் தடவை. இப்பத்தான் உயிரே வர்ற மாதிரி இருக்கு… எவ்வளவு வருடமாக இந்த ஒரு வார்த்தைக்காக எவ்வளவு ஏங்கியிருக்கேன் தெரியுமா சுகன்யா?” – குரலில் காதல்வீச்சு சூடேறியது.

“ம்”

“இந்த அன்பு எனக்கு ஒருநாளும் குறைஞ்சு போயிடாதே?”

“ஊஹும், ஒருநாளும் குறையாது.”

“எனக்கு நீ ரொம்ப வேணும் சுகன்யா. ஐ நீட் யூ டூமச்.”

“எனக்கும்தான் நீங்க வேணும்…”

“முழுக்க முழுக்க என் இஷ்டத்துக்கு ஏத்த மாதிரியெல்லாம் நடந்துப்பே இல்லியா நீ?”

“நிச்சயமா நடந்துப்பேன்… உங்க இஷ்டம்தானே என் இஷ்டமும்.”

“உன்னோட இந்த அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?” சுந்தரேசன் மிகையாக உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டான்.

சுகன்யா அவசரத்துடன் அவன் வாயைத் தன் விரல்களால் மூடினாள்.

“ஸாரி, ஞாபகமில்லாமலேயே உன் மடியிலேயே படுத்திருக்கேன். உனக்கு கால் வலிக்கப்போகுது…” சுந்தரேசன் எழுந்து கொள்ளப்பார்த்தான். ஆனால் எழுந்துகொள்ள முடியாமல் சுகன்யாவின் வளையல்கள் நிரம்பிய கைகள் அவனின் நெஞ்சில் கோத்து இறுக்கிக் கொண்டன. அந்தக் கரங்களில் தெரிந்த கலவித் தேவையை சுந்தரேசனால் உணர முடிந்தது.

சுதந்திரத்துடன் கூடிய ஒரு பெண்ணின் அருகாமையும், தனிமையும் கிடைத்த கிளு கிளப்பில் அவனுடைய உடம்பின் ஒவ்வொரு செல்லும் உயிர்த்தெழுந்தது.

காதலுடன் அவளின் செழுமையான புறங்கையைப் பற்றி முத்தமிட்டான். உடலில் புதிய வெந்நீர் ஓட்டம் ஆரம்பிப்பது தெரிந்தது. ஏறிட்டு அவளை நோக்கினான். சுகன்யாவின் கழுத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த புத்தம் புதிய பொன் ஆபரணங்களின் அழகில் கூடப் பாலுணர்வு ஊசலாடுவது போலிருந்தது. தங்கச் சங்கலியில் கோக்கப்பட்ட கற்கள் பதிக்கப்பட்ட அன்னப் பறவைகளைத் தொட்டு சுந்தரேசன் முத்தமிட்டான். அந்த அன்னப் பறவையில்கூட சுகன்யாவின் வாசனையை அவனால் நுகர முடிந்தது. சற்றே அவளுடைய மடியில் புரண்டு பட்டுப் புடவையில் முகத்தைத் திருப்பி திருப்பித் தேய்த்து சுகன்யா சுகன்யா என்று வெப்பமாக முணங்கினான். அவளின் மெல்லிய சுகந்தம் அவனைக் கிறங்கடித்தது.

“எனக்கு நீ வேணும் சுகன், எனக்கு நீ வேணும் சுகன்” என்று பிதற்றினான். அந்தப் பிதற்றல் சுகன்யாவையும் உடல் கிளரச் செய்தது. உடல் முழுவதையும் கனம் பெறச் செய்தது. கனத்தை அவனில் சேர்த்து விடுகிறாற் போல அவள் அவன் மீது தாழ்ந்து பிடரியில் சாய்ந்து வேட்கையுடன் அவனின் கரிய அடர்த்தியான தலைமயிருக்குள் விரல்களைத் துழாவிட – இருவரிலும் ஏராளமான பாலுணர்வு அழுத்தம் இயற்கை வாயு போல, புதிய எண்ணைக் கிணற்றின் ஊற்றுப் போல பீறிட்டு விட்டது ! அந்த வேகமுள்ள ஊற்று ஏறக்குறைய அதிகாலை வரைக்கும் பெருகித் தெறித்துக் கொண்டிருந்தது…!

மேஜையில் இருந்த கடிகாரம் மணி நான்கு முப்பது என காட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அரைகுறை தூக்கத்தில் இருந்த சுகன்யா முழு பிரக்ஞை பெற்றபோது, அவளின் நெஞ்சில் முகம் புதைத்தபடி சுந்தரேசன் தூங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். ஓர் இளம் மனைவிக்கு இது ஓர் உன்னதமான ரம்மியமான கணம். அவளுக்கே உரியவன் அவனை மறந்து அவளின் நெஞ்சில் புதைந்து தூங்கிக் கிடப்பது – இன்னும் மீதம் இருக்கும் அந்தரங்க இரவுக் கட்டம். முன்னிரவுக் காதல் பெருக்கை நினைவில் குவித்துக் காட்டும் ஒளி வட்டம்! எப்படித் தன்னை ஒரு ராஜகுதிரையாக முயங்கியவன் அயர்ந்துபோய்த் தூங்குகிறான்…!?

சுகன்யா இழை கூட அசைந்து விடாமல் அப்படியே படுத்திருந்தாள். சுந்தரேசன் அவளுடைய மனசு பூராவும் நிறைந்து போயிருந்தான். கடுகளவு கூட அவனின் மனம் கோணாமல் அவனைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தாள்.

தன்னை துளிக்கூட மிச்சம் வைக்காமல் அவனுக்கே வார்த்து விட வேண்டுமென்பதையே லட்சியமாய் தனக்குள் வார்த்துக் கொண்டாள். தன்னை சுந்தரேசனுக்கு ஈந்துவிட்ட விச்ராந்தியாலும் மனச்சுகம் அடைந்திருந்தாள்.

தாம்பத்யத்தில் இது ஒரு பிளவு பட்ட வினோதச் சுழற்சி. மனைவி கணவனுக்குத் தன்னை கொடுப்பதாய் நினைக்கிறாள். கணவன் தனக்கு வேண்டியதை மனைவியிடம் பெற்றுக் கொள்வதாய் எண்ணுகிறான்…

சுகன்யா தன் உடலில் புதிதாய் இணைந்திருக்கும் தாலியை கற்புடன் தொட்டு முத்தமிட்டுக் கொண்டபோது அவனுடைய உடலில் சிறிய அசைவுகள் ஏற்பட்டதை கவனித்துக்கொண்டே இருந்தாள். அயர்வுடன் அவன் சற்றே புரண்டான். அவனுடைய உதடுகள் எதையோ முணு முணுத்தன. சுகன்யா கொஞ்சம் சுவாரஸ்யத்துடன் கணவனின் முனகல்களையே கவனித்தாள்.

“சுகன்யா … சுகன்யா …” என்று மெலிதாகப் புலம்பினான்.

அந்தப் புலம்பலுக்குப் பின் மறுபடியும் அவன் ஆழ்ந்த தூக்கத்தில் அடங்கி விட்டதும் அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். தன்னுடைய பெயரை தூக்கத்தில்கூட உச்சரிக்கும் தன் கணவனின் முகத்தை ஒருகணம் பாசம் பொங்க நோக்கினாள். அவளின் மனம் பெருமையால் பூரித்தது.

காதலுடன் அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அறைக்கதவு தட்டப்படும் சப்தம் லேசாகக் கேட்டது. அரவம் எழுந்து விடாமல் மிகுந்த ஜாக்கிரதையுடன் எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். அவளுடைய அம்மா கதவிலிருந்து சற்றுப் பின் தள்ளி நின்று கொண்டிருந்தாள்.

“என்னம்மா?”

“வா. வெந்நீர் போட்டு வச்சிருக்கேன். முதல்ல நீ வந்து குளிச்சிடு…”

“சரிம்மா… நீங்க போங்க. நான் ஒரு நிமிஷத்ல வரேன்.”

மீண்டும் சுகன்யா தூங்கிக் கொண்டிருக்கும் கணவன் அருகில் போய் சற்று நேரம் நின்றாள். நிர்மலமான கணவனின் முகத்தையே ஏராளமான காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். .

ஏசியின் குளிர் அதிகம் போல உணர்ந்தாள்.

போர்வையை எடுத்து ஒரு குழந்தைக்கு போர்த்தி விடுவதைப்போல் அவனுக்கு மிகுந்த அக்கறையுடன் போர்த்திவிட்டாள்… தலைமயிரை விரல்களால் வாஞ்சையுடன் கோதிவிட்டாள்.

‘அவனை இனி நான்தான் பொத்திப் பொத்திப் பாதுகாப்பேன்’ என்கிற இறுமாப்பு அவளிடம் கொப்புளித்தது.

பிறகு அறையின் கதவைச் சாத்திவிட்டு குளிக்கச் சென்றாள்.

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *