துருவநட்சத்திரமும் துடிக்கின்ற சொப்பனங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 2, 2021
பார்வையிட்டோர்: 7,481 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜனனி என் ஆத்மபீடத்தே அன்பின் சுடர் கொளுத்திய ஒருத்தி. அவள் நினைவுகள் என் உணர்வின் கவிதை. ரவிராஜா கிழக்கே விடிவின் கதிர் விரித்த ஒரு காலயிலே என் ஜீவநாயகி மரணதேவதையைச் சரணடைந்தாள்.

சமுத்திரக்கன்னியின் ஓயாத இதய ராகங்கள் அலை ஓசையாய் ஆர்ப்பரிப்பது போல் ஜனனியின் நினைவுகள் என் நெஞ்சில் சாஸ்த சங்கீதம் பாடுகின்றன.

அவள் நினைவுகளை என் பாஷை பூசை செய்கிறது. உண்மையில் அவள் உறவின் பெருமிதமே என் தமிழுக்கு உயிர் ஊட்டுகிறது. அவள் ஞாபகத்தின் எழுச்சிகளே வார்த் தைகளிலே ராஜாளியின் கம்பீரத்தைப் பெய்கிறது. என் ஆத்மாவிலே தன் நினைவுகளை அவள் பிரேமையின் சொர் வாக்கோலால் தீட்டினாள்.

அவள் என் நினைவில் ஒரு துருவ நட்சத்திரமாக மின்னுகிறாள்.

அவளை நினைவு கூர்வதில் தான் எத்துணை சாந்தி?

***

அன்று தான் முதன் முதலாக அவளைக் கண்டேன்.

அவள் யார்?

மானுடர் முன்னறியாப் பேரழகோ? கலைஞன் இதயத் தில் வைத்து ஆராதனை செய்யப் பூமியிற் பிறந்த விண்ணுலகின் பொன்மலரோ?

***

அவள் பெயர் ஜனனியாம், என்ன கம்பீரமான நாமம்!

அந்த அழகான புன்னகைக்காரி என் ஆத்மாவை அக்கினிமேடையாக்கினாள்.

அவள் காதலுக்காக நான் கரைந்தேன். காந்தி விரின் கின்ற ககனச் சந்திரிகையில் நீந்தித் திரிந்த என் நெஞ்சக் கனவுகளை அவள் தன் பால் சரணடைய வைத்தாள்.

***

அன்று அவளை நேருக்குநேர் சந்தித்தேன் .

ஆயிரம் உணர்ச்சிகள் நெஞ்சிலே புஷ்பித்தன.

ஆனால்,

அவளோடு பேச நாவே எழவில்லை. நான் மௌனத்தின் கைதியானேன். அவள் ஒரு மென்னகையோடு விலகிப் போனாள். அது என் சிந்தையிலே விந்தைக் கனவை விரீத்தது.

***

சொற்களால் நான் அவளுக்குச் சுந்தரக் கோயில் எழுப்புவேன். என் கலா நிபுணத்துவத்தை அவள் காலடிக்குக் காணிக்கை செய்வேன்.

ஜென்ம ஜென்மங்களிலும் என் ஜனனியை நான் மறவேன்.

***

அன்று அவள் ஆசிரியையாகப் பணியாற்றும் கல்லூரியின் வெள்ளிவிழா.

அன்று அங்கு நடந்த கவியரங்கில் கலைஞன் கனவுகள்’ என்ற தலைப்பில் நான் என் கவிதைகளைச் சொன்னேன்.

அவள் அவற்றை வெகு ஆனந்தமாக ரசித்தாள்.

நிகழ்ச்சி நிறைவுற்ற போது ஆசிரிய அன்பர்கள், “உங்கள் கவிதை அற்புதம்; சொற்கள் உங்களுக்குச் சேவகம் புரிகின்றன” என்று என்னைப் பாராட்டினார்கள்.

அவர்களுக்கு என் கவிதைகள் இனித்தன. என் ஜனனியோ எனக்குக் கம்பன் கவிதையைப்போல் இனித்தாள்.

***

ஒரு தபால் வந்தது.

என் மானஸதேவி எனக்கு எழுதியிருந்தாள். “நீங்கள் எழுதிய ‘ஒரு சக்கரவாகப் பட்சியின் ஆத்மா’ என்ற கவிதை நூல் ஒரு அபூர்வ இலக்கியப் பொக்கிஷம். உங்களை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் தான் கவிஞர் வஸந்தன் என்பது கல்லூரி வெள்ளிவிழா நிகழ்ச்சிகளின் போது தான் எனக்குத் தெரியும்.

உங்கள் அறிமுகத்தை நான் விழைகிறேன்.
– ஜனனி.

***

அவள் கடிதம் என் மனத்திலே சுவையான உணர்வு களைச் சுடர்விடச் செய்தது.

அளுக்குப் பதில் எழுதினேன்:

நெஞ்சப் பொந்தில் கந்தர்வ கானமிசைக்கும் தேவ பட்சியே .

உங்கள் கடிதம் கிடைத்தது. அது என் உள்ளத்திலே எழில்சேர் உணர்வுகளை விதைக்கிறது.

உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கு எத்துணை மகிழ்ச்சி தெரியுமா?

இனி என் வாழ்க்கை உவகையில் ஊறித்ததும்பும்.

என் நாட்கள் சுவர்க்க சுகங்களில் மிதக்கும்.

என் ஆத்மா –

உங்கள் உறவின் தாலாட்டிலே அமைதி கண்டுறங்கும்.

நான் உங்கள் அடிமை.

அன்பின் வலந்தன்

கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு அவள் நினைவிலே நீந்தினேன்.

***

எங்கள் காதல் வளர்பிறையாய் வளர்ந்தது.

சக்திமிக்க முருகன் ஆலய முன்னிலையில் நாம் எம் விகவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

ஜனனி தன் இதயத்தை- யௌவனத்தின் ராஜ்யமான தன் உடலை ஆத்மபூர்வமாக எனக்கர்ப்பணித்தாள்.

அன்று அவள் என்னிடமிருந்து விடை பெற்றுப் போகும் போது குழந்தைபோல் அழுதாள்.

“வஸந்” நீங்கள் என்னை என்றும் கைவிட மாட்டீர்கள் தானே?

“ஜென்மங்கள் நூறு போயினும் என் ஜெகன் மோகினியை நான் மறவேன்”

“வஸந்”

“ஜனனி..!”

நான் அவளை அணைத்துக்கொண்டேன்.

***

அன்று அவளின் பிறந்த நாள். ‘சொப்பனத்தேவதை’ என்ற தலைப்பில் ஜனனியின் காதற் கனவிற் கனிந்த புதுமை நூல் ஒன்றை வெளியிட்டேன்.

ஜனனியின் பாதுகாவலரான அவள் மாமனார் என்னிடம் வந்து பேசினார்:

“நாங்கள் கஷ்டப்பட்டவர்கள்…ஜனனியை நீங்கள் மணக்கலாம், ஆனால்..சீதனமாகத் தருவதற்கு…

“சீ…என்ன வார்த்தை இது? ஜனனியைவிட எனக்கு பெரிய சீதனம் வேறு வேண்டுமா? ”

அந்தப் பெரியவர் என் கைகளை அன்போடு பற்றிக் கொண்டார்.

***

ஐயோ கடவுளே! உன் நெஞ்சம் கல்லோ? என் தேவதைக்குத் திடீரென நோய் வந்தது.

அவள் கடும் சுரத்தால் சுகமிழந்தாள்.

***

என் இதயராணி ஜனனி பேச்சு மூச்சற்று மருத்துவமனையிற் கிடந்தாள்.

அவளுக்கு ‘நிமோனியா’ சுரமாம்.

“டொக்டர் என் காவியக் கனவைக் கலைத்து விடாதீர்கள்” டொக்டர் என்னைத் தேற்றினார்.

***

ஜனனிக்கு அன்று காய்ச்சல் கொஞ்சம் தளர்ந்திருந்தது.

அவள் சிரமப்பட்டுச் சிரித்தாள்.

அவள் அருகே நான் அமர்ந்திருந்தேன்.

“என்னால் உங்களுக்கு எத்துணை சிரமம்.”

“சிரமமா உன் சேவைதானே என் சந்தோஷம்.”

அவள் கண்ணீர் சிந்தினாள் ; பின் பேசினாள்!

“நீங்கள் என் அருகில் இருந்தால் எந்த நோயும் என்னை ஒன்றும் செய்யாது”.

நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

திடீரென அவள் எனது பிரபல்யமான கவிதை ஒன்றின் சிலவரிகளை முணுமுணுத்தாள்.

“காலைப்பறவைப் பாட்டு உந்தன் பாஷை அல்லவா? அந்தப் பாஷை காதல் நெஞ்சின் ஓசை அல்லவா?”

***

என் காதல் தெய்வத்திற்கு மீண்டும் சுரவேகம் அதிகரித்தது.

“டொக்டர் அவளைக் காப்பாற்றுங்கள். உங்களை தெய்வமாக வைத்துக் கொண்டாடுவேன்,”

வைத்திய முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

ஒரு சனிக்கிழமை காலை ஏழு இருபதுக்கு என் ஜனனி மாண்டு போனாள்.

“ஜனனி”

பைத்தியம் போல் நான் கத்தினேன்.

என் வரையில் எல்லாமே சூன்யமாகி விட்டன.

***

நீண்டபொற் கனவுகளை நெஞ்சேந்தி நான் யாத்திரை செய்து கொண்டிருந்தேன்.

எனது மனத்திவே கலையின் ஆவேஷம் ஆர்கலிபோல் ஆர்ப்பரித்தது.

குறிப்பிட்ட சித்தாந்தங்களின் காலடியிவே ஆத்மா வைப் பலியிடாத சுதந்திர சிந்தனையாளனாக எழுத்துலகிலே நான் வீறோடு விரைந்து போனேன்.

எனது லட்சியப் பயணத்தில் ஒரு அழகு தெய்வம் எதிர்ப்பட்டாள்.

அவள் காதலால் என் நெஞ்சினை ஈர்த்தாள்.

அவள் நேத்திரங்கள் என் உள்ளத்திலே உறவின் மங்களங்களை மலரச் செய்தது.

அவள் புன்னகை என் வாழ்வையே திசை மாற்றியது.

கடைசியில் எல்லாமே கண்ணீராய்க் கரைந்து போனது.

***

அவள் –
என் வாழ்வின் பிரகாச தீபம்,
அவள் –
என் ஆத்மாவின் புனித வேதம்.
அவள் –
மரணிக்காத அமர சங்கீதம்.

– விஜயேந்திரன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1976, நயினார் பிரசுரம், மாவிட்டபுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *