மாண்புமிகு மதிப்பெண்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 12,717 
 

“”நான் ஏன் நீங்க எதிர் பார்க்கிற மார்க்கை எடுத்தாக வேணும்….?” – புனிதாவுக்கு யாரிடமாவது இதைக் கேட்க வேண்டும் போல இருந்தது.

நேற்று வரைக்கும் “”ஹாய் புனிதா…. எப்படி இருக்கே…..?” அலைபேசியில், குறுந்தகவலில், கட்செவியில், முகநூலில் நலம் விசாரித்தவர்களெல்லாம், “”புனிதா…. எப்டிடி எக்சாம் எழுதிருக்கே…?” எனக் கேட்கையில், “பிகே’ வேற்றுக்கிரகவாசி நானோ? என ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்ளணும் போல இருக்கிறது.

மாண்புமிகு மதிப்பெண்பதின்மம் வயதை உதைத்து விளையாடும் இந்த எக்ஸாம் சிஸ்டத்தைக் கண்டுபிடித்தவர் யாரென கூகுளில் தேடி கண்டுபிடித்தாக வேணும். அவரை வாட்ஸ் அப்பில் ஒட்டி கிழி, கிழியென கிழிக்க வேணும். மண்டையைச் சிதறு தேங்காயாக்கும் இந்த தேர்வு முறை தேவைதானா? அப்பப்பா….வீட்டைத்தாண்டினால், வீட்டிற்குள் நுழைந்தால் வீதியெங்கும் படி, படிதான்!

“”புனிதா…எக்சாம் எப்படி எழுதியிருக்கே?”

“”ம்..எழுதிருக்கேன்”

“”மார்க் எவ்ளோ வரும்?”

“”வரும்”

“”ஆயிரம்….”

“”பார்க்கலாம்”

“”ஆயிரம் மார்க்கெல்லாம் எந்த மூலைக்கு?”

இதைச் சொல்லக் கேட்கையில் தண்டுவடம் முடிச்சு அவிழ்வதைப் போலிருக்கிறது. ஆயிரம் குறைந்த மதிப்புடைய எண்ணா?… நான்கு இலக்க எண்களில் மிகச்சிறிய எண்ணாக அது இருந்தாலும் மூன்று இலக்க எண்களின் நீளம் தாண்டிய பி.டி உஷா அல்லவா அது? இந்த அப்பாக்களே இப்படித்தான். எவ்வளவு மதிப்பெண் எடுத்துக்கொடு. ஊகூ…ம் பத்தாது…பத்தாதுதான். ம்…என்ன செய்வதாம்… எவ்வளவு எடுத்தாலும் இப்போதெல்லாம் மதிப்பெண்கள் மதிக்கப்படுவதே இல்லை. மதிப்பெண்ணில் “பெண்’ இருக்கிறதே….

ஏன்தான் இந்த +2 வகுப்பில் கையையும் காலையும் வைத்தேனோ…. எத்தனை இரவு, எத்தனை பகல்…. எத்தனை நாள் தூக்கம்….கடிகாரம் ஓடும் முன் ஓடி… பின் தூங்கி முன் எழுந்து… “தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண்களை எடுக்க நினைப்பதையன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே….’யென முந்நூற்று அறுபது டிகிரியும் படிப்பு, படிப்பு, படிப்புதான்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பிற்குள் நுழைந்த மறுநாள் நடந்தேறிய அரங்கேற்றம் இது. பள்ளியில் நடத்தும் பாடம் கேட்கும் தொலைவில் தொலைக்காட்சி இணைப்பு அறவே இல்லாத வீடொன்றைப் பிடித்துவிட்டிருந்தார் அப்பா. வீட்டின் முகப்பில் புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை மாட்டிவிட்டிருந்தார். உட்கார்ந்து படிக்க ஒரு குட்டியூன்டு சோபா. வைத்து எழுத வட்டமேஜை. அறை முழுக்கவும் அலமாரிகள். வீடு பார்க்க குட்டி கன்னிமாரா நூலகம் போல இருந்தது.

நவீன தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமே ஹைட்ரஜன்,ஹீலியம், லித்தியம், பெரிலியம், போரான்…. என அப்படியாகத்தான் அலமாரியில் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தேன். தனிமங்களுக்கு அணு எண். புத்தகங்களுக்கு கட் ஆப் மார்க். உயிரியல், அதைத் தொடர்ந்து இயற்பியல், வேதியியல்.

அப்பா என்னை ப்ளூடூத் பார்வையில் இயக்கத் தொடங்கியிருந்தார். “காலையில் எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்க நல்ல படிப்பு, மாலை முழுவதும் படிப்பு , அதை வழக்கப்படுத்திக் கொள்ளு புனிதா’ எனும் அளவிற்கு அப்பாவின் நன்னடத்தை விதிகள் இருந்தன. லியானார்டோ டாவின்சி வலது கையில் எழுதிக் கொண்டு இடது கையில் படம் வரைவாராமே… அதை நோக்கி எனது தூண்டல் துலங்கல் போய்க்கொண்டிருந்தது.

ஒரு நாள் அப்பாவிடம் கேட்டே விட்டேன். “”அப்பா… ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் எது? சொல்லுங்கள் பார்ப்போம்….”

“”ஸ்ரீரங்கம்”

“”இல்லைங்கப்பா…. உங்க கனவுதான்”

அப்பா, என்னை கெனான் கேமரா பார்வையில் பார்த்தார். ஓரிரு நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தவர் என் அருகினில் வந்தார். என் கையை இறுகப்பற்றினார்.

“”ம்… நீ டாக்டராகணும்…. அது ஒன்றுதான் என்னுடைய ஏழடுக்கு கனவு” என்றார். நான் பத்தாம் வகுப்பில் எடுத்திருந்த அதிகபட்ச மதிப்பெண்கள் அப்பாவை அப்படி பேச வைத்திருந்தது.

“மீத்தேன்… ஈத்தேன்…. இதைப்படிக்கையில் தேன் வந்து பாயுது காதினிலே…’ என்ற அளவிற்கு இருக்கிறது. ஆனால் அதை குறியீடாக, தத்துவமாக, பயன்பாடாக எழுதத் தொடங்குகையில் மீள் வினைக்கூட மீளா வினையாகிவிடுகிறது.

“”அப்பா….”

“”என்னடா…. கொஸ்டின் பேப்பர் எதுவும் வேணுமா….”

“”இச்….”

அப்பாவை ஏன்தான் அழைத்தோமென இருந்தது. அப்பாவிற்கு என்னவாகிவிட்டது. படிக்கிறதெல்லாம் மறந்து மறந்து போகிறதப்பா… எனச் சொல்லலாமென அழைத்தால் கொஸ்டின் பேப்பர் எதுவும் வேணுமா?…. அப்பா இல்லா நேரம் பார்த்து தலையைச் சுவற்றில் முட்டிக் கொள்ளணும் போல இருந்தது.

அப்பாதான் இப்படியென்றால்… பள்ளிக்கூடம் அப்பப்பா…. நேரம் பார்த்து மணி அடிக்கும் வாட்ச் மேன் கூட உத்தம வில்லனாகவே தெரிகிறார். ஒரு நாள் ஸ்டடி கிளாஸ். பிரையோஃபைட்டா படித்துக் கொண்டிருந்தேன். அடிவயிற்றில் ப்ரூஸ் லீ ஃபைட். நாளை வரவேண்டிய வலி அது. அல்ஜீப்ரா, திரிகோணமிதிக்குள் ஆட்படாத இந்த வலி… இப்ப ஏன் வரணுமாம்…. தாவரவியலை மூடி வைத்துவிட்டு விலங்கியலைத் திறந்தேன். தாவரவியல் டீச்சர் என் குடுமியைப்பிடித்தார்.

“”டீச்சர்…”

“”தாவரவியல் படிக்காம என்ன படிக்கே..?”

“”விலங்கியல் டீச்சர்”

“”அதுல என்னப்படிக்கே?”

“”மாதவிடாய் சுழற்சி”

“”நீ பியூர் சயின்ஸா?…மேத்ஸா?”

“” மேத்ஸ் டீச்சர்”

“”உனக்கு இந்தக் கேள்வியெல்லாம் கேட்க மாட்டாங்க. இதை ஏன் வீணாப் படிச்சிக்கிட்டு…”

டீச்சர் அப்படிச்சொன்னதும் என் தைராய்டு சுரப்பு சட்டென நின்றுவிட்டதைப் போலிருந்தது. வேகு,வேகுவென நடந்து அவரது அறைக்குப் போனவர் திரும்பி வருகையில் அவரது கையில் ரயில் அட்டவணை அளவிற்கு பாட அட்டவணை இருந்தது.

“”புனிதா…இதோ பார்…இப்ப பாட்டனி பிரீயடு”

நான் விரிகோணத்தில் பார்த்தேன். அவர் என்னை குறுங்கோணத்தில் பார்த்தார்.

“”மன்னித்து விடுங்கள் டீச்சர்” விலங்கியலை புத்தக பைக்குள் வைத்துவிட்டு அவருக்குப் பதில் இவரென தாவரவியலை மறுபடியும் எடுத்தேன்.

காலை இரண்டு இட்லி. அதற்கு சட்னி இயற்பியல். மதியம் கொஞ்சம் சாதம் கூட்டுப் பொறியலாக தாவரவியல். இரவு ஒரு சப்பாத்தியுடன் கணக்கு… இப்படியாகத்தான் வயிற்றுப் பசியுடன் கூடிய மனப்பசியைத் தணித்துக் கொண்டு வந்தேன்.

“”சாப்பாட்டு நேரத்தில படிப்பு என்னடி வேண்டிக் கிடக்கு?” எப்போதாவது சொல்லும் அம்மா இப்போது அதையும் சொல்வதில்லை.

“”புனிதா….இனி இப்படி படித்துக் கொண்டிருப்பதாகாது”

“”ஏன்ங்கப்பா?”

“” ஜனவரி…பிப்ரவரி… முடிந்துவிட்டது”

“”அதனாலே…””

“”இனி வரி..வரி…யாக படிக்க வேணும்” என்றவாறு அப்பா ஒரு பிரத்யேகமான கரும்பலகையைக் கொண்டு வந்து என் அறையில் மாட்டினார். அதன் ஒரு மூலை செங்கோண முக்கோணத்தை அவரே எடுத்துக் கொண்டார். அதில் தினமும் “தேர்விற்கு இன்னும்…… நாட்களே உள்ளன’ என எழுதிப் போட்டிருந்தார். அந்த…..ல் எண்கள் இறங்கு வரிசையில் வர, வர எனக்கு பயத்தில் அட்ரீனல் சுரக்கத் தொடங்கியது.

“”புனிதா….”

“”ம்ப்பா…”

“”என்ன படிக்கே?”

“”இங்கிலீஸ் எசே…”

“”கட் ஆப்…மார்க்குக்கு லாங்வேஜ் தேவையில்லையே. அதை ஏன் படிச்சிக்கிட்டு. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி , பயாலஜிக்கு அதிகக் கவனம் கொடு….”

அப்பா இப்படிச்சொன்னதும் அப்பா மீது கொஞ்சம் கோபம் வரவே செய்தது. வெளிக்காட்டவா முடியும்? கோபம் மிக முக்கியமான கேள்வியில் இல்லையே…

“”புனிதா…. எக்ஸாம் பீஸ் ஐம்பதாயிரம் கட்டச்சொல்லிருக்காங்க”

“”அவ்வளவா….ஏன்ப்பா?”

“”ஒன் மார்க்ல எதுவும் டவுட் இருந்தா சொல்லித் தருவாங்களாம்”

“”அப்பா… எக்ஸாம் சிஸ்டத்தில ஏகப்பட்ட கன்டிசன்ஸ் இருக்கு. அதெல்லாம் சாத்தியமில்லங்கப்பா”

“”ஏன் சாத்தியமில்ல. முகநூல், வாட்ஸ்அப்… என எத்தனையோ வசதிகள் இருக்குதும்மா”

“”இருக்கலாம்ப்பா. அந்த அளவிற்கு கண்காணிப்புகளும் இருக்கு”

“”அதனாலதான் அவ்ளோ பணம் கட்டச் சொல்றாங்க”

“”அப்படியொரு தேவை எனக்கு வராதுப்பா…பணத்தைக்கட்டி ஏமாற வேணாம்”

“”குட் வரக்கூடாது. ஒரு வேளை வந்தால்?”

“” வந்தால்?”

“”தயங்காம ஹால் சூபர்வைசர்க்கிட்ட கேட்டு எழுது”

இதற்கு நான் என்ன பதில் சொல்வது? மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே ஓடும் பற்சக்கர ரயில் என் மண்டைக்குள் ஓடுவதைப் போலிருந்தது.

“”சரிங்கப்பா….” சொல்லிக்கொண்டே டியூசனுக்கு ஓடினேன்.

டியூசனுக்கும் ஸ்கூலுக்கும் இடையில் பாம்பன் பாலம் அளவிற்கு இரு இணைப்பு இருந்தால் தேவலாம் போல இருந்தது. சிவன் பெரிதா? விஷ்ணு பெரிதா? டியூசன் மாஸ்டர் பெரியவரா? ஸ்கூல் மாஸ்டர் பெரியவரா? டியூசன்… ஸ்கூல்… இவற்றில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேணும்? அப்பாவிடம் ஒரு நாள் கேட்டிருந்தேன். அப்பா சார்புநிலை தத்துவம் அளவிற்கு அதை விளக்கினார். ஸ்கூல்…எக்ஸாம் எழுத… டியூசன் மார்க் வாங்க….

பிறகென்ன டியூசன் மாஸ்டர் சொல்வதை உபநிடதமாக எடுத்துக் கொண்டு புத்தகங்களை வியர்வை சிந்தி, தூக்கம் சிந்தி, புத்தகங்களை கரைத்துக் குடித்து தேர்வுகளை எழுது…எழுதென எழுதி மார்ச் மாதத்தைக் கடந்திருந்தேன்.

இந்த பூமிக்கு என்னதான் அவசரமோ.. விடிந்தால் நாளை தேர்வு முடிவு.

எனக்கு தூக்கம் வருவேனா? என்றது. விரிப்பில் புரண்டு படுத்தேன். தலையில் கிண்ண்…ணென புத்தகச்சுமை. மண்டைக்குள் எறும்பு ஊர்வதைப்போல இருந்தது. வரையறு, என்றால் என்ன, உதாரணம் தருக,….கேள்விகளின் அணிவகுப்பு. இன்னும் கொஞ்சம் நல்லா படித்திருந்திருக்கலாமோ…. தெரிந்த கேள்வியையே இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ… மனதிற்குள் திக்…திக்…. எவ்வளவு மதிப்பெண் வரும்?…. எவ்வளவு வந்தால்தான் என்ன?… வருவது வரட்டும்…..

“திடுக்’

“”என்னடிம்மா?”

“”கெட்ட கனவும்மா”

“”என்னடி கண்டே?”

“”என் கிளாஸ்ல நான் மட்டும் ஃபயிலா போயிருக்கேன்ம்மா”

கனவு கண்டது நான். திடுக்கிட்டது நான். அம்மாவிற்கு என்ன வந்தது… ஏன் இப்படி வியர்த்துக் கொட்ட வேண்டும்?…. அம்மா திடுதிப்பென எழுந்தாள். வேகமாக ஓடினாள். எங்கே ஓடுகிறாள்…. நிழலாகப் பின் தொடர்ந்தேன். அம்மா முகம் கழுவி கை கால் அலம்பி பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

“”என்னம்மா செய்யப் போறே?”

“”உஷ்….”

“”டொய்ங்…டொய்ங்….டொய்ங்” மணி அடித்து சுப்ரபாதம் பாடத் தொடங்கிவிட்டாள். “”வா…இப்படி…” என் கையைப்பிடித்து இழுத்தாள்.

“”குல தெய்வத்தை நல்லா வேண்டிக்கோ. விபூதியை எடுத்துக்கோ”

“”என்ன பழக்கமடி இது. இந்த நடு சாமத்திலே” – அப்பா.

“”நாளைக்கு ரிசல்ட்டுங்க” – அம்மா.

“”இருக்கட்டும் அதுக்கு”

“”புள்ள பாஸ் பண்ணனுமுனுதான்”

அப்பா என்னச் சொல்லப்போகிறார்…. அப்பாவின் கண்களை மொய்த்தேன்.

“”எனக்கும் கொஞ்சம் விபூதி கொடு” என்றவாறு அவர் கையை நீட்டினார். அன்றையதினம் அப்பா நெற்றியில் பெரிய பட்டையைப் போட்டுக் கொண்டு, பவ்வியமாக நின்றதை நினைத்து இன்னொரு நாள் சிரித்தாக வேண்டிய அக்மார்க் கேலிச்சித்திரம் அது.

“”புனிதா”

“”ம்ப்பா”

“”வரும்ல”

“”என்னதுங்கப்பா?”

“” கட் ஆப்”

நான் என்னப் பதில் சொல்ல…. “ம் , ஊகூம்’ இரண்டில் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். என்ன சொல்வது?

“”வரலாம்ப்பா”

நான் அப்படிச் சொன்னதும் அப்பா முகத்தில் மின்காந்த நிறமாலை. கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டினார். நீண்ட பெருமூச்சு விட்டார்.

“”நம்மக் குலப்பெருமை நீ எடுக்கப் போகிற மதிப்பெண்ணில் இருக்கு”

“பெண்ணின் பெருந்தக்க யாவுள’ மதிப்பெண் எனத் திருக்குறளைத் திருத்தி எழுதி வைத்துக் கொள்ளணும் போல இருந்தது.

மறுநாள் பொழுது முழுவதுமாக சாணம் தெளித்து விடிந்து போயிருந்தது. என்பு தோல் போர்த்திய உடம்பாக படுக்கையிலிருந்து வெளியே வந்தேன். உலகம் என்னை மையமாக வைத்து சுற்றுவதைப் போலிருந்தது.

அப்பா சோபாவில் வலது கால் மடக்கி உட்கார்ந்திருந்தார். அவரது கையில் ரிமோட் இருந்தது. புதிய தலைமுறை, தேர்வு முடிவு வெளியாகப் போகும் செய்தியை நீட்டலளவையில் அளந்து கொண்டிருந்தது.

அப்பாவைக் கவனித்தேன். மருத்துவமனையில் பைபாஸ் ஆப்ரேஷன் செய்து கொள்ளப் போகும் படபடப்பில் இருந்தார். என்னைப் பார்த்து மிச்சத்தை மதிப்பெண் தெரிந்த பிறகு சிரித்துக் கொள்ளலாமென இரண்டாம் பிறை அளவிற்குச் சிரித்தார். என்னை அருகினில் உட்கார வைத்துக் கொண்டார். பத்தாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மதிப்பெண்ணை ஆயிரத்து இருநூறுடன் தொடர்புப்படுத்தி பெருக்கி வகுத்து ஓர் உத்தேசமான மதிப்பெண்ணிற்கு வந்திருந்தார்.

“”புனிதா”

“”அப்பா”

“”ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் எவ்ளோ எவ்ளோ வரும்?”

அதேகேள்வி திரும்பவும். என்ன பதில் சொல்வதாம்…. எனக்குள் அணுக்கரு பிளவு நடந்தேறியது.

