மாடி போர்ஷனில் கணவன்-மனைவி சண்டை இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமாகக் கேட்டது. தினமும் நடப்பதுதான். கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பது, வாய்க்கு வந்தபடி பேசுவது. பொறுக்க முடியாமல் மாடிக்குப் போனார் ஹவுஸ் ஓனர் மாணிக்கம்.
‘‘இங்க பாருங்க சிவா சார்… நீங்க பண்றது சரியில்லை. இப்படி தினமும் குடிச்சுட்டு கலாட்டா செய்தால் நாங்க எப்படி நிம்மதியா கீழே இருக்க முடியும்? குழந்தைங்க படிக்க வேண்டாமா…’’
ஒரு முறை சிவாவின் மனைவியைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்… ‘‘அழுதுக்கிட்டு இருக்காங்க பாருங்க. இப்படி அழ வைக்கவா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? குடி குடியைக் கெடுக்கும்னு நீங்க வாங்கற பாட்டிலில் போட்டிருக்கே… பார்க்கல?’’
‘‘ஸாரி சார்…’’ – தலையைத் தூக்காமல் பேசிய சிவாவை முறைத்துவிட்டுக் கீழே இறங்கினார். அவசர அவசரமாக மனைவி தந்த டிபனை சாப்பிட்டுவிட்டு பைக்கை உதைத்தார்.
கடைக்கு வந்ததும் பூட்டைத் திறந்து, அன்று வந்த சரக்குகளை ஷெல்பில் அடுக்கினார்.
‘‘என்ன மாணிக்கம்… லேட்டா கடையைத் திறக்கறீங்க?’’ – கேட்டவரைப் பார்த்து சிரித்து, ‘‘வீட்டிலே குடி இருக்கிறவன் குடிச்சுட்டு வந்து ஒரே கலாட்டா. புத்தி சொல்லிட்டு வர டைம் ஆயிடுச்சு. சரி.. உங்களுக்கு எவ்வளவு?’’ எனக் கேட்டார்.
‘‘அவங்களைத் திருத்த முடியாது அண்ணே… ஒரு குவாட்டர் குடுங்க…’’
பணத்தை கல்லாவில் போட்டு விட்டு, விஸ்கி பாட்டிலை எடுத்து நீட்டினார் டாஸ்மாக் சேல்ஸ்மேன் மாணிக்கம்.
– ஜூலை 2013