எவ்வளவு வரும்… நூற்றுத் தொண்ணூற்று… என விளித்து ஒவ்வொரு பாடத்திற்கும் உத்தேசமான மதிப்பெண்ணைச் சொன்னேன். நான் கணிக்கும் மதிப்பெண், அப்பா எதிர்நோக்கும் மதிப்பெண் இவை இரண்டிற்குமான இடைவெளி ஒரு மில்லி மீட்டர் அளவிற்கே இருந்தது. அப்பா முகத்தில் ஈயாடவில்லை.

“”சிங்கப்பூர்லிருந்து உன் மாமா பேசினார்”

“”என்னங்கப்பா சொன்னார்?”

“”உன்னோட ரிஜிஸ்டர் நம்பரைக் கேட்டார்”

“”கொடுத்தீங்களா?”

“” இல்ல”

“”தேங்க்ஸ்ப்பா”

“”உன்னோட பிரைமரி டீச்சர் கலைவாணி போன் பண்ணுனாங்க”

“”என்னங்கப்பா சொன்னாங்க?”

“”உன் மார்க்க வாட்ஸ் அப்பில் போடணுமாம்”

நியூரான் இல்லாத நகரத்தில் கூட இரத்தம் பாய்வதைப் போலிருந்தது. என்னை அறியாமல் உதடுகள் நெளிந்தன. என்னைச் சுற்றிலும் கண்களாகத் தெரிந்தன.

அலைமாறியில் 3ஜீ சிணுங்கிக் கொண்டிருந்தது.

ஹலோ…யார்… எடுத்துப் பேசலாம்தான். பேசினால் என்ன கேட்பார்கள்… புனிதா எவ்ளோ மார்க்…… அதை எடுக்கத்தான் வேண்டுமா…. அலைபேசியை உஸ்…. நிலைக்கு மாற்றினேன். அப்பா கையில் மற்றொரு அலைபேசி இருந்தது. அது லூமியா. அதில் உலக உருண்டை சுற்றிக் கொண்டிருந்தது.

எனக்குப் பதற்றம். வலது கண் மட்டும் தனியாகத் துடித்தது. நான் இடத்தை விட்டு மெல்ல விலகினேன். குளியலறைக்குள் நுழைந்து கொண்டேன். தண்ணீர் கொட்டும் இரைச்சலை என்னைச்சுற்றி எழுப்பிக் கொண்டேன்.

இந்நேரம் தேர்வு முடிவு வந்திருக்க வேணுமே…. மனதிற்குள் அசூசை. அறையை நிசப்தத்திற்கு கொண்டு வந்தேன். அப்பா யாருடனோ தொடர்பில் இருந்தார். இதுநாள் வரைக்கும் எனக்கு செலவளித்த செலவீனத்தை பட்ஜெட்டாக வாசித்துக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு நல்ல மகள் கிடைத்திருக்கிறாள் என்பதை விடவும் அவளை நான் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறேன்….என்பதாக அவரது பேச்சு இழையோடியது.

“”அப்பா”

குளியலறையில் இருந்தபடி தலையை வெளியே நீட்டி கத்தினேன். அப்பா வெளியே ஓடி வந்தார். அவரது முகத்து திசுக்கள் கொண்டாட்டத்தில் ஆட்கொண்டிருந்தன.

“”என்ன ஆச்சுங்கப்பா?”

“”இச்”

எனக்குள் நியூட்ரினோ வெடித்ததைப்போலிருந்தது.

“”ஏன்கப்பா….கட் ஆப் வரலைங்களா?”

“”ஸ்கூல் பஸ்ட் வராமல் போயிட்டியேடா”

தலையை ஆமையைப்போல உள்ளே இழுத்துக்கொண்டேன். குழாய்த் தண்ணீரைத் திறந்து தலையை அதில் நீட்டிக் கொண்டேன். இன்னும்…இன்னும்…. கொஞ்சம் அழ வேண்டும் போல இருந்தது.

– ஜூலை 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